Monday, October 1, 2012

சித்தர்களின் நெறி

சித்தன் அன்டத்தைப் பார்க்கிறான் எப்பொழுதும் போலவே இருக்கிறது. சூரியன், சந்திரன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் இருந்தது இப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறது இனியும் இருக்கும். இந்த மண் இருந்தது மீண்டும் அப்படியே இருக்கும் ஆமாம் நீரும் தான் இருக்கிறது சமுத்திரங்களும் இருக்கிறது பிரளயத்தால் இடத்தை மாற்றிக் கொண்ட போதும் இருக்கத்தான் செய்கிறது. நம்மை தீண்டி கொண்டும் வெளியில் உலவிக் கொண்டும் காற்று கூட தன் வலிமையை இழக்காமல் இருக்கிறது. அது உலர்ந்து போவதில்லை ஒரே இடத்தில் அடைந்து கிடக்கவும் இல்லையே! உலகெலாம் பரவிக்கிடக்கிறதே! அது அடங்கிவிடவும் இல்லையே? நெருப்பும் கூட ஒரே தன்மையாக அதன் வீரியத்தை இழக்காமல் இருக்கிறதே! அன்றும் சுட்டது இன்றும் சுடுகின்றது பலவற்றை உலர்த்துகின்றது பக்குவப் படுத்துகின்றது ஜொலிக்கின்றது. அதன் தன்மையை ஒருபோதும் இழந்து விட வில்லை. ஆகாயம் பரந்து விரிந்து தன் விசாலமான பரப்பினுள்ளே பேரண்டம் சிற்றண்டம் கோள்கள் இவற்றுகெல்லாம் இடம் கொடுத்து கொண்டிருக்கிறது. இப்படி பஞ்ச பூதங்கள் காலங்காலமாகக் தனது இயல்புகளை இழந்து விடாமல் நிலைத்து நின்று அழியாத நிலையில் யாரோ ஒருவரால் நியதிப்படுத்தப் பட்டிருக்கிறது என்பதையும். அவரே மெய்பொருளாகிய இறைவன் என்பதையும் அறிந்தார்கள். இந்த உடலிலும் பஞ்ச பூத கலப்பின் விகிதம் அறிந்தார்கள். பிறகு அந்த விகிதாச்சாரத்தை மாற்றியும் அமைத்து மரணத்தை வென்றார்கள் இந்த கலைக்கு சாகாக்கலை என்று பெயரிட்டார்கள் அல்லது தகரவித்தை என்றார்கள்.சாகும் தன்மை கொண்ட தூல உடம்பை சாக விடாது சோதி யெனும் அருளினாலேயே கரைய செய்து வேதியலாக் குவதே ஒளி உடம்பு பெருதல். இதுதான் சின்மயமாதல் ஆகும். சித்தர்களின் அறிவியலில் பஞ்சாட்சரம் இருவகைப்படும் 1. தூல பஞ்சாட்சரம் 2. சூக்கும பஞ்சாட்சரம். இதில் தூல பஞ்சாட்சரம் என்பது நமசிவய, சூக்கு பஞ்சாட்சரம் என்பது சிவயநம. திருமூலர் இதனை. எளியவாது செய்வாரெங்கள் ஈசனை ஒளியையுண்ணி யுருகு மனத்தாராய்த் தெளியவோதி சிவாய நம வென்னும் குளிகையிட்டுப் பொன்னாக்குவன் கூட்டையே. திருமந் - 2709. தமிழ் ஞான மூதாட்டியாகிய ஓளவையும் சிவயநம என்றிருப் போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை என்கிறார்.இறைவன் ஒளிமயமானவன் சோதிமய மானவன் என்பதை அறிந்து அதிலே தனது கரணங்களை ஒடுக்கி தூல விகிதத்தை சூக்கும விகிதமாக மாற்றி தூல உடம்பை ஒளி உடம்பாக மாற்றி இறைவனோடு இரண்டற கலப்பதேயாகும். சிவாக்கியார் சூக்கு பஞ்சாட்சர மகிமையை பின்வருமாரு கூறுகிறார். சிவயவசி என்னவும் செவிக்க இச்சகமெலாம் சிவயவசி என்னவும் செவிக்க யாவும் சித்தியாம் சிவயவசி என்னவும் செவிக்க வானமாளலாம் சிவயவசி என்பதே இருதலை தீ ஆகுமே! இதை தக்க குருமூலம் உபதேசக்கலையால் கடவுள் நிலையறிந்து அம்மய மாதலாகும். இது பிரம்ம ரகசியம் சிவரகசியம் என வேத ஆகமங்கள் கூறும் மெய் நெறியாகும். இது எந்நாட்டவரும் எம்மதத்தினரும் எச்சமயத்தவரும் உணர்ந்து சமரசம் பெறும் மெய்நெறியாகும். இதுவே சித்தர்களின் நெறியாகும.

No comments:

Post a Comment