Thursday, October 31, 2013

நடப்பதை கவனி!

சிவகாமி ஒரு சிவபக்தை. அவளது கணவன் சிதம்பரம் விவசாயி. அவன் வயலில் இருந்து மாலையில் களைப்புடன் வீடு திரும்புவான். அந்நேரத்தில், வீட்டுக்கதவை சாத்திவிட்டு, அவள் அருகிலுள்ள சிவன் கோயிலுக்குப் போயிருப்பாள்.
சிதம்பரத்துக்கு எரிச்சல் எரிச்சலாய் வரும். "கணவன் சோர்ந்து வரும் விஷயத்தில் வீட்டில் இருந்தோமா! அவன் குடிக்க, குளிக்க ஏதாவது ஏற்பாடு செய்தோமா என்றில்லாமல், இப்படி கோயில் குளமென சுற்றுகிறாளே! சாமி...என்ன கணவனை கவனிக்காமல் கோயிலுக்கு வா என்றா சொன்னது' என்று நினைத்துக் கொள்வான். ஆனால், மனைவியைக் கண்டிக்கும் தைரியம் இல்லை. கண்டித்தால் சண்டை வரும். கோபித்துக் கொண்டு தாய் வீடு போய்விடுவாள், கிடைக்கிற கஞ்சிக்கும் ஆபத்து வந்து விடும்.
எனவே, அவனாகவே குளித்து விட்டு, பொங்கி வைத்திருக்கும் சோற்றை தானாகவே அள்ளிப்போட்டு சாப்பிடுவான். ஒரு கட்டத்தில், தன் கஷ்டத்துக்கு காரணமான, சிவன் மீது கோபம் வந்து விட்டது.
"சிவன் என ஒருவன் இருப்பதால் தானே மனைவி கோயிலுக்கு போகிறாள்!'
மறுநாள், அவன் வயலுக்குப் போகும் வழியில், சிவன் கோயில் முன்பு தன் வண்டியை நிறுத்தினான். அங்கே சிவபார்வதி சிலையாய் சிரித்தபடி காட்சி தந்தனர்.
""அடேயப்பா சிவபெருமானே! நீ மட்டும் உன் பெண்டாட்டியை ஒரு நிமிஷம் கூட பிரியாம சந்தோஷமா பக்கத்திலேயே வச்சுகிட்டு இருப்பே! என் பெண்டாட்டி, என்னை வுட்டுட்டு <உன்னை பாக்க வந்துடுறா! இதுலே ஏதாச்சும் நியாயம் இருக்காப்பா! அம்மா பார்வதி தாயே! உன்னை கருணையுள்ள தாயுன்னு சொல்றாங்க! நீயாச்சும் எடுத்துச் சொல்லக்கூடாதா <உன் புருஷன்கிட்டே!'' என்று புலம்பினான்.
பிறகு, ""அது சரி...நான் ஒரு பைத்தியக்காரன்! கல்லுகிட்டே பேசி என்னாகப் போகுது... சரி...வரேன்,'' என்று தனக்குள் சொல்லிக் கொண்டு, வண்டியைக் கிளப்பினான்.
அவன் சென்றதும் பார்வதி, சிவனிடம்,""அந்த விவசாயி சொல்வது நியாயம் தானே! நம் பக்தை சிவகாமி இங்கே வந்து விட்டால், சிதம்பரம் வேலை முடிந்து வந்து, யார் <உதவியுமின்றி என்ன செய்வான்! அவனுக்கு வயலிலும் கொளுத்தும் வெயிலில் வேலை! வீட்டுக்குப் போனால் நிம்மதி யில்லை. உம்...அவனுக்கு ஏதாவது ஒரு வழி செய்யுங்களேன்,'' என்றாள்.
சிவன் சிரித்தார். "நடப்பதைக் கவனி' என்று இரண்டே வார்த்தைகளில் பதிலளித்தார்.
மறுநாள், சிவகாமி கோயிலுக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில், கடும் காற்றடித்தது. காற்று மணலை வாரி வீசியதால், அவளால் நடக்க முடியவில்லை. மேகங்கள் சூழ, பெரும் மழையும் வந்து விட்டது. சூறாவளியில், ஒரு மரக்கிளை ஒடிந்து அவள் மேல் விழுந்தது. வசமாகச் சிக்கி ரத்த வெள்ளத்தில் கிடந்தாள்.
அப்போது, வீடு திரும்பிக் கொண்டிருந்த சிதம்பரம், மனைவியைத் தூக்கிக் கொண்டு வைத்தியரிடம் ஓடினான்.
கை எலும்பு முறிந்து விட்டது. ரத்தமும் வெளியேறி விட்டதால், அவளைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி அனுப்பினார். அன்றுமுதல், ஒருவாரம் வயலுக்கே போகாமல், மனைவியின் அருகில் இருந்து அவளுக்கு உணவு சமைத்துக் கொடுப்பது முதல் எல்லாமே பார்த்துக் கொண்டான் சிதம்பரம்.
அப்போது, அவள் மனதில் உதித்த எண்ணம் இதுதான். ""இவர் வேலை முடிந்து வரும் வேளையில், ஒருநாள் கூட நான் வீட்டில் இருந்ததில்லை. இவரோ, தன் வேலையைப் போட்டு விட்டு, எனக்காக இவ்வளவு சேவை செய்கிறார். எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன்! கணவனுக்கு செய்யும் சேவையே சிவசேவை. இனி இவரது <உயிராய் இருப்பேன்,''.
கோயிலில் இருந்த சிவனும் பார்வதியும், அவளை அங்கிருந்தபடியே ஆசிர்வதித்தனர்

No comments:

Post a Comment