Sunday, September 30, 2012

சிவபுராணம் – பொருள் / விளக்கம்

நமச்சிவாய வாழ்க – திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க; நாதன் தாள் வாழ்க – திருவைந்தெழுத்தின் வடிவாக விளங்கும் இறைவனது திருவடி வாழ்க; இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க -இமைக்கும் நேரமுங் கூட என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்க; கோகழி ஆண்ட குரு மணிதன் தாள் வாழ்க – திருப்பெருந்துறையில் எழுந்தருளி என்னையாட்கொண்ட குருமூர்த்தியினது திருவடி வாழ்க; ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க – ஆகம வடிவாகி நின்று இனிமையைத் தருபவனாகிய இறைவனது திருவடி வாழ்க; வேதத்தில் பொதுவாக விளங்குதல் போல அல்லாமல், ஆகமத்தில் சிறப்பாக இறைவன் விளங்குதலால், “ஆகமமாகி நின்றண்ணிப்பான்” என்றார். ஆகமங்கள் காமியம் முதல் வாதுளம் ஈறாக உள்ள இருபத்தெட்டு. ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க – ஒன்றாயும் பலவாயும் உள்ள இறைவனது திருவடி வாழ்க. “ஏகன் அநேகன்” என்றமையால், இறைவன் தன்மையால் ஒரு பொருளாகவும், உயிர்களோடு கலந்திருத்தலால் பல பொருளாயும் இருக்கிறான் என்ற உண்மையும் கிடைக்கிறது. வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க – மன ஓட்டத்தைத் தொலைத்து என்னை அடிமை கொண்ட முழுமுதற் கடவுளது திருவடி மேம்படுக; மன ஓட்டத்தைத் தவிர்ப்பவனும், பிறவித் துன்பத்தை நீக்குபவனும் இறைவனே என்பது, “வேகங் கெடுத்தாண்ட வேந்தன்”, “பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்” என்பவற்றால் விளங்கும். பிஞ்ஞகன் – தலைக்கோலம் உடையவன்; பிறை, கங்கை, அரவம் முதலியன தலைக்கோலங்கள். பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க – பிறவித் தளையை அறுக்கிற இறைவனது வீரக்கழலணிந்த திருவடிகள் மேம்படுக; புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க – தன்னை வணங்காத அயலார்க்கு எட்டாதவனாயிருப்பவனது தாமரை மலர் போலும் திருவடிகள் மேம்படுக; இறைவன் தன்னை நினையாதவரைத் தனக்கு வேறானவராகவே வைத்துச் சிறிதும் விளங்கித் தோன்றாதிருத்தலின், “புறத்தார்க்குச் சேயோன்” என்றார். கரம் குவிவார் உள் மகிழும் கோன்கழல்கள் வெல்க – கை கூம்பப்பெற்றவர்க்கு மனம் மகிழ்ந்து அருளுகின்ற இறைவன் திருவடிகள் மேம்படுக; சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க – கைகள் தலைமேல் கூம்பப்பெற்றவரை உயரப் பண்ணுகிற சிறப்புடையவனது திருவடி மேம்படுக. இறைவன் விரும்பியிருக்குமிடங்கள் இரண்டு. ஒன்று, நெஞ்சத்தாமரை; மற்றொன்று, துவாதசாந்தப் பெருவெளி; அஃதாவது, தலைக்குப் பன்னிரண்டு அங்குலங்களுக்குமேலுள்ள இடம். இவ்விரண்டு இடங்களிலும் இறைவனை நினைத்து வழிபட வேண்டும் என்பதைக் குறிப்பிட, “கரங்குவிவார், சிரங்குவிவார்” என்று கூறினார் ஈசன் அடி போற்றி – ஈசனது திருவடிக்கு வணக்கம், எந்தை அடி போற்றி – எம் தந்தையினது திருவடிக்கு வணக்கம், தேசன் அடி போற்றி – ஒளியுருவை உடையவனது திருவடிக்கு வணக்கம்; சிவன் சேவடி போற்றி -சிவபிரானது திருவடிக்கு வணக்கம்; நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி – அடியாரது அன்பின்கண் நிலைத்து நின்ற மாசற்றவனது திருவடிக்கு வணக்கம்; மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி – நிலையாமையுடைய பிறவியை ஒழிக்கின்ற அரசனது திருவடிக்கு வணக்கம்; சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி – சிறப்புப் பொருந்திய திருப்பெருந்துறையின்கண் எழுந்தருளிய நம்முடைய கடவுளது திருவடிக்கு வணக்கம். ஆராத இன்பம் அருளும் மலை போற்றி – வெறுக்காத இன்பத்தைக் கொடுக்கின்ற மலைபோலும் கருணையையுடைய வனுக்கு வணக்கம். ஈசன் என்றதனால் தன் வயத்தனாதலும், எந்தை என்றதனால் பேரருளுடையனாதலும், தேசன் என்றதனால் தூய உடம்பினனாதலும், சிவன் என்றதனால் இயற்கை உணர்வினனாதலும், நிமலன் என்றதனால் இயல்பாகவே பாசங்களின் நீங்கினவனாதலும், பிறப்பறுக்கும் மன்னன் என்றதனால் முடிவிலா ஆற்றலுடையனாதலும், தேவன் என்றதனால் முற்றுணர்புடையனாதலும், ஆராத இன்பம் அருளுமலை என்றதனால் வரம்பில் இன்பமுடையனாதலுமாகிய இறைவனது எட்டுக் குணங்களையும் காட்டினார். “எண் குணத்தான்தாள்” என்ற நாயனார் அருள் மொழிக்குப் பரிமேலழகர் உரையில் கூறப்பட்டுள்ள எண்குணங்களைக் காண்க ———————————————————————————————————————————- சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் – சிவபெருமானாகிய அவன் என் மனத்தில் நிலை பெற்றிருந்ததனால், அவன் அருளாலே அவன் தாள் வணங்கி – அவனுடைய திருவருளாலே அவனுடைய திருவடியை வணங்கி, சிந்தை மகிழ – மனம் மகிழும்படியும், சிவபுராணந்தன்னை – சிவனது அநாதி முறைமையான பழமையை முந்தை வினை முழுதும் ஓய – முன்னைய வினை முழுமையும் கெடவும், , யான் உரைப்பன் – யான் சொல்லுவேன். கண்ணுதலான் தன் கருணைக் கண் காட்ட வந்து எய்தி – நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான் தனது அருட்கண் காட்ட அதனால் அவன் திரு முன்பு வந்து அடைந்து, எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி – நினைத்தற்குக் கூடாத அழகு வாய்ந்த அவனது திருவடியை வணங்கிய பின், —————————————————————————————————————————————— விண் நிறைந்தும் – வானமாகி நிறைந்தும், மண் நிறைந்தும் – மண்ணாகி நிறைந்தும், மிக்காய் – மேலானவனே, விளங்கு ஒளியாய் – இயல்பாய் விளங்குகின்ற ஒளிப்பிழம்பாகி, எண் இறந்து – மனத்தைக் கடந்து, எல்லை இலாதானே – அளவின்றி நிற்பவனே, நின்பெருஞ்சீர் – உன்னுடைய மிக்க சிறப்பை, பொல்லா வினையேன் – கொடிய வினையையுடையவனாகிய யான், புகழும் ஆறு ஒன்று அறியேன் – புகழுகின்ற விதம் சிறிதும் அறிகிலேன். இறைவன் ஐம்பெரும்பூதங்களில் கலந்தும் அவற்றுக்கு அப்பாலாயும் இருக்கிறான் என்பதை விளக்க, “விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய்” என்றார். “உலகெலா மாகி வேறாய் உடனுமா யொளியாய்” என்ற சித்தியார் திருவாக்கும் இதனையே வலியுறுத்துகிறது. இறைவனது பெருமையைக் காட்டித் தன் சிறுமையைக் காட்ட, ‘பொல்லா வினையேன்’ என்றார். புல் ஆகி – புல்லாகியும், பூடு ஆய் – பூண்டாகியும், புழு ஆய் – புழுவாகியும், மரம் ஆகி – மரமாகியும், பல்விருகமாகி – பல மிருகங்களாகியும், பறவை ஆய் – பறவையாகியும், பாம்பு ஆகி – பாம்பாகியும், கல் ஆய் – கல்லாகியும், மனிதர் ஆய் – மனிதராகியும், பேய் ஆய் – பேயாகியும், கணங்கள் ஆய் – பூத கணங்களாகியும், வல் அசுரர் ஆகி – வலிய அசுரராகியும், முனிவர் ஆய் – முனிவராகியும், தேவர் ஆய் – தேவராகியும், சொல்லாநின்ற – இயங்குகின்ற, இ – இந்த, தாவர சங்கமத்துள் – அசையாப் பொருள் அசையும் பொருள் என்னும் இருவகைப் பொருள்களுள்ளே, எல்லாப் பிறப்பும் பிறந்து – எல்லாப் பிறவிகளிலும் பிறந்து, இளைத்தேன் – யான் மெலிவடைந்தேன், எம்பெருமான் – எம்பெருமானே, மெய்யே – உண்மையாகவே, உன் பொன் அடிகள் கண்டு – உன் அழகிய திருவடிகளைக் கண்டு, இன்று – இப்பொழுது, வீடு உற்றேன் – வீடு பெற்றேன். எல்லா உயிர்ப்பொருள்களையும் தாவரப் பொருள் (அசையாப்பொருள்), சங்கமப்பொருள் (அசையும் பொருள்) என்ற இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். தாவர வகையுள் கல், புல், பூடு, மரம் என்னும் நான்கும், சங்கம வகையுள் புழு, பாம்பு, பறவை, பல்விருகம், மனிதர், அசுரர், முனிவர், பேய், கணங்கள், தேவர் என்னும் பத்தும் அடங்கும். கல்லுக்கும் உயிர் உண்டு என்பதை இக்காலத்தாரும் உடன்படுவர். ‘மிருகம்’ என்பது ‘விருகம்’ என மருவியது. உயிர், தாவரப் பொருளாயிருந்து அறிவு வளர்ச்சிக்கேற்பச் சங்கமப் பொருள்களில் தேவர் ஈறாக உயர்ந்து பிறவி எடுக்கிறது. இனி, உயிர்களுக்கு நால்வகைத் தோற்றமும் எழுவகைப் பிறப்பும் நூல்களிற்கூறப்படும். முட்டையிற்பிறப்பன, வேர்வையிற்பிறப்பன, வித்திற்பிறப்பன, கருவிற்பிறப்பன என்பன நான்கு வகைத் தோற்றமாம்; இவை முறையே அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம் எனப்படும். தாவரம், நீர் வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, மனிதர், தேவர் என்பன எழுவகைப் பிறப்பாம் உய்ய – நான் உய்யும்படி, என் உள்ளத்துள் – என் மனத்தில், ஓங்காரம் ஆய் நின்ற – பிரணவ உருவாய் நின்ற, மெய்யா – மெய்யனே, விமலா – மாசற்றவனே, விடைப்பாகா – இடபவாகனனே, வேதங்கள் – மறைகள், ஐயா என – ஐயனே என்று துதிக்க, ஓங்கி – உயர்ந்து, ஆழ்ந்து அகன்ற – ஆழ்ந்து பரந்த, நுண்ணியனே – நுண்பொருளானவனே. ஓம் என்ற ஒலி அ, உ, ம் என்ற மூன்று ஒலிகளாய்ப் பிரியும். அம்மூன்றும் முறையே படைத்தல், காத்தல், அழித்தலாகிய முத்தொழில்களையும் குறிக்குமாதலின் அவையே உள்ளத்துள் நினைவின் தோற்றம், நிலை, இறுதியைச் செய்வனவாம். அவ்வெழுத்துகளால் உண்டாகும் ஒலியை இறைவனது சத்தியே செலுத்தி நிற்றலால் “உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா,” என்றார். சைவ நூல்கள், இடப ஊர்தியை உயிர் என்று கூறும். ஆகவே, “விடைபாகா” என்றது, உயிருக்கு நாதன் என்றதாம். இறைவனது பெருமையை வேதங்களாலும் அறிய முடியாது. “அல்ல யீதல்ல யீதென மறைகளு மன்மைச் சொல்லி னாற்றுதித் திளைக்குமிச் சுந்தரன்” என்று பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற்புராணத்தில், மறைகளாலும் இறைவனைக் காண முடியாத தன்மையைக் கூறுகிறார். வேதம் அறிவு நூல் ஆகையால், அறிவால் இறைவனைக் காண முடியாது; அருளால்தான் காணமுடியும் என்ற நயமும், “வேதங்கள் ஐயா என ஓங்கி” என்பதனால் கிடைக்கிறது. இறைவன் மிக நுட்பமானவன்; அங்கும் இங்கும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன். நுண்பொருளுக்குத்தானே எங்கும் நிறைந்திருக்கும் தன்மையுண்டு. அதைக் குறிப்பிட “ஆழ்ந்தகன்ற நுண்ணியனே” என்றார். “அண்டங்க ளெல்லாம் அணுவாக அணுக்களெல்லாம் அண்டங்களாகப் பெரிதாய்ச் சிறிதாயினானும்” என இறைவனது நுண்மையைப் பரஞ்சோதி முனிவரும் கூறினார். வெய்யாய் – வெம்மையானவனே, தணியாய் – தன்மையானவனே, இயமானன் ஆம் விமலா – ஆன்மாவாய் நின்ற விமலனே, பொய் ஆயின எல்லாம் – நிலையாத பொருள்கள் யாவும், போய் அகல – என்னை விட்டு ஒழிய, வந்தருளி – குருவாய் எழுந்தருளி, மெய்ஞ்ஞானம் ஆகி – மெய்யுணர்வு வடிவமாய், மிளிர்கின்ற – விளங்குகின்ற, மெய்ச்சுடரே – உண்மை ஒளியே, எஞ்ஞானம் இல்லாதேன் – எவ்வகையான அறிவும் இல்லாத எனக்கு, இன்பப் பெருமானே – இன்பத்தைத் தந்த இறைவனே, அஞ்ஞானந்தன்னை – அஞ்ஞானத்தின் வாதனையை, அகல்விக்கும் – நீக்குகின்ற, நல் அறிவே – நல்ல ஞானமயமானவனே. இறைவன் தீயாய் நின்று வெம்மையைக் கொடுத்து, நீராய் நின்று குளிர்ச்சியைக் கொடுத்து, உயிருக்கு உயிராய் நின்று நல்வழியைக் காட்டி அருளைப் புரிகின்றான் என்பது, “வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா” என்றதனால் கிடைக்கிறது. ஒளியைக் கண்டதும் இருள் மறைவது போல, மெய்ஞ்ஞானத்தால் அஞ்ஞானம் விலகுகிறது. இறைவன் குருவாகி வந்து அருள்வதனால் மெய்ஞ்ஞானம் கிடைக்கிறது என்பதை, “பொய்யாயினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே” என்றார். அஞ்ஞானம் வாதனையாய் நில்லாது நீக்கப்பட்டுப் பற்றற்றுக் கழிதலும் இறைவன் திருவருளாலேயே என்பதற்கு, “அஞ்ஞானம் தன்னை யகல்விக்கும் நல்லறிவே” என்றார். ஆக்கம் அளவு இறுதி இல்லாய் – தோற்றம் நிலை முடிவு என்பவை இல்லாதவனே, அனைத்து உலகும் – எல்லா உலகங்களையும், ஆக்குவாய் – படைப்பாய், காப்பாய் – நிலைபெறுத்துவாய், அழிப்பாய் – ஒடுக்குவாய், அருள் தருவாய் – அருள் செய்வாய், போக்குவாய் – பிறவியிற்செலுத்துவாய், என்னை – அடியேனை, புகுவிப்பாய் – புகப்பண்ணுவாய், நின் தொழும்பில் – உன் தொண்டில், நாற்றத்தின் நேரியாய் – பூவின் மணம்போல நுட்பமாய் இருப்பவனே, சேயாய் – தொலைவில் இருப்பவனே, நணியாய் – அண்மையில் இருப்பவனே, மாற்றம் மனம் கழிய நின்ற – சொல்லும் மனமும் கடந்து நின்ற, மறையோனே – வேதப் பொருளாய் உள்ளவனே, கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தால் போல – கறந்த பாலும் சருக்கரையும் நெய்யும் கூடினது போல, சிறந்த அடியார் சிந்தனையுள் – சிறந்த அன்பரது மனத்துள், தேன் ஊறி நின்று -இன்பம் மிகுந்து நின்று, பிறந்த பிறப்பு அறுக்கும் – எடுத்த பிறப்பை ஒழிக்கின்ற, எங்கள் பெருமான் – எம்பெருமானே. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பன இறைவனது ஐந்தொழில்களாம். அறியாமையில் கட்டுண்டிருக்கும் உயிருக்கு இறைவன் உடம்பைக் கொடுத்துப் படைக்கிறான்; எடுத்த உடம்பில் இருவினைகளை நுகரும்போது அறியாமையை நீக்கிக் காக்கிறான்; உயிர் அலுக்கா வண்ணம் ஓய்வு கொடுக்க அழிக்கிறான்; இவ்வாறு பிறப்பு இறப்புகளில் உழலும்படி அறிவை மறைக்கிறான்; குற்றம் நீங்கிப் பக்குவம் (மல பரிபாகம்) வந்த காலத்து அருளுகிறான் என்பவற்றை விளக்க, “ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்” என்றார். ஆக்குதல் முதலிய நான்கனைக் கூறவே, மறைத்தலும் கொள்ளப்படும். ஆக்கமும் கேடும் இல்லாதவன்தானே ஆக்கவும் அழிக்கவும் இயலும்? இதனால், “ஆக்கம் அளவிறுதி யில்லாய்” என்றார். இறைவன் உயிர்க்ளைப் பக்குவம் வருவதற்கு முன்பு பிறவியில் செலுத்தியும், பக்குவம் வந்த பின்பு தனது திருவடிக்கு ஆளாக்கியும் ஆண்டுகொள்வனாகலின், “போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்” என்றார். பூவில் மணம் போல ஆன்மாவில் இறைவன் கலந்திருக்கிறான். மலர் அரும்பாயிருக்கும்போது மணம் வீசாது; அலர்ந்த பின்னரே மணம் வீசும். அதைப் போல, ஆன்மா பக்குவப்பட்டது நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் – ஐந்து நிறங்களை உடையவனே, விண்ணோர்கள் ஏத்த – தேவர்கள் துதிக்க, மறைந்து இருந்தாய் – அவர்களுக்கு ஒளிந்திருந்தவனே, எம்பெருமான் – எம் பெருமானே, வல்வினையேன் தன்னை – வலிய வினையையுடையவனாகிய என்னை, மறைந்திட மூடிய – மறையும்படி மூடியுள்ள, மாய இருள் – அறியாமையாகிய ஆணவம் கெடுதற்பொருட்டு, அறம் பாவம் என்னும் – புண்ணிய பாவங்கள் என்கின்ற, அருங்கயிற்றால் கட்டி – அறுத்தற்கு அருமையாகிய கயிற்றால் கட்டப்பெற்று, புறம்தோல் போர்த்து – வெளியே தோலால் மூடி, எங்கும் புழு அழுக்கு மூடி – எவ்விடத்தும் புழுக்கள் நௌ¤கின்ற அழுக்கை மறைத்து ஆக்கிய, மலம் சோரும் – மலம் ஒழுகுகின்ற, ஒன்பது வாயில் குடில் – ஒன்பது வாயிலையுடைய உடம்பாகிய குடிசை, மலங்க – குலையும்படி, புலன் ஐந்தும் – ஐம்புலன்களும், வஞ்சனையைச் செய்ய – வஞ்சனை பண்ணுதலால், விலங்கும் மனத்தால் -உன்னை விட்டு நீங்கும் மனத்தினாலே, விமலா – மாசற்றவனே, உனக்கு – உன்பொருட்டு, கலந்த அன்பு ஆகி – பொருந்தின அன்பை உடையேனாய், கசிந்து உள் உருகும் – மனம் கசிந்து உருகுகின்ற, நலந்தான் இலாத – நன்மையில்லாத, சிறியேற்கு – சிறியேனுக்கு, நல்கி – கருணை புரிந்து, நிலத்தன்மேல் வந்தருளி – பூமியின்மேல் எழுந்தருளி, நீள் கழல்கள் காட்டி – நீண்ட திருவடிகளைக் காட்டி, நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்கு – நாயினும் கடையனாய்க் கிடந்த அடியேனுக்கு, தாயின் சிறந்த – தாயினும் மேலாகிய, தயா ஆன – அருள் வடிவான, தத்துவனே – உண்மைப்பொருளே. இறைவன் ஐம்பூதங்களிலும் நிறைந்திருக்கிறான். ஐந்து பூதங்களுக்கும் ஐந்து நிறங்கள் உண்டு. மண்ணுக்குப் பொன்மையும், நீருக்கு வெண்மையும், நெருப்புக்குச் செம்மையும், காற்றுக்குக் கருமையும், வானுக்குப் புகையையும் சாத்திரம் கூறும். “பொன்பார் புனல் வெண்மை பொங்கும் அனல் சிவப்பு வன்கால் கருமைவளர் வான்தூமம்” என்பது உண்மை விளக்கம். இந்த ஐந்து நிறங்களையுடைய ஐந்து பூதங்களிலும் இறைவன் இரண்டறக் கலந்திருத்தலால், “நிறங்கள் ஓர் ஐந்துடையாய்” என்றார். இனி, படைத்தல் முதலாக ஐந்து தொழில்கள் புரிவதற்கு ஐந்து வடிவங்கள் கொண்டிருக்கின்றான் என்றாலும் ஒன்று. ஐந்து வடிவங்களாவன, பிரமன், விட்டுணு, உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் என்னும் வடிவங்கள். ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களுள் ஆணவம் நீங்குதற்பொருட்டே மாயையும் கன்மமும் சேர்க்கப்படுதலினால், “வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய இருள் மாய” என்றார். ‘அறம்பாவம்’ என்பன கன்ம மலம் எனவும், ‘ஒன்பது வாயிற்குடில்’ என்பது மாயா மலம் எனவும் அறிக. ‘இருளை, குடிலை’ என்பவற்றுள் உள்ள ஐகாரம் சாரியைகள். ஒன்பது வாயிலாவன – செவி இரண்டு, கண் இரண்டு, நாசி இரண்டு, வாய் ஒன்று, கருவாய் ஒன்று, எருவாய் ஒன்று. புலன்களால் பெறும் இன்பம் நிலையில்லாதது. முதலில் இன்பமாகத் தோன்றிப் பின் துன்பத்தைத் தருவது. அதனால், “குடில் மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய” என்றும், அவ்வஞ்சனைச் செயல்களால் இறைவனை மறத்தல் உண்டாவதால், ‘விலங்கும் மனத்தால் கசிந்து உள் உருகும் நலந்தான் இலாத சிறியேன்’ என்றும் கூறினார். “நாய், தலைவனை அறிவது : நன்றியுடையது. மனிதன் தலைவனையும் அறியமாட்டான்; நன்றியும் இல்லாதவன் ஆகையாலும், தாயன்பே சிறந்ததும், இழிவைக் கருதாததும் ஆகையாலும், “நாயிற்கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற்சிறந்த தயாவான தத்துவனே” என்றார். இவற்றால் தமக்கு இறைவன் திருப்பெருந்துறையில் குருவாய் வந்து அருளின திறத்தை வியந்து போற்றினார். மாசு அற்ற சோதி மலர்ந்த – களங்கமற்ற சோதியாகிய மரத்தில் பூத்த, மலர்ச்சுடரே – பூப்போன்றே சுடரே, தேசனே – குரு மூர்த்தியே, தேனே – தேனே, ஆர் அமுதே – அரிய அமுதே, சிவபுரனே – சிவபுரத்தையுடையானே, பாசம் ஆம் பற்று அறுத்து – பாசமாகிய தொடர்பையறுத்து, பாரிக்கும் – காக்கின்ற, ஆரியனே – ஆசிரியனே, நேச அருள் புரிந்து – அன்போடு கூடிய அருளைச்செய்து, நெஞ்சில் வஞ்சம் கெட – என் மனத்தில் உள்ள வஞ்சகம் அழிய, பேராது நின்ற – பெயராமல் நின்ற, பெருங்கருணை – பெருங்கருணையாகிய, பேர் ஆறே – பெரிய நதியே, ஆரா அமுதே – தெவிட்டாத அமிர்தமே, அளவு இலாப் பெம்மானே – எல்லையில்லாத பெருமானே, ஓராதார் உள்ளத்து – ஆராயாதார் மனத்தில், ஒளிக்கும் – மறைகின்ற, ஒளியானே – ஒளியையுடையானே, நீராய் உருக்கி – என் மனத்தை நீர் போல உருகப்பண்ணி, என் ஆர் உயிராய் நின்றானே – என் அரிய உயிராய் நின்றவனே, இன்பமும் துன்பமும் – சுகமும் துக்கமும், இல்லானே – இயற்கையில் இல்லாதவனே, உள்ளானே – அன்பர்பொருட்டு அவற்றை உடையவனே, அன்பருக்கு அன்பனே – அன்பர்களிடத்து அன்புள்ளவனே, யாவையும் ஆய் – கலப்பினால் எல்லாப் பொருள்களும் ஆகி, அல்லையும ஆம் – தன்மையினாலே அல்லாதவனும் ஆகின்ற, சோதியனே – பேரொளியையுடையவனே, துன் இருளே – நிறைந்த இருளானவனே, தோன்றாப் பெருமையனே – புறத்தே வெளிப்படாத பெருமை உடையவனே, ஆதியனே – முதல்வனே, அந்தம் நடு ஆகி – முடிவும் நடுவும் ஆகி, அல்லானே – அவையல்லாது இருப்பவனே, ஈர்த்து என்னை ஆட்கொண்ட – என்னை இழுத்து ஆட்கொண்டருளின, எந்தை பெருமானே – எமது தந்தையாகிய சிவபெருமானே, கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் – மிகுந்த உண்மை ஞானத்தால், கொண்டு உணர்வார்தம் கருத்தில் – சிந்தித்து அறிபவர் மனத்தினாலும், நோக்கு அரிய – எதிரிட்டுக் காண்பதற்கு அரிதாகிய, நோக்கே – காட்சியே, நுண்உணர்வே – இயற்கையில் நுட்பமாகிய அறிவே, போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் எம் காவலனே – எம்மைக் காப்பாற்றுகின்ற எம் அரசனே, காண்பு அரிய பேர் ஒளியே – காண்பதற்கரிய பெரிய ஒளியே, ஆற்று இன்ப வெள்ளமே – மகாநதி போன்ற இன்பப் பெருக்கே, அத்தா – அப்பனே, மிக்காய் – மேலோனே, நின்ற தோற்றச்சுடர் ஒளியாய் – நிலைபெற்ற தோற்றத்தையுடைய விளங்குகின்ற ஒளியாகியும், சொல்லாத நுண் உணர்வு ஆய் – சொல்லப்படாத நுட்பமாகிய அறிவாகியும், மாற்றம் ஆம் வையகத்தின் – மாறுபடுதலையுடைய உலகத்தில், வெவ்வேறே வந்து – வெவ்வேறு பொருளாய்க் காணப்பட்டு வந்து, அறிவு ஆம் – அறிவாய் விளங்கும், தேற்றனே – தௌ¤வானவனே, தேற்றத் தௌ¤வே – தௌ¤வின் தௌ¤வே, என் சிந்தனையுள் ஊற்று ஆன – என் மனத்துள் ஊற்றுப் போன்ற, உண் ஆர் அமுதே – பருகுதற்கு அரிய அமிர்தமே, உடையானே – தலைவனே. சோதி – பேரொளி, அதிலிருந்து தோன்றுவது சுடர். சோதியை முழுதும் காண்பது அரிது. அதன்கண் உண்டாகும் ஒரு சிறு பகுதியாகிய சுடரைக் காண்பது எளிது. ஆகவே, எளிவந்து அருள் புரிந்த இறைவனைச் “சோதி மலர்ந்த சுடரே” என்றார். இச்சுடர், மலர் போலக் குளிர்ச்சியைத் தருவதால், “மலர்ச்சுடர்” என்றார். பாசம் – அறியாமை. அன்பர்கள் மனத்திலுள்ள வஞ்சனை கெட இறைவன் அதனை விட்டு நீங்காது பெருங்கருணை வெள்ளமாயும் அளவில்லாத இன்பப் பொருளாயும் அங்குத் தங்குகின்றான். அப்பொழுது அம்மனம் நீராய் உருகுகிறது. அவ்வாறு உருகிய உயிரை இறைவன் தன்மயமாகச் செய்கின்றான். இக்கருத்துகளை விளக்கவே, “நெஞ்சில் வஞ்சங்கெட …………….. நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே” என்றான். இறைவன் தனக்கென ஓர் இன்பமும் துன்பமும் இல்லான்; அடியார்க்கு வரும் இன்பதுன்பங்களைத் தான் ஏற்றுக்கொள்வதனால் இன்பமும் துன்பமும் உள்ளான். அதனால், “இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே,” என்றார். இறைவன், எல்லாப் பொருளிலும் கலந்திருத்தலால் “யாவையுமாய்,” தன்மையால் வேறாதலால் “அல்லனுமாய்” இருக்கிறான். ஒளியும் இருளும் அவனன்றி இன்மையால், “சோதியனே, துன்னிருளே” என்றார். உலகத்திற்கு ஆதியும் நடுவும் முடிவுமாய் நிற்கின்ற இறைவன், தனக்கு அவற்றை உடையனல்லன் ஆதலின், “ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே” என்றார். இறைவனது உருவத்தைக் கண்ணால் காண முடியாது, அறிவினாலும் அறிய முடியாது என்பார், “நோக்கரிய நோக்கே, நுணுக்கரிய நுண்ணுணர்வே” என்றார். அனுபவத்தினால் காணக்கூடியவன் இறைவன் என்பதை உணர்த்த, “சிந்தனையுள் ஊற்றான உண்ணார் அமுதே” என்றார். உயிர்களின் மனப்பக்குவத்திற்கேற்ப இறைவன் அருளுவதை விளக்க, “மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே” என்றார். இவற்றால் இறைவன் பண்புகள் விளக்கப்பட்டன. வேற்று விகார – வெவ்வேறு விகாரங்களையுடைய, விடக்கு உடம்பின் உள் கிடப்ப ஆற்றேன் – ஊனாலாகிய உடம்பினுள்ளே தங்கிக் கிடக்கப் பொறேன், எம் ஐயா – எம் ஐயனே, அரனே – சிவனே, ஓ என்று என்று – ஓ என்று முறையிட்டு, போற்றி – வணங்கி, புகழ்ந்து இருந்து – திருப்புகழை ஓதியிருந்து, பொய் கெட்டு – அறியாமை நீங்கி, மெய் ஆனார் – அறிவுருவானவர்கள், மீட்டு இங்கு வந்து – மறுபடியும் இவ்வுலகில் வந்து, வினைப்பிறவி சாராமே – வினைப் பிறவியையடையாமல், கள்ளப்புலம் குரம்பைக் கட்டு – வஞ்சகத்தையுடைய ஐம்புலன்களுக்கு இடமான உடம்பாகிய கட்டினை, அழிக்க வல்லானே – அறுக்க வல்லவனே, நள் இருளில் – நடு இரவில், நட்டம் பயின்று – மிகுந்து, ஆடும் – நடனம் செய்கின்ற, நாதனே – இறைவனே, தில்லையுள் கூத்தனே – திருத்தில்லையில் நடிப்பவனே, தென்பாண்டி நாட்டானே – தென்பாண்டி நாட்டையுடையவனே, அல்லல் பிறவி அறுப்பானே – துன்பப் பிறப்பை அறுப்பவனே, ஓ என்று – ஓவென்று முறையிட்டு, சொல்லற்கு அரியானைச் சொல்லி – துதித்தற்கு அருமையானவனைத் துதித்து, திருவடிக் கீழ் சொல்லிய பாட்டின் – அவனது திருவடியின்மீது பாடிய பாட்டின், பொருள் உணர்ந்து சொல்லுவார் – பொருளையறிந்து துதிப்பவர், சிவபுரத்தினுள்ளார் – சிவநகரத்திலுள்ளவராய், சிவன் அடிக்கீழ் செல்வர் – சிவபெருமானது திருவடிக்கீழ்ச் சென்று நிலை பெறுவர். பல்லோரும் ஏத்த – எல்லாரும் துதிக்க, பணிந்து – வணங்கி வேறு வேறு விகாரமாவன, நரை திரை மூப்பு பிணி சாக்காடு என்பன. பிறவியை அறுக்க விரும்புவார்க்கு இவ்வுடம்பும் சுமையாகும். ஆதலின், “விடக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேன்” என்றார். நாயனாரும், “பிறப்பறுக்க லுற்றார்க்கு உடம்பும் மிகை,” என்று கூறினார். பொய்ப்பொருளைக் காண்பது அறியாமை; மெய்ப்பொருளைக் காண்பது அறிவு. மெய்ப்பொருளைக் கண்டவர், “மற்றீண்டு வாரா நெறி தலைப்படுவர்.” ஆதலின், சுவாமிகள் பொய்கெட்டு மெய்யானார் மீட்டிங்கு வாராராகக் கூறினார். நள்ளிருள் – சர்வ சங்கார காலம். இறைவன் விரும்பி ஆடும் இடம் தில்லை. சோமசுந்தரப் பெருமானாய் வீற்றிருந்து திருவிளையாடல் புரிந்த இடம் மதுரை. இரண்டையும் குறிப்பிட, “தில்லையுட்கூத்தனே, தென்பாண்டி நாட்டானே” என்றார். தில்லை என்பது சிதம்பரம். பாண்டி நாட்டின் தலைநகரம் மதுரை. இவற்றால் இறைவனே இடைவிடாது துதிப்பவர் சிவபுரத்துச் செல்வர் என்பதும், இச்சிவபுராணத்தை ஓதுவார்க்கு வரும் பயனும் கூறப்பட்டன.

No comments:

Post a Comment