Monday, January 16, 2012

ஓங்கார ரூப முழுமுதற் கடவுளை துதிப்போம்

ஒங்கார ரூபரும் மூலப்பரம்பொருளானவரும் முழுமுதற்கடவுளுமாகிய ஜந்துகரத்தான் தாள் பணிந்து அவர் அற்புதங்களை கூறுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். கார்த்திகை மாதத்தில் வரும் பூரணையின் பின்பு வரும் கிஷ்ணபட்ச பிரதமை முதல் சுக்கில பட்ச சஷ்டி வரையிலான இருபத்தொரு நாட்கள் விநாயகர் பெருங்கதை நாட்களாகும். இவ் இருபத்தொரு நாட்களும் விக்கினம் தீர்க்கும் விக்கினேஷ்வரப் பெருமானை நினைந்து அவரின் அற்புதம் நிறைந்த பெரும் கதைகளை படித்தும் கேட்டும் பயன் அடைவர்.

அந்நாளில் ஆலயங்களில் ஒரு கும்பம் வைத்து இருபத்தொரு இழைகள் கொண்ட நூலில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முடிச்சுகள் வீதம் இருபத்தொரு நாட்கள் இருபத்தொரு முடிச்சு இடுவர். அதை விநாயகர் சஷ்டி அன்று விரதம் அனுஷ்ட்டித்து வணங்கி கதை படித்து பூஜை, ஆராதனைகள் முடிந்ததும் இறுதியில் கையில் அணிந்து கொள்வர்.



“ஓங்கார ஜெபமே மூலாதாரம் ஓங்கார ஜெபமே ஜீவாதாரம்
ஓங்கார  ஜெபமே சர்வாதாரம் ஓங்கார ஜெபமே ஓம் ஓம் ஓம்”

ஓங்காரத்தின் ஜெபம் ஓம் என்று கூறுவதால் மூலாதாரம் ஜீவாதாரம் சர்வாதாரம் அனைத்து ஆதாரமும் ஆக விளங்கி அருள் தருவார். கணபதி என்னும் கணநாதர் கணங்களுக்கு பதியாகவும், நாதராகவும் விளங்குகிறார். அவரை முதலில் வணங்கிச் செய்யும் எக்காரியமும் தடைகள் இல்லாது நிறைவடையும். ஆகவே ஜங்கரத்து ஆனைமுகனை இந் நாளில் வணங்கி வழிபடுதல் நலம் தரும்.

இவரது வாகனம் மூஷிகம் எலியாகும். பெரிய சரீரம் ஆனைமுகனை தாங்கி சிறிய எலி நசிந்துவிடுமோ என அச்சம் எமக்கு தோன்றும். ஆனால் அதன்  தத்துவம் சிறிய மூஞ்சுறு எலி அதாவது மூஷிகம் தாங்குமளவிற்கு விநாயகர் இலேசானவர்.அதாவது பாரமிலலாதவர் அவரைத் தாங்கும் சக்தி வல்லமைய தந்தருளுவார். எவரும் எளிதில் வணங்க வல்ல தெய்வம்.அவரை சாணத்திலும் பிடித்து வைத்து வணங்கலாம். மஞ்சளிலும் அரிசி மாவிலும் மண்ணிலும் கல்லிலும் கூட நினைத்தவுடன் பிள்ளையாரைப் பிடித்து வழிபடலாம்.



இவ்வுலகில் சகலகாரியங்களும் விக்னம் இல்லாமல் நடைபெற வேண்டுமானால் விக்கினேஸ்வர பகவானின் அருள் மட்டும் போதுமானது. துன்பக்கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் அடியார்களைத் தமது தும்பிக்கையால் தூக்கி நம்பிக்கையான பாதையில் செலுத்துவார். பக்தர்களின் பாவத்தைப் போக்க ஓடோடி வருவார்.

ஆக விநாயகர் சிறப்பினைக் கூறும் பார்க்கவ புராணம் எனப்படும் விநாயக புராணக் கதையை இந்நாளில் பக்திபெருக்கோடு  படிப்பதும் எழுதுவதும் கேட்பதும் பிறருக்கு எடுத்துரைப்பதும் பலவித நன்மைகளை அளிக்க வல்லது. மனமாசு மறைவதற்குக் கடவுள் வழிபாடு  பேருதவி புரிகிறது. யான் எனது என்பதைக் கடவுளிடம் ஒப்படைத்து விட்டால் மனிதனுக்கு வாழ்க்கையில் எத்தகைய துன்பங்களும் ஏற்படாது.

ஆக எளிமையாக அவருக்கு பிரியமான அறுகம்புல்லை சாத்தி வழிபடுவது சாலச்சிறந்தது. எக்காரியங்களையும் முடிக்கவல்ல விக்னேஸ்வரனை நினைந்து வணங்கி  அக்காரியங்களை தொடங்க இனிதே நிறைவுபெறும். .

No comments:

Post a Comment