Thursday, February 9, 2012

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள பஞ்சசபைகள்


சிதம்பரம் நடராஜர் கோயிலில் பஞ்சசபைகள் உள்ளன. அவை சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்தசபை, ராசசபை.
சிற்றம்பலம்: நடராஜர் ஆடுகின்ற இடமான சித்சபையை சிற்றம்பலம். என்பர். இங்கு நடராஜர் ஆடும் நடனத்தை, அவரது தேவி சிவகாமி எப்போதும் கண்டு மகிழ்கிறாள். இதற்கு "தப்ர சபா' என்றும் பெயருண்டு. இச்சபைக்கு இரண்யவர்மன் என்னும் மன்னன் பொன்வேய்ந்தான். இதில் உள்ள படிகளை "பஞ்சாட்சரப்படிகள்' (நமசிவாய படிகள்)என்பர்.
பொன்னம்பலம்: சிற்றம்பலத்திற்கு முன் உள்ளது பொன்னம்பலம் என்னும் கனகசபை. இங்கு தான் நடராஜருக்கு அபிஷேகம் நடக்கும். இவ்விடத்தில் ஸ்படிகலிங்கத்திற்கு ஆறுகால பூஜையும், ரத்தினசபாபதிக்கு அபிஷேகமும் நடக்கிறது.
பேரம்பலம்: பேரம்பலத்திற்கு தேவசபை என்று பெயருண்டு. விநாயகர், முருகன், நடராஜர், சிவகாமி, சண்டிகேஸ்வரர் என்னும் பஞ்சமூர்த்திகளும் எழுந்தருள்வர். இச்சபைக்கு பொன் வேய்ந்தவன் மூன்றாம் குலோத்துங்கன்.
நிருத்தசபை: நிருத்தசபை நடராஜருக்குரிய கொடிமரத்தின் தெற்கே உள்ளது. இங்கு அவர் ஊர்த்துவதாண்டவ கோலத்தில் காட்சியளிக்கிறார்.
ராசசபை: இங்குள்ள ஆயிரங்கால் மண்டபமே ராசசபை. ஆனி, மார்கழியில் நடக்கும் விழாவில் தேரில் பவனி வரும் நடராஜர், ராசசபைக்கு எழுந்தருள்வது வழக்கம். ஆருத்ராதரிசனம் இங்கு தான் நடக்கும். சிவகாமியம்மன் முன்னால், நடராஜர் முன்னும் பின்னும் நடனமாடி தரிசனம் தருவார். இதற்கு "அனுகிரக தரிசனம்' என்று பெயர்.

No comments:

Post a Comment