Saturday, February 22, 2014

பூஜைக்கு உகந்த ஆகமம்

நம் வாழ்வில் அன்றாடம் எவ்வளவோ செயல்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறோம். அவற்றை இப்படித் தான் செய்ய வேண்டும் என்ற நியதியைப் பெரியவர்களின் அறிவுரைப் படியும், புத்தகங்களின் வாயிலாகவும் தெரிந்து கொண்டிருக்கிறோம். நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகளைக் கண்டுபிடித்த ஆன்றோர்களும், சித்தர்களும், அவற்றை ஆயுர்வேதமாகவும், மருத்துவநூலாகவும் இயற்றித் தந்துள்ளனர். அதன் பரிணாமமே நவீனகால மருத்துவமாக வளர்ந்துள்ளது. திருக்கோயில் கட்டுவதற்கு சிற்ப சாஸ்திரங்களையும், வீடு கட்ட வாஸ்து சாஸ்திரங்களையும் பெரியோர் எழுதி வைத்த முறையிலேயே கடைபிடித்து வருகிறோம்.
இவற்றைப் போலவே, ஆன்மிகத்தில் வழிபாடு என்ற நிலையில் நித்யபூஜை, திருவிழாக்கள், பிரதிஷ்டை, கும்பாபிஷேகம் மற்றும் வீட்டில் நடத்தும் பூஜை, யாகம், கல்யாணம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் என ஆன்மிக ரீதியான சம்பிரதாய பூஜைமுறைகளை முறைப்படுத்திக் கூறுபவையே ஆகம சாஸ்திரங்கள்.
நமக்கு வழிகாட்டும் ஆகமங்களை, சிவபெருமான் ஸ்ரீகண்ட சிவமாகத் தோன்றி "சிவாகமங்களாக' அருளிச் செய்தார். திருமால் விகனச முனிவராகத் தோன்றி வைணவ ஆகமங்களை அருளினார். நம் மீது கொண்ட கருணையினால், தம்மை வழிபாடு செய்ய வேண்டிய முறைகளை, ஆகமம் என்ற பெயரில் சாக்ஷாத் பகவானே அருளியுள்ளதை நாம் போற்ற வேண்டும்.
இக்கருத்தை,"அண்டர் தமக்கு ஆகமநூல் பொழியும் ஆதி' என சுந்தரர் தேவாரத்திலும், "ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க' என மாணிக்கவாசகரும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. "அண்ணிப்பான்' என்பதற்கு "உடனிருந்து வழிநடத்துபவர் என்று பொருள்.
இந்நிலையில், ஒரே ஒரு கருத்தை நன்றாக உணர வேண்டும். நம் மீதுள்ள கருணையினால், கடவுளே வழிபாட்டுக்குரிய வழிமுறைகளை ஆகமமாக அருளியுள்ளார். அவை குறித்த நூல்கள் மட்டுமே பூஜைகளுக்கு ஏற்றுக் கொள்ளத்தக்கவை. மனிதர்களால் மாற்றி எழுதப்படுபவை ஏற்றுக் கொள்ளக் கூடாததும், நாட்டுக்கும் மக்களுக்கும் துயர் விளைவிப்பதும் ஆகும்

No comments:

Post a Comment