Sunday, July 29, 2012

கவனச்சிதறல் கூடவே கூடாது

அலுவலகத்திலோ, வீட்டிலோ ஒரு பணியைச் செய்யும்போது, சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என வேடிக்கை பார்த்து நேரத்தை வீணடிப்பவர்கள் பலர். இதனால் செய்கிற வேலையில் குளறுபடி ஏற்படுகிறது. ஒருவன் தூண்டிலை கால்வாயில் போட்டு விட்டு, தூண்டில் முள் அசைகிறதா என கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது, ஒருவன் அவ்வழியே வந்தான். ""ஐயா! சுப்பையா வீடு எங்கே இருக்கிறது?'' என்றான். மீன் பிடித்தவன் அவனைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. அவனது கண்ணும் கருத்தும் தூண்டில் முள்ளிலேயே இருந்தது. வந்தவன் திரும்பவும் கேட்டான். உஹும்...அவன் அசையவே இல்லை. ""அடேய், என் கேள்விக்கு பதில் சொன்னால் குறைந்தா போய்விடுவாய்! இல்லை நீ செவிடா!'' அப்போதும் அவன் பதில் சொல்லவில்லை. அவன் சலித்துப்போய் கிளம்பி கொஞ்ச தூரம் போய்விட்டான். அந்நேரத்தில் தூண்டில் முள் அசைய, லபக்கென வெளியே இழுத்தான். மீன் ஒன்று சிக்கியிருந்தது. இப்போது, தன்னிடம் கேள்வி கேட்டவனை நோக்கி ஓடினான். ""ஐயா! என்னிடம் ஏதோ கேட்டீர்களே! நான் தொழிலில் மூழ்கிவிட்டால் என்னையே மறந்து விடுவேன். அதனால், பிறர் கேள்வி கேட்கிற உணர்வு ஏதோ இருந்தாலும் கூட, என்ன சொல்கிறார்கள் என்பது என் காதில் விழாது. இப்போது சொல்லுங்கள், தாங்கள் என்ன கேட்டீர்கள்?'' என்றான். கேள்வி கேட்டவனுக்கோ கோபம். ""எத்தனையோ முறை நான் கத்திக்கத்தி கேட்டும், நீ பதில் சொல்லவில்லை. இப்போது கேட்கிறாயே?'' என்று சலிப்புடன் சொன்னவன்,சுப்பையா வீடு இருக்குமிடத்தைக் கேட்டு தெரிந்து கொண்டான். தொழிலில் மட்டுமல்ல, தியானம் போன்ற ஆன்மிக விஷயங்களிலும், வெளியில் கவனம் செலுத்துவதைமறந்துவிடவேண்டும்... புரிகிறதா!

1 comment:

  1. entha oru seyal analum athil mulu edupadu vendum enpathai ikkathai unarthukirathu.

    ReplyDelete