Monday, December 24, 2012

கலிகால விபரீதம்!

எங்காவது ஏதாவது அதர்மம், அநியாயம் நடந்தால், "உம்… கலிகாலம் சார்! நியாயத்துக்கு இடமே கிடையாது! நாம் என்ன செய்ய முடியும்…’ என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். இந்த கலியுகம் அவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை அப்போதே கூறியிருக்கின்றனர்.
கலியில் அதர்மத்தின் பாதங்கள் விருத்தியடையும்; தர்மத்தின் பாதங்களில் நான்கிலொரு பங்கு தான் எஞ்சியிருக்கும். அதுவும் கூட கலி முடியும் போது நாசமாகி விடும். கலியுகத்தில், மக்கள் விஷய போகங்களில் அதிக ஆசை உள்ளவர்களாகவும், தயவு தாட்சண்யம் அற்றவர்களாகவும், காரணமின்றி விரோதம் கொள்பவர்களாயும் இருப்பர்.
கலியுகத்தில், ஜனங்கள் அதிகமாக சாப்பிடுவர்; அற்ப பாக்யம் உள்ளவர்களாகவும், காமிகளாகவும், தரித்திரியர்களாகவும் இருப்பர்; பெண்களிடம் கற்பு என்பது குறையும். தேசங்களில் பெரும்பாலும் திருடர்கள் மிகுதியாக இருப்பர். அரசாங்கத்தார், பொது மக்களை ஏதாவது வரி போட்டு பிழிந்து எடுத்து விடுவர். வேதத்தில் சொல்லிய ஆசாரங்களை அனுஷ்டிக்க மாட்டார்கள்; பிறருக்கு கொடுப்பதைப் பற்றி எண்ண மாட்டார்கள். மாறாக, எங்கே, என்ன இலவசமாகக் கிடைக்கும் என்று ஓடுவர்.
சன்னியாசிகள் பணத்திலேயே மிகுந்த ஆசை கொண்டவர்களாக இருப்பர். பெண்கள் குட்டையாகவும், அதிக பசி உள்ளவர்களாகவும், வெட்கம் இல்லாதவர்களாயும், திருட்டுத்தனம், மயக்கும் குணம், பிடிவாதம் உள்ளவர்களாகவும் இருப்பர். மக்கள் அவரவர் தொழில்களை விட்டு விட்டு, வேறு விதமான தொழில்களில் ஈடுபட்டு பணம் சேர்ப்பர்! அதிலும், கபடத்தையே அதிகமாகக் கைக்கொள்வர். கறவை இல்லாத பசுக்களைப் பேண மாட்டார்கள்.
தாய், தந்தையர்களை கைவிட்டு விடுவர். மனைவி, அவருடைய தாய், தந்தை, சகோதரன், சகோதரி இவர்களுக்காக செலவு செய்து கொண்டிருப்பர். காலத்தில் மழை பெய்யாது; அகாலத்தில் பெய்யும்! கலியில் அற்ப விஷயத்துக்குக் கூட அடிதடி, குத்து வெட்டு, கொலைகள் நடக்கும். இப்படி இன்னும் நிறைய சொல்லப்பட்டுள்ளது. ஏதோ இப்போது ஓரளவு தான் நாம் காண்கிறோம். அதுவரையில் நாம் புண்ணியம் செய்தவர்கள். இன்னும் போகப் போக நடக்கக் கூடிய விபரீதங்கள் நிறைய உண்டு. அவற்றை நாம் பார்க்காத வரையில் நல்லது!

No comments:

Post a Comment