Tuesday, December 25, 2012

வைகுண்ட ஏகாதசி

மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்றும், முக்கோடி ஏகாதசி என்றும் போற்றி வணங்குவர். இந்நாளில் விரதம் கடைப்பிடித்து பெருமாளை தரிசித்தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

வைணவத் திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவிலில் "பகல்பத்து, இராப்பத்து' என்னும் விழா சிறப்பாகக் கொண்டாடப் படும்.


பகல்பத்து நாட்கள் முடிந்ததும், இராப்பத்து ஆரம்ப நாளான சுக்லபட்ச ஏகாதசி அன்று, விடியற்காலை வேளையில் சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். மூல ஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு வந்து, பரமபத வாசல் சந்நிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி புரிவார்.

இந்த பரமபத வாசல் திறப்பு விழா நம்மாழ்வார் காலத்துக்குமுன் இல்லை என்று கூறுவர்.

கலியுகத்தில், நம்மாழ்வாருக்கு முன்பு வைகுண்டத்திற்குச் செல்வோர் யாரும் இல்லாததால், வைகுண்ட வாசல் மூடப்பட்டு இருந்ததாம். நம்மாழ்வார் முக்தியடைந்த நாளில்தான் அது திறக்கப்பட்டதாம். இதனை அறிந்த நம்மாழ்வார், "எனக்கு மட்டும் வைகுண்ட வாசல் திறந்தால் போதாது; என்னைத் தொடர்ந்து தங்கள்மீது பக்தி செலுத்தும் அடியவர்களுக்காகவும் வைகுண்ட வாசல் திறக்கவேண்டும்' என்று பெருமாளிடம் வேண்டினார். நம்மாழ்வாரின் வேண்டுகோளை ஏற்று, மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியில் சொர்க்கவாசல் திறக்க வழி செய்தார் மகாவிஷ்ணு. அந்த நாள்தான் வைகுண்ட ஏகாதசியாக- சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியாகப் போற்றப்படுகிறது என்பர்.

இன்னொரு தகவலும் உண்டு.

துவாபர யுகம் முடிந்து கலியுகம் பிறந்ததும், வைகுண்டத்தின் காவலர்களான ஜய, விஜயர்கள் வைகுண்ட வாசலை மூடிவிட்டனர். இதனைக் கண்ட பெருமாள் அவர்களிடம், ""வைகுண்ட வாசலின் கதவை ஏன் மூடினீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ""எம்பெருமானே! கலியுகம் பிறந்துவிட்டது. இனிமேல் அதர்மம் தலைதூக்கும்; தர்மம் நிலை குலையும். பாவங்கள் பலவிதங்களில் பெருகும். ஊழல்கள் பல ரூபங்களில் தலைதூக்கும். தெரிந்தே தவறு செய்வார்கள். நீதி வழங்குபவர்கூட சுயநலத்திற்கு ஆளாகி தீர்ப்பினை மாற்றி எழுதுவார்கள். அந்தச் சூழலிலிருந்து மானிடர்கள் யாரும் தப்பமுடியாது. அதனால் வைகுண்டம் வருபவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதனால் வாசலை மூடிவிட்டோம்'' என்றனர்.

அதற்கு பெருமாள், ""கலியுகத்தில் பக்தி பெருகும்; தர்மம் செய்பவர்கள் பெருகுவார்கள். சுயநலமின்றி புண்ணிய காரியங்கள் செய்பவர்களுக்காக பரமபத வாசல் திறந்தே இருக்கட்டும்'' என்றருளினார். இந்த விளக்கத்தை பெருமாள் சொன்ன நாள் மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி தினம் என்றும் கூறுவர்.

ஒருசமயம் உலகம் பிரளயத்தில் மூழ்கி அழிந்துவிட்டது. சில காலத்திற்குப்பின், மீண்டும் உலகத்தைப் படைக்க திருவுளம் கொண்ட திருமால், அதற்காக பிரம்மாவைப் படைத்தார். அப்போது பிரம்மனை அழிக்க இரண்டு அசுரர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்தார்கள். இதைக் கண்ணுற்ற திருமால், அவர்களை அழித்தார். அச்சமயம் திருமாலின் சுவாசக்காற்று அவர்கள்மீது படவே புனிதமடைந்தார்கள். அவர்கள், ""எங்களுக்கு வைகுண்டத்தில் வாசம் செய்யும் பாக்கியத்தை அருளவேண்டும்'' என்று திருமாலிடம் வேண்டினார்கள்.

அவர்களின் வேண்டுகோளை ஏற்ற திருமால், மார்கழி சுக்லபட்ச ஏகாதசியன்று வடக்கு வாசலைத் திறந்து பரமபதத்திற்கு அவர்களை அனுப்பினார். அப்போது அவர்கள், ""இன்று தாங்கள் எங்களுக்கு அருளிய சொர்க்கவாசல் திருநாள், பூவுலகில் தாங்கள் எழுந்தருளியுள்ள திருத்தலங்களில் சிறந்த விழாவாகக் கொண்டாடப்பட வேண்டும். மேலும், அன்று அவ்வாசல் (பரமபத வாசல்) வழியே எழுந்தருளும் தங்களுடைய அர்ச்சாவதாரத்தை (ஐம்பொன் திருமேனி) தரிசிப்பவர்களுக்கும், அவ்வாசல் வழியாக வெளிவருவோருக்கும்- அவர்கள் எவ்வளவு பாவிகளாக இருந்தாலும் முக்தி அளிக்கவேண்டும்'' என்று வேண்டிக் கொண்டார்கள். திருமாலும் அருளினார். அதன்படியே வைகுண்ட ஏகாதசி விழா வைணவத் திருத்தலங்களில் கொண்டாடப்படுவதாகச் சொல்வர்.

வைகுண்ட ஏகாதசி விழா தோன்றியதற்கு மேலும் ஒரு கதையுண்டு.

திரேதாயுகத்தில் முரன் என்னும் அசுரன் தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினான். அவனது
கொடுமைகளைத் தாங்காமல் தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார்கள். மகாவிஷ்ணு அசுரனை அழிக்கப் புறப்பட்டார். மகாவிஷ்ணுவிற்கும் முரனுக்கும் நீண்ட நாட்கள் போர் நடந்தது. தினமும் அதிகாலையில் தொடங்கி மாலையில் போர் முடிவடையும். அப்போது ஒருநாள் இரவு, மகாவிஷ்ணு பத்ரிகாச்ரமம் சென்று ஒரு குகையில் தங்கினார். இதனை அறிந்த முரன், மகாவிஷ்ணுவை அழிக்க குகைக்குள் நுழைந்தான்.

அப்போது மகாவிஷ்ணுவின் உடலிலிருந்து தோன்றிய ஒரு சக்தி, பெண்ணாக மாறி அந்த அசுரனை அழித்தது. அரக்கன் மாண்டதும் கண்விழித்த மகாவிஷ்ணு, அப்பெண்ணை "ஏகாதசியே' என்றழைத்தார்.

""அசுரனை அழித்த மார்கழியின் இந்நாளில் ஏகாதசியான உன்னைக் குறித்து வழிபட்டு, எம்மையும் வழிபடுவோருக்கு மோட்சப் பேறு கிட்டும்'' என்றருளினார் பெருமாள். அதன்படியே ஏகாதசித் திருநாள் மிகச் சிறப்பாகப் போற்றப்படுகிறது.

ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அவற்றில் ஆனி மாத சயன ஏகாதசி, கார்த்திகை மாத உத்தான ஏகாதசி, மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி ஆகிய மூன்றும் சிறப்பு வாய்ந்தவை. சயன ஏகாதசியில் படுத்த நிலையிலும், உத்தான ஏகாதசியில் உட்கார்ந்த நிலையிலும், வைகுந்த ஏகாதசியில் நின்ற நிலையிலும் பெருமாள் அருள்புரிவார். நின்றகோலத்தில்
அருளும் ஏகாதசி எல்லாவற்றிலும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து, மனம் ஒன்று. இந்த பதினொன்றையும் பரம்பொருளாம் திருமாலுடன்
ஒன்றுபடுத்தும் நாளே ஸ்ரீவைகுண்ட ஏகாதசி. இந்நாளில் விரதம் இருப்போருக்கு திருமால் பரமபத வாசலைத் திறந்து வைத்து அருள்புரிகிறார் என்பது ஐதீகம்.


அரையர் சேவை ஆற்றுகின்ற அடியார்கள் கூம்பு வடிவிலான எடுப்பான தோற்றம் தரும் வண்ணக் குல்லா அணிந்திருப்பார்கள். தாளங்களை எழுப்ப சிப்ளா கட்டைகளை வைத்திருப்பார்கள். பாட்டு பாடும்போது மட்டும், மிருதங்க வாத்தியத்தைப் பயன்படுத்துவார்கள்.

அரையர் சேவை என்பது ஐந்து பிரிவுகளைக் கொண்டது. ஆழ்வார்களின் இசைப் பாசுரங்களைப் பண்ணுடன் பாடுதல், பாசுரங்களுக்கு ஏற்ப அபிநயம் செய்தல், பாசுரங்களுக்கு உரை கூறி விளக்குதல், நடித்துக் காட்டுதல், கொண்டாடுதல். இதில் கொண்டாடுதல் எனப்படுவது இரண்டு வகைப்படும். பெருமாளைக் கொண்டாடுவது பெருமாள் கொண்டாட்டம்; பிராட்டியைக் கொண்டாடுவது நாச்சியார் கொண்டாட்டம். இதனை முதன்முதலில் பாடி, நடித்துக் காட்டியவர் திருமங்கை ஆழ்வார். திருமங்கை ஆழ்வாரைத் தொடர்ந்து நாதமுனிகள் தம்முடைய மருமக்கள் இருவரையும் கொண்டு ஸ்ரீரங்கம் கோவிலில் அரையர் சேவையைத் தோற்றுவித்ததாக வைணவ மரபு கூறுகிறது.



வைகுண்ட ஏகாதசியன்று முழு நாள் உபவாசம் இருப்பது சிறப்பானது. அதன் முதல் நாள் தசமியன்று இரவே உணவு உண்ணாமல் இருப்பது வழக்கம். ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி அன்று சூரிய உதயத்திற்குமுன் சாப்பிட்டு முடித்துவிட வேண்டும். அன்று உணவில் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றை அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அகத்திக்கீரையை "அமிர்தபிந்து' என்பர். நெல்லிக்காயில் ஹரி வாசம் செய்வதாகவும், சுண்டைக்காயில் தன்வந்திரியின் நிழல் இருப்பதாகவும் சாஸ்திரம் கூறுகிறது. இவை உடல்நலத்திற்கு வளம் தருபவை என்பதால் நம் முன்னோர்கள் வகுத்த வழியில் விரதம் கடைப்பிடித்து நலமுடன் வாழ்ந்து ஹரியின் அருள்பெறலாம்.

No comments:

Post a Comment