Wednesday, October 30, 2013

அஷ்ட லட்சுமிகளில் யாருடைய அனுக்கிரகம் மிகவும் முக்கியமானது

இதை விளக்க ஒரு கதை உண்டு. பணக்காரனான ஒருவனது வாழ்வில் திடீரெனத் துன்பங்கள் சூழ ஆரம்பித்தன. கிரகங்கள் பலமின்றி, அவன் கெட்ட காலம் நடந்துகொண்டிருந்தது. பணம், வீடு, வாசல், குடும்பம் ஆகியவற்றை அவன் ஒவ்வொன்றாய் இழக்க நேரிட்டது.

நொந்துபோன அவன், தனது பிரமாண்டமான வீட்டின் வெளிவாசல் அருகே சிறிது நேரம் உட்கார்ந்தான். ஒவ்வொரு லட்சுமியாக அவன் வீட்டைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். தான்ய லட்சுமி வெளியேறினாள். வீட்டில் சாப்பிட ஏதுமில்லாமல் ஆயிற்று.

அதன்பின், தனலட்சுமி வெளியேறினாள். வீட்டில் உள்ள பணமும், பொன்னும், பொருளும் போயின. சந்தானலட்சுமி வெளியேறியதும் அவன் மனைவி, மக்கள் அவனைத் தனியே விட்டுச் சென்றனர். தொடர்ந்து கஜலட்சுமி, விஜயலட்சுமி, ஆதிலட்சுமி ஆகியோரும் வெளியேறினர்.

அவர்கள் தன்னை விட்டுப் போவதை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தான் அந்தப் பணக்காரன். கடைசியாக தைரியலட்சுமி அவனை விட்டுக் கிளம்ப முற்பட்டாள். அவள் வெளியேறும்போது அவன் ஓடிச்சென்று அவள் பாதங்களில் விழுந்து, `'தாயே! தயவுசெய்து நீங்கள் மட்டும் என்னை விட்டுப் போய்விடாதீர்கள்!'' என்று கதறினான்.

அவனது வேண்டுகோளுக்கு இணங்க தைரியலட்சுமி வெளியேறாமல் மீண்டும் அவன் வீட்டுக்குள் சென்றாள். அதன்பின், வெளியே சென்ற மற்ற லட்சுமிகளும் ஒவ்வொருவராக வீட்டுக்குள் வந்தனர்.

இழந்த செல்வங்கள் அனைத்தையும் மீண்டும் பெற்றான் அந்தப் பணக்காரன். தர்மத்தைக் கடைப்பிடித்து ஒழுக்கத்துடன் வாழ்பவர்கள் வீட்டில் அஷ்டலட்சுமிகளும் வீற்றிருந்து அருள்புரிவார்கள் என்பது சாஸ்திரம் கூறும் உண்மை!

No comments:

Post a Comment