Monday, January 21, 2013

கம்பரின் வேலைக்காரிக்கே இவ்வளவு திறனா

அம்பலசோமாசி என்ற புலவர் கம்பரைக் காண வந்தார். கம்பர் வீட்டு வாசலில் ஒரு பெண் வரட்டி தட்டிக் கொண்டிருந்தாள்.
"""அம்மா! கம்பர் இருக்கிறாரா?''
""இருக்கிறார். பல புலவர்கள் அவரைக் காண வந்துள்ளனர். அவர்கள் அவரிடம் தமிழின்பம் நுகர்ந்து கொண்டுள்ளனர். அவரை யாரும் எப்போதும் பார்க்கலாம். கருணை மிக்கவர்,'' என்று பதில்களை அடுக்கினாள்.
""இருக்கிறாரா' என்று கேட்டால் "ஆம்' அல்லது "இல்லை' என்று சொல்லியிருக்கலாம். வாயாடி... எத்தனை பதில் சொல்கிறாள்' என்று அவர் அசைபோட்டார்.
""நீ இவ்வளவு பேசுகிறாயே! கம்பரிடம் தமிழ் படித்திருக்கிறாயா?''
"""ஆங்...அதற்கெல்லாம் நேரமேது புலவரே! அன்றாடப் பணிக்கே பொழுது சரியாக இருக்கிறது. சரி..சரி...எனக்குத் தெரிந்த தமிழை உம்மிடம் பேசுகிறேன். ஒரு சின்ன விடுகதை, பதில் சொல்லுமேன்'' என்றாள்.
புலவர் ஆர்வமானார்.
""வட்டமாக இருக்கும், வன்னிக்கொடியில் தாவும், கொட்டுபவர் கையில் கூத்தாடும். எரித்தால் "சிவசிவ' என்பர். அது என்ன?'' என்றாள்.
புலவர் விழிக்கவே, ""ஒருநாள் யோசித்து சொல்லுமேன்,'' என்றவள் விடுவிடுவென போய்விட்டாள்.
கம்பர் வீட்டு வேலைக்காரியிடம் மாட்டினால் சும்மாவா?
இதற்குள் கம்பர் வெளியே வந்து, புலவரை அழைத்துச் சென்றார். அவரிடம் வாயாடிப்பெண் கேட்ட கேள்வியைத் தெரிந்து கொண்டார்.
"""அது ஒன்றுமில்லை , புலவரே! அவள் தட்டும் வரட்டியைத் தான் அப்படி சொன்னாள். வட்டமாக இருக்கும் வரட்டியை "வன்னி' என்னும் நெருப்பில் சுடுவார்கள். சுட்டதும் எடுத்த சாம்பலே திருநீறு. அதை நெற்றியில் பூசும்போது "சிவசிவ' என்பார்கள் இல்லையா! அதைத்தான் அப்படி சொல்லியிருக்கிறாள்,'' என்றார்.
கம்பரின் வேலைக்காரிக்கே இவ்வளவு திறனா என்று அம்பலசோமாசி ஆச்சரியப்பட்டார்.

No comments:

Post a Comment