Wednesday, October 30, 2013

நான் இந்த உடல், நான் மனிதன், நான் சத்ரியன், நான் சூத்திரன் என்று அறியாமையால் எண்ணுவது ஜீவன். நான் இந்த உடலல்ல, நான் சத்ரியனுமல்ல, சூத்திரனுமல்ல, நான் மனிதனே அல்ல என்ற எண்ணத்தில் தீர்மானமாக பற்றறுந்த நிலையில் நான் பிரம்மம், நான் வேறு பிரம்மம் வேறல்ல என்ற நிலையில் இருப்பவன் ஜீவன் முக்தன். இனி, ஆதியில்லாதது அவித்தை என்பார்கள். அதாவது அவித்தையின் காரணமாக ஜீவன் பிறப்பதால் அவனுக்கு ஆதியில்லை என்பார்கள். அவித்தையின் நிமித்தம், பல பிறவிகளையும், பல சரீரங்களையும் எடுத்து இரு வினைகளையும் புரிந்து கொண்டேயிருக்கிறான். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணமும், ஒரு பயனும் உண்டு. காரணம் என்பது நோக்கம். பயன் காலப் போக்கில் எற்படக் கூடியது. அது எந்த நோக்கத்தின் அடிப்படையில் செய்யப்படுகிறதோ, அதற்கேற்ற வண்ணம் நுண்மையான வடிவில் எதிர்ச் செயலாகிய ஊழ்வினை அமைகிறது. இதையே கர்மம் என்கிறோம்.

பிராப்த கர்மத்தின் விளைவாக பிறப்பெடுத்த ஜீவன் பயனை அனுபவத்துக் கொண்டே தன் உடலாலும், மனதாலும்(நான் செய்கிறேன்) செய்யும் இரு வினைகளும் ஆகாமிய கர்மம் எனப்படும். இப்பிறவி முடியும் நிலையில் ஆகாமிய கர்மங்கள் சஞ்சித கர்மங்களாக மாறி விடும். இவை எதிர் காலத்தில் பயன் தரக்கூடியவை. கடந்த பல பிறவிகளிலும் செய்யப்பட்ட கோடிக்கணக்கான வினைகளும் விதை வடிவாய் இருந்து கொண்டு கோடிக்கணக்கான பிறவிகளைத் தோற்றுவிப்பதாய் இருக்கக் கூடிய கர்மங்களுக்கு சஞ்சித கர்மம் என்று பெயர். எடுத்துக் கொண்ட பிறவியில் சஞ்சிதத்திலிருந்து அனுபவிக்க கொண்டு வரும் கர்மங்களே பிராப்தம். இதை அனுபவித்தே ஆக வேண்டும். அந்த அனுபவங்கள் இரு வினைகளின் பலனாகவே இருக்கும்.

ஜீவன் முக்தர்களின் நான் ப்ரம்மம் என்கிற ஞானத்தால் சஞ்சித கர்மம் நசிந்து விடுகின்றது. ஆகாமிய கர்மமும் ஞானாக்னியால் பொசுங்கிப் போய் விடுகின்றது. இனி மீதமுள்ள பிராப்த கர்மத்தை அனுபவிக்கும் வரை அவர் வாழ்ந்து வருவார். இப்போது ஒரு கேள்வியை முன் வைத்து லாஜிக் இல்லையே என்கிறார்கள். அப்படியானால் ஜீவன் முக்தர் தான் செய்யும் தற்போதைய கர்மங்கள்(ஆகாமிய) என்னாகும் ? இதைத்தான் சொன்னேன் ஞானாக்கினியால் ஆகாமியம் பொசுங்கி விடும் என்று. ஏனென்றால் நான் கர்த்தா என்கிற எண்ணம் இல்லாமல் போய்விடுவதால் அவர் தாமரை இலைத் தண்ணீராகவே வாழ்ந்து வருவார். எனவே ஆத்ம ஞானம் பெற்ற ஜீவன் முக்தர்களை ஆகாமிய கர்மம் அடைவதில்லை. அப்படியானால் அவர் புரியும் கர்மா என்னவாகும் ? அவரை உணர்ந்து, அவர் மனதோடு தங்கள் மனதை ஒன்றச் செய்து போற்றி வழிபடுபவர்களுக்கு ஞானியால் செய்யப்பட்ட நல் வினைகள் போய்ச் சேரும். அவரை அறியாமலேயே அவர் செய்யும் பாவப் பலன்கள் அவரைத் தூற்றி, இகழ்ந்து, துன்புறுத்துபவர்களைப் போய்ச் சேரும். எனவேதான் சிவனடியார்களையும், ஞானிகளையும் இகழ்ந்து பேசக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது.

தன்னையறிந்தவன் எல்லா வினைகளையும் கடக்கிறான் என்பது வேத வாக்கு. அந்த அடிப்படையில் ப்ரம்மஞானம் பெற்ற அளவில் ஜீவன் முக்தர்கள் கர்ம பந்தங்களில் இருந்து விடுதலை அடைந்திடுவார்கள். வினைக்கட்டே பிறப்பிறப்புக்குக் காரணமாக அமைகிறது. இந்த சரீரத்தின் ப்ராப்தமல்லாது மற்ற எல்லா கர்மங்களிலிருந்தும் ஜீவன் முக்தர் விடுபட்டு விடுகிறார். அவருக்கு இனி கர்ம்ப் பிணிப்பு இல்லை. தூங்கி எழுந்தவனை எப்படி கனவின் வினைகள் பாதிப்பதில்லையோ, அது போல விழிப்பு நிலையிலிருந்து விழிப்படைந்து துரியத்தை அடைந்து விட்ட ஜீவன் முக்தர்கள் வினைகளைக் கடந்து வினைகளில் இருந்து விடுதலை அடைந்து விடுகிறார்கள். அவித்தையை ஞானம் அழித்து விடுகிறது. ஞானாக்கினியால் வெந்து போன விதை இனி முளைக்காது.

No comments:

Post a Comment