Thursday, April 11, 2013

பிராணாயாமமும் திருமந்திரமும்

திருமந்திரமும் , பிராணாயாமமும் திருமந்திரம் என்னும் நூல் தமிழ் ஆகமம். ஆகமம் என்றால் வேதம் என்று பொருள். இந்த நூலை திருமூலர் என்னும் தவயோகி இயற்றியுள்ளார். மக்கள் வாழும் முறை மற்றும் கடவுளை காணும் முறையை அறிவியல் பூர்வமாக இயற்றியுள்ளார். திருமூலர் அஷ்டமா சித்திகள் பெற்ற தவயோகி ஆவார். அவர் இந்த நூலில் மக்கள் நூறு வயது முதல் மூவாயிரம் வருடம் வரை உயிருடன் வாழும் வழிகளை கூறியுள்ளார். மந்திரம் : மூலன் உறை செய்த மூவாயிரம் தமிழ். ஞாலம் அறியவே நந்தி அருளது காலை எழுந்து கருத்துஅறிந்து ஓதிடின் ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே. பொருள் : திருமூலர் ஆகிய நான் உலக மக்களின் நன்மைக்காக மூவாயிரம் மந்திரங்களை (பாட்டு) கடவுள் அருளால் இயற்றியுள்ளேன். காலையில் எழுந்து கருத்தை அறிந்து படித்தால் கடவுளை அடையலாம். ஒவ்வொரு தமிழனின் வீடுகளிலும் திருமூலரின் புத்தகங்கள் இருப்பது அவசியம். திருமூலர் உடம்பை வளர்க்கும் மற்றும் அறிவை வளர்க்கும் முறைகளை பற்றி எழுதியுள்ளார். திருமூலரின் வரலாற்றை கூறிய பின் அவருடைய மந்திரங்களையும் அவற்றின் பொருளையும் கூறுவேன். முன்னுரை : உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. பொருள் : உடம்பு அழிந்தால் உயிர் அழிந்து விடும். உடம்பில் நோய் இருந்தால் தெளிவாக சிந்திக்க முடியாது. ஏதாவது வேலையை ஏற்றுக் கொண்டால் சரிவர செய்ய இயலாது. ஆகவே உடம்பை வளர்க்கும் முறையை அறிந்துக் கொண்ட நான் உடம்பை சரியாகப் பேணி பாதுகாத்து உயிரையும் வளர்க்கிறேன். மந்திரம் : உடம்பினை முன்னம் இழுக்குஎன்று இருந்தேன் உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று உடம்பினை யான்இருந்து ஓம்புக்கின் றேனே. பொருள் : இதற்கு முன்பு உடல் தேவையற்றது என்று நினைத்திருந்தேன்.உடம்பிலே உயிராகிய கடவுள் இருப்பதைக் கண்டேன். ஆகவே உடலை இப்போது பேணிப் பாதுக்காத்து வருகின்றேன். உடலினை வளர்த்த திருமூலர் பிராணாயாமம் மற்றும் ஆசனத்தைப் பற்றிக் கூறியுள்ளார். நான் பிராணாயாமம் பற்றி மட்டும் கூறுகிறேன். பிராணாயாமம் : பிராணாயாமம் என்பது மூச்சு பயிற்சி. பிராணாயாமத்தின் பயன்கள் : 1. தினமும் செய்தால் வியாதிகள் வராது. 2. ஆரோக்கியமாக இருக்கலாம். 3. கொழுப்பைக் குறைக்கும். 4. ஆயுளை அதிகரிக்கும். 5. நினைவாற்றலை அதிகரிக்கும். 6. தலைவலி வராது. 7. நுரையீரல், குடல், சிறுநீரகம், வயிறு, மூளை ஆகியவைச் சிறப்பாக இயங்கும். 8. இரத்தநாளங்கள் சுத்தமாகும். 9. மனதை ஒரு நிலைப் படுத்தும் திறமை அதிகரிக்கும். 10. ஆஷ்துமா போன்ற நோய்கள் குறையும். 11. குரல் இனிமையாகும். 12. மலம், ஜலம் குறையும். 13. இரத்த அழுத்தம் குறையும். 14. தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் வராது. 15. பசி குறையும். தாகம் குறையும். 16. சுறுசுறுப்பு அதிகரிக்கும். 17. தேவையற்ற தூக்கம் குறையும். 18. எவ்வளவு கடினமான வேலையை செய்தாலும் எளிதில் சோர்வடையாமல் செய்யலாம். 19. வெய்யிலையும், குளிரையும் தாங்கும் சக்தி ஏற்படும். 20. மூச்சுக்காற்றை சீராக்கும். 21. நுரையீரலில் காற்றினால் ஏற்படும் மாசுக்களைக் கட்டுபடுத்தும். 22. உடல் உறுப்புக்களுக்கு போகின்ற பிராணவாயு இதனால் அதிகரிக்கும். 23. ஆகவே பிராணாயாமம் பயிற்சி செய்பவர்கள் 7 மணிநேரம் தூங்கினால் போதும். 8 மணி நேரம் தூங்க வேண்டியதில்லை. சிறிது நேரம் தூங்கினாலும் அதிக நேரம் விழித்திருந்த சுறுசுறுப்பு ஏற்படும். மந்திரம் : எங்கே இருக்கினும் பூரி இடத்திலே அங்கே அதுசெய்ய ஆக்கைக்கு அழிவில்லை அங்கே பிடித்து அதுவிட்டளவும் செல்லச் சங்கே குறிக்கத் தலைவனும் ஆமே. பொருள் : எங்கு இருந்தாலும் மூச்சைப் பிடித்து பிராணாயாமம் செய்தால் உடம்பிற்கு(ஆக்கை) அழிவில்லை. மூச்சை முடிந்த அளவு இழுத்துப் பிடித்து வெளியே விட்டால் தலைவனாகலாம். வாழ்க்கையில் முன்னேறலாம். மற்றவர்கள் போற்றுவார்கள். மந்திரம் : புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால் கள்உண்ண வேண்டாம் தானே களிதரும் துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும் உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே. பொருள் : பறவையை விட வேகமாக செல்ல கூடிய குதிரை போன்ற மூச்சை அடக்கினால் போதை பொருட்களை குடிக்கத் தேவையில்லை. நாம் சுறுசுறுப்பாக துள்ளி நடக்கலாம். சோம்பல் ஏற்படாது. உண்மையை சொல்கிறேன் சூடு, சொரணை இருந்தால் கேட்டுக் கொள். மந்திரம் : புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை நெறிப்பட உள்ளே நின்மலம் ஆக்கில் உறுப்புச் சிவக்கும் உரோமம் கறுக்கும் புறப்பட்டுப் போகான் புரிசடையோனே. பொருள் : இஷ்டபடி வெளியில் வருகின்ற மூச்சுக் காற்றை முறைப்படி பிராணாயாமம் பயிற்சி மூலம் மூச்சை முறைப்படித்தினால் உறுப்புகள் புத்துணர்வு பெற்றுச் சிவக்கும். தலைமுடிக் கறுப்பாகும். பிராணாயாமம் பயிற்சி செய்யும் வரை உடம்பிலிருந்து உயிர் பிரிந்து செல்லாது. மந்திரம் : தலைவன் இடம்வலம் சாதிப்பார் இல்லை தலைவன் இடம்வலம் ஆயிடில் தையல் தலைவன் இடம்வலம் தன்வழி அஞ்சில் தலைவன் இடம்வலம் தன்வழி நூறே. பொருள் : இடப்பக்கமும், வலப்பக்கமும் மூச்சு பயிற்சி மாற்றி மாற்றி பயிற்சி செய்து தலைவராகலாம் என்று அறிந்தவர்கள் யாரும் இல்லை. மூச்சுப் பெயர்ச்சி செய்து ஒளி வடிவில் கடவுளைக் காணலாம். மூச்சுப்பெயர்ச்சி செய்து ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தலாம். ஆகவே இதன் மூலம் நூறு வயது வரை நோய் நொடியின்றி இளமையுடன் வாழலாம் என்று திருமூலர்க் கூறியுள்ளார். பிராணாயாமம் செய்யும் முறை : பிராணாயாமம் செய்ய தகுதியான இடங்கள் : 1. காற்றோட்டமான இடமாக இருக்க வேண்டும். 2. தனிமையான இடமாக இருக்க வேண்டும். 3. ஏ.சி அறையில் பண்ணக்கூடாது. 4. காற்றுப் பலமாக அடிக்கும் இடங்களில் செய்யக் கூடாது. 5. கொசுவர்த்தி சுருள், திரவம், கட்டி பயன்படுத்தக்கூடாது. கொசுக்களை கொல்வதை போல் மனிதனையும் கொன்று விடும். ஆகவே கொசுவலை பயன்படுத்தி பாதுகாக்கவும். தகுதியான நேரம் : 1. காலையில் 5 மணிக்கு செய்யவேண்டும். முடியாவிட்டால் மாலையில் அல்லது காலையில் செய்யலாம். 2. சாப்பிட்டு 3 மணிநேரம் கழித்து செய்யவேண்டும். 3. பிராணாயாமம் செய்து முடிந்து அரைமணி நேரத்திற்கு குளிக்கக் கூடாது. 4. பிராணாயாமம் செய்து 10 நிமிடம் கழித்து சாப்பிட வேண்டும். 5. சோர்வடையும் அளவுக்கு பிராணாயாமம் செய்யக் கூடாது. தகுதியான ஆசனம் : பத்மாசனம், சித்தாசனத்தில் செய்வது நல்லது. அப்படி இல்லையெனில் சுகாசனத்தில் செய்துக் கொள்ளலாம். மூச்சு விடுதலில் நான்கு நிலைகள் உள்ளது. பூரகம் : மூச்சுக் காற்றை உள்ளே இழுத்தல். ரச்சகம் : மூச்சை வெளியே விடுதல். உள்கும்பகம் : மூச்சை உள்ளே நிறுத்தி வைத்தல். வெளிகும்பகம் : மூச்சு காற்று உள்ளே இல்லாமல் வெளியே நிறுத்தி வைத்தல். மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும் போதும், வெளியே விடும் போதும் ஒரே சீராக செய்ய வேண்டும். பந்தம் : மூலபந்தம் : மனிதனின் மூலாதாரம் மலதுவாரத்திற்கும், பிறப்பு உறுப்பிற்கும் நடுவில் உள்ளது. சித்தாசனத்தில் அமர்ந்து மூலாதாரத்தை குதிகாலால் அழுத்திக் கொள்ளவும். மலதுவாரத்தை குறுக்கி மலமிறக்கும் உணர்ச்சியை வயிற்றை நோக்கி இழுக்கவும். மூலபந்தத்தின் பயன்கள் : 1. இதை பண்ணுவதினால் தேவையில்லாத பசி குறையும். 2. மலசிக்கல்களும், பிறப்பு உறுப்புகளுக்கும் சீராக வேலை செய்யும். 3. இளமைக் குறையாது. இது பிராணாயாமம் செய்யும் பொழுது செய்ய வேண்டும். ஜலந்தர்பந்தம் : தொண்டையைக் குறுக்கி தலையை முன்னே சாய்த்து மார்பில் நாடியை அழுத்தமாக அழுத்தும் விதம் அமரவும். இது உள்கும்பகம் ஆரம்பிக்கும் போது செய்து ரச்சகம் செய்வதற்கு முன் நிறுத்தவும். ஒட்டியானபந்தம் : வயிற்றைக் குறுக்கி வயிற்றைப் பின்நோக்கி இழுக்கவும். இது ரச்சகம் செய்ய ஆரம்பிக்கும் போது செய்து பூரகம் செய்வதற்கு முன் நிறுத்தவும். பிராணாயாமம் முறைகள் : நாடிசுத்தி : புதிதாக பிராணாயாமம் பயில்பவர்கள் ஒரு மாதத்திற்கு இதைச் செய்யலாம். வலது மூக்கை விரலால் மூடிவிட்டு இடதுபக்கம் வழியாக மூச்சை உள்ளே இழுக்கவும். அப்புறம் இடதுமூக்கை விரலால் மூடிவிட்டு வலதுபக்கம் வழியாக மூச்சை வெளியே விடவும். அப்புறம் வலதுபக்கம் வழியாக உள்ளே இழுக்கவும். இடதுபக்கம் வழியாக வெளிவிட வேண்டும். இதைபோல் மாற்றி மாற்றி 5 நிமிடம் செய்யவும். நாடிசுத்தி கட்டாயமாக செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை. இதை செய்ய தேவையில்லையென்றால் இதற்கு அடுத்தப் பயிற்சி செய்யவேண்டும். அனுலோம் ,விலோம் : இடதுமூக்கை மூடிவிட்டு வலதுமூக்கால் மூச்சை மெதுவாக ஒரே சீராக மூச்சை உள்ளே இழுக்கவும். பிறகு இரண்டுபக்க மூக்கையும் மூடிக்கொள்ளவும். முடிந்த அளவு மூச்சை உள்ளே வைத்துக்கொண்டு வலதுபக்கம் வழியாக வெளிவிடவும். அடுத்து வலது மூக்கை மூடி இடது மூக்கால் மூச்சை இழுக்கவும். பின்னர் கும்பகம் செய்து வலது மூக்கால் வெளிவிடவும். இவ்வாறு மூக்கை மாற்றி மாற்றி பயிற்சி செய்யவும். முதலில் சிறிதுக் காலத்திற்கு 5 முறை செய்ய வேண்டும். பிறகு இருபது முதல் முப்பது முறை செய்யலாம். முதலில் 1 விநாடி பூரகம் செய்து 2 விநாடி கும்பகம் செய்து பின்னர் 2 விநாடி ரச்சகம் செய்யவும். பிறகு சிறிது சிறிதாகக் கூட்டிக் கொண்டு சென்று 5:20:10 என்ற கணக்கிற்கு பண்ணலாம்.இதில் இன்னொரு முறையும் உண்டு. வெளிகும்பக முறையில் 5:10:20 என்ற கணக்கிற்கு பண்ணலாம். வெளிக்கும்பக முறை அதிகபலனை தரும். இப்படி செய்வதினால் 1. நுரையீரலில் உள்ள நோய்கள் குறையும். 2. இரத்தம் சுத்திகரிக்கப்படும். எடுத்துக்காட்டுகள் உள்கும்பக முறை : 1:2:2 ஆரம்ப நிலை 1 விநாடி மூச்சை உள்ளே இழுத்துக் கொள்ளவும். 2 விநாடிகள் மூச்சை உள்ளே வைத்துக் கொள்ளவும். 2 விநாடிகள் மூச்சை வெளியில் விடவும். 5:10:10 இரண்டுமாதம் கழித்து 5 விநாடிகள் மூச்சை உள்ளே இழுத்துக் கொள்ளவும். 10 விநாடிகள் மூச்சை உள்ளே வைத்துக் கொள்ளவும். 10 விநாடிகள் மூச்சை வெளியில் விடவும். 5:20:10 5 விநாடிகள் மூச்சை உள்ளே இழுத்துக் கொள்ளவும். 20 விநாடிகள் மூச்சை உள்ளே வைத்துக் கொள்ளவும். 10 விநாடிகள் மூச்சை வெளியில் விடவும். வெளிகும்பக முறை : 1:2:2 1 விநாடி மூச்சை உள்ளே இழுத்துக் கொள்ளவும். 2 விநாடிகள் மூச்சை வெளியில் விடவும். 2 விநாடிகள் மூச்சை வெளியில் நிறுத்தி வைத்துக் கொள்ளவும். 5:10:10 5 விநாடி மூச்சை உள்ளே இழுத்துக் கொள்ளவும். 10 விநாடிகள் மூச்சை வெளியில் விடவும். 10 விநாடிகள் மூச்சை வெளியில் நிறுத்தி வைத்துக் கொள்ளவும். 5:10:20 5 விநாடி மூச்சை உள்ளே இழுத்துக் கொள்ளவும். 10 விநாடிகள் விநாடிகள் மூச்சை வெளியில் விடவும். 20 விநாடிகள் மூச்சை வெளியில் நிறுத்தி வைத்துக் கொள்ளவும். கபால ஜொலிப்பு : இந்த பிராணாயாமம் செய்வதால் கபாலம் துடிக்கும். பத்மாசனம் அல்லது சித்தாசனத்தில் அமர்ந்து கொள்ளவும். வாயை மூடிக்கொள்ளவும். கண்களை மூடிக்கொள்ளவும். பூரகம் ரச்சகத்தில் செய்யவும். இப்பயிற்சியில் கும்பகம் கிடையாது. ஆரம்பத்தில் ஒரு விநாடிக்கு ஒரு முறை பூரகம் ரச்சகம் செய்யவும். படிபடியாக உயர்த்திக்கொண்டு சென்று ஒரு விநாடிக்கு பத்து முறை வரை பூரகம் ரச்சகம் செய்யவும். வியர்த்துக் கொட்டும் வரை இப்பயிற்சி செய்யவும். பயன்கள் : 1. சுவாச குழாய் சுத்தமாகும். 2. ஆஷ்துமா குணமாகும். 3. காச நோய் வராது. 4. ரத்தம் சுத்தமடையும். உஜவி : பத்மாசனம் அல்லது சித்தாசனத்தில் அமர்ந்து கொள்ளவும். வாயை மூடிக்கொள்ளவும். இரண்டு மூக்கு வழியாகவும் மூச்சை இழுத்துக் கொள்ளவும். முடிந்த அளவு உள்ளே கும்பகம் செய்து வலது மூக்கை மூடிக்கொண்டு இடது மூக்கு வழியாக காற்றை வெளியே விடவும். மூச்சை உள்ளே இழுக்கும் போது மார்பை விரிக்கவும். மூச்சை உள்ளே இழுக்கும் போது ஒரே சீராக இழுக்கவும். சீக்காரி : பத்மாசனம் அல்லது சித்தாசனத்தில் அமர்ந்துக் கொள்ளவும். நாக்கை மேலே மடித்துக் கொள்ளவும். வாயை திறந்து ஷ்ஷ் சத்தம் போட்டுக்கொண்டு மூச்சை வாய் வழியாக இழுக்கவும். முடிந்த வரை அதிகநேரம் கும்பகம் செய்து இரண்டு மூக்கு வழியாக ரச்சகம் செய்யவும். பயன்கள் : 1. தாகம் குறையும். 2. சோம்பல் குறையும். 3. தூக்கம் போய்விடும். சீத்தாளி : பத்மாசனம் அல்லது சித்தாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்துக் கொள்ளவும். அதன் பிறகு நாக்கை வாய் வெளியே நீட்டிக் கொள்ளவும். அதன்பிறகு காற்றை நாக்கு வழியாக உள்ளே இழுத்து முடிந்த வரை கும்பகம் செய்து பின்பு ரச்சகம் செய்யவும். பயன்கள் : 1. கட்டி, மஞ்சள் காமாலை, தோல்வியாதிகள் நீங்கும். 2. தாகம் குறையும். 3. கோபம் குறையும். பஷ்திரிகா : பஷ்திரிகா என்பது கபாலமும், உஜவியும் சேர்ந்து செய்வதாகும். கும்பக முறையில் செய்யாமல் 5 லிருந்து 10 முறை வேகமாக மூச்சை வேகமாக இழுத்து வெளிவிடவும். பின்னர் உஜவி முறையில் காற்றை இழுத்து முடிந்த அளவு கும்பகம் செய்து பின்னர் ரச்சகம் செய்யவும். கோடை காலங்களில் ஒரு முறை செய்யவும். குளிர் காலங்களில் இரண்டு முறை செய்யவும். முதலில் 5 விநாடிக்கு கும்பகம் செய்து பின்னர் படிப்படியாக நான்கு நிமிடம் வரை கும்பக நேரத்தை கூட்டவும். பயன்கள் : குளிர்க்காலங்களில் போர்வை இல்லாமல் இப்பயிற்சி மூலம் உடம்பை சூடாக்கிக் கொள்ளலாம். வண்டு பிராணாயாமம் : வஜ்ராசனத்தில் அமர்ந்துக் கொள்ளவும். மூச்சை வேகமாக இழுக்கவும். பின்னர் தொண்டையிலிருந்து குறட்டை விடும் போது வெளிவரும் சத்தம் போல், வண்டு சத்தம் போடுவது போல் மூச்சை மெதுவாக வெளியே விடவும். முடிவுரை: பிராணாயாமம் செய்யும் போது மனதை ஒருமுக படுத்தி செய்தால் அதிக பலன் கிடைக்கும். ஆகவே கண்களை மூடி ஓம் அல்லது ஓம் மஹா கணபதி நமக என்று மந்திரங்களை கூறிக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment