Sunday, June 17, 2012

குழந்தைகளுக்கு வைக்கும் திருஷ்டிப்பொட்டே அழகாக இருந்தால் திருஷ்டி எப்படி கழியும்

** குழந்தைகளுக்கு வைக்கும் திருஷ்டிப்பொட்டே அழகாக இருந்தால் திருஷ்டி எப்படி கழியும்?

அழகாக இருந்தாலும் திருஷ்டிப் பொட்டு தானே? கருமையால் பொட்டு வைத்து விட்டால் பார்ப்பவர்களுக்கு முதலில் அதுதான் கண்ணில் படும். இதனால், குழந்தைக்கு ஏற்படும் திருஷ்டி கழிந்து விடும். வேண்டுமானால் நீங்கள் திருஷ்டிப் பொட்டை அழகாக வைக்காமல், கோணலாக வையுங்கள்.

* தவறு செய்த மனிதனுக்கு அடுத்த பிறவியில் துன்பம் கொடுப்பதை விட இந்தப் பிறவியிலேயே அவனைத் திருத்தக் கூடாதா?

சென்றபிறவியில் செய்த பாவபுண்ணியபலனை அனுபவிப்பதற்கே இந்தப் பிறவியின் ஆயுட்காலம் போதவில்லை. புதிதாகச் சேரும் பாவங்களுக்கும் இறைவன் துன்பத்தைக் கொடுத்தால் மனிதனால் தாங்க முடியாது. இதற்காகத் தான் அவன் திருந்தும்வரை பொறுமையாகத் தண்டிக்க மீண்டும் மீண்டும் பிறக்கச் செய்கிறார். இந்த கருணையைப் புரிந்து கொண்டவர்கள் தீயவழியில் சென்று பாவத்தைச் சேர்க்க மாட்டார்கள். புரிந்து கொள்ளாதவர்களும், புரிந்து அலட்சியப்படுத்துபவர்களும் தீயவழியில் சென்று
பாவத்தைச் சேர்த்துக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் பக்குவப்படும் வரை பிறவிகளையும் அந்தந்த பிறவிகளில் இன்பதுன்ப அனுபவங்களையும் இறைவன் தந்து கொண்டேயிருப்பார். ஒரே பிறவியில் மனிதனைத் திருத்துவதற்கு சுவாமியின் கருணை உள்ளம் இடம் தராது.

* பெற்றோர் இருக்கும்போது, பிள்ளைகள் காகத்திற்குச் சாதம் வைக்கலாமா?

தினசரி சாப்பிடும் முன் காகத்திற்கு சாதம் வைப்பதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். பித்ரு தினங்களில் பெற்றோர் இல்லாதவர்கள் மட்டுமே வைக்க வேண்டும். அமாவாசை, முன்னோர்வழிபாட்டு நாள் போன்றவை பித்ரு தினங்களாகும்.

* ஆண்வாரிசு இல்லாத என் தந்தைக்கு மகளாகிய நான் திதி கொடுக்கலாமா?

நேரடியாகக் கொடுக்க முடியாது. உங்கள் தந்தைவழி அதாவதுசித்தப்பா,பெரியப்பா அல்லது அவர்களின் மகன்கள் போன்றவர்கள் மூலம் திதி கொடுக்கலாம். செலவிற்குப் பணத்தை நீங்கள் கொடுத்து விடலாம்.

* கோயிலில்உடைத்த சிதறுகாயைப் பிரசாதமாகக் கருதி சாப்பிடலாமா?

தேங்காய் சிதறுவது போன்று நம் தடைகள் மற்றும் கஷ்டங்கள் சிதறுவதாக அர்த்தம். எனவே, அது பிரசாதம் கிடையாது. சில விஷயங்களை இல்லாதவர்களுக்காக விட்டுக் கொடுப்பது நல்லது.

* வீட்டிலேயே எள்தீபமிட்டு சனீஸ்வரரை வழிபடலாமா?

எள் தீபத்தை வீட்டில் ஏற்றக்கூடாது. கோயிலில் தான் ஏற்ற வேண்டும். 

No comments:

Post a Comment