Thursday, November 29, 2012

பெரிய ரோஜாமலர் மாலையைக் காட்டிலும் அன்போடு வழங்கும் ஒற்றை மலர் சிறப்பானது --சின்மயானந்தர்.

எங்கு சென்றாலும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருபவர்கள் பண்புள்ளவர்கள். பண்பில்லாதவர்கள் ஓரிடத்தை விட்டு சென்ற பிறகே மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவார்கள்.
* கண்ணுக்குத் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், உணர்ந்தாலும், உணராவிட்டாலும் மனம் என்னும் வீட்டில், கடவுள் குடியிருக்கத்தான் செய்கிறான். நம்மை இயக்குபவனும் அவனே. அவனுடைய அருளால் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
* மனிதன் தன்னை அறிய முயற்சிக்க வேண்டும். தன்னை அறிந்து கொண்டவன் எந்தவிஷயத்தில் ஈடுபட்டாலும் சாதனை படைக்க முடியும். உயர்ந்தாலும் தாழ்வடைந்தாலும் நெஞ்சை நிமிர்த்தி வாழ முடியும்.
* கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார். உண்மையான பக்தி இருந்தால் நம்மால் அவரைக் காணமுடியும். அப்படிப்பட்டவர்கள் எல்லா உயிர்களிலும், எல்லாப் பொருள்களிலும் கடவுளைக் காணும்பேறு பெறுவர்.
* அன்றாடம் செய்ய வேண்டிய கடமையே வழிபாடு. சிலர் ஆபத்து வந்தால் மட்டும் கூச்சல் போட்டு, ஆண்டவனை அழைக்கின்றனர். இது முறையல்ல.
* இறைவழிபாட்டால் மனப்பக்குவம் உண்டாகும். வாழ்க்கை சீராகி நலம் சேரும். எதிர்பாராமல் துன்பம் நேரும்போது அதைச் சமாளிக்கும் சமயோசிதமும் நிதானமும் ஏற்படும்.
* பக்தியில், விரதத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. விரதம் மேற்கொள்ளும் போது நாம் தூய்மைப்படுகிறோம். மனதில் உறுதி இருக்கும்போது பட்டினி கிடப்பதோ, கண் விழித்திருப்பதோ சிரமமாகத் தோன்றாது.
* நாம் அனுபவிக்கும் நன்மைதீமைகள் முன்வினைப்பயனால் உண்டாகின்றன. இதையே விதி என்கிறோம். அதை மாற்ற முடியாவிட்டாலும், அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பது நம் கையில் தான் இருக்கிறது.
* தியாகசிந்தனை கொண்ட நம் முன்னோர்கள் துன்பப்படும் நேரத்தில் கூட தங்களின் நேர்மையைக் கைவிட்டதில்லை. உண்மை பேசுவதால் மட்டுமே வாழ்வில் உயர்வு பெற முடியும் என்பதை நமக்கு எடுத்துக் காட்டியுள்ளனர். நாமும் அதைப் பின்பற்றி வாழ்வில் உயர வேண்டும்.
* நல்ல பண்புகளுடன் நாம் வாழும் போது உலகியல் தேவைகள் பூர்த்தியாகாமல் போகலாம். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், ஆன்மிக வாழ்வுக்குரிய மிகச் சிறந்த பலன்களை நற்பண்புகளால் மட்டுமே பெற முடியும்.
* உள்ளத்தில் அன்பு ஊற்றெடுக்குமானால் எளிய காணிக்கையைக் கூட இறைவன் பெரிதாக ஏற்று மகிழ்ச்சி அடைவான். காணிக்கைப் பொருளின் மதிப்போ, விலையோ முக்கியம் அல்ல. பெரிய ரோஜாமலர் மாலையைக் காட்டிலும் அன்போடு வழங்கும் ஒற்றை மலர் சிறப்பானது.
* மக்களுக்குச் செய்யும் சமூகத்தொண்டு கூட மிகக் குறுகியது தான். ஆனால், துறவிகள் உலக நன்மைக்காகச் செய்யும் பிரார்த்தனைகளின் ஆற்றல் உயர்ந்தது. அது நம் கண்ணுக்குப் புலப்படாவிட்டாலும், அதனால் ஏற்படும் நன்மைகள் எல்லை இல்லாதவை.

No comments:

Post a Comment