Friday, January 28, 2011

சின்முத்திரை

சின்முத்திரை

தக்ஷிணாமூர்த்தி சின்முத்திரையைக் காட்டிக் கொண்டிருக்கிறார். வலது கைக் கட்டைவிரலும், சுட்டு விரலும் ஒன்றையொன்று வளைத்து சார்ந்து நிற்க, ஏனைய மூன்று விரல்களும் விலகித் தனித்தனியேச் சேர்ந்து நின்று கொண்டிருக்கும் நிலை சின்முத்திரையாகும். நடுவிரல், மோதிர விரல், சுண்டு விரல் என்னும் மூன்றும் முறையே ஆணவம், மாயை, கண்மம், என்னும் மும்மலங்களைக் குறிப்பனவாகும்.நடுவிரல் நீண்டு முனைந்து நிற்பதால்,ஆணவ மலத்தைக் குறிப்பதாக உள்ளது. அதற்கு அடுத்த விரல், மாயாமலத்தைக் குறிப்பது என்பதனைப் புலப்படுத்தவே, மாயா, மல சம்பந்தமான பொன் முதலியவற்றால் இயன்ற மோதிரத்தினை, அதன் கண் நாம் அணிந்து கொள்கின்றோம்.
பெருவிரல் உதவியின்றி, நாம் எதனையும் எடுத்தல், பிடித்தல் முதலியன செய்தல் இயலாது. ஆதலின் அது சின்முத்திரையில் பகுதியினைக் குறிக்கின்றது. சுட்டுவிரல் தன்னியல்பில் ஏனைய மூன்று விரல்களோடு சேர்ந்து பெருவிரலை பிரிந்து நிற்கின்றது. அது பசு எனப்படும்.
கட்டைவிரலின் அடியில் சுட்டுவிரல் சென்று சேர்ந்து படிந்து நிற்பது. முத்திரையில் உயிர்கள் சிவத்தின் திருவடிகளில் சென்று ஒன்றி நிற்றலைப் புலப்படுத்துகின்றது.
உயிர்கள் பிறப்பு இறப்புத் துன்பங்களிலிருந்து விடுபடுதல் வேண்டுமாயின்,மும்மலங்களின் தொடர்பை விட்டுப் பதிப்பொருளின் திருவடிகளை அடையப் பெறுதல் வேண்டும். அதனை விளக்கவே சின்முத்திரையில் சுட்டுவிரலானது தான் சேர்ந்துள்ள ஏனைய மூன்று விரல்களைப் பிரித்து கட்டை விரலின் அடியில் சென்று வளைந்து பணிந்து தொட்டுக் கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment