Thursday, October 31, 2013

அவரவருக்கு விருப்பமான துறையில் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும்

குழந்தைகளிடம், உங்களது இஷ்டத்தை திணித்து, ""டாக்டருக்கு படி, இன்ஜினியருக்கு படி,'' என்று கட்டாயப்படுத்தக் கூடாது.
ஒரு வீட்டில் இருந்த கோழியை திறமைசாலியென நினைத்த மரங்கொத்தி, வாத்து, குயில் ஆகியவை அதனிடம் பாடம் படிக்க வந்தன. ஒருமுறை, அவை பயிற்சிக்காக வெளியே கிளம்பின.
செல்லும் வழியில் கோழியிடம் குயில், ""களைப்பு தெரியாமல் இருக்க பாட்டு பாடட்டுமா!'' என்றது.
""ஐயையோ வேண்டாம்! பாடினால் தொண்டை கட்டிக்கொள்ளும். பிறகு உன் அம்மாவிடம் என்னால் பதில் சொல்ல முடியாது,'' என்றது.
அவை ஒரு ஆற்றங்கரையை அடைந்தன. வாத்து கோழியிடம்,""எனக்கு நன்றாய் நீந்தத் தெரியும்! நான் இதில் நீந்தட்டுமா!'' என்றது.
''சரியாப் போச்சு! தண்ணி உன்னை அடிச்சுட்டு போயிட்டா, உன் அப்பாவுக்கு யார் பதில் சொல்றது! கப்சிப்! பேசாமல் என்னுடன் வா,'' என கண்டித்தது.
மரங்கொத்தி கோழியிடம், ""நீங்க குயிலிடமும், வாத்திடமும் சொன்னது வாஸ்தவம் தான். ஆனால், நான் என் அலகால் இந்த மரத்திலுள்ள புழுக்களைக் கொத்திப் போடுகிறேன். எல்லாரும் விருந்துண்ணலாமே!'' என்றது.
""அதுவும் வேண்டாம்'' என்ற கோழி, ""மரத்தில் கொத்தும்போது, உன் அழகான அலகு உடைஞ்சு போனா, அதுக்கு யார் பொறுப்பு?'' என்றது.
அந்தந்த பறவைகள் அதனதன் சுபாவத்தில், திறமை வாய்ந்தவையாக இருந்தும், கோழி தன்னைப் போலவே அவற்றையும் நினைத்துக் கொண்டதால், அதனதன் துறையில் மிளிர விடாமல் தடுத்து விட்டது.
இந்தக் கோழியைப் போல் இல்லாமல், அவரவருக்கு விருப்பமான துறையில் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும்.
புரிகிறதா!

No comments:

Post a Comment