Friday, March 9, 2012

"ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா''


ஓடி விளையாடு பாப்பா' என்றபாட்டை பாடியவர் யார் என்றால் "பாரதியார்' என்று பட்டென பதில் சொல்லி விடுவீர்கள். ஆனால், அந்தப் பாட்டு பாரதியாரின் கற்பனையில் பிறக்க காரணமான "பாப்பா' யார் தெரியுமா? தொடருங்க!
பாரதியாரின் இரண்டாவது மகள் சகுந்தலா, ஒருநாள் அழுது கொண்டிருந்தாள். அவளை விசாரித்த போது, ""அம்மா திட்டினாள்,'' என்றாள். பாரதியார் தன் மனைவி செல்லம்மாளைக் கடிந்து கொண்டார்.
""குழந்தையை ஏன் திட்டுகிறாய்?'' என்றார்.
""உங்களுக்கென்ன! காலை முதல் மாலை வரை ஏதாவது எழுதுவதே உங்களுக்கு வேலையாகி விட்டது. நானல்லவா இவளைக் கவனிக்க வேண்டியிருக்கிறது! உங்கள் செல்லமகள் செய்யும் திருவிளையாடல்கள் உங்களுக்கெங்கே தெரியப் போகிறது! பக்கத்து வீடுகளுக்கு ஓடுகிறாள். அங்கே குழந்தைகளுடன் சண்டை வருகிறது. யாராவது அடித்து விட்டால் அடி வாங்கி வந்து இங்கே
உட்கார்ந்து அழுகிறாள். இவளைச் சமாதானம் செய்வதே எனக்கு பிழைப்பாகி விட்டது. "இனி வெளியே போகாதே, ஒழுங்காக வீட்டில் இரு' எனக் கண்டித்தேன். அதற்காக உட்கார்ந்து அழுகிறாள்,'' என்றார் சலிப்புடன்.
பாரதியார் சிரித்தபடியே மகளை அணைத்துக் கொண்டார்.
""சகுந்தலா! நான் உனக்கு ஒரு பாட்டு கற்றுத் தருகிறேன். அதைப் பாடிக்கொண்டே இரு, பொழுது பயனுள்ளதாகக் கழியும்,'' என்றார்.
அவரது வாயிலிருந்து பாப்பா பாட்டு மழையாய் பொழிந்தது.
""ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா'' என்று.
இப்படியாக, பாப்பா பாட்டு பிறக்க காரணமாக இருந்தது,நம் முண்டாசுக் கவிஞனின் செல்லத் திருமகள் தான்!

No comments:

Post a Comment