Friday, June 21, 2013

ஒருமைப்பாட்டின் தாரக மந்திரம் .

ஒருமைப்பாடு .
ஒரு மகானைச் சந்திக்க இளைஞர்கள் சிலர் சென்றார்கள் . " உங்களை மகான் என்கிறார்களே .... அப்படி எங்களை விட உங்களிடம் என்ன சிறப்புத் தன்மை இருக்கிரது ?" என்று கேட்டார்கள் .
" நான் சாப்பிடுகிறேன் , படிக்கிறேன் , தூங்குகிறேன் , உடற்பயிற்சி செய்கிறேன், பிரார்த்தனை செய்கிறேன் " என்றார் மகான் .
" இவை எல்லாவற்றையும் நாங்களும்தான் செய்கிறோம் . பிறகு எப்படி நீங்கள் உயர்ந்தவராகக் கருதப்படுகிறீர்கள்? " என்று இளைஞர்கள் மீண்டும் கேட்டார்கள் .
அப்போதுதான் மகான் சொன்னார் , " இரண்டு செயல்களும் ஒரே மாதிரியாகத் தெரியலாம் . ஆனால் , வித்தியாசம் இருக்கிரது . நான் சாப்பிடும்போது சாப்பிட மட்டுமே செய்கிறேன் . தூங்கும்போது தூங்க மட்டுமே செய்கிறேன் . படிக்கும்போது படிக்க மட்டுமே செய்கிறேன் , பிராத்தனை செய்யும்போது வேறு சிந்தனைக்கு இடமின்றி பிராத்தனை மட்டுமே செய்கிறேன் . செய்கிற செயலில் மட்டும் மனத்தை ஒருமுகப்படுத்துகிறேன் . நீங்கள் எப்படி ? " என்று கேட்டார் மகான் .
தங்கள் மனம் அடிக்கடி அலைபாய்வதை அப்போதுதான் இளைஞர்கள் உணர்ந்தார்கள் . வெற்றிக்கு வேண்டியது ஒருமைப்பாடு .
ஒரு நேரத்தில் ஒரு பணி . ஒரு நேரத்தில் ஒரு செயலை மட்டுமே செய்வது மனஒருமைப்பாட்டிற்கு மிகவும் அடிப்படையானதாகும் . அதில் ஒன்றிச் செய்வது மிகவும் முக்கியம் . ' நாம் ஒரு நாளைக்கு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணங்களை எண்ணுகிறோம் ' என்று அறிஞர்கள்
கூறுகின்றனர் . மனம் அமைதியாக இருந்தால் எண்ணங்கள் குறையும் . எண்ணங்கள் ஒருமுகப்படுத்திச் செயலாற்றினால் மிகப் பெரும் ஆற்றல் கிடைக்கும் .
மன ஒருமைப்பாடு ' மனத்தை நிலைப்படுத்த தனித்தனியாக எதையும் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை . உன் ஆற்றலை செயலில் மனத்தை முழுவதும் குவிக்க முயன்றால் போதும் . குளிப்பது , உண்பது , படிப்பது , பயில்வது , உலவுவது , உரையாடுவது , படக்காட்சியைப் பார்ப்பது ஆகிய எந்தச் செயலாயிருந்தாலும் முழு முனைப்போடு அதில் மனத்தை ஈடுபடுத்து . நீ வெற்றி பெறுவாய் ' என்கிறார் ஜேம்ஸ் ஆலன் .
' மனத்தை அடக்க நினைத்தால் அலையும் . மனத்தை அறிய நினைத்தால் அடங்கும் ' என்றார் வேதாத்ரி மகரிஷி . மேலாகக் கேட்பதற்கு மிகவும் எளிதாகத் தோன்றலாம் . ஆனால் , செயல்படுத்திப் பாருங்கள் . அப்போதுதான் அதன் சிரமம் தெரியும் .
எப்போது நீங்கள் எதுவாக இருக்கிறீர்களோ .... அப்போது நீங்கள் அதுவாகவே இருங்கள் . -- இதுதான் மன ஒருமைப்பாட்டின் தாரக மந்திரம் .

No comments:

Post a Comment