Wednesday, October 30, 2013

லட்சுமி இருக்கும் இடங்கள்


 ஸ்ரீலட்சுமி திருமாலின் தலங்களில் நித்திய வாசம் புரிகின் றாள். சுமங்கலிகள், பூரண கும்பம்-மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய லட்சுமிகரமான மங்கலப் பொருட்களில் மகா லட்சுமி நித்தியவாசம் புரிகிறாள்.

அழகு, தைரியம், அடக்கம், அறிவு, ஆற்றல், தர்மசிந்தனை, பொறுமை, தெய்வபக்தி, ஐம்புலன் அடக்கம், சத்துவ குணம் இத்தகைய மனோபாவம் உடைய மனிதர்களிடத்தும் திருமகள் நிலையாக வாசம் செய்கின்றாள். தேவர்களிடத்திலும் பிரம்ம ஞானியர் களிடத்திலும் பரமனடியார்களிடத்திலும் பக்தி உள்ளோர் வீடுகளிலும், கிருகஸ்தர்களிடத்திலும், பசுக்களிடத்திலும், அந்த பசுக்களை பராமரிக்கும் பெண்களிடத்திலும் ஸ்ரீதேவி நித்யவாசம் புரிகிறாள்.

வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் ஆகிய மரம் செடிகளிலும் ஸ்ரீலட்சுமி வசிக்கிறாள். ஸ்ரீ லட்சுமியை வில்வத் தால் அர்ச்சித்து பூஜிப்பது மிகவும் விசேஷம். அவ்வாறு அர்ச்சிக்கும் போது, வில்வத்தை தளப் பக்கமாக பூஜிக்க வேண்டும். ஏன் என்றால் வில்வ தளத்தில் அமிர்த தாரையாக லட்சுமி வாசம் செய்கிறாள்.

அதேபோல் தாமரை மலரால் பூஜிக்கும் போதும் தாமரையின் பூ உள்ள பக்கமாக பூஜிக்க வேண்டும். ஸ்ரீ லட்சுமியை சாமந்திப் பூ, தாழம் பூ இலைகளாலும் அர்ச்சிக்கலாம். ஸ்ரீரங்க சேத்திரத்தின் தல விருட்சம் வில்வம், திருவகீந்தபுரத்து ஹேமாம் புஜநாயகி தாயாருக்கு வில்வார்ச்சனை தான் செய்து வருகிறார்கள்.

வில்வ மரத்தைப் பிரதசிணம் செய்வது ஸ்ரீ லட்சுமியை வலம் வருவதற்குச் சமமாகும். திருமலை ஸ்ரீ வெங்கடேச பெருமானுக்கு மார்கழி மாதம் வில்வார்ச்சனை செய்கிறார்கள். வைகாசன ஆகமத்தின் போது வில்வம் உபயோகப்படுத்தப்படுகிறது. ஸ்ரீலட்சுமி தவம் செய்வதற்கு வில்வ மரத்தடியில் எழுந்தருளினாள் என்பதைப் பற்றி வாமன புராணம் சொல்கிறது.

வாமன புராணத்தில் திருமகளின் திருக்கரங்களில் இருந்து வில்வ விருட்சம் தோன்றியது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் வில்வ பத்திரம் சிவ சொரூபம், வில்ப மர முட்கள் சக்தி வடிவம், கிளைகள் வேதம், வேர்கள் 14 கோடி ருத்ரர்கள். இப்பேற்பட்ட மந்திர சக்தி சொரூபமான வில்வ மரமே ஸ்ரீ லட்சுமி சொரூபமாக விளங்குகிறது என்பது புராணம்.

நெல்லி மரம் திருமாலின் பேரருளைப் பெற்றது. அது காரணம் பற்றியே நெல்லி மரத்தை ``ஹரி பலம்'' என்று கூறுவர். நெல்லிக்கனி இருக்கும் இல்லத்தில் ஸ்ரீ லட்சுமி நிரந்தரமாக வாசம் புரிகிறாள்.  நெல்லிக்கனியை பிச்சை இட்டதற்காக, கடும் வறுமையில் வாடிய குடும்பத்தவர்களுக்கு கனகமணி கட்டிகளை வர்சித்தவள் மகாலட்சுமி.

குபேர பட்டணத்தில் நெல்லி விருட்சங்களை நெடுகிலும் காணலாம். அதனால் தான் நெல்லி மர வழிபாடு குபேர சம்பத்தைக் கொடுக்கும் என் கிறார்கள்.  துளசி செடியிலும் லட்சுமி எழுந்தருளியுள்ளாள். இதேபோல் மஞ்சளிலும் ஸ்ரீ லட்சுமி வாசம் செய்கிறாள்.

மஞ்சள் செடியை வளர்ப்பது விசேஷம். மங்களகரமான பொருள் மஞ்சள் என்பதால், எல்லாவிதமான சுபமுகூர்த்தங்களுக்கும் மஞ்சள் உபயோகப்படுகிறது. மஞ்சள் கலந்த மந்திராசத்தை - மங்களார்த்தி என்று கூறப்படும் மஞ்சள் நீர், மஞ்சள் பூசிய மாங்கலய சரடு என்று பல மங்களகரமான பொருட்களோடு, மஞ்சள் கலந்து சர்வ மங்களமாகிறது.

பெண்களின் நெற்றியிலும், வகிடிலும் இட்டுக் கொள்ளும் மஞ்சள் குங்குமம் பெண்களின் சவுபாக்கிய சின்னமாக விளங்குகிறது. குங்குமத்துடன் விளங்கும் பெண்களை மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள் என்று கூறுவது நமது மரபு. ஸ்ரீ வைஷ்ணவர்கள் அணிந்து கொள்ளும் திருமண், ஸ்ரீ சூர்ணம் அவற்றிலும் திருமாலும், ஸ்ரீமகளும் வாசம் செய்கின்றனர்.

ஸ்ரீ சூர்ணத்தை ஹரித்ராசூர்ணம் என்று கூறுவர். மஞ்சளினால் செய்யப்பட்டது தான் ஸ்ரீ சூர்ணம். அதுவே ஸ்ரீ லட்சுமி. அதேபோல் திருமண் என்றால் திவ்யமான மண் என்று பொருள். திருமண் திருமாலின் அம்சமாகக் கருதப்படுகிறது. திருமண்ணையும் ஸ்ரீ சூர்ணத்தையும் சேர்த்து நெற்றியில் இட்டுக் கொள்வது தான் நல்லது.

ஒன்றை விட்டு ஒன்றை மட்டும் இட்டுக் கொள்ளுதல் கூடாது. ஸ்ரீ ராமச்சந்திர பிரபுவையும், சீதா பிராட்டியாரையும் சேர்த்துப் போற்றிப் பணிந்த ஆஞ்சநேயரும், அவரது திருவடியைச் சிந்தனையிலே கொண்ட பக்தர்களும் சகல சவுபாக்கியங்களுடனும் வாழ்கின்றனர்.

இல்லங்களை ஸ்ரீ லட்சுமி கடாட்சத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அவள் நம்முடன் வாசம் செய்வாள்.  அதிகாலையில் எழுந்து, நீராடி, சூரியன் உதய மாவதற்கு முன்னால் வீட்டு வாயிலை பசு சாணத்தால் மெழுகி, கோலமிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.

கோலம் போடும் பழக்கம் என்பது தொன்று தொட்டு இருந்து வருவதால் தான் மாக்கோலம், இழை கோலம், புள்ளிக்கோலம், வர்ணப் பொடிகளைத் தூவி போடும் ரங்கோலி போன்ற கோலங்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. மாக்கோலத்தை சுற்றி காவி பூசுவதும் பழக்கத்தில் உள்ளது.

புராண காலத்தில் யாக சாலைகளில் விதவிதமான வண்ணக் கோலங்களை போட்டு, அக்கோலங்களின் மீது ஹோம குண்டங்களை அமைப்பதை பழக்கமாக கொண்டிருந்தனர். ஸ்ரீ லட்சுமி தேவி ஜோதியாக விளங்குகிறாள். இல்லத்திலே விளக்கு எரிவதால் லட்சுமி நிரந்தரமாக வாசம் புரிவாள் என்று ஐதீகம்*

No comments:

Post a Comment