Monday, June 27, 2011

ஆன்மிக கதைகள்»31- அழகற்றவர்களை கேலி செய்யாதீர்

ராவணன் கதறிக் கொண்டிருந்தான்.
""சிவபெருமானே! ஆணவத்தால் அழிந்தேன்! தாங்கள் குடிகொண்டிருக்கும் கயிலாய மலையின் பாரம் தாங்காமல் ஆற்றல் இழந்தேன். ஆயிரம் ஆண்டுகாலமாக, என் கைகள் மலையிடுக்கில் சிக்கி நைந்து போய்விட்டதே! நரம்புகள் புடைத்துக் கொண்டு வெளியேறுகிறதே! கடைசி சொட்டு ரத்தம் வரைக்கும் கரைந்து விடும் போல் இருக்கிறதே! என்னை விடுவியுங்கள்! தாங்களே உயர்ந்தவர் என்பதைப் புரிந்து கொண்டேன். நந்தீஸ்வரன் மீது கொண்ட கோபத்தால், உங்கள் இருப்பிடத்தைப் பெயர்த்தெடுக்க முயன்றேன். தவறு தான். மன்னியுங்கள். என்னை விட்டு விடுங்கள்...'' பக்தனின் அவலக்குரல் சிவபெருமானின் காதுகளில் விழுந்தது. ஆனால், சிவன் சொத்து குலநாசமாயிற்றே! சிவனின் இருப்பிடத்தில் யார் கை வைக்கிறார்களோ, அவர்களின் குடும்பம் நன்றாக இருக்காது. குறிப்பாக, சாகும் நேரத்தில் கடுமையான வேதனைகளைச் சந்திக்க நேரிடும். வழி வழியாக இது தொடரும். தனக்கு நேர்ந்த இந்த அவலம், தன்னை மட்டுமின்றி தன் பிள்ளையான இந்திரஜித் போன்றவர்களையும் தாக்குமோ என்ற கவலை வேறு அவனுக்கு. நடந்தது இது தான்.
குபேரனிடமிருந்து பறித்த புஷ்பக விமானம் மூலம் ராவணன் வானில் பவனி வந்து கொண்டிருந்தான். இடையில் கயிலாய மலை குறுக்கிட்டது. அதைச் சுற்றிச் செல்ல ராவணனுக்கு கவுரவக்குறைச்சலாக இருந்தது. சிவனிடம் பெற்ற வரத்தின் பலனால், சகல <உலகங்களையும் அவன் அடிமைப்
படுத்தி வைத்திருந்தான். நவக்கிரகங்கள் கூட அவனுக்கு அடிமைப்பட்டிருந்தன. அவன் சிம்மாசனம் ஏறும் போது ஒவ்வொரு படியிலும், ஒவ்வொரு கிரகநாயகரும் வந்து படுத்துக் கொள்வார்கள். அவர்களின் முதுகின் மேல் அவன் ஏறிச்செல்வான். சிவபக்தர்கள், நவக்கிரகங்களைக் கண்டு அஞ்சவேண்டியதில்லை என்பது இதன் தாத்பர்யம். அவனது தந்தை விச்வரஸும் சிறந்த சிவபக்தர். வழிவழியாக சிவ பக்தர்களாக இருந்ததால், வலிமை மிக்கவர்களாக அவர்கள் விளங்கினர்.
ஆனால், விதி விடுமா! வரம் தந்த சிவனின் இருப்பிடத்தையே அலட்சியப்படுத்தினான் அவன். அப்போது, கயிலாயத்தின் காவலரான நந்தீஸ்வரர், ராவணனிடம், ""ராவணா! நீ சிறந்த சிவபக்தன் என்பதை நான் அறிவேன். இவ் வழியாக வருபவர்கள் கயிலாய மலையைச் சுற்றிச் செல்வதே வழக்கம். நீயும் அப்படியே செல். அதுதான் முறை,'' என்றார் பவ்வியமாக. ராவணனுக்கு கோபம் வந்து விட்டது.
காளை முகம் கொண்ட நந்தியை, ""குரங்கு மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு, எனக்கே புத்தி
சொல்கிறாயா! போடா குரங்கே!'' என கடுமையான வார்த்தைகளால் திட்டினான்.
ஒருவர் அழகில்லாமலோ, உடல் குறையுடனோ இருந்தால் அவர்களின் குறையைச் சொல்லிஅவமானப்படுத்துவது பெரும் பாவத்தைக் கொண்டு வரும். ராவணன் தேவையில்லாமல் நந்திஸ்வரரைத் திட்டியதால் அவனது தவவலிமை குறைந்தது.
நந்தீஸ்வரர் பெரும் வயிற்றெரிச்சலுடன்,"" ஏ ராவணா! என்னைக் குரங்கென்று பரிகாசம் செய்த நீயும், உன் தேசமும் அதே குரங்குகளால் அழிந்து போவீர்கள்!'' என்று சாபமிட்டார். நாம் ஒருவரைப் பழித்தால், என்ன சொல்லி பழிக்கிறோமோ, அதே பழி நம்மையே திரும்பத்தாக்கும். அதன்படி இலங்கை ஆஞ்சநேயர் உள்ளிட்ட வானரங்களால் அழிந்தது பின்னால் நடந்த கதை.
ராவணன் நந்தீஸ்வரரை மீறி கயிலாய மலையைக் கையால் தூக்கினான். அப்போது, சிவபெருமான் தன் பெருவிரலால் மலையை அழுத்த, இடுக்கில் கை சிக்கிக் கொண்டது. மாட்டிக்கொண்டவன் அலறினான்.
பிறகு தனது நரம்பை கம்பியாக்கி, ஒரு கையை மீட்டும் தண்டாக்கி சாமகானம் இசைத்து இறைவனை மகிழ்வித்தான். இசைக்கு வசமான சிவனும் அவனை விடுவித்தார்.

No comments:

Post a Comment