Saturday, March 10, 2012

வள்ளலார்-அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை.

ருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை.

"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று கூறியவர் ஜோதி ராமலிங்க வள்ளலார். அவர் நிறுவிய சத்யஞான சபையில் தைப்பூசத்தன்று ஜோதி தரிசன விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.

கடலூரிலிருந்து 34 கிலோமீட்டர் தூரத் தில் உள்ளது வடலூர். வடலூரிலிருந்து பார்த் தால் இராமலிங்கரின் இஷ்டதெய்வமான தில்லை அம்பலவாணரின் ஆலய நான்கு கோபுரங்களும் தெரியும். இந்த புனிதத் தன்மையை முன்னிட்டுதான் ஒளி வடிவ இறைவனுக்கு சத்ய ஞான சபை உருவாக்க வடலூரைத் தேர்ந்தெடுத்தார் வள்ளலார்.

ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை என்ற சித்தாந்தத்தை மேற்கொண்ட வள்ளலார், 1865-ல் உலகை நல்வழிப்படுத்துவதற்கு உருவாக்கியதுதான் சமரச சுத்த சன்மார்க்க சங்கமாகும்.

பசித்தவர்களுக்கு அன்னமிட 23-5-1867-ல் உருவாக்கப்பட்டதுதான் சத்ய தரும சாலை. இதை அமைத்து அன்னதானத்தை வள்ளலார் துவக்கினார். அதற்கு அன்று அவர் ஏற்றி வைத்த அடுப்பு இன்று வரை 145 ஆண்டுகளாக எரிந்து கொண்டே உள்ளது. இது 21 அடி நீளமும், இரண்டரை அடி அகலமும் ஆழமும் கொண்டது. தினமும் காலை 6.00 மணி, 8.00 மணி, பகல் 12.00 மணி, மாலை 5.00 மணி, இரவு 8.00 மணி என்று ஐந்து முறை அன்னதானம் நடக்கிறது. விசேஷ நாட்களில் நாள் முழுவதும் அன்னதானம் நடத்துகின்றனர்.

சத்யஞான சபை என்ற கோவில் 25-1-1872-ல் அமைக்கப்பட்டது. இறைவன் ஒளிமயமானவன். இதை உணர்த்த நிறுவியதுதான் இது. உடல் அமைப்போடு ஒப்பிடும் வகையில் எண் கோண வடிவில் சத்யஞான சபை அமைக்கப் பட்டுள்ளது. இங்கு தெற்கு வாயில் வழி உள் சென்றால், வலப்புறம் பொற்சபையும் இடப் புறம் சிற்சபையும் உள்ளன. பஞ்சபூதங்களைக் குறிக்கும் ஐந்து படிகள் உள்ளன. அவற்றைக் கடந்து உள்ளே சென்றால், சதுர வடிவ பீடத் தின்மேல் வள்ளலார் ஏற்றி வைத்த அணையா தீபத்தைக் காணலாம். அதற்குப் பின்னே 6.9 அடி உயரமும், 4.2 அடி அகலமும் கொண்ட நிலைக் கண்ணாடி உள்ளது. கண்ணாடியை மறைக்கும் வண்ணம் ஏழு நிறங்களைக் கொண்ட ஏழு திரைச்சீலைகள் தொங்கவிடப் பட்டுள்ளன. இந்தத் திரைகளை விலக்கி, கண்ணாடியில் தெரியும் தீபத்தை தரிசிப்பதே ஜோதி தரிசனம் எனப்படுகிறது.

சத்யஞான சபையில் 1872-ஆம் ஆண்டு தைப்பூசத்தன்று வள்ளலார் ஜோதி தரிசனத் தைத் தொடங்கி வைத்தார். அது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தைப்பூசத்தன்று மட்டுமே ஏழு திரைகள் விலக்கப்பட்டு ஜோதி தரிசனம் காணலாம். மாத பூசங்களில் ஆறு திரைகள் மட்டுமே விலக்கப்படும்.

இந்த ஏழு வண்ணத் திரைகளுக்கும் தத்துவங்கள் உண்டு.

கருப்புத்திரை- மாயையை விலக்கும்.

நீலத்திரை- உயர்ந்த நோக்கத்திற்கு ஏற்படும் தடையை விலக்கும்.

பச்சைத்திரை- உயிர்களிடம் அன்பு, கருணையை உண்டாக்கும்.

சிவப்புத்திரை- உணர்வுகளைச் சீராக்கும்.

பொன்னிறத்திரை- ஆசைகளால் ஏற்படும் தீமைகளை விலக்கும்.

ஆறு வண்ணங்களும் இணைந்த திரை- உலக மாயைகளை விலக்கும்.

இந்த ஏழு திரைகளை விலக்கி ஞான ஒளி யைக் காண்பதே ஜோதி தரிசனமாகும்.

சூரியனின் உத்தராயன புண்ணிய காலப் பயணம்- அதாவது வடக்கு நோக்கிய நகர்தல் தை மாத முதல் நாளில் தொடங்குகிறது. அந்த மாதத்தில் வரும் பூச நாளின் அதிகாலையில், கிழக்கில் சூரியனும் மேற்கில் முழு நிலவும் நடுவில் ஞானசபையில் உள்ள ஜோதியும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். இந்த அபூர்வ அமைப்பால்தான் எல்லா ஆலயங்களும் தைப் பூசத்தன்று சிறப்பு வழிபாடுகள் நடத்துகின் றனர். அன்றைய நாளில் சூரிய ஒளியிலிருந்து காஸ்மிக் கதிர்கள் எனும் மெய்காந்த அலைகள் அதிக அளவில் வெளிப்படும்.

"ஆன்ம விசாரணை என்ற தியானத்தை தினமும் செய்து வந்தால் மெய் காந்த அலைகளைப் பெறமுடியும். தியானத்தின் மூலம் இயற்கையின் உண்மை விளக்கங்களையும் ரகசியங்களையும் முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும்' என வள்ளலார் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

"தேவையற்ற எண்ணங்களையும் ஆசை களையும் மனதிலிருந்து அகற்ற மனத்தூய்மை வேண்டும். இதை அடைய தியானத்தால் மட்டுமே இயலும். இதுதான் ஆன்ம விசாரணை ஆகும். மனம் ஒருமைப்பட சுவாசம்தான் உறு துணை. சூரிய கலை, சந்திர கலை, அக்னி கலை என்ற சுவாசத்தால் புருவ மத்தியான சிற்சபை யில் மென்மையான ஜோதியாக உருவெடுக்கும். இதை ஒவ்வொரு மனிதனும் தன் முயற்சியால் உணரலாம்' என்கிறார் வள்ளலார். தியானத் தால் இயற்கை ரகசியங்களான இயற்கைச் சீற்றம், பேரழிவு போன்றவற்றையும் அறியலாம்.

வள்ளலார் இயற்றிய நூல்கள்

திருவருட்பா, ஜீவகாருண்ய ஒழுக்கம், மனு முறை கண்ட வாசகம் ஆகியவை. திருவருட்பா ஆறாயிரம் பாடல்களைக் கொண்டது. இவர் ஒரே இரவில் எழுதிய 1956 வரிகள் கொண்ட அருட்பெருஞ்ஜோதி என்ற அகவல் பா, இவரின் சன்மார்க்க சங்கத்தினரால் பொதுமறை என போற்றப்படுகிறது.

ஆன்மநேய ஒருமைப்பாடு பன்னிரண்டு

ஏமசித்தி, சாகாக்கல்வி, தத்துவ நிக்கிரகம் செய்தல், கடவுள் நிலையறிந்து அவ்வமயம் ஆதல் என நான்கு நெறிகளும்; இந்திரிய ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என்ற நான்கு ஒழுக்கமும்; சமரச சன்மார்க்க சங்கம், சத்திய தரும சாலை, சத்யஞான சபை, சித்திவளாகம் ஆகிய நான்கும் என பன்னி ரண்டும் ஒன்றுபட்டதே ஆன்மநேய ஒருமை.

வள்ளலாரின் பத்து நிலைகள்

● நான் நன்றாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்.

● தன்னைச் சுற்றியுள்ளவர்கள் சுகமாக வாழவேண்டும் என்று எண்ண வேண்டும்.

● உலகில் உள்ள எல்லாரும் இன்பமாய் வாழவேண்டும் என நினைத்தல்.

● மனிதனைவிட குறைந்த அறிவுடைய விலங்குகள்மீதும் கருணை காட்ட வேண்டும்.

● பறவை, ஊர்வன என அனைத்தையும் நேசிக்க வேண்டும்.

● புழு, மீன் ஆகியவற் றிடம்கூட இரக்கம் காட்ட வேண்டும்.

● ஓரறிவு உயிர்கள் வாடி னால்கூட நாம் வாட வேண்டும்.

● எல்லா உயிர்களையும் தம் உயிர் என நினைத்துப் பழக வேண்டும்.

இவை புற வாழ்வு தொடர் பான எட்டு நிலைகளாகும்.

அடுத்த இரண்டு நிலை களில் இறைவழிபாட்டுச் சிந்தனை தோன்றிவிடுகிறது.

● எல்லா உயிர்களும் இறைவன் வாழும் நிலையங் கள் என்று எண்ணி அவற் றுக்குத் தொண்டு புரிந்து வாழ்வதே இறைவழிபாடு என்று நினைப்பது.

● இறைவழிபாட்டின்படி வாழ்ந்து இறுதி யில் கருணைமயமான இறைவனோடு இரண் டறக் கலந்து மரணமில்லாத பெருவாழ்வு.

வள்ளலாரின் பத்து நெறிகள்

● கடவுள் ஒருவரே. அவர் அருட்பெரும் ஜோதிமயமானவர்.

● மக்களிடம் ஜாதி- சமய வேறுபாடு கூடாது.

● மாமிசம் உண்பதை முற்றாகத் தவிர்த்தல் வேண்டும்.

● ஏழைகளின் பசி போக்க வேண்டும்.

● ஜீவகாருண்யம்தான் அன்பு வடிவமான ஆண்டவனை அடைய சுலபமான வழியாகும்.

● உயிர்கள் யாவும் சமமானவை.

● அவற்றை அரவணைக்கும் ஆன்மநேய ஒருமைப்பாடு எல்லாரிடமும் வர வேண்டும்.

● தெய்வங்களுக்கு உயிர் பலி கொடுக்கக் கூடாது.

● உடலும் உள்ளமும் இறைவன் வாழும் ஆலயங்களாகும். இறந்தவர்களை தகனம் செய்யாமல் புதைக்க வேண்டும்.

● உண்மையான அன்பால் கடவுளை வழி பாடு செய்து கடவுள் ஒளியை நமக்குள் காண வேண்டும்.

வள்ளலார் கூறிய வாழ்க்கை வழிமுறைகள்

காலையில் சூரிய உதயத்திற்குமுன் எழுந்து தியானம் செய்ய வேண்டும். அதுபோல் இரவு படுக்கும் முன்பும் தியானம் செய்ய வேண்டும். கடவுள் சிந்தனையுடன் எழவேண்டும். அதே சிந்தனையுடன் உறங்க வேண்டும். கீரைகள், பழங் களைப் புசிப்பது நல்லது. எப்போதும் மன உற்சாகத்து டன் இருக்க வேண்டும். ஜீவகாருண்யத்துடனும் சுபகுணங்களுடனும் வாழ வேண்டும்.

வள்ளலார் வாழ்ந்த இடங்கள்:

சென்னை 1825- 1858; கருங்குழி- 1858- 1867; வடலூர் 1867- 1870; மேட்டுக் குப்பம் 1870- 1874.

வள்ளலாரின் அற்புதங்கள்

தில்லை நடராசர் தரிசனம் காண இராமை யாப் பிள்ளை குடும்பத்துடன் தன் நான்கு மாதக் குழந்தையான வள்ளலாரை எடுத்துச் சென்றார். அக்குழந்தை நடராசப் பெருமானுக்கு கற்பூர ஆராதனை நடக்கும்போது கண்ணிமை யாது கண்டு மகிழ்ந்து, கலகலவென சிரித்தது. இது கண்ட தீட்சிதர், "இக்குழந்தை அம்பல வாணரின் அருட்குழந்தைதான்' என்று போற்றி னார்.

பிள்ளைப் பருவத்தில் முருகன் அருளால் திண்ணையிலிருந்து கீழே விழாமல் காக்கப் பட்டார். ஐந்து வயது குழந்தைப் பருவத்திலேயே சிதம்பர ரகசியத்தை மக்களுக்குக் காட்டினார். சக்திதேவியே அண்ணி வடிவில் வந்து இவருக்கு உணவு அளித்துள்ளார். தண்ணீராலேயே இவர் விளக்கெரிய வைத்துள்ளார்.

இராமலிங்கர் தனியறையில் கண்ணாடிமுன் விளக்கேற்றி வழிபட்டார். அப்போது முருகன் கண்ணாடியில் திருக்காட்சி தந்து, எல்லா கலைகளையும் ஓதாது உணர்த்தியருளினார்.

திருவொற்றியூர் பட்டினத்தடிகள் ஆலயத் தில் தொண்டாற்றிய மூதாட்டி, தான் உய்யுமாறு ஓர் அற்புதம் காட்டியருள வேண்டினதால், அவர் கரத்தில் மணலைக் கொடுத்தார் வள்ள லார். அது உடனே சிவலிங்கமாக மாறியது.

கண்ணாடி சுப்பராய முதலியார் என்பவரின் வாதநோயை- அவர் வேண்டிக் கேட்டுக் கொண்டதால் தீர்த்து வைத்து, வாத நோய் போக்கிய வள்ளலார் என்று பெயர் பெற்றார்.

துலுக்காணத்தம்மன் கோவிலில் பக்தர்கள் வள்ளலாரைப் பாட அழைத்தனர். அங்கு பலி கொடுக்க ஆடு, கோழிகள் இருந்தன. அது கண்ட வள்ளலார், "பலி கொடுப்பது கூடாது; ஆடு, கோழிகளை விடுவித்தால்தான் பாடுவேன்' என்றார். அப்படியே செய்தனர். பின்னர்தான் இவர் பாடினார். அப்போது இவருக்கு வயது 44. அன்று பக்தர்கள் இவருக்கு வள்ளலார் என்ற பட்டம் தந்தனர்.

வள்ளலாரின் வாழ்க்கைக் குறிப்பு

தவ அருட்செல்வர், ஆன்மிக விஞ்ஞானி, ஓதாது உணர்ந்தவர், வள்ளலார் எல பலவாறு போற்றப்பெற்றவர் இராமலிங்க சுவாமிகள். இவரது பெற்றோர் ராமையா- சின்னம்மை. சுபானு ஆண்டு, புரட்டாசி மாதம், 21-ஆம் தேதி (5-10-1823) ஞாயிற்றுக்கிழமை மாலை 5.54 மணிக்கு மீன லக்னம், துலா ராசி, சித்திரை நட்சத்திரத்தில் வடலூரில் அவதரித்தார்.

வள்ளலாருக்கு சபாபதி, பரசுராமன் என்ற சகோதரர்களும்; சுந்தராம்பாள், உண்ணாமுலை என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லாமல் ஆன்மிக நாட்டத்தில் வளர்ந்த அவர், பெரியோர்களின் வற்புறத்தலால் தன் சகோதரி உண்ணாமுலை அம்மையின் மகள் தனகோடியை மணந்தார். மனைவியை ஆன்மிக வழியில் ஈடுபடுத்தினார். ராமகிருஷ்ணர்- சாரதாதேவிபோல் இருவரும் வாழ்ந்தனர்.

பல்வேறு ஆன்ம சாதனைகளையும் சமுதாயத் தொண்டையும் செய்த வள்ளலார், இறுதியாக தை மாத வெள்ளிக்கிழமை (30-1-1874) நள்ளிரவு 12.00 மணியளவில், மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தின் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டு இறைஜோதியில் கலந்தார். இந்த அறை திருக்காப்பீட்டு அறை எனப்படுகிறது.

தைப்பூசத்துக்கு மறுநாள் இவ்வறை திறக் கப்படுகிறது. அன்று சத்யஞான சபையிலிருந்து வள்ளலார் அருளிய திருவருட்பா பல்லக்கில் எடுத்து வரப்பட்டு இவ்வறையில் வைக்கப்படு கிறது. நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இவ்வறையை ஜன்னல் வழியாக பக்தர்கள் தரிசிக்கலாம்.

3 comments:

  1. http://sagakalvi.blogspot.in/2012/04/blog-post_25.html
    மாதந்தோறும் பூசம் கொண்டாடும் நீவீர்!
    தை பூசம் விழா கொண்டாடுகிறீர்! மகிழ்ச்சி!
    வைகாசி -11 தர்மசாலை விழா கொண்டாடி
    அன்னதானம் கொடுக்கின்றீர்! மிக்க மகிழ்ச்சி!

    புரட்டாசி சித்திரையை வள்ளலார் பிறந்தநாளை
    குரு பூஜையாக கொண்டாடாமல் விட்டீரே ஏன்?
    இனியாவது
    புரட்டாசி சித்திரை குரு பூஜை கொண்டாடுக!!
    மெய் அன்பர்களே
    அன்னதானம் செய்யும் மனித நேயம் மிக்கவர்களே!
    ஞானதானம் செய்து ஆன்மநேய ஒருமைப்பாடு கொள்க!

    உலககுரு - ஞானசற்குரு
    திருவருட் பிரகாச வள்ளலாருக்கு
    நாம் காட்டும் நன்றி
    நாம் ஆன்ம நேய ஒருமைப்பாடு உடையவர்
    ஆவதுதான்!

    ஞான சற்குரு சிவசெல்வராஜ்.
    தங்கஜோதி ஞானசபை
    கன்னியாகுமரி

    ReplyDelete
  2. புரட்டாசி சித்திரை நட்சத்திரத்தில் வள்ளல் பெருமானாரின் அவதார நாளாகக் கொண்டாடலாம்! ஆனால் குரு பூஜையாகக் கொண்டாடுவது முறையாகாது. குருபூஜை என்பதன் பொருளே வேறு! நிர்விகல்ப சமாதி ஆனவர்களுக்கு மட்டுமே குருபூஜை செய்வார்கள்!

    நன்றி

    ReplyDelete
  3. ஒளியுடல் ஆக்கும் இரகசியம் - 3
    அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரமும் ஆச்சரியமான அதன் பயன்களும் வருமாறு
    http://saramadikal.blogspot.in/2013/06/3.html
    அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி
    இவண் ,

    சாரம் அடிகள்
    94430 87944

    ReplyDelete