Monday, February 20, 2012

பிரகாரமும் பரம்பொருளும்!

பல கோவில்களுக்கு நாம் செல்வதுண்டு. அதுவும் பழமை வாய்ந்த பாடல் பெற்ற கோவில்கள் என்றால், தனி மகிழ்ச்சிதான்! கோவிலுக்கு உள்ளே செல்லும் போது கூடவே மனத்தில் "ஏன் இறைவனை உடனே பார்க்க முடிவதில்லை? ஐந்து பிரகாரங்களைத் தாண்டித்தான் செல்ல வேண்டியிருக்கிறது?" என்ற கேள்வியும் ஓடும்.

காரணம் இல்லாமல் நம் முன்னோர்கள் ஒரு பழக்கத்தை ஏற்படுத்தி இருக்க மாட்டார்கள். ஐந்து பிரகாரமும் நம் ஐம்புலன்களாகிய மெய், வாய், கண், காது, மூக்கு, செவி ஆகிய ஐந்தையும் குறிக்கிறது. இந்த ஐந்தறிவுப் பொறிகள் மூலம் ஐந்தறிவு அனுபவம் என்ற நிலையைத் தாண்டி ஆறாவது அறிவின் வழியால் உணர்வதே கடவுள். ஆனால் தினமும் இந்த ஐம்புலன்கள் தரும் இன்பத்திலேயே மனிதன் உழன்று கொண்டிருக்கிறான்.

பல புராணங்கள், காப்பியங்கள், மற்றும் காவியங்கள் மூலம் மனிதனை இந்த ஐம்புலன்கள் படுத்தும் பாட்டை உணரலாம். யயாதி, விசுவாமித்திரர், இராவணன் ஆகியோரின் கதைகள் - இன்னும் எத்தனையோ? உடலால் மனிதன் மெய்யின்பத்தைத் துய்க்கிறான். அது மனிதனை அடிமை ஆக்குகிறது. ஆசை என்னும் நெய்யை ஊற்ற, ஊற்றக் கொழுந்து விட்டு எரியும் தீ போன்றது. மனிதனின் ஆசை என்றுமே அடங்குவதில்லை.

அடுத்து பசிக்கு உண்பதைக் காட்டிலும் ருசிக்கு உண்டு அவதிப்படுகிறான். அடுத்து வருவது கண். கண் போன போக்கிலே காலும் மனமும் போவதால், மனிதன் மீண்டும் ஆசை வலையில் சிக்கி விடுகிறான். நாசியின் மூலம் மனிதன் வாசனை வலையில் மாட்டிக்கொண்டு தவிக்கிறான். செவியின் மூலம் கேட்கப்படும் பலவித ஓசையினால் ஈர்க்கப்பட்டு, பாதை மாறிச் சென்று அல்லல் படுகிறான். தினம் தினம் மனிதன் இந்தப் போராட்டத்தில் உழல்வதால், அவன் சக்தி செலவாவதோடு மனமும் துன்பத்தில் ஆழ்ந்து விடுகிறது. இந்த நிலையிலிருந்து மீள வழி இல்லையா?

வழி இருக்கிறது. அதுதான் கோவிலுக்குக்குச் செல்லுதல். அதனால்தான் "கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்று நம் ஆன்றோர்கள் சொல்லி வைத்தனர். கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவதன் மூலம் மனிதன் ஆதம் பலம் பெறுகிறான். இந்த ஆத்ம பலம் கொண்டு இந்த ஐம்பொறிகளைக் கட்டுப்படுத்தி வாழ்ந்தால் மனிதன் இறைவனைக் காணலாம். ஒவ்வொரு பொறி தரும் இன்ப நுகர்ச்சி பற்றிய எண்ணங்களை ஒவ்வொரு பிரகாரத்திலும் விட்டுச் சென்றால், நமக்கும் இறைவனுக்கும் உள்ள இடைவெளி குறைந்து, நெருக்கம் அதிகரிக்கும்.

ஒவ்வொரு நாளும் மனிதன் பஞ்சப் பிரகாரங்களைக் கடந்து, ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி, இறைவனைத் தரிசிக்கச் செல்லும் போது அவன் வாழ்க்கை பயனுள்ளதாகிறது. இதனைத் தொடர்ந்து கடை பிடிப்பதன் மூலம் மனிதன் பரம்பொருளைப் பற்றிய பேரின்பத்தை அடைய முடியும் என்ற கருத்தைத் திருமூலர், "பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு; மேய்ப்பாருமின்றி வெறித்துத் திரிவன; மேய்ப்பாருமுண்டாய் வெறியுமடங்கினால் பார்ப்பான் பசுவைந்தும் பாலாய்ச் சொரியுமே" என்ற பாடல் மூலம் அழகாகக் கூறுகிறார்.

No comments:

Post a Comment