Sunday, July 29, 2012

வரலட்சுமி விரதம்

பெண்கள் கடைபிடிக்கும் விரதங்களில் வரலட்சுமி விரதம் முக்கியமானது. ஆந்திராவில் இந்த விரதம் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நோன்பை மாமியார், மருமகளுக்கு எடுத்து வைப்பது மரபு. புதிதாக திருமணமான பெண்கள், அந்த ஆண்டிலேயே விரதத்தை துவங்கி விடுவது சிறப்பு. ஒருவேளை, இவ்வளவு நாள் விட்டுப் போயிருந்தாலும் இப்போது துவங்கலாம். இதனை "தலைநோன்பு' என்பர். தலைநோன்பு துவங்குவோர் லட்சுமி தாயாருக்கு லட்டு, மைசூர்பாகு, திரட்டுப்பால் நைவேத்யம் செய்யலாம். இதுதவிர, வழக்கமான பாயாசம், வடை, கொழுக்கட்டை, எள்ளுருண்டை, இட்லி தயாரித்து ஏழைப்பெண்களுக்கு தானமாகக் கொடுக்க வேண்டும். நல்ல உடையும் கொடுக்கலாம். தோரக்ரந்தி பூஜை! வரலட்சுமி பூஜை செய்பவர்கள், முதலில் விநாயகருக்கு பூஜை செய்ய வேண்டும். ஒன்பது முடிச்சு இட்ட, மஞ்சள் தடவிய நோன்புச்சரடை வரலட்சுமிக்கு அணிவிக்கவேண்டும். அம்பாளுக்கு நைவேத்யம் செய்து பூஜை செய்ய வேண்டும். பின் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலது மணிக்கட்டிலும் கயிறை அணிந்து கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள அனைவருக்கும் குடும்பத்தலைவியே கட்டி விட வேண்டும். இந்த வழிபாட்டிற்கு "தோரக்ரந்தி பூஜை' என்று பெயர். புனர்பூஜை செய்யுங்க! வரலட்சுமி விரதத்தன்று மாலையில் வரலட்சுமிக்கு தூபதீபம், கற்பூரம் காட்டி வணங்க வேண்டும். பின் ஆரத்தி எடுக்கவேண்டும். வீட்டுக்கு அழைத்த சுமங்கலிகளுக்கு வெற்றிலைபாக்கு, தாம்பூலம்,உடை கொடுத்து வழியனுப்ப வேண்டும். நிவேதனம் செய்த பலகார வகைகளை இரவில் சாப்பிடவேண்டும். அடுத்த நாள் காலையில் மறுபூஜை செய்ய வேண்டும். இதற்கு புனர்பூஜை என்று பெயர். இதனைச் செய்ய இயலாதவர்கள் முதல்நாளே சுண்டல் நைவேத்யம் செய்து பூஜையை நிறைவு செய்யலாம். அரிசிப்பானையில் கலசம்! வரலட்சுமி பூஜையில் கலசம் வைப்பதுண்டு. இதை அன்று இரவில் அரிசி பாத்திரத்தில் வைக்கவேண்டும். இதனால், வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது ஐதீகம். கலசத்தில் இருந்த தேங்காயை, மறுவெள்ளியன்று பால்பாயசம் செய்ய பயன்படுத்தலாம். விரதம் இருந்த அனைவரும் இந்த பாயசத்தைப் பருகுவது அவசியம். விரத பலன்கள் சுமங்கலிப்பெண்கள் மேற்கொள்ளும் வரலட்சுமி விரதத்தால் வீட்டில் ஒற்றுமை மேலோங்கும். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். லட்சுமி அருளால் செல்வவளம் பெருகும். கன்னிப் பெண்களுக்கு விரைவில் மணவாழ்வு உண்டாகும். வீட்டில் செல்வ வளத்தை பெருக்க ஒவ்வொரு வீட்டிலும் செய்யப்படும் ஒரு பூஜை தான் வரலட்சுமி பூஜை. அந்த பூஜை செய்யும் நாளானது வருடத்திற்கு ஒரு முறை, அதிலும் ஆடி அல்லது ஆவணி மாதங்களில், பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் தான் வரும். அதுவும் அந்த பூஜையை செய்யும் போது வீட்டை மிகவும் சுத்தமாக வைத்து, பூஜை அறையை நன்கு அலங்கரித்து, ஒரு பெரிய விஷேசம் போல் பெண்கள் செய்வார்கள். அதிலும் இந்த பூஜையை விரதம் இருந்து, சுமங்கலிகள் செய்தால் அவர்களது மாங்கல்ய பாக்கியம் நீடிக்கும் என்றும், கன்னிப் பெண்கள் செய்தால் நல்ல குடும்ப வாழ்க்கை அமையும் என்றும் நம் முன்னோர்கள் கூறுவார்கள். வீட்டை எப்படி வைத்திருக்க வேண்டும்? வரலட்சுமி பூஜையின் முதல் நாள் வீட்டை நன்கு பெருக்கி, துடைத்து, மாக்கோலமிட்டு செம்மண் பூச வேண்டும். மேலும் வாசற்படிக்கு மஞ்சள், குங்குமப் பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும். வீட்டின் தென் மேற்கு மூலையில் மாக்கோலமிட்டு செம்மண் இட்ட ஒரு பலகையின் மேல் தலைவாழை இலை வைத்து, அதில் சிறிது பச்சரிசியைப் பரப்பி, அதன் மேல் அம்மன் கலசத்தை வைக்க வேண்டும். மேலும் பழங்கள், இனிப்புகள் வாங்கி வைக்க வேண்டும். அம்மன் கலசம் செய்ய... கலசம் செய்ய ஒரு சொம்பை எடுத்து, அதில் அரிசி அல்லது தண்ணீரை நிரப்பி, மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து, தகரத்தால் வெள்ளி முலாம் பூசப்பட்ட அம்மன் முகத்தை, அந்த தேங்காயில் வைத்து பத்திரமாக கட்டிக் கொள்ள வேண்டும். பின் ஒரு சிறு சேலைத்துணியை அந்த கலசத்தில், சேலையை கட்டுவது போல் கட்டிவிட வேண்டும். பின் அம்மனுக்கு வீட்டில் இருக்கும் நகைகள் மற்றும் அழகான பூக்களால் அலங்கரிக்க வேண்டும். இப்போது கலசமானது தயாராகிவிட்டது. பூஜை அன்று... பூஜை செய்யும் முன் கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்ய பால் பாயாசம் செய்து வைக்கலாம். பூஜையில் ஒன்பது முடிச்சுடைய மங்களகரமான மஞ்சள் கயிற்றைப் பூஜையில் வைத்து வழிபட வேண்டும். பின்பு அந்த கயிற்றை வலது மணிக்கட்டில் கட்ட வேண்டும். அதிலும் விரதம் இருப்பவர்கள் அந்த தினத்தில் லட்சுமி துதி, லட்சுமி வரலாறு போன்றவற்றைச் சொல்லி தங்களை முழுமையாக வழிபாட்டில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். பின்பு சுமங்கலிப் பெண்களை அழைத்து, பூஜை முடிந்ததும், அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு போன்ற தட்சணைகளைக் கொடுத்து அனுப்ப வேண்டும். இவ்வாறெல்லாம் பூஜை செய்தால் வீட்டில் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

No comments:

Post a Comment