Saturday, February 18, 2012

நேரம் தவறாமையின் முக்கியத்துவம்


நேரம் தவறாமையின் முக்கியத்துவம்

காந்தியடிகள் அதிகாலை 4 மணிக்கே எழுந்து விடும் பழக்கம் உடையவர். அவர் தான் ஆசிரமத்தில் உள்ள மற்றவர்களையும் எழுப்பி விடுவார். அவர் நடக்கும் நடையின் வேகத்திலேயே அவரது சுறுசுறுப்பு தெரியும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவாற்ற அவர் ஒரு நிமிடம் தாமதித்து வந்ததற்காக அங்குள்ளவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

ஒருமுறை நெப்போலியன் தம்முடைய தளபதிகளை விருந்திற்கு அழைத்தார். குறிபிட்ட நேரத்திற்குள் அவர்கள் வராததால் அவரே தனியாக அமர்ந்து உணவருந்த ஆரம்பித்து விட்டார். அவர் சாப்பிட்டு முடிக்கும் நேரத்தில், தளபதிகள் ஒருவர் பின் ஒருவராக அறையின் உள்ளே நுழைந்தனர். உடனே சாப்பிட்டு விட்டு எழுந்த நெப்போலியன், "தளபதிகளே! சாப்பிடும் நேரம் முடிந்து விட்டது. வாருங்கள், நாம் இனி ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் போருக்குச் செல்வோம்'' என்றார். அப்புறமென்ன, அன்று முழுவதும் தளபதிகள் பட்டினி தான்.

"குறிப்பிட்ட செயலை செய்து முடிப்பதிலோ, ஒரு குறிப்பிட்ட சந்திப்பை நிறைவேற்றுவதிலோ முழுகவனம் செலுத்தாதவன் ஒருபோதும் மதிக்கபட மாட்டான். அவன் வாழ்விலும் வெற்றி பெற மாட்டான்'' என்கிறார், டாக்டர் பீட்ச் என்ற மேலைநாட்டு அறிஞர்.

குறித்த நேரத்திற்குள் குறித்த வேலையைச் செய்து முடிக்கும் போது தான் பிறர் நம் மீது நம்பிக்கை கொள்வார்கள். தம்முடைய நிறுவனத்தில் குமாஸ்தாவாக பணிபுரிந்த ஒருவர் தாமதித்து வந்ததற்கு தன்னுடைய கடிகாரத்தை நொடிச்சாக்காக கூறியதும், " உன் கிளாக்கை மாற்று. இல்லையேல், நான் உன்னை மாற்றி விடுவேன்'' என்றார், வாஷிங்டன்.

ஒரு வேலையை செய்வது ஒரு விதையை விதைப்பது போலாகும். உரிய காலத்தில் விதைத்தால் தான், உரிய காலத்தில் அறுவடை செய்யமுடியும்.

No comments:

Post a Comment