Saturday, March 10, 2012

"சனியைப்போல் கொடுப்பாரும் இல்லை; சனியைப்போல் கெடுப்பாரும் இல்லை'

னி பகவானின் திருவிளையாடல்கள் பற்றி சில கதைகள் உண்டு. அவற்றில் இதுவும் ஒன்று.

இக்கதையைப் படிப்பதாலேயே வாசகர்களுக்கு சில நன்மைகள் கிடைக்கலாம்; தீமைகள் விலகலாம். சனி பகவான் நலம் பல நல்க அவரை வேண்டுங்கள்.

மன்னன் ஒருவன் தன் நாட்டில் வாழும் பொற்கொல்லர் ஒருவரை அழைத்து, அவரிடம் சில ரத்தினக் கற்களைக் கொடுத்து, ""இதற்கு என்ன விலை கொடுக்கலாம்? மதிப்பு போட்டுச் சொல்லுங்கள்'' என்றான்.

அதைப் பெற்றுக்கொண்ட பொற்கொல்லர், ""மன்னா! இவற்றை எடுத்துச் சென்று சோதித்து, மதிப்பு நிர்ணயித்து நாளை வந்து சொல்கிறேன்'' என்று கூறி, ரத்தினங்களுடன் வீட்டுக்கு வந்தார். அப்போது அந்தி சாயும் நேரம். அதனால் தன் வீட்டுச் சுவரிலுள்ள முக்கோண விளக்கு மாடத்தில் எரிந்து கொண்டிருந்த அகல் விளக்கின் வெளிச்சத்தில், தன் கையில் இருந்த ரத்தினக் கற்களைத் திருப்பித் திருப்பி பார்த்துக் கொண்டிருந்தார்.

விளக்கு மாடச் சுவரின்மேல் ஒரு கொக்கின் படம் வரையப்பட்டிருந்தது. திடீரென அந்த கொக்கு சித்திரத்திற்கு உயிரும் உடலும் வந்தது. அது அவரது கையிலிருந்த ரத்தினங்களைக் கொத்தி விழுங்கிவிட்டு, மீண்டும் முன் போலவே சித்திரமாக மாறிவிட்டது.

இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற அந்த பொற்கொல்லர் உடனே தன் ஜாதகத்தையும் பஞ்சாங்கத்தையும் எடுத்துப் பார்த்தார்.
அன்று அவருக்கு ஏழரை ஆண்டு சனி ஆரம்பம் என்று தெரிந்தது.

நாளை மன்னர் முகத்தில் எப்படி விழிப்பது? நடந்ததைச் சொன்னால் நம்புவாரா என்று யோசித்து, மிகவும் வருந்தி அன்று இரவே காட்டுக்குச் சென்றுவிட்டார்.

மறுநாள்... பொற்கொல்லர் மன்னர் கொடுத்த ரத்தினங்களுடன் ஊரைவிட்டு ஓடிவிட்டார் என்று நாட்டு மக்கள் பேசிக் கொண்டனர். இச்செய்தி மன்னனுக்கும் எட்டியது. அந்தப் பொற்கொல்லரின் மனைவி, மகளைக் கைது செய்து சிறையில் அடைத்தான் மன்னன். பொற்கொல்லரைப் பிடிக்க அரச காவலாளிகள் காட்டுக்குள் சென்றனர். ஆனாலும் ஏழரை ஆண்டுகளாக அவரைப் பிடிக்க முடியவில்லை.

ஏழரைச் சனி முடியும் வேளை வந்தது.

அவ்வளவு காலமும் பசி- பட்டினியுடனும் தாடி- மீசையுடனும் காட்டில் திரிந்ததால் ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருந்த அந்த பொற்கொல்லர் தன் வீட்டுக்கு வந்தார். குளித்து முடித்து சனி பகவானைத் தியானித்துவிட்டு சுவரில் வரையப்பட்டிருந்த கொக்கு சித்திரத்தைப் பார்த்துக் கைநீட்டியபடி, ""சித்திரத்துக் கொக்கே, ரத்தினத்தைக் கக்கு'' என்றார்.

என்ன ஆச்சரியம்! அந்த சித்திரக் கொக்குக்கு உயிர் வந்து, ரத்தினங்களை அவரது கையில் கக்கிவிட்டு மீண்டும் சுவர் சித்திரமாக மாறியது.

அப்போது இரவு சோதனைக்காக மாறுவேடத்தில் அங்கு வந்த மன்னன், மறைவில் நின்று நடந்தவற்றைப் பார்த்தான். உடனே பொற்கொல்லரை வணங்கி நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டதுடன் அவருக்கு தன் நாட்டின் முதலமைச்சர் பதவியும் கொடுத்தான். அவரது மகளையும் மணந்து கொண்டான்.

ஏழரைச் சனி ஒருவரை எப்படி யெல்லாம் ஆட்டுவிக்கும் என்பதை இக்கதை மூலம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம். ஏழரை ஆண்டு சனி முடிகின்ற வேளையில்- உங்கள் ஜென்ம ராசிக்கு மூன்றாம் இடத்திற்கு வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே நற்பலன்களை வாரி வழங்க ஆரம்பித்து விடுவார் சனி பகவான்.

இதைத்தான் "சனியைப்போல் கொடுப்பாரும் இல்லை; சனியைப்போல் கெடுப்பாரும் இல்லை' என்று சொல்லுவார்கள்.
இதுதான் சனி பகவானின் மகத்துவம்!

No comments:

Post a Comment