Monday, December 16, 2013

வெற்றியின் திறவுகோல்

வெற்றியின் திறவுகோல்.....(படிக்கதவறாதீர்)

ஒரு அரசன் தன் நான்கு முக்கிய அமைச்சர்களை ஒரு நாள் கூப்பிட்டார்.

‘உங்கள் நால்வரில் ஒருவரை முதல் அமைச்சராக்க விரும்புகிறேன். ஆனால் அதற்கு நான் வைக்கப் போகும் தேர்வில் வெற்றிபெற வேண்டும்,’ என்றார் அரசர். ...

அரசன் அறிவித்த பரீட்சை இதுதான்:

கணித முறைப்படி அமைக்கப்பட்ட ஒரு நுட்பமான பூட்டை யார் முதலில் திறக்கிறார்களோ, அவர்தான் வெற்றி பெற்றவர். முதல்வர்!

அட, இவ்வளவுதானா… விட மாட்டேன் என்ற உறுதியோடு மூன்று அமைச்சர்கள் இரவெல்லாம் கண் விழித்து கணித சூத்திரங்கள், நுட்பங்களை ‘கரைத்துக் குடிக்க’ ஆரம்பித்தனர்! ஏராளமான பண்டைய சுவடிகளையெல்லாம் தேடிப்பிடித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் நான்காமவர் மட்டும் நிம்மதியாகத் தூங்கிவிட்டார்.

மறுநாள் காலை.

அரசவையில் அந்த தேர்வுப் பூட்டைக் கொண்டு வர ஆணையிட்டார் மன்னர்.

பூட்டின் அமைப்பை நால்வரும் உற்றுப் பார்த்தனர். இரவெல்லாம் படித்த பல கணித சூத்திரங்களை அறிந்திருந்த மூன்று அமைச்சர்களும் பூட்டை இப்படியும் திருப்பிப் பார்த்தனர். கொண்டு வந்திருந்த ஓலைச்சுவடிகளையும் புரட்டினர். ஆனால் அப்பூட்டைத் திறக்கும் வழி அவர்களுக்குத் தெரியவில்லை.

தங்களால் முடியவில்லை என தோல்வியை ஒப்புக் கொண்டனர். இரவில் நன்கு தூங்கிய அமைச்சர் இப்போது மெதுவாக எழுந்து வந்தார்.

பூட்டை நன்கு பார்த்தார். அந்தப் பூட்டை திறக்கும் வழி எளிதாக அவருக்குத் தெரிந்துவிட்டது.

சாவியே இல்லாமல் எந்த கணித சூத்திரமும் இல்லாமல் அந்தப் பூட்டை அவர் எளிதாக திறக்க, மன்னர் முகத்தில் மகிழ்ச்சி. சரியான புத்திசாலியை தேர்ந்தெடுத்துவிட்டதற்கான நிம்மதி.

அந்த நான்காவது அமைச்சரையே முதல் அமைச்சர் பதவியில் அமர்த்தினார்!!

சரி, கணிதத்தை கரைத்துக் குடித்தவர்கள் தோற்றுப் போன இந்தப் போட்டியில், ஒன்றையும் படிக்காமல், நன்கு தூங்கிவிட்டு வந்த ஒரு மந்தமான அமைச்சர் மட்டும் ஜெயித்தது எப்படி?

அந்தப் பூட்டு பூட்டப்படவே இல்லை என்பதுதான் உண்மை. எவ்வளவு பெரிய பிரச்சினையையும் தெளிவாக, பதட்டமில்லாமல், உறுதியாக அணுகினால் எளிதாக தீர்வு கிடைக்கும்.
அதைவிடுத்து சின்னசின்ன விஷயங்களுக்குகூட பெரிய அளவில் விவாதித்துக்கொண்டோ அல்லது மூளையை கசக்கிக்கொண்டோ இருக்ககூடாது

No comments:

Post a Comment