Wednesday, August 28, 2013

தற்பெருமையையும், அகந்தையையும் உன் மனதை எப்போதும் நெருங்க விடாதே.

சிறந்த வில்வித்தை காரனாக தன்னை கருதிக் கொண்ட அர்ஜூனன், அதன் காரணமாக இறுமாப்புடன் இருந்தான். யமுனை நதியின் ஓடும் தண்ணீரில், தன்னால் ஒரு அம்புப் பாலத்தையே கூட அமைக்க முடியும் என்று பெருமையாக சொன்னான். கிருஷ்ணர் அவன் மனதில் தற்பெருமை தலைதூக்குவதை கண்டுகொண்டார்.

அவனிடம் அர்ஜூனா உனக்குள்ளாகவே ஏதேதோ பேசிக்கொண்டே சிரிக்கிறாய் போல் தெரிகிறது என்று கிருஷ்ணர் கேட்டார். அதற்கு அர்ஜூனன் நான் சிரித்தது உண்மைதான். ராமன் இலங்கைக்கு போகும் போது கடல் மீது பாலம் கட்ட குரங்கு கூட்டத்தை அமர்த்திக்கொண்டார்.

நான் மட்டும் அங்கு இருந்திருந்தால் அம்புகளாலேயே கண்சிமிட்டும் நேரத்தில் ஒரு பாலம் அமைத்திருப்பேன். இதை நினைத்துதான் சிரித்தேன் என்று பெருமையோடு சொன்னான். அர்ஜூனனின் அகந்தையை அடக்க கிருஷ்ணர் உறுதிக்கொண்டார்.

அர்ஜூனா இந்த யமுனை நதியில் உன் அம்புகளால் ஒரு பாலத்தை அமை. ராமாயண காலத்தில் இருந்த ஒரே ஒரு குரங்கு இப்போதும் இந்த பூமியில் இருக்கிறது. அது அந்த பாலத்தின் வலிமையை சோதிக்கட்டும். உன் பாலம் பலமானது என அது சொன்னால் உன் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன் என்றார் கிருஷ்ணர்.

அர்ஜூனன் மிகுந்த ஆர்வத்துடன் யமுனையின் மீது அம்புகளை பாய்ச்சினான். மிகச்சிறப்பான பாலம் ஒன்று அமைந்தது. கிருஷ்ணர் மகிழ்ச்சி அடைந்தவராய், ஹே! ஹனுமான் வா! என அழைத்தார். அப்போது ஒரு குரங்கு வந்து கிருஷ்ணரை வணங்கியது. கிருஷ்ணர் அந்த குரங்கை அம்புப் பாலத்தின் மீது நடக்கச் சொன்னார்.

குரங்கின் கால் பட்டது தான் தாமதம். அடுத்த காலை உயர்த்தும் முன்னரே பெரும் சப்தத்துடன் முழு பாலமும் நொறுங்கி விழுந்தது. அர்ஜூனனை பார்த்து கிருஷ்ணர் சிரித்தார். அர்ஜூனன் அவமானத்தால் குன்றிப்போய் வில்லையும் அம்பையும் வீசி எறிந்துவிட்டு கிருஷ்ணரது திருவடிகளில் விழுந்தான். கிருஷ்ணர் அவனுக்கு அறிவுரை வழங்கினார்.

அர்ஜூனா வலிமை மிக்க இந்த குரங்குகளை தாங்கும் வகையில் ராமரால் கூட அம்புகளால் பாலம் அமைக்க முடியவில்லை. அவராலேயே முடியாது என்ற நிலை இருக்க, உன்னால் பாலம் அமைக்க இயலாமல் போனதற்காக நீ அவமானப்பட்டதாக கருத முடியாது.

ஆனால், எப்போதும் ஒரு பாடத்தை நினைவில் வைத்துக்கொள். தற்பெருமையையும், அகந்தையையும் உன் மனதை எப்போதும் நெருங்க விடாதே. ஒரு வீரனுக்கு தவறாது வீழ்ச்சியைத் தரக்கூடிய மிக மோசமான எதிரிகள் இவை என்றார். கிருஷ்ணரது அறிவுரையை அர்ஜூனன் ஏற்றுக்கொண்டான்.

No comments:

Post a Comment