Tuesday, December 25, 2012

புராணத்தின் அடிப்படையில் பலவாறாகப் புகழப்படும் கங்கையின் அறிவியல்ரீதியான வரலாறு என்ன

க்கள் பெரும் மகிழ்வோடும் உற்சாகத்தோடும் கொண்டாடும் விழா தீபாவளி. புத்தாடை, பலவகை இனிப்பு, பட்டாசு, மத்தாப்பு, வாணவேடிக்கை என நாள் முழுக்க புத்துணர்ச்சி பெருக்கெடுக்கும் நாள். ஊரெல்லாம் கொண்டாட்டம்; ஒவ்வொருவர் முகத்திலும் பூரிப்பு.

இந்த தீபாவளிப் பண்டிகையின் முதல் கொண்டாட்டம் எதுவென்றால் நீராடல்தான். அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து நீராடுவதற்கான ஆயத்தப்பணிகளில் இறங்கி விடுகின்றனர். எல்லா இடங்களிலுமுள்ள நீர்நிலைகளிலும் அன்றைய தினம் கங்கை கலந்தருளுவதால், தீபாவளி நீராடல் தனிச்சிறப்பு பெறுகிறது. அத்தகைய தீபாவளி நாயகியாம் கங்கையின் பெருமையைக் காண்போமா...


பாரதத்திலுள்ள புனித நதிகளில் கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி ஆகிய ஏழு நதிகள் மிகச் சிறப்பாகப் போற்றப்படுகின்றன. இவற்றில் கங்கை நதியானது வானுலகம், மண்ணுலகம், பாதாள உலகம் என்று மூன்று உலகங்களிலும் பாய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன.

ஆகாச கங்கை, பூலோக கங்கை, பாதாள கங்கை என்று மூவுலகிலும் பாய்வதால் கங்கை நதியை "திரிபதா' என்று சொல்வர்.

மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்த போது, திரிவிக்கிரமராக நெடிதுயர்ந்து வளர்ந்து, முதலடியால் பூலோகத்தையும், இரண்டாவது அடியால் வானுலகையும் அளந்தார். அப்பொ ழுது வானுலகில் பகவானின் திருவடியை தரிசித்த பிரம்மன், தன் கமண்டலத்திலிருந்த நீரால் பாதத்தைக் கழுவி பூஜை செய்தார். பெருமாளின் பாதத்திலிருந்து வழிந்த நீரே கங்கையாக உருவெடுத்ததாக புராணக்கதை யொன்று கூறுகிறது. வானுலகில் உற்பத்தியான அந்த கங்கை ஆகாச கங்கை, தேவநதி, சுரநதி, வானதி, விஷ்ணு பதம் எனப்படுகிறது.


 

மேலும், ஜானவி, திரிபதாகை, பாகீரதி, தேவிநதி, மந்தாகினி, வரநதி, உமைசுர நதி, தசமுகை நதி, சிர நதி, தெய்வ நதி, விமலை என கங்கைக்கு பல பெயர்கள் உள்ளன.

கங்கையானவள் பூலோகத்திற்கு மட்டும் உரியவள் அல்ல; ஆகாய லோகத்திற்கும், பாதாள லோகத்திற்கும் உரியவள் என்கிறது விஷ்ணு புராணம்.

பகீரதன் என்னும் மன்னன் தன் முன்னோர் கள் முக்தியடைவதற்காக வானுலகிலிருந்த கங்கையை பூமிக்குக் கொண்டுவர கடுமையான தவம் மேற்கொண்டான். அதன்பயனாக கங்கை பூமியை நோக்கிப் பாய, அதன் வேகம் பூவுலகை அழித்துவிடும் என்பதால் அதை சிவபெருமான் தன் ஜடாமுடியில் தாங்கி நிறுத்தி வைத்தார். இதைக் கண்ட பகீரதன் சிவபெருமானை வேண்டிக் கொண்டதால், ஏழு துளிகளை மட்டும் பூமியில் விழச் செய்தார்.

அதில் மூன்று துளிகள் ஹலாதினி, பவானி, நளினி என்று கிழக்கிலும்; அடுத்த மூன்று துளிகள் சுசக்ஷ, சிதா, சிந்து என்று மேற்கிலும் விழுந்து நதிகளாக ஓடின. அலகநந்தை என்னும் ஏழாவது துளி மட்டும் பகீரதனைத் தொடர்ந்து நதியாக ஓடிவந்தது. அப்போது ஜன்னு என்னும் முனிவரின் ஆசிரமம் குறுக்கிட, அந்த ஆசிரமத்தை மூழ்கடித்தது.

இதைக் கண்ட முனிவர் கோபமுற்று அந்த நதியை அப்படியே விழுங்கிவிட்டார். இதைக் கண்ணுற்ற பகீரதன் முனிவரிடம் தன் நிலை யைக்கூறி, தன் முன்னோர்கள் சாபநிவர்த்தி யடைய அருள்புரிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மனமிரங்கிய முனிவர், தான் விழுங்கிய கங்கை நதியை காது வழியாக விடுவித்தார். இதனால் கங்கை "ஜானவி' என்று பெயர் பெற்றது. பின்னர் அந்த கங்கை நீரில் பகீரதன் தன் முன்னோர்களின் அஸ்தியைக் கரைத்து அவர்களை மோட்சம் பெறச் செய்தான். இவ்வாறு கங்கைக்கு பல வரலாறு கள் உள்ளன.

புராணத்தின் அடிப்படையில் பலவாறாகப் புகழப்படும் கங்கையின் அறிவியல்ரீதியான வரலாறு என்ன? இமயமலையின் பனி சூழ்ந்த கோமுகி என்னும் பகுதியே கங்கையின் பிறப் பிடம் என்கிறார்கள். அங்கே கங்கோத்ரி என்று பெயர் பெறுகிறது. இந்த இடம் மிகச் சிறிய சுனையாகத் திகழ்ந்தாலும் உண்மையில் இதன் பிறப் பிடம் யாரும் காண இயலாத நிலையில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கங்கை தோன்றும் இடம் வெறும் வெளிமுகப்பு மட்டுமே. பக்தர்கள் இதைத்தான் தரிசித்து வழிபட்டு திரும்புகிறார்கள்.

அறிவியல் ஆராய்ச்சியின்படி கங்கை, இமயமலையில் சுமார் 22,000 அடி உயரத்தில் உற்பத்தியாகிறது. 10,300 அடி உயரத்தில் பாகீரதி நதியாக வெளிப்பட்டு, தேவப்பிரயாகை என்ற இடத்தில் அலகநத்தா என்ற நதியுட இணைந்தபின், கங்கை வேகமாகப் பாயத் தொடங்குகிறது. கங்கை உற்பத்தியாகும் இடத் திலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தூரத்தில் கங்கை நதிக்கரையில் ஒரு கோவில் உள்ளது. அதன் பெயர் கங்கோத்ரி. இதுவே கங்கைக்கு முதல் கோவில் என்பர். அதையடுத்து சுமார் 250 கிலோமீட்டர் பயணித்து ஹரித்வாரை அடைகிறது. இங்கு கங்கை ஏழு கிளைகளாகப் பிரிந்து தன் பயணத்தை மேற்கொள்கிறது. கிழக்கு நோக்கி ஓடும் கிளைகள் ஹாலதினி, பவானி, நளினி என்று பெயர் பெறுகின்றன. அதன்பின், 785 கிலோமீட்டர் தூரம் பயணித்து அலகாபாத் நகரை அடைகிறது.

இதற்கிடையில் கங்கை பல காரணப் பெயர்களையும் பெறுகிறது. அமர்நாத் குகையின் அருகே பாய்ந்து செல்லும்போது அமர்கங்கா என்ற பெயரைப் பெறுகிறது. ஒருமுறை பார்வதி தேவி சிவபெருமானுடன் விளையாடும்போது, தேவியின் கண் மை சிவனின் முகத்தில் ஒட்டிக்கொண்டதாம். அந்த மையை சிவ பெருமான் கங்கையில் கழுவும்போது, கங்கை நீர் கறுப்பு நிறமாக மாறி விட்டதாம். அதனால் கங்கைக்கு நீல கங்கா என்ற பெயர் ஏற்பட்ட தாக அமர்நாத் தல புராணம் கூறுகிறது.

கயிலையிலிருந்து மானசரோவர் வழியாக கங்கை நதி காளிபோல் குதித்துக் கொண்டு செல்வதால் "காளிகங்கா' என்று பெயர் பெற்றது.

உத்திரப் பிரதேசத்தில் காசிப்பூர் என்ற இடத்தைக் கடந்து செல்லும்போது ராம்கங்கா என்றும்; பித்தோராகர் மாவட்டத்தில் ஓடும்போது ஜடகங்கா என்றும்; ஹுமாயூன் மண்டலின் தார்குலா, முன்சியாரி கிராமத்தை அடுத்து ஓடும்போது வெண்மையாகக் காட்சி தருவதால் கோரி கங்கா எனவும்; அல்மோரா மாவட்டத்தில் பைஜ்நாத் திருத் தலத்தின் அருகே செல்லும்போது கருட கங்கா எனவும் பெயர் பெறும் கங்கா நதி, ஜம்முவைக் கடந்து வைஷ்ணவி கோவில் அருகே செல்லும்போது பாண கங்கை என்று பெயர் பெறுகிறது.

வைஷ்ணவி தேவி, தன் கூந்தலை கங்கை நதியில் அலசியதால் "பால்கங்கா' என்றும் பெயர் பெற்றது. இந்தி மொழியில் "பால்' என்றால் கூந்தல்.

கேதார்நாத் திருத்தலத்திற்கு அருகே பாய்ந் தோடும் நதியை துக்தகங்கா என்கிறார்கள்.

மத்தியப் பிரதேசத்தில் ஜபல்பூர் அருகே பேடாகாட் என்ற இடம் உள்ளது. இது பிருகு முனிவர் தவம்புரிந்த இடமாம். இங்கு செல்லும் கங்கையை வாமன கங்கை என்பர் நர்மதை நதிக்கரையில் சூலபானேஸ்வரர் என்ற திருத்தலம் உள்ளது. அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள மோக்கடி என்ற கிராமத்தின் அருகில் நர்மதையுடன் கலக் கும் கங்கையை மோட்ச கங்கா என்கிறார்கள். இப்படி பல பெயர்களைப் பெற்ற கங்கை நதி எங்கே எவ்விதம் உருவாகிறது என்பது இன்று வரை மனிதர்களால் அறியப்படாத ரகசியமாகவே உள்ளது. பலமுறை முயன்றும் அறிய முடிய வில்லை.

கோமுகியில் தொடங்கிய கங்கை வங்காளத் திற்குச் சென்று கடலில் கலப்பது ஏன்? நேரே தென் திசை நோக்கி வந்திருக்கலாமே! வடக்கை விட தெற்கு தாழ்வான பகுதிதானே? பிறகு ஏன் கிழக்கு நோக்கி ஓடினாள்? அதற்கும் புராணக் கதை உண்டு. கபில முனிவரின் சாபத்தால் சகர மன்னனின் அறுபதா யிரம் குழந்தைகளும் சாம்பலாகிவிட்டார்கள். அந்த இடம் வங்காளத் தில் உள்ளதாகச் சொல் லப்படுகிறது. அவர்கள் புனிதமடைந்து சொர்க் கம் செல்ல பகீரதனின் தவத்திற்கு இணங்கி அவன் பின்னே ஓடினாள் என்பது புராணம். கங்கை நதியின் பயண வழியில் மிகுந்த சிறப்பு வாய்ந்த தலமாக காசி (வாரணாசி) விளங்கு கிறது.

கங்கையின் மகத்து வம் குறித்து வால்மீகி முனிவர், "கங்கையே, எனக்கு பெரிய அரச பதவி வேண்டாம். உன் கரையில் உள்ள மரத்தில் கூடு கட்டி வாழும் ஒரு பறவையாக நான் பிறந்தால் அதுவே போதும். அல்லது உன்னிடம் வாழும் ஓர் ஆமையாகவோ மீனாகவோ புழுவாகவோ ஜென்மமெடுத்தால் கூட போதும்' என்கிறார்.

மகாபாரதம், "கங்கையில் நீராடினவர்களின் ஏழு தலைமுறைகளுக்கு பாவம் அணுகாது. ஒரு மனிதனின் அஸ்தி கங்கை நீரில் தொட்டுக் கொண்டிருக்கும் வரை அந்த மனிதன் சொர்க் கத்திலே பெருமைப்படுத்தப்படுவான். புனித கங்கையில் யார் நீராடினாலும் பிறந்த நாளிலிருந்து அவர்கள் செய்த பாவங்கள் எல்லாம் நீங்கிவிடும்' என்கிறது.

மகாகவி காளிதாஸ், "கங்காதேவியே, எமனிடமிருந்து மீட்கும் சக்தி உன் ஒரு துளி புனித நீருக்குதான் இருக்கிறது' என்கிறார்.

"கங்கையே, மூன்று உலகங்களுக்கும் ஆதாரம் நீ. நீயே எனக்கு சம்சாரத்தைக் கடக் கும் வழியாக இருக்கிறாய். யாருடைய இதயத் தில் கங்கை மீது பக்தி இருக்கிறதோ அவர் களுக்கு முக்தி எளிது' என்கிறார் ஆதிசங்கரர்.

மகாகவி பாரதியார் காசியில் அனுமன் காட் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த தன் மாமன் வீட்டுக்குச் செல்லும்போது நாஸ்தி கனாக இருந்தார். அவர் கங்கை நதியில் நீராடிய பின், அதன் சக்தி பாரதியாரை ஆஸ்திகனாக மாற்றிவிட்டது என்று வரலாறு சொல்கிறது. அவர் கங்கை நதியைப் புகழ்ந்து பாடல்கள் பாடியிருக்கிறார் என்பது யாவரும் அறிந்ததே.

கங்கை நதி சாதாரண நதி அல்ல. அந்த நதி முழுவதும் புனிதமான உயிர்ச்சத்துக்கள் நிறைந்த அற்புதமான ரசாயனக் கலவையாகும். மற்ற நதி நீரை சேகரித்து வைத்தால் கெட்டு விடும். புழு, பூச்சிகள் ஏற்படும். ஆனால், கங்கை நீர் கெடாது. ஒரு செப் புக்கலசத்தில் கங்கை நீரை சேகரித்து நன்றாக மூடி வைத்துவிட்டால் வருடக்கணக்கில் கெடாது. மேலும், சாதாரணமாக எலும்பு கள் தண்ணீரில் கரை யாது. ஆனால் கங்கை நதியில் இடப்படும் எலும்புகள் கரைந்து விடும். ஆகையால்தான் காசியில் மணிகர்னிகா காட்டில் தகனம் செய் யப்படும் சடலங்களின் எலும்புகள் கங்கை நதி யில் இடப்படுகின்றன. சாதுக்கள், பிரம்மச்சாரி கள், குழந்தைகளின் சடலங்களை தகுந்த முறை யில் பூஜித்து துணியில் சுற்றி கங்கை நதியில் விட்டுவிடுவார்கள். சில நாட்களில் அவை கரைக் கப்பட்டு நீருடன் கலந்துவிடும். அதனால்தான் கங்கை நதியில் பிணங்கள் மிதப்பதில்லை. கங்கை நதிக்கு அவ்வளவு சக்தி உள்ளது என்பது ஆய்வாளர்களின் கருத்து.

எங்கே வசித்தாலும் கங்கையின் பெயர் சொன்னால் போதும்- எல்லா பாவங்களும் அகலும்; புனிதம் சேரும். பொதுவாக நீராடும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:

கங்கா கங்கேதியோ ப்ரூயாத்
யோஜனானாம் சதைரபி
முச்யதேசர்வ பாபேப்ய
விஷ்ணு லோகம் சச்சதி.

இத்தனை பெயர்களையும் புகழையும் புனிதத்தையும் பெற்ற கங்கையானவள், மக்கள் தன்னிடம் கரைத்த பாவச்சுமைகளைப் போக்கிக் கொள்ள தமிழகத்திற்கு வருகிறாள். அத்தலம் மாயூரம் ஆகும். இங்கு வரும் காவேரி நதியின் நந்திக்கட்டத்தில், துலா மாதமான ஐப்பசியில் நீராடி புனிதமடைகிறாள். மேலும், மக்கள் தன்னிடம் சுமத்திய பாவக்கரைகள் நீங்குவதற் காக இத்தலத்தில் எழுந்தருளியுள்ள இந்தளூர் ஸ்ரீபரிமளரங்கநாதரிடம் வேண்டி அருள்புரியும் நிலையில் உள்ளாள்.

இத்திருத்தலத்தில் ஓடும் காவேரி நதியில் ஐப்பசி மாத அமாவாசையில் நீராடினால், அனைத்து புண்ணிய நதிகளிலும் நீராடிய பலன் கிட்டுமென்று ஞானநூல்கள் கூறுகின்றன

No comments:

Post a Comment