Monday, May 14, 2012

நாம் வணங்கும் ஒவ்வொரு தெய்வங்களும் நம் உடலில் ஏதோ ஒரு ரூபத்தில் இருக்கிறார்கள்

 அதே போல நாம் வணங்கும் ஒவ்வொரு தெய்வங்களும் நம் உடலில் ஏதோ ஒரு ரூபத்தில் இருக்கிறார்கள். முதலில் யார் யார் என்ன என்ன அம்சமாக இருக்கிறார்கள் என்பதைச் சொல்கிறேன்.
சிவனார்- நமது உடல்
உமையவள்- உடலின் வலிமை, வெப்பம் மற்றும் பிராணன் முதலான வாயு சார்ந்த சக்திகள்.
விஷ்ணு- நமது உயிர்.
ப்ரம்ம தேவன்- நமது மனம்.
முருகப் பெருமான்- குண்டலினி சக்தி.
பிள்ளையார் - நம் உடலின் இயக்கங்கள்.

இப்படி நான் நினைப்பதற்கான காரணங்கள்.

சிவனார் எப்படி திடப்பொருள் என்பதும். உமையவள் எப்படி சக்தி என்பதும். விநாயகர் எப்படி செயல் என்பதும் இதற்கு முன்பு ஒரு பதிவில் விளக்கியிருந்தேன்.
அதன்படி பார்க்கும் பொழுது நம் உடல் சிவனார். உடலின் வலிமை, உடலின் வெப்பம், உடலில் உள்ள வாயு சார்ந்த சக்திகள் எல்லாம் உமையவள். அதனால் தான் அவளை சக்தி என்றும் நாம் அழைக்கிறோம். பிள்ளையார் செயலின் வடிவம் என்பதால், நம் உடலின் இயக்கங்கள் யாவும் அவரே ஆகிறார். உ-ம் இதயத் துடிப்பு.

மஹா விஷ்ணு உயிர்.

உயிருக்கும் மஹா விஷ்ணுவிற்கும் இடையிலான ஒற்றுமைகள்.
விஷ்ணு காக்கும் கடவுளாக அறியப் படுகிறார். உயிர் உடலில் இருக்கும் வரை உடல் அழுகாது. உயிர் பிரிந்தவுடன் அழுக ஆரம்பிக்கிறது.
விஷ்ணு பல்வேறு அவதாரங்கள் எடுக்கக்கூடியவர். உயிரும் அப்படித் தான் புல்லாக, பூடாய், புழுவாய், மரம், செடி, கொடிகளாய், எத்தனை எத்தனையோ வடிவம் தாங்கியிருக்கிறது.
விஷ்ணு வாமனனாகவும் பொடி நடை போடுவார். திருவிக்ரமனாகவும் வானளப்பார். உயிரும் அப்படித் தான் சிறு எறும்பாகவும் தன்னை வெளிப்படுத்துகிறது. பெரிய யானையாகவும் உருவம் கொள்கிறது.
விஷ்ணுவின் தங்கை மலைமகள். இது எதை உணர்த்துகிறது என்றால் உயிரும் உடலின் மற்ற சக்திகளும் அண்ணன் தங்கை போன்றவை. அதாவது உயிரும் உடலின் பிற சக்திகளும் ஓரே குணம் உடையது ஆனால் ஒன்றல்ல. மற்ற சக்திகளை அளக்கலாம் ஆனால் உயிரை அளக்க முடியாது. மற்ற சக்திகளின் தன்மைகளை விளக்கலாம் ஆனால் உயிரின் தன்மைகளை விளக்க முடியாது. மரணத்தின் போது உயிர் உடலை விட்டு செல்லும், பிற சக்திகள் செல்லாது. உடலுக்கும் அந்தச் சக்திகளுக்குமான திருமண பந்தம் அது தான்.

பிரம்ம தேவன் மனம்.

மனம் ஒயாமல் எதாவது சிந்தனைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. பிரம்ம தேவனும் அப்படித் தான் இடைவிடாமல் கோடிகணக்கான ஜீவராசிகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார். மனம் ரஜோ குணமுடையது. பிரம்ம தேவனும் ரஜோ குணம் உடையவராகவே அறியப்படுகிறார்.

முருகப் பெருமான் குண்டலினி சக்தி.

ஒரு முறை முருகர் பிரம்ம தேவனை ஓம்காரத்தின் பொருள் கேட்கிறார். பிரம்ம தேவனோ மறந்துவிட்டதாகச் சொல்கிறார். உடனே கோபம் கொண்ட முருகர் பிரம்ம தேவனை சிறை வைக்க சொல்லிவிடுகிறார். பின் சிவனார் முருகரை விளக்கம் கேட்க, ஒரு சிஷ்யனாக இருந்து கேட்டால் தான் விளக்குவேன் என சொல்லி அப்பனுக்கே உபதேசம் செய்தவராக பெருமை பெறுகிறார் முருகர்.

பிரம்ம தேவன் சிறைப் படுகிறார் என்றால் மனம் சிறைப் படுகிறது என்று பொருள். மனம் ஒரு விஷயத்தில் சிறைப்படுகிறது என்றால் அதனால் அதை தவிர வேறு எதையும் சிந்திக்க முடியாமல் போய்விடும். சிலர் உணவுக்கு அடிமையாய் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் மனம் உணவில் சிறைப்பட்டிருக்கிறது என்று பொருள். இதே போல நாம் எல்லோரும் ஏதோ ஒரு விஷயத்திற்கு அடிமை தான். இப்போது இந்த சிறையிலிருந்து விடுபட வேண்டும் என்றால் உடல் வளைந்து யோகத்தில் ஈடுபட வேண்டும். மீண்டும் மீண்டும் ஓம்காரத்தை உச்சரித்து நம் மனதில் பதிய வைக்க வேண்டும். அப்போது நம் குண்ட்லினி குளிர்வடைந்து மனதை அந்தச் சிறையிலிருந்து விடுவிக்கிறது. இது தான் சிவனார் பிரம்மதேவனுக்காக முருகரிடம் பரிந்துரைப்பதும், முருகரின் விருப்பத்துக்கு வளைந்து கொடுப்பதும் காட்டுகிறது. முருகர் மனம் குளிர்வ்து என்பது நம் குண்டலினி சக்தி குளிர்வதை குறிக்கிறது.

பெரும்பாலும் முருகர் சிறுவனாக சித்தரிக்கப்படுகிறார். சிறுவர்களிடம் முரட்டுத்தனம் கூடாது. அன்பாக இனிமையாக நடந்து கொள்ள வேண்டும். குண்டலினி யோகத்தை பற்றி சொல்பவர்களும் குண்டலினியின் குணங்களாக இதையே தான் சொல்கிறார்கள். குண்டலினி சக்தியை மேலெழும்ப செய்ய வேண்டும் என்றால் முரட்டுத்தனமாக முயற்சிக்கக் கூடாது. பொறுமையாகவும் நிதானமாகவும் யோகத்தில் ஈடுபட வேண்டும். முருகருக்கு பிடித்த உணவு பழங்கள். குண்டலினி சக்தியை விழிப்படைய செய்யவும் நிறைய பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது பரிந்துரைக்கப் படுகிறது.

முருகருக்கு ஆறு முகங்கள் உண்டு. ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு குணம் உண்டு. குணடலினி சக்தியும் மனித உடலின் ஆறு சக்கரங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. ஒவ்வொரு சக்கரத்தில் இருந்து அது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பொழுதும் அது ஒவ்வொரு விதமாக தன்னை வெளிப்படுத்திகிறது.

முருகரின் தோற்றமும் இதற்கு பொருந்துவதாக இருக்கிறது. முருகர் சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவர். குண்டலினி சக்தி தியானத்தில் ஈடுபடும் எவருக்குமே நெற்றிப் பொட்டில் தான்
குவியும்.

இப்படியாக ஒவ்வொரு தெய்வமும் நம்மோடு நம் உடலிலேயே இருக்கிறார்கள். அவர்கள் யாவரும் வெவ்வேறானவர்கள் அல்ல. ஓன்றே இரண்டானது, பின் அதுவே பலவானது. ஆகையால் இவர்களுள் உயர்வு தாழ்வு காண்பது தவறு

No comments:

Post a Comment