Thursday, October 31, 2013

சொர்க்கத்தின் சாவி

பணக்கார தம்பதியான ராஜவேலுவுக்கும், மஞ்சம்மாவுக்கும் பட்டாபிராமன் என்ற மகன். அவனுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முயன்ற போது,""அப்பா! இல்லறத்தில் எனக்கு நாட்டமில்லை. செல்வத்தின் மீதும் பற்றில்லை. நான் துறவியாகப் போகிறேன்,'' என்றான். அதிர்ச்சியடைந்த ராஜவேலு,""நீயோ எங்களுக்கு ஒரே பிள்ளை. ஒற்றைப்பிள்ளை துறவு பூணக்கூடாது என்கிறது சாஸ்திரம். காரணம், வயதான காலத்தில் பெற்றோரை அந்தப் பிள்ளை பேணிக் காக்க வேண்டும் என்பது தான். மேலும், உன்னைப் பிரியும் சக்தி எனக்கில்லை. நீ சந்நியாசம் கொள்ளாதே. அப்படி போய்விட்டால் வயல், வரப்புகளை யார் பார்ப்பார்கள்,'' என்று கெஞ்சினார்.
பட்டாபிராமன் அதைக் கேட்கவில்லை. ஒருநாள், வீட்டை விட்டு வெளியேறி விட்டான். பெற்றோர் அழுது புலம்பினர். எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை. ராஜவேலு தம்பதியர் சில காலம் தங்கள் நிலபுலன்களைக் கவனித்தனர். வயது ஏற ஏற அவர்களால் முடியாமல் போகவே, வேலைக்காரர்களே மகசூலை அள்ள ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் எல்லாவற்றையும் குறைந்த விலைக்கு விற்று செலவழித்து ஏழையும் ஆகி விட்டனர்.
முதுமையும், ஏழ்மையும் அவர்களை புரட்டி எடுத்துக் கொண்டிருந்த வேளையில், காட்டிற்கு சென்று தவமிருந்த பட்டாபிராமனை, அவனது ஊரைச் சேர்ந்த இன்னொரு துறவி சந்தித்தார்.
பட்டாபிராமன் ஊர் நிலவரம் பற்றி விசாரித்தான்.
""தம்பி! நீ வந்த பிறகு உன் பெற்றோரால் வேலை ஏதும் செய்ய முடியவில்லை. கண்டவர்களும் உங்கள் நிலத்தில் புகுந்து களவாடினர். உன் தந்தை நிலங்களை கைக்கு கிடைத்த விலைக்கு விற்றார். அது செலவாகி விட்டது. இப்போது அவர்கள் பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கிறார்கள்,'' என்றார்.
பட்டாபிராமனுக்கு மனம் நிலை கொள்ளவில்லை. குருவிடம் தனது பெற்@றார் நிலையைச் சொன்னான்.
""மகனே! நீ இத்தனை நாளும் உனக்கு பெற்றோர் இருப்பது பற்றியும், அவர்களை விட்டு வந்தது பற்றியும் ஏன் சொல்லவில்லை. நீ என்னை விட்டு சென்று விடு,'' என்று கடிந்து கொண்டார்.
பட்டாபிராமன் ஊருக்கு வந்தான். அடையாளம் தெரியாமல் மாறிப்போயிருந்த பெற்றோரை சந்தித்தான். துறவிக்குரிய இயல்புடன் பிச்சை எடுத்து பெற்றோருக்கு உணவளித்தான். ஒருநாள், குருவான துறவி ஊருக்குள் வந்தார். அவரிடம் சிலர், ""துறவியாய் இருப்பவர் பிச்சை எடுத்த உணவை உறவினர்களுக்கு தரக்கூடாது என்ற மரபை மீறி செயல்படுவதாக பட்டாபிராமன் மீது குற்றம் சாட்டினர்.
குருவோ அவர்களிடம்,""அப்படி ஏதும் சட்டமில்லை. எந்த நிலையில் இருந்தாலும் பெற்றோரைப் பாதுகாப்பவனே சிறந்த மகன். இந்தக் கடமையில் தவறுபவன் நரகத்தையே அடைவான்,'' என்றார்.
பெற்றவர்களை முதியோர் இல்லத்துக்கு அனுப்பி இருப்பவர்கள், உடனே போய் அழைத்து வந்து, சொர்க்க வாசலின் சாவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment