Thursday, July 28, 2011

ஆன்மீகவிடயங்கள்

பதினெண் புராணங்கள் என்னென்ன?
பஞ்ச புராணங்கள் என்று எதுவும் நமது சம்பிரதாயத்தில் இல்லை. புது சிந்தனையாளர்களின் கண்ணோட்டமாக இருக்கலாம். அதுபற்றிக் கூறியவர்களே அதற்கு சான்று. பதினெட்டு புராணங்கள் உண்டு. அதை மத்ஸ்ய புராணம், மார்க்கண்டேய புராணம், பாகவத புராணம், பவிஷ்ய புராணம், பிரம்மவைவர்த்த புராணம், பிரம்மாண்ட புராணம், பிரம்ம புராணம், வராஹ புராணம், வாமன புராணம், விஷ்ணு புராணம், வாயு புராணம், அக்னி புராணம், நாரதீய புராணம், பத்ம புராணம், லிங்க புராணம், கருட புராணம், கூர்ம புராணம், ஸ்கந்த புராணம் ஆகியன. இதை தவிர உப காரணங்களும் உண்டு. அவை; சனத்குமார புராணம், நரஸிம்ஹ புராணம், சிவ புராணம், பிரஹன்னாரதீய புராணம், துர்வாச புராணம், கபில புராணம், மானவ புராணம், ஒளசஸை புராணம், வருண புராணம், ஆதித்யபுராணம், மஹேச்வர புராணம், பார்கவ புராணம், வசிஷ்ட புராணம், காலிகா புராணம், சாம்ப புராணம், நந்திகேச்வர புராணம், ஸெளர புராணம், பராசர புராணம். இப்படி 18ல் முடிவடையும் புராணங்கள் புழக்கத்தில் உண்டு. ஐந்து எண்ணிக்கையில் முடிவடையும் புராணத் தகவல் தென்படவில்லை!
புராணங்கள் - 18, உப புராணங்கள் - 18, வித்யைகள் 18, அதேபோல் மகாபாரதம் 18 பர்வாக்களை உள்ளடக்கியது. பாரதப்போர் 18 நாட்கள் நடந்தது. படைகளும் 18 அஷெளஹணியாக இருந்தன. பகவத்கீதையும் 18 அத்தியாயங்கள் கொண்டது. ஆக 18 எனும் சிறப்புடன் அமைந்த புராண எண்ணிக்கையில் பஞ்ச புராணம் என்றொரு வழக்கத்தை தோற்றுவிப்பது விளையாட்டு.
சிவபூஜையில் கரடி என்றால் என்ன?
பூஜை செய்யும்போது தடங்கல் வந்தால், சிவ பூஜையில் கரடி வந்த மாதிரி என்று சொல்வார்கள். இதில் கரடி என்பது மிருகத்தை குறிக்காது. கரடி என்பது ஒரு வகை வாத்தியம். முற்காலத்தில் மன்னர்கள் சிவபூஜை செய்யும் போது, கரடி வாத்தியம் வாசிக்கச் செய்வர். இதைத்தான், சிவபூஜையில் கரடி என்பர். ஆனால், பிற்காலத்தில் இதுவே பூஜைக்கு இடையூறு ஏற்படுவது போல அர்த்தம் மாறி விட்டது.
தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் தெரியுமா?
திருமணத்தின் தாலி கட்டும் போது,
மாங்கல்யம் தந்துனானேன
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்!! - என்று சொல்கிறார்கள். மங்கலமான பெண்ணே! உன்னோடு இன்று நான் துவங்கும் இல்லறவாழ்வு நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று உறுதியளித்து, இந்த திருமாங்கல்யத்தை உன் கழுத்தில் அணிவிக்கிறேன். என் இல்லத் துணைவியாக, என் சுக துக்கங்களில் பங்கேற்று, நிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக! என்பது இதற்குப் பொருள்.
பாமா ருக்மிணி
கிருஷ்ணருடன், பாமா ருக்மிணி ஆகியோர் இணைந்து காட்சி தருவர். விஷ்ணு சகஸ்ரநாமத்தில் ஸத்யபாமாப்யாம் ஸஹிதம் க்ருஷ்ண மாச்ரயே என்ற ஸ்லோகம் வருகிறது. இதன் அடிப்படையில் தென்னகத்தில் பாமா, ருக்மிணிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. பாமா பூமாதேவி அம்சம் என்றும், ருக்மிணி லட்சுமி அம்சம் என்றும் கூறுவதுண்டு. பூமாதேவி பூலோக மக்களின் குறையை வானத்திலுள்ள லட்சுமியிடம் எடுத்து தாயார் சமர்ப்பிக்கிறாள். அதை லட்சுமி தாயார் பகவானிடம் சமர்ப்பித்து அருள் செய்ய வகை செய்கிறாள். எனவே, ஸ்ரீ கிருஷ்ணரை பாமா, ருக்மிணி சமேதராக வழிபடுவது இரட்டிப்பு பலன் தரும். வடமாநிலங்களில் ருக்மிணியும், சத்யபாமாவும் இணைந்த வடிவத்தை ராதை எனக்கருதி ராதைக்கு முக்கியத்துவம் தருகின்றனர்.
சம்பந்தரின் வாழ்த்து பெற்ற நாயன்மார்கள்
திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய மூவரும் சிவனை பாடிய தலங்கள், பாடல் பெற்ற சிவத்தலங்கள் என அழைக்கப்படுகின்றன. 274 தலங்கள் இவ்வாறு பாடல் பெற்றுள்ளன. இதில் திருஞானசம்பந்தர் நாயன்மார்களில் இருவரைப் பற்றி பாடியிருக்கிறார். மதுரையை ஆட்சி செய்த பாண்டியன் நெடுமாறன், சமண சமயத்தை பின்பற்றினார். அவரை சைவ சமயத்தை பின்பற்றச்செய்வதற்காக, அவரது மனைவி மங்கையர்க்கரசியார், அமைச்சர் குலச்சிறையார் இருவரும் திருஞானசம்பந்தரை மதுரைக்கு வரும்படி அழைத்தனர். சம்பந்தரும் மதுரை வந்தார். அவரை குலச்சிறையார் வரவேற்றார். முதலில் திருவாலவாய் கோயிலை தரிசித்த திருஞானசம்பந்தர், மங்கையர்கரசியாரையும், அவரது அமைச்சர் குலச்சிறையாரையும் சிறப்பித்து சொல்லும் வகையில் மங்கையர்க்கரசி வலவர்கோன் பாவை என்னும் பதிகத்தை பாடினார். திருஞானசம்பந்தரால் வாழ்த்தப்பட்ட இவர்கள் இருவரும் சிவனருள் பெற்று நாயன்மார் வரிசையில் இணைந்தனர். குலச்சிறை நாயனாரை சுந்தரமூர்த்தி, ஒட்டக்கூத்தர் இருவரும் பெருநம்பி குலச்சிறையார் என்று பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிவராத்திரியும் பெருமாளும்
பெருமாளுக்கும் சிவராத்திரிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறது என்றால் இருக்கிறது. நரகாசுரன் கொல்லப்பட்ட தேய்பிறை சதுர்த்தசி திதியே ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. பகவான் கிருஷ்ணன் ஐப்பசி மாத சிவராத்திரி முழுவதும் விழித்திருந்து அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னால் நரகாசுரனைக் கொன்றார். இதில் இருந்து சிவராத்திரியன்று கண்விழித்து சிவனை வணங்குவோர் எடுத்த செயலில் வெற்றி பெறுவர் என்பது தெளிவாகிறது.
கோமாதா பூஜை
கோமாதாவில் (பசு) முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம். அதன் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். எனவே, கோமாதா பூஜை செய்யும் போது, பசுவை முன்புறமாக தரிசிப்பதைவிட, பின்புறம் தரிசனம் செய்வது மிகவும் நன்மை தரும். பசுவை வணங்கும்போது முன்நெற்றி மற்றும் வால் பகுதியில் சந்தனம், குங்குமம் வைத்து, மலர் அணிவித்து வழிபட வேண்டும். பசுவின் சாணமும் லட்சுமி அம்சமாகும். எனவேதான், அதிகாலையில் சாணத்தை வீட்டு வாசலில் தெளிக்கிறார்கள்.
திருநீறில் மருந்திருக்கு
திருநீற்றின் பெருமை அளவிடற்கரியது. நீறில்லா நெற்றி பாழ் என்று பெரியோர்கள் கூறியுள்ளனர். பாண்டிய மன்னனின் வெப்பு நோய் நீங்குவதற்காக திருஞான சம்பந்தர் திருநீற்றுப்பதிகம் பாடினார். சுத்தமான திருநீறு, வாதத்தினால் உண்டாகும் 81 நோய்களையும் பித்தத்தினால் உண்டாகும் 64 நோய்களையும், கபத்தால் உண்டாகும் 215 நோய்களையும் போக்கும் தன்மை கொண்டது.
தானமும் பலன்களும்
ஆடை தானம் செய்தால் ஆயுள்விருத்தியும், பூமிதானம் தானம் செய்தால் பிரம்மலோக வாழ்வும், நெல்லி தானம் செய்தால் ஞானமும், தீபம் தானம் செய்தால் பதவியும் கிடைக்கும். அரிசி தானம் செய்தால் பாவம் நீங்கும், பழம், தாம்பூலம் தானம் செய்தால் சொர்க்கம் கிடைக்கும், கடலை தானம் தானம் செய்தால் சந்ததி பெருகும், விதை தானம் செய்தால் தீர்க்காயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இறைவனுக்கு ஆடை
சிவனுக்கு எந்த நேரமாக இருந்தாலும் வெள்ளை பட்டு அணிவிக்க வேண்டும். ஆனால், அம்மனுக்கு காலையில் சிவப்பு பட்டும், மாலையில் நீலம் அல்லது பச்சை பட்டும், அர்த்த ஜாமத்தில் சிவப்பு அல்லது பச்சை கரையுள்ள வெள்ளை பட்டும் சார்த்த வேண்டும்.
லெட்சுமிக்கு வில்வ பூஜை
பெருமாள் கோயில்களில் தாயாருக்கு துளசியால்தான் அர்ச்சனை செய்வர். ஆனால், கோவை மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகிலுள்ள கொழுமம் கல்யாணப்பெருமாள் கோயிலில் உள்ள லட்சுமி தாயாருக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்கின்றனர். இக்கோயில் அருகில் சிவன் கோயில் ஒன்று உள்ளது. சைவமும், வைணவமும் வேறில்லை என்ற கருத்தின்அடிப்படையில் இவ்வாறு செய்கின்றனர்.
பிரதான லட்சுமி
விழாக்களின் போது, திருமால் முன்னே செல்ல தாயார் பின்பு தான் செல்வர். திருச்சி அருகிலுள்ள திருவெள்ளறை புண்டரீகாக்ஷ பெருமாள் கோயிலில், விழாக்களின் போது, லட்சுமி தாயார் முன்னே செல்கிறார். பின்னால் தான் பெருமாள் செல்கிறார்.
பெண் குழந்தைகளுக்கு நாகரிகமான பெயர்
ஆண்களுக்கு கண்ணன் என்ற பெயர் நன்றாக இருக்கிறது. பெண்களுக்கு கண்ணம்மா என்று பெயர் வைத்தால் ஏதோ நாட்டுப்புறம் போல் தெரிகிறது என சிலர் கவலைப்படுகிறார்கள். கண்ணன் கருப்பு நிறம் உடையவன். இதனால் அவனை ஷியாம் என்றும், சியாமளன் என்றும் அழைப்பர். ஷியாம் என்றால், கருப்பு என்று பொருள். எனவே கண்ணனின் பெயரைப் பெண்குழந்தைகளுக்கு சூட்ட விரும்புவோர் சியாமளா என்று வைத்துக்கொள்ளலாம்.
ஷண்முகி முத்திரை
நதிகள் அல்லது கடலில் முழ்கி குளிக்கும் போது காதுகளை பெரு விரல்களாலும், மூக்கின் இரு பக்கங்களை நடுவிரல்களால் மூடிக் கொண்டும், கண்களை ஆள்காட்டி விரலால் திறந்து கொண்டும் தெய்வத்தை நினைத்துக் கொண்டு நீராட வேண்டும். இந்த முத்திரைக்கு ஷண்முகி முத்திரை என்று பெயர்.
கும்பிடக்கூடாத நேரம்
கோயில்களில் சில நேரங்களில் சுவாமியை வணங்கக்கூடாது. <உற்சவ காலங்களில் சுவாமி புறப்பட்டு வீதி உலாவரும்போது கோயிலில் உள்ள மூலவரையும் பரிவார தெய்வங்களையும் வணங்கக்கூடாது. அபிஷேகம் ஆகும் போதும், நைவேத்யம் தருவதற்காக திரட்டியிருக்கும் போதும் சுவாமியை வணங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
பிரசாதத்துக்காக அடித்துக் கொள்ளாதீர்கள்
இறைவனுக்கு நைவேத்தியம் செய்த பிரசாதத்தை சிறிதளவாவது நாம் உண்ண வேண்டும். சிலர் பிரசாதம் வேண்டொமெனச் சொல்வதும், பெரும்பாலான இடங்களில் பிரசாதத்துக்காக சண்டைபோட்டுக் கொள்வதும் தவிர்க்கப்பட வேண்டும். பிரசாதத்துக்கென தனி மரியாதை இருக்கிறது. தெய்வங்கள் மனிதனைப் போல் நேரடியாக உணவை ஏற்பதில்லை. அவற்றின் பார்வை மட்டுமே அதில்படுகிறது. இதை சமஸ்கிருதத்தில் திருஷ்டி போக் என்பர். கண்ணொளி பட்டது என்பது இதன் பொருள். தெய்வத்தின் கண்ணொளி பட்ட பொருள் புனிதத்தன்மை பெறுகிறது. இதைச் சாப்பிடுபவர்கள் மனம் தூய்மையடைகிறது. <உள்ளத்தில் பக்தியை உருவாக்குகிறது. எனவே, பிரசாதம் எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் வரிசையில் நின்று, உரிய மரியாதைகளுடன் பெற்றுச் செல்ல வேண்டும். பிரசாதத்தை பகிர்ந்து சாப்பிடும் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பெண்ணைப் பெற்றால் மோட்சம்
பெண் குழந்தை என்றாலே ஓடிப்போகிறார்கள் பெற்றவர்கள். காரணம், அவளைத் திருமணம் செய்து கொடுக்க பெரும் பொருள் சம்பாதிக்க வேண்டியிருக்கிறதே என்ற பயத்தால். ஆனால், பெண்ணைப் பெற்று சிரமப்பட்டு கல்யாணம் செய்து வைப்பவர்களுக்கு மோட்சம் நிச்சயம் கிடைக்கும். திருமணத்தின் போது, பெண்ணைத் தாரை வார்த்துக் கொடுக்கும் போது, புரோகிதர் ஒரு மந்திரம் சொல்வார். அதன் பொருள் என்ன தெரியுமா?
மகளே! நீ எப்போதும் என் எதிரில் காட்சி தருவாயாக! நீ அம்பிகையின் அருள் பெற்ற உத்தமி. உன் இருபுறத்திலும் அந்த அம்பிகை காட்சியளிக்கிறாள். நீ எனக்கு எல்லாவகையிலும் பெருமையைக் கொடு. மிகச்சிறந்தவனான இந்த மணமகனுக்கு நான் உன்னை தானம் அளிப்பதால், நான் நற்கதியை அடைவேன். மோட்சத்தை உன் மூலமாகப் பெறும் பாக்கியசாலியாகத் திகழ்கிறேன், என்று ஒரு தந்தை சொல்வது போல் அமைகிறது.
எல்லாமே ஐந்து
நமசிவாய இது சிவனின் தாரக மந்திரம். இந்த ஐந்தெழுத்து மந்திரத்தை பஞ்சாட்சர மந்திரம் என்பார்கள். இதன் அடிப்படையிலேயே சிவனுக்கு அமைவது எல்லாமே ஐந்தாக அமைவது சிறப்பு. நடராஜரின் பஞ்ச சபைகள்
பொன்னம்பலம் - சிதம்பரம், வெள்ளியம்பலம் - மதுரை, தாமிரசபை - திருநெல்வேலி, ரத்தினசபை - திருவாலங்காடு, சித்திரைசபை - குற்றாலம்
பஞ்சபுராணங்கள்
தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு , பெரிய புராணம், ஆகும்.
பஞ்சபூத ஸ்தலங்கள்
பிருத்திவி (மண்) - காஞ்சிபுரம், வாயு (காற்று) - காளஹஸ்தி, தேயு (நெருப்பு)- திருவண்ணாமலை, அப்பு (நீர்) - திருவானைக்கா, ஆகாயம் - சிதம்பரம்
திருவண்ணாமலையில் கிரிவலம் சுற்றி வரும் போது உள்ள அஷ்ட லிங்கத்தை வணங்கினால் ஏற்படும் பலன்கள்
இந்திரலிங்கம் : புதிய வேலை, பணி மாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்
அக்னி லிங்கம் : கற்பு, சத்யம், தர்மம் தலை காக்கும்
எமலிங்கம் : எமபயம் நீங்கி, நீதி வழுவாமல் வாழலாம்
நிருதி லிங்கம் : தோஷங்கள், குழந்தை இல்லாமை, சாபங்கள் நிவர்த்தியாகும்
வருணலிங்கம் : ஜலதோஷம், சிறுநீரக வியாதி, சர்க்கரை வியாதி நீங்கும்
வாயு லிங்கம் : காசம், சுவாச நோய், மாரடைப்பு நோய் நீங்கும்
குரேப லிங்கம் : ஆக்கப்பூர்வமாக தரிசித்தால் கோடீஸ்வரர் ஆகலாம்.
புராணம் - 18
பிரம்ம புராணம், பதும புராணம், வைணவ புராணம், சைவ புராணம், பாகவத புராணம், பவிழிய புராணம், நாரதீய புராணம், மார்க்கண்டேய புராணம், ஆக்கினேய புராணம், பிரமபகைவர் புராணம், இலிங்க புராணம், வராக புராணம், காந்தப் புராணம், வாமன புராணம், கூர்ம புராணம், மற்ச புராணம், காருட புராணம், பிரமாண்ட புராணம்
பிரதோஷ பலன்
பதினொரு பிரதோஷங்கள் தரிசனம் செய்தல் ஒரு முழு கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்த பலன் கிடைக்கும் அதற்காக பாவமே செய்து கொண்டு பிரதோஷம் செய்வதால் புண்ணியமில்லை பிறர்க்கு உதவாமல் இருப்பினும், உபத்திரம் செய்யாமல் இருப்பது அதனினும் இனிது
சக்கரத்தாழ்வார்
எம்பெருமானின் நித்ய சூரிகளில் ஒருவரே சக்கரமாக மாறியுள்ளதால் சக்கரத்தாழ்வார் எனப்படுவார். பெருமாளுக்கு ஐந்து ஆயுதங்கள். சக்கரத்தாழ்வாருக்கு பதினாறு ஆயுதங்கள். சக்கரம், ஈட்டி, கத்தி, கோடரி, தண்டம், சதமுகாக்னி, மாவட்டி, சக்தி என்னும் எட்டு ஆயுதங்களை வலக்கையிலும் சங்கு, வில், கண்ணி, கலப்பை, உலக்கை, வஜ்ரம், சூலம், கதை ஆகிய எட்டு ஆயுதங்களை இடக்கையிலும் அணிந்திருப்பார்.
சொன்னது
1. கடவுள் மனிதனுக்குச் சொன்னது - கீதை
2. மனிதன் கடவுளுக்குச் சொன்னது - திருவாசகம்
3. மனிதன் மனிதனுக்குச் சொன்னது - திருக்குறள்
4. பகவத் கைங்கரியம் - இறைவனுக்குத் தொண்டு செய்தல்
5. பாகவத கைங்கரியம் - இறைவனுடைய அடியார்களுக்கு தொண்டு செய்தல்.
என்றும் சிரஞ்சீவி எனப் பெயர் பெற்றவர்கள்
அஸ்வத்தாமன், மஹாபலி, வியாசர், ஆஞ்சநேயர், விபீஷணன், கிருபாசார்யார், பரசுராமர்
காஞ்சி புராணப்படி காஞ்சி மாநகரத்தில் சிவனுக்கு 16,000 கோயிலும், விநாயகருக்கு 1,00,000 கோயிலும், காளிக்கு 5000 கோயிலும், விஷ்ணுவிற்கு 12,000 கோயிலும், முருகனுக்கு 6,000 கோயிலும், திருமகள், கலைமகளுக்கு 1000 கோயில்களும் இருந்ததாகத் தெரிகிறது.
நவவித பக்தி என்னும் ஒன்பது பக்தி முறை
சரவணம் - இறைவனது பெருமைகளை, லீலைகளை காதால் பக்தியுடன் கேட்பது
கீர்த்தனம் - இறைவனின் புகழைப் பாடுதல்
ஸ்மரணம் - எப்பொழுதும் பரமனையே நினைத்து அவன் நாமத்தை ஜபித்தல்
பாதஸேவனம் - இறைவனுக்கு தொண்டு செய்தல்
அர்ச்சனம் - மலரால் அவன் பாதத்தில் அர்ச்சித்தல்
வந்தனம் - நமஸ்கரித்தல்
தாஸ்யம் - ஆண்டவன் ஒருவனுக்கே நாம் அடிமை என்று கருதி செய்யும் செயல்களையெல்லாம் அவனது மகிழ்ச்சிக்காக அர்ப்பணிதல்
ஸ்க்யம் - இறைவனை நண்பனென எண்ணி தோழமை பூண்டு வழங்குதல்
அத்மநிவேதனம் - தன்னை முழுவதும் இறைவனிடம் அர்ப்பணித்து அவனே அனைத்தும் என்று வாழும் இறைவன் அடியார் பணி செய்தல்
மகாமகம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் குரு சஞ்சாரம் செய்யும் ராசி ஊர்களும் விழாக்களும்
ராசி ஊர் விழா
சிம்மம் கும்பகோணம் மகாமகம்
கன்னி திருக்கழுக்குன்றம் சங்கு
கும்பம் ஹரித்துவார் கும்பமேளா
மேஷம் அலகாபாத் பிரயாகை
கடகம் நாசிக் பஞ்சவடி
துலாம் உஜ்ஜயினி மேளா (தீர்த்தம்)

விநாயகர் அர்ச்சனை
விநாயகருக்கு கண்டகங்கத்திரியால் அர்ச்சனை செய்தால் லட்சுமி கடாட்சமும், மாதுளை இலையால் அர்ச்சனை செய்தால் நற்புகழும், வெள்ளெருக்கால் அர்ச்சனை செய்தால் சகல பாக்கியமும், அரளிஇலையால் அர்ச்சனை செய்தால் அன்பும், அரச இலையால் அர்ச்சனை செய்தால் எதிரி நாசமும், எருக்கு இலையால் அர்ச்சனை செய்தால் குழந்தைப்பேறும் கிடைக்கும்.
8 ன் சிறப்பு:
8 என்ற எண் நலன் பயக்கும் எண்ணே ஆகும்.
பகவான் கிருஷ்ணன் 8வது மகனாக அஷ்டமி திதியில் பிறந்தார்.
8வது அவதாரம் தான் கிருஷ்ணர் அவதாரம்.
மனிதனின் உயரம் அவரது கையால் 8 சாண் ஆகும்.
சூரிய கதிர் பூமியை அடைய 8 நிமிடம் ஆகிறது.
ஜாதகத்தில் எட்டாம் இடம் ஆயுள் ஸ்தானமாகும்.
சிவனின் குணங்கள் 8 - எட்டு வீரச்செயல்கள் நடந்தன. 8 வீரட்டத் தலங்கள் ஆகும்.
முனிவர்கள் அடையும் சித்தி 8, ஐஸ்வரியம் 8, திசையும் 8, விக்ரகங்கட்கு சார்த்துவது அஷ்டபந்தனம் என்னும் 8 வகை மூலிகைகளால் ஆன மருந்து ஆகும்.
ஈஸ்வரன் என பின் பெயர் பட்டம் பெற்ற சனியின் ஆதிக்க எண் 8.
அஷ்டபந்தனம்
அஷ்டபந்தனம் என்பது கோயிலில் சுவாமி சிலைகளை பீடத்தில் பொருத்த பயன்படும் ஒரு கலவை ஆகும். இது மூன்று வகையாக உள்ளன.
1. ஏஜகபந்தனம் - என்பது வெள்ளி உலோகத்தால் செய்யப்பட்டவை
2. ஸ்வர்ணபந்தனம் - என்பது தங்கத்தால் செய்வது
3. அஷ்டபந்தனம் என்பது அரக்கு, சுக்காங்கல், குங்குலியம், ஜாதிலிங்கம், செம்பஞ்சு, வெண்ணை, மஞ்சள் மெழுகு, பச்சை கற்பூரம் ஆகியவற்றால் ஆனது.
16 செல்வங்கள்
பெரியவர்கள் வாழ்த்தும் போது 16ம் பெற்று பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துவார்கள். இது கீழ்கண்ட 16 வகையான செல்வங்களைக் குறிக்கும். வாழ்க்கையில் நமக்கு வழிகாட்டக்கூடிய கல்வி, நீண்ட ஆயுள், நம்பிக்கைக்கு உரிய நண்பர்கள், வாழ்க்கைக்கு தேவையான செல்வம், உழைப்புக்கு தேவையான ஊதியம், நோயற்ற வாழ்க்கை, எதற்கும் கலங்காத மனவலிமை, அன்புள்ள கணவன் மனைவி, அறிவு ஒழுக்கம் ஆற்றல் கொண்ட குழந்தைகள், மேன்மேலும் வளரக்கூடிய புகழ், மாறாத வார்த்தை, தடங்கலில்லாத வாழ்க்கை, வருவாயைச் சிக்கனமாக செலவழித்து சேமிப்பு அதிகரித்தல், திறமையான குடும்ப நிர்வாகம், நமக்கு உதவக்கூடிய பெருமக்களின் தொடர்பு, பிற உயிர்களிடம் அன்பு செலுத்துதல்.
பழந்தமிழரின் அளவு முறைகள்
கால அளவுகள்: அறுபது வினாடி - ஒரு நாழிகை, இரண்டரை நாழிகை - ஒரு மணி, மூன்றே முக்கால் நாழிகை - ஒரு முகூர்த்தம், அறுபது நாழிகை - ஒரு நாள், ஏழரை நாழிகை - ஒரு சாமம், ஒரு சாமம் - மூன்று மணி, எட்டு சாமம் - ஒரு நாள், நான்கு சாமம் - ஒரு பொழுது, ரெண்டு பொழுது - ஒரு நாள், பதினைந்து நாள் - ஒரு பக்ஷம், ரெண்டு பக்ஷம் - ஒரு மாதம், ஆறு மாதம் - ஒரு அயனம், ரெண்டு அயனம் - ஒரு ஆண்டு, அறுபது ஆண்டு - ஒரு வட்டம்.
இறைவனுக்கு மருத்துவம்
தேனி நகரத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வைகை ஆற்றிற்கு அருகே அமைந்துள்ள கோயில் வீரப்ப ஐயனார் சுவாமி கோயில். இங்குள்ள சாமி, இடதுபுறம் தழும்புடனே காணப்படுகிறார். காரணம், முன் ஒரு காலத்தில் இந்தப் பகுதியில் இந்த சுவாமிக் கல்லாகக் கிடக்க, அதை பக்தர் ஒருவர் தெரியாமல் கோடாரியால் வெட்ட, அதிலிருந்து ரத்தம் வரத் தொடங்கி தன்னை அடையாளம் காட்டினார் என்பது வரலாறு. இன்றும் சித்திரை முதல் தேதி சுவாமி கல்லை வெட்டியவரின் பரம்பரையில் இருந்து ஒருவர் வந்து சுவாமியின் வெட்டப்பட்ட காயத்திற்கு மருந்திடுகிறார்கள்.
காது அறுந்த நந்தி
ராஜபாளையத்திற்கு அருகே உள்ள சொக்கநாதன் புதூர், மதுரை மீனாட்சியின் சொந்த ஊராகும். மதுரையில் திருமணம் முடிக்க, மீனாட்சியை அழைத்துச் செல்ல சொக்கநாதர் வந்த போது, ""சிவனைத் தவிர வேறு எவரையும், மீனாட்சியே ஆனாலும் சுமக்கமாட்டேன் என்று நந்திதேவர் அடம்பிடித்து அமர்ந்த இடம். கோபத்தில் சிவன் நந்தியின் காதைத் திருக, அறுந்து போனதால் ""காது அறுந்த நந்திகேஸ்வரர் என்று பெயர். பொதுவாக சிவாலயங்களில் சிவலிங்கத்திற்கு எதிரே நந்தி இருக்கும். இங்கே நந்திக்கு முன்னால் லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டிருப்பது விசேஷம்.
சந்திர பூஜை
சிவாலயங்களில் லிங்கத்திருமேனியில் சூரியனின் கதிர்கள் விழுவதை சூரிய பூஜை என அழைக்கிறோம். அதேபோல் நவக்கிரகத் தலமான திங்களூர் கைலாச நாதர் கோயிலில் வருடத்திற்கு இருமுறை சந்திரன் வழிபாடு செய்கிறார். சந்திரனது கிரணங்கள் பங்குனி, புரட்டாசி மாத பவுர்ணமியிலும், அதற்கு முன்பின் தினங்களிலும் லிங்கத்திருமேனியில் படுவது சிறப்பு.
கூடாது... கூடவே கூடாது...
சங்கு மற்றும் வெற்றிலையை தரையில் வைக்க கூடாது. விளக்கை தானாக அணைய விடக்கூடாது. பால், மோர், தண்ணீரை இரவில் பிறருக்கு கொடுக்க கூடாது. கிழிந்த துணியை உடுத்த கூடாது. உப்பை சிந்தக்கூடாது. வாசற்படி, உரல், அம்மி, ஆட்டுக்கல் மேல் உட்காரக்கூடாது. வாசல்படியில் நின்றபடி எதையும் வாங்கவோ, கொடுக்கவோ கூடாது.
தக்காளி அபிஷேகம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்து மாரியம்மன் கோயிலில், பங்குனிப் பெருவிழாவின் போது, அம்மனுக்கு தக்காளி பழச்சாறு அபிஷேகம் நடக்கிறது.
கோயில் ஒன்று :வாசல் பத்து
சேலத்திலிருந்து 35 கி.மீ. தூரத்திலுள்ள சங்ககிரி மலை 2348 அடி உயரமுள்ளது. இங்குள்ள சிவன் கோயில் 10 நுழைவு வாசலைக்கொண்டது. இவற்றை 1. புலிமுக வாயில்,2. கிட்டி வாயில், 3. கடிகார வாயில், 4. ரண மண்டல வாயில், 5. புதுப்பேட்டை வாயில், 6.ரோக்கல் திட்டி வாயில், 7. இடி விழுந்தான் வாயில், 8. லட்சுமி காந்தன் வாயில், 9.வெள்ளைக்காரன் வாயில், 10. மைசூர் வாயில் என அழைக்கின்றனர்.
நவக்கிரக வழிபாடு
ஆரோக்கியம் பெற சூரியனையும், புகழ் பெற சந்திரனையும், செல்வ வளம் பெற செவ்வாயையும், அறிவு பெற புதனையும், ஞானம் பெற வியாழனையும், அழகு மற்றும் நாவன்மை பெற வெள்ளியையும், சந்தோஷம் மற்றும் ஆயுள் பெற சனீஸ்வரனையும், எதிரி பயம் நீங்க ராகுவையும், குலம் அபிவிருத்தியடைய கேதுவையும் வணங்கவேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அஷ்டமியின் சிறப்பு
பவுர்ணமி அல்லது அமாவாசையை அடுத்து வரும் எட்டாவது நாள் அஷ்டமி திதி. எட்டு என்ற எண் அனைவராலும் வெறுக்ககூடிய எண்ணாக இருந்து வந்தது. எனவே இந்த எண்ணுக்குரிய திதிக்கு மிகுந்த மன வேதனை ஏற்பட்டது. ஒரு முறை இந்த திதி தனது மனக்குறையை இறைவனிடம் முறையிட்டது. மனமிறங்கிய இறைவன் இந்த திதியின் குறை நீக்க அஷ்டமி திதியில் கண்ணனாக அவதாரம் செய்ததாகவும், சைவ சமயத்தில் பைரவர் இந்த திதியை தனக்குரிய பூஜை நாளாக ஏற்றுக்கொண்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன. எனவே இந்த திதியில் சுபநிகழ்ச்சிகள் ஏதும் நடப்பதில்லை என்ற குறை நீங்கியது. வட மாநிலங்களில் எல்லாம் அஷ்டமியன்று இறைவழிபாட்டை மிகச்சிறப்பாக செய்கின்றனர்.
மணிகளில் சிறந்த ருத்ராட்சம்
தேவிகளில் சிறந்தவள் கவுரி. கிரகங்களில் சூரியன். மாதங்களில் மார்கழி. மந்திரங்களில் காயத்ரி. நதிகளில் கங்கை. ரிஷிகளில் காசிபர். விருட்சங்களில் (மரம்) கற்பதரு. மலர்களில் பாரிஜாதம். பசுக்களில் காமதேனு. மணிகளில் சிறந்தது ருத்ராட்சம்.
மீனாட்சி ஆட்சி செய்யும் மதுரையும் ஒரு பஞ்சபூத தலமாகும்.
நீர்- திருவாப்புடையார் கோயில் - செல்லூர்
நிலம்- இம்மையில் நன்மைதருவார் கோயில்-மேலமாசிவீதி
நெருப்பு-தென்திருவாலவாய் கோயில்-தெற்கு மாசிவீதி
காற்று-முக்தீஸ்வரர் கோயில் - தெப்பக்குளம்
ஆகாயம்- மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்
மதுரையில் உள்ள இந்த ஐந்த தலங்களையும் தரிசித்தால் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஜபத்தின் பலன்
பிறர் காதில் விழும்படி ஜபம் செய்வது வாசிகம் எனப்படும். இது ஒரு மடங்கு பலனைத்தரும். தனக்கு மட்டுமே கேட்கும்படி ஜபம் செய்வது உபாம்சு எனப்படும். இது நூறு மடங்கு பலனைத்தரும். மனதால் மட்டுமே ஜபிப்பது மானஸம் எனப்படும். இது ஆயிரம் மடங்கு பலனைத்தரும்.
ரஜதலிங்க தரிசனம்
வெள்ளியில் செய்யப்பட்ட லிங்கத்திற்கு ரஜதலிங்கம் என்று பெயர். காஞ்சிபுரம் மற்றும் சென்னை கபாலீஸ்வரர் கோயில்களில் இந்த லிங்கம் உண்டு. இந்த லிங்கத்திற்கு பிரதோஷம், சிவராத்திரி மற்றும் சிவனுக்குரிய முக்கிய நாட்களில் மட்டும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. ரஜதலிங்க தரிசனம் முக்தி தர வல்லது.
.

No comments:

Post a Comment