Thursday, October 31, 2013

நினைத்ததை முடிப்பவன்

தன் பக்தனுக்கு நன்மை செய்ய நினைத்து விட்டால், கண்ணபிரான் என்ன தகிடுதத்தம் செய்தாவது அதைச் செய்து விடுவான்.
தன்னையே கதியென சரணடைந்த பாண்டவர்களுக்கு வெற்றி தேடித்தர அவன் ஒருமுறை என்ன செய்தான் தெரியுமா?
குரு÷க்ஷத்திரப் போரின் முடிவு அர்ஜுனனின் வில்லாற்றலைப் பொறுத்திருந்தது. அர்ஜுனன் வில்லுக்கு எதிராக அதே திறனுடன் விடுக்கும் ஆற்றல், துரியோதனனின் சித்தப்பாவான விதுரருக்கு மட்டுமே இருந்தது. இதைத் தடுப்பதற்கு என்ன வழி என்று கண்ணன் யோசித்தான்.
விதுரரும் கிருஷ்ண பக்தர். அவனே கதியென சரணடைந்தவர். தன் பக்தனின் வில்லும், அம்பும் நன்மையைக் கருதி மட்டுமே விடப்பட வேண்டும் என்பதில் அக்கறை கொண்ட கண்ணன், அவருக்கும் நன்மை செய்ய எண்ணினான்.
ஒருமுறை விதுரர் கண்ணனைச் சந்தித்தார். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கண்ணன் சூரியனைக் காட்டி மேலே நோக்கி கை நீட்டி ஏதோ பேசினார். விதுரரும் அதே போல கை உயர்த்தி பதில் சொல்லிக் கொண்டிருந்தார். இதை தூரத்தில் இருந்து துரியோதனன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனுக்கு சந்தேகம் வந்து விட்டது. ""இந்த விதுரர், கண்ணனிடம் சூரியனைக் காட்டி சத்தியம் செய்து ஏதோ சொல்கிறார். இவரிடம் அதுபற்றி விசாரிக்க வேண்டும்,'' என்று எண்ணிக் கொண்டான். கண்ணன் சென்றதும், அதுபற்றி சித்தப்பாவிடம் ஆவேசமாகப் பேசினான். தனக்கு எதிராக நடந்ததாகக் குற்றம் சாட்டினான்.
விதுரருக்கு கோபம் வந்து விட்டது. தன் வில்லை ஒடித்து, ""போரில் நான் யார் பக்கமும் போரிடமாட்டேன்,'' என சொல்லிவிட்டு போய்விட்டார். கண்ணனின் திட்டம் எளிதாகப் பலித்து விட்டது.

No comments:

Post a Comment