Thursday, May 29, 2014

ராம நாமம்

கபீர்தாசர் வாழ்ந்த காலத்தில், ராமானந்தர் என்ற மகானும் இருந்தார். தாசருக்கு, ராமானந்தர் மீது மிகுந்த பக்தியும், மரியாதையும் இருந்தது. அவரிடமிருந்து மந்திர உபதேசமும், ஸ்பரிச தீட்சையும் (சிஷ்யனின் தலையைத் தொட்டு தன் ஆத்ம சக்தியை வழங்குவது) பெற வேண்டுமென்று விரும்பினார். அதே நேரம், தான் மாற்று மதத்தவர் என்பதால், ராமானந்தர் இதைச் செய்வாரா என்ற சந்தேகமும் இருந்தது.
எனவே அவர், தீட்சை பெற ஒரு யுக்தி செய்தார். ராமானந்தர் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு, கங்கையில் ஸ்நானம் செய்து திரும்புவார். அந்த நேரம் நல்ல இருட்டாக இருக்கும். இதைப் பயன்படுத்தி, அவரது ஸ்பரிசம் தன் மீது படும் வகையில், ஏதாவது செய்ய எண்ணினார். கங்கையில் இருந்து அவர் திரும்பும் வழியில், இருட்டில் படுத்துக் கொண்டார். ராமானந்தர் குளித்து விட்டு திரும்பினார்.
வழியில் படுத்திருந்த கபீர்தாசரின் தலை மீது அவரது கால் பட்டு விட்டது. இருட்டில் யாரையோ மிதித்து விட்டோமோ என பதறிப் போன ராமானந்தர், ""ராம!ராம!'' என சொல்லியபடியே விலகினார்.
ராமானந்தர் உச்சரித்த ராம நாமத்தை, தனக்கு உபதேசித்த மந்திர தீட்சையாகவும், அவரது பாதம் தன்சிரசில் பட்டதை திருவடி தீட்சையாகவும் ஏற்றார் கபீர்தாசர். அந்த மந்திரத்தை காலமெல்லாம் உச்சரித்து முக்தி பெற்றார்.

No comments:

Post a Comment