Saturday, September 21, 2013

உண்மை பக்தி எப்படி இருக்க வேண்டும்?

உண்மை பக்தி எப்படி இருக்க வேண்டும்?
-------------------------------------------------------
சிவ பக்தியை, வெகுவாகப் புகழ்ந்து பாடியுள்ளனர் பலர். வந்தவாசிக்கு அருகிலுள்ள அடையப்பலம் என்ற கிராமத்தில், அப்பைய தீட்சிதர் என்ற சிவபக்தர் வாழ்ந்து வந்தார். இவர், சதா சர்வ காலமும் சிவ பக்தியிலேயே திளைத் திருப்பார். திடீரென ஒரு நாள...் இவருக்கு ஒரு சந்தேகம் வந்தது… "நாம், சுய நினைவுடன் இருக்கும்போது, சிவனை துதிக்கிறோமே… சுய நினைவு இல்லாத போது, இந்த சிவபக்தி இருக்குமா…’ என்று. இதை சோதித்துப் பார்க்க, ஒரு ஏற்பாடு செய்தார்.
சீடர்களிடம் சொல்லி, ஊமத்தங்காயைக் கொண்டு வரச் செய்தார். "நான் இந்த ஊமத்தங்காயை தின்று விடுகிறேன். உடன் என் சித்தம் கலங்கி, புத்தி மாறி விடலாம். அப்போது, நான் என்ன செய்கிறேன், என்ன பேசுகிறேன் என்பதை, நீங்கள் அப்படியே எழுதி வைத்து, பின் ஊமத்தங்காயை தின்றதற்கான முறிவு மூலிகையை கொடுத்து, என்னை சுய நினைவுக்குக் கொண்டு வாருங்கள்…’ என்றார்.
அதே போல், ஊமத்தங்காயைத் தின்றார். சீடர்கள் கவனித்தனர். அவர் அருமையான சிவ ஸ்தோத்திரங்களைச் சொன்னார். மற்றபடி, பைத்தியம் பிடித்து, பாயைப் பிராண்டவில்லை; துணியை கிழித்துக் கொள்ளவில்லை. சீடர்கள் மாற்று மருந்து கொடுத்து, ஊமத்தங்காயின் விஷத்தை போக்கினர். பின், அவர் சொன்ன ஸ்லோகத்தை எழுதி காண்பித்தனர். அது உயர்ந்த கருத்துள்ள சிவஸ்துதியாக இருந்தது கண்டு மகிழ்ந்தார்.
இப்படி சுய நினைவு இருக்கும் போதும், சுய நினைவு இல்லாத போதும் ஒரே மாதிரியாக சிவபக்தியுடன் இருப்பது அபூர்வம்.
"கனவிலும், நினைவிலும் உன்னை மறவேன்…’ என்று, பக்தர்கள் பாடுவர். கனவில் மறவாமல் இருப்பது சாத்தியமா? ஆழ்ந்த பக்தி இருந்தால் முடியும்.
கணவன், மனைவியிடம் எவ்வளவோ அன்பாகப் பேசிப் பழகுகிறான்; சுய நினைவு இருக்கும் போது. ஆனால், தூங்கும் போது அதே அன்புடன் இருக்கிறானா… ஏதேதோ கனவு காண்கிறான். "அடி, மூதேவி உன்னை தொலைத்து விட்டால் தான் நிம்மதி…’ என்றெல்லாம் உளறுகிறான். "இந்தாங்க… எழுந்திரிங்க, என்ன பேத்தறீங்க…’ என்று மனைவி எழுப்புகிறாள். இவனுக்கு கனவு கலைந்து விடுகிறது. "ஒன்றுமில்லடி… ஏதோ கெட்ட கனவு…’ என்று சொல்லி சமாளிக்கிறான். கனவிலும், நினைவிலும் ஒரே மாதிரி எண்ணம் ஏற்படவில்லை.
ஆனால், தீட்சிதருக்கு நினைவிலும், கனவிலும் அல்லது சுயநினைவு இல்லாத போதும் கூட, சிவபக்தி மாறாமல் இருந்திருக்கிறது. இது தான் உண்மையான பக்தி! எல்லாருக்கும் இப்படி வருமா? வர வேண்டும்.

No comments:

Post a Comment