Friday, November 30, 2012

எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு

ராமானுஜர் கீழ்திருப்பதியில் தங்கி, தன் தாய்மாமாவான திருமலைநம்பியிடம் ராமாயணத்தின் தத்துவார்த்த ரகசியங்களை கற்றுக் கொண்டிருந்தார். கோவிந்தன் என்னும் சீடர் திருமலைநம்பிக்கு பணிவிடை செய்து வந்தார். இவர் ராமானுஜரின் உறவினரும் கூட. அவரது குருபக்தியைக் கண்ட ராமானுஜர் மிகவும் மகிழ்ந்தார்.
பூஜைக்காக கோவிந்தன் பூப்பறிக்கச் செல்வது வழக்கம். ஒருநாள் நந்தவனம் சென்ற கோவிந்தன் நெடுநேரமாகியும் திரும்பவில்லை. ராமானுஜர் அவரைத் தேடி நந்தவனத்திற்குப் புறப்பட்டார். அங்கே அவர் கண்ட காட்சி அதிர்ச்சி அளித்தது.
கோவிந்தன் ஒரு பாம்பினைக் கையில் பிடித்தபடி, அதன் வாயில் கையை வைத்துக் கொண்டிருந்தார். "கோவிந்தா' என்று கத்தியபடி ராமானுஜர் ஓடி வந்தார்.
""கோவிந்தா! பாம்போடு என்ன விளையாட்டு?' என்று மூச்சிறைத்தபடியே கேட்டார்.
அவர் அமைதியாக,""ராமானுஜரே! நான் பூப்பறித்த போது இந்த பாம்பு துடித்துக் கொண்டிருந்தது. கூரிய முள் அதன் மீது குத்தியிருந்ததைப் பார்த்து, அதை எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது, நீங்கள் வந்து விட்டீர்கள்,'' என்றார். ""எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டும் நீயே மேலானவன்,'' என்று கோவிந்தனை ஆரத்தழுவினார் ராமானுஜர்.

No comments:

Post a Comment