Thursday, October 31, 2013

நமக்கு வரும் சோதனைகளை இனிய முகத்தோடு ஏற்று, இதோடு போனதே என்று ஆறுதலடைய வேண்டும்

ஒரு ஆஸ்திகனும், நாஸ்திகனும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் கடவுளைப் பற்றி வாதம் செய்து கொண்டே இருப்பார்கள். ஒருவன் கடவுள் இருக்கிறார் என ஆதாரங்களை எடுத்துக் கூற, இன்னொருவன் எதிர்க்கேள்வி கேட்டு அவனை மடக்குவான்.
ஒருநாள், நாஸ்திக நண்பனை வற்புறுத்தி கோயிலுக்கு அழைத்துச் சென்றான் ஆஸ்திகன். இருவரும் கோயிலுக்குள் சென்று விட்டு, பிரகாரம் வலம் வரும் போது, ஒரு தூணில் இடறி விழுந்தான் ஆஸ்திகன். அவன் காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. சற்று தூரத்தில், ஒரு நூறு ரூபாய் நோட்டு நாஸ்திகன் கண்ணில் பட்டது. அதை அவன் எடுத்துக் கொண்டான்.
நாஸ்திகன் நண்பனைப் பார்த்து சிரித்தான்.
""டேய்! நீ கடவுளை வணங்கி விட்டு பிரகாரத்தை வலம் வந்தாய். உன் பக்திக்குப் பரிசாக, கடவுள் உன் காலை உடைத்து விட்டார். நான், கருவறை பக்கமே தலைகாட்டவில்லை. எனக்கு நூறு ரூபாய் பரிசு கிடைத்தது. இப்போதாவது புரிந்து கொண்டாயா! கடவுளை வணங்கிய உனக்கு தொல்லை தான் மிஞ்சியதென்று!'' என்று கேலி செய்தான்.
ஆஸ்திகனுக்கு மிகுந்த வருத்தம்.அன்றிரவு, கனவில்தோன்றிய கடவுள், ""பக்தா! கவலைப்படாதே! நீ கோயிலுக்கு வராமல், வேறு பணியாக வெளியே போயிருந்தால் விபத்தில் இறந்திருப்பாய். உன் நண்பன், கோயிலுக்கு வராமல், வெளியே இருந்திருந்தால் கோடி ரூபாய் கிடைத்திருக்கும். அவரவர் பூர்வஜென்ம பலாபலன்களையே அனுபவிக்கிறார்கள். புரிகிறதா!'' என்றார்.
நமக்கு வரும் சோதனைகளை இனிய முகத்தோடு ஏற்று, இதோடு போனதே என்று ஆறுதலடைய வேண்டும். சரிதானே!

No comments:

Post a Comment