Friday, January 31, 2014

அவர் தான் அரங்கன்


ஸ்ரீரங்கத்தில் பராசர பட்டர் என்ற ஆச்சார்யார் வசித்து வந்தார். அவர் மகா வித்வான்.
அவர், ரங்கநாதர் கோயில் வீதியிலுள்ள குருகுலத்தில், தன் சிஷ்யகோடிகளுக்கு தினமும் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியே ஒரு வித்வான் தன் சீடர்களோடு போவார். பட்டர் அவரைக் கவனிக்கக் கூட மாட்டார். அதே நேரம், அந்த வீதியில் ஒரு செம்பை எடுத்துக் கொண்டு உஞ்சவ்ருத்தி (பிச்சை எடுத்தல்) செய்யும் ஒரு பிராமணரை விழுந்து விழுந்து கவனிப்பார். அவரிடம், தினமும் நீண்ட நேரம் பேசவும் செய்வார்.
இதைப் பார்த்த பராசர பட்டரின் சீடர்களுக்கு வியப்பும், கோபமும் ஒரு சேர மேலிட்டது. ஒருநாள், பட்டரிடம் அதைக் கேட்டே விட்டார்கள்.
""சுவாமி! மிகப்பெரிய வித்வான் இந்த வழியே தினமும் போகிறார். அவரை நீங்கள் ஏறெடுத்துக் கூட பார்ப்பதில்லை. ஆனால், அஞ்ஞானியான இந்த பிராமணரிடம் நீண்ட நேரமாய் பேசுகிறீர்கள். என்ன காரணம் சொல்லுங்கள்?'' என்றனர்.
பட்டர் அவர்களை அமைதிப்படுத்தினார்.
""காரணமா! பொறுங்கள், காலம் போகப் போக உங்களுக்கே புரியும்,'' என்றார்.
சில மாதங்கள் கழித்து, அந்த வித்வானை தன் குருகுலத்துக்குள் அழைத்தார்.
""வித்தகரே! பரதத்துவம் (நிஜமான கடவுள்) யார்?'' என்று கேள்வி கேட்டார்.
வித்வான் பட்டரிடம்,""எனக்கு ஏற்பட்ட அதே சந்தேகம் தான் உமக்கும் ஏற்பட்டிருக்கிறது. இதற்குரிய விடையைத் தானே நான் நீண்ட நாட்களாகத் தேடிக் கொண்டிருக்கிறேன்,'' என்றார். பட்டர் வித்வானை அனுப்பி விட்டார்.
சில நாட்களில், உஞ்சவ்ருத்தி எடுத்த பிராமணரை பட்டர் அழைத்தார். ""உம்மிடம் ஒன்று கேட்க வேண்டும், உள்ளே வாரும்,'' என்றார்.
பிராமணர் பயந்து போனார். இவ்வளவு பெரிய ஆச்சார்யர், தன்னை அழைக்கிறாரே! கேள்வி வேறு கேட்கப் போகிறேன் என்கிறார். எனக்கு படிப்பறிவே கிடையாதே! எதற்காக அழைக்கிறாரோ?'' என்ற நடுக்கத்துடன் உள்ளே வந்தார்.
""சுவாமி! உண்மையான கடவுள் யார்?'' என்று கேட்டாரோ இல்லையோ! பிராமணருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. கையில் இருந்த பிச்சை செம்பை தூக்கி எறிந்தார்.
""என்ன ஓய் கேட்டீர்? இது கூட தெரியாமல் தான், நீர் உம் சீடர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருக்கிறீரா? நிஜமான கடவுள் நம் ரங்கநாதர் என்று கூட நீர் அறியவில்லையோ? நீரெல்லாம் ஒரு குரு!'' என்று சொல்லிவிட்டு, வேகமாக எழுந்து போய்விட்டார்.
பராசர பட்டர் தன் சீடர்களிடம்,""பார்த்தீர்களா? நம் ரங்கன் தான் நிஜமான தெய்வம் என்று அந்த வித்வானுக்கு தெரியவில்லை. அவனிடம் பேசி என்ன லாபம்? இந்த பிராமணரோ, "ரங்கனே எல்லாமும்' என்பதில் உறுதியாக இருக்கிறார். ரங்கனே சகலமும் என்று எண்ணுபவர்கள் தானே நமக்கு சொந்தக்காரர்கள்,'' என்றார். குருவின் செய்கைக்கான காரணமறிந்த சீடர்கள் வியந்து நின்றார்கள்.

No comments:

Post a Comment