Wednesday, August 28, 2013

யார் இந்த மகிஷாசுரன்?

மகிஷாசுரமர்தினி என்று அந்தப் பரமேஸ்வரிக்கு ஒரு பெயர் உணடு. ஸ்ரீ அனந்தராம தீக்ஷதர் அவர்களால் இயற்றப்பட்ட அயிகிரி நந்தினி நந்தித மேதினி விஸ்வ வினோதினி நந்தினுதே" என்ற ஸ்லோகம் நவராத்திரி நேரத்தில் பலர் சொல்லுவார்கள்.
அந்த அம்பாளுக்கு அப்படி ஒரு பெயர் வரக் காரணம் என்ன? யார் இந்த மகிஷாசுரன்? ரம்பா என்ற அசுரன் இருந்தான். அவன் அசுரர்களின் அரசனாகவும் இருந்தான். ஒரு நாள் அவன் ஒரு நதியின் பக்கம் வந்து கொண்டிருக்க, அங்கு ஒரு அழகிய பெண் எருமை தண்ணீரில் ளித்துக் கொண்டிருந்தது. அந்தப் பெண் எருமை தன் முன் பிறப்பில் சியாமளா என்ற அழகிய ராஜகுமாரியாக இருந்தது. எதோ ஒரு சாபத்தினால் எருமையானது.

அந்த எருமையைக் கண்டு அதன் அழகை ரசித்து அதை அடைய விரும்பினான் அந்த அசுரன். அவனுக்கு நினைத்தபோது தன்னை மாற்றிக்கொள்ள முடியும். ஆதலால் அவன் ஒரு ஆண் எருமையாக மாறி அந்தப் பெண் எருமையுடன் மகிழ்ந்து இருந்தான். பின் அந்தப்பெண் எருமைக்கு மகிஷாசுரன் என்ற அரக்கன் பிறந்தான். அரக்கனாக இருந்தாலும் சில நல்ல குணங்கள் அவனிடம் இருந்தன. இதனால் அவன் பிரும்மாவை நோக்கித் தவம் இருந்தான். பிரும்மா அவனுடைய கடும் தவத்தில் மனம் மகிழ்ந்து அவனுக்குத் தரிசனம் தந்தார். பின் அவனுக்கு வேண்டிய வரத்தை அளித்தார். அவன் கேட்ட வரம், "நான் மனிதனாலும் அல்லது மிருகத்தினாலும் அழிக்கப்படக் கூடாது." என்பதே.
எல்லாப் புராணக் கதைகளிலும் வருவது போல் இங்கும் வரம் கிடைத்ததும் அசுரன் எல்லோரையும் வதைக்க ஆரம்பித்தான். இந்திரன் மீது படையெடுத்து தேவர்களை ஒடோட விரட்டினான். தேவ்ர்கள் பயந்து கண்கலங்கி என்ன செய்யலாம் என்று யோசித்தனர். மகிஷாசுரன் ஆண்களின் கண்களுக்குப் புலப்பட மாட்டான் என்பதால் ஒரு தேவியின் சிருஷ்டி உண்டாயிற்று. அவளே துர்க்கை. தேவர்கள் தங்களது ஆக்ஞா சக்கரத்தில் மனதை வைத்து தியானம் செய்து சக்திகளெல்லாம் ஒன்று திரட்டி துர்க்கையை உண்டாக்கினார்களாம். துர்கை வந்தவுடன் தேவர்கள் தங்கள் தேவியைத் துதித்துப் பாடினர்கள். ஹிமாவன் அவளுக்கு சிங்கத்தைப் பரிசாகக் கொடுத்தார். விஷ்ணு அவளுக்கு சங்கு சக்கரம் கொடுத்தார். பிரும்மா ஒரு கதையைக் கொடுத்தார். சிவன் அவளுக்குத் திரிசூலம் மற்றும் வில்லும் அம்பும் கொடுத்தார். விஸ்வகர்மா அழகிய ரத்ன ரதத்தைக் கொடுத்தார். அவளுடைய சக்தி புகுந்து பிரும்மா பிராம்மி என்ற கன்னியானார், விஷ்ணு வைஷ்ணவி ஆனார், மகேஸ்வரன் மகேச்வரி ஆனார், குமரன் கௌமாரியானார், விநாயகர் விநாயகி ஆனார், வராஹர் வராஹியானார், நரசிம்மர் நாரசிம்ஹி ஆனார். துர்க்கையைச் சூழும் சப்த கன்னிகைகளாக இவர்கள் இருந்து இவர்களது சக்தியாலும் மகிஷாசுரன் வதம் நிகழ்ந்தது. இத்தனையும் பெற்று துர்க்கை மகிஷாசுரனை வதம் செய்தாள். தவிர சுமபா நிசும்பா என்ற அசுரர்களையும் வென்றாள். இந்த அசுரர்களுக்கு இடையே இரக்தபீஜம் என்ற அசுரன் இருந்தான். அவனைக் கொல்வது மிகக் கடினம், ஏன் என்றால் அவனது ஒரு சொட்டு இரத்தம் கீழே விழ, புதிதாக ஒரு அசுரன் முளைத்து விடுவான். அவனைக் கொல்ல அவனது இரத்தத்தைக் கீழே விழாமல் உரிஞ்சிக் குடிக்க வேண்டும். இதற்காக துர்க்கை மஹாகாளியை உண்டாக்கினாள். அந்தக் காளியின் நாக்கு மிகப் பெரியது. கறுப்பு வர்ணத்தில் காளி தன் சக்தியினால் சிவந்த நாக்கைச் சுழற்றி ரக்தபீஜத்தைக் கொன்றவுடன் இரத்தம் கீழே சொட்டாமல் எல்லாவற்றையும் உறிஞ்சி விட்டாள். வடநாட்டில் இந்தக் கதை பிரசித்தம். அங்கு காளியைப் பெரிய நீண்ட சிவந்த நாக்குடன் காணலாம்.

No comments:

Post a Comment