Monday, June 2, 2014

வழிபாட்டில் சங்கு, மணியின் பங்கு!

வழிபாட்டில் சங்கு, மணியின் பங்கு!

சங்கு ஊதுவது என்பது தற்காலப் பேச்சு வழக்கில் அபசகுனம் போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் கோவில்களிலும், வீடுகளிலும் பூஜை செய்யும் போது சங்கை ஊதுவது பலகாலமாக நம் நாட்டில் இருந்து வருகிறது. பூஜையின் போது மட்டுமல்லாமல் மங்கல நிகழ்ச்சிகளின் போதும், போர் துவங்குவதைக் குறிக்கவோ, போரில் ஒரு படை வெற்றி அடைந்ததை அறிவிக்கவோ சங்கு ஊதப்படுகிறது. மகாகவி பாரதியாரும் “சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே” என்று பாடி, வெற்றியைப் பறைச்சாற்றும் பொருளாகச் சங்கைக் கொண்டிருக்கிறார்

மஹாபாரதப் போரின் போது காலையில் போர் ஆரம்பிக்கும் போதும் மாலை சூரியாஸ்தமனம் ஆனவுடன் போரை முடிக்கும் போதும் சங்கு ஊதியதாக நாம் படிக்கிறோம். பஞ்சபண்டவர்களும், கிருஷ்ண பரமாத்மாவும் வைத்திருந்த சங்குகளுக்குத் தனித்தனி பெயர்கள் இருந்தன. தருமரிடம் இருந்த சங்கின் பெயர் அனந்த விஜயம். பீமனது சங்கின் பெயர் பவுண்டிரம். அர்ச்சுனனிடம் இருந்த சங்கு தேவதத்தம். நகுலனது சங்கின் பெயர் சுகோஷம். சகாதேவனது சங்கு மணிப்புஷ்பகம். ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்தது பாஞ்ச ஜன்யம் என்ற பிரபல சங்கு.

சங்கு தோன்றியதைப் பற்றி புராணங்களில் ஒரு கதை சொல்லப்படுகிறது. சங்காசுரன் என்னும் அசுரன் தேவர்களைப் போரில் மூழ்கடித்து அவர்களிடம் இருந்து வேதங்களைத் திருடிக் கொண்டு கடலுக்கு அடியில் பதுங்கிக் கொண்டான். தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் போய் முறையிட அவர் மத்ஸ்ய (மீன்) அவதாரம் எடுத்து சங்காசுரனைக் கொன்றார். அப்போது சங்காசுரனின் தலை மற்றும் காதில் இருந்து சங்கைப் போன்ற தோற்றம் உள்ள எலும்பினை எடுத்து ஊத அதில் இருந்து ’ஓம்’ என்ற ஓசை எழுந்தது என்றும் அந்த ஓசையில் இருந்து வேதங்கள் வெளிப்பட்டன என்றும் சொல்லப்படுகிறது.

சங்காசுரனிடமிருந்து தோன்றியதால் தான் அதற்கு சங்கு என்ற பெயர் ஏற்பட்டது. மகாவிஷ்ணு தன் நான்கு கைகளில் ஒன்றில் பாஞ்சஜன்யம் என்ற அந்த சங்கை எப்போதும் ஏந்திக் கொண்டிருப்பார். தர்மம் என்கிற உயர் அம்சத்தை சங்கு குறிப்பதாகவும் எனவே தர்மத்தை நிலை நாட்டும் இறைவன் சங்கைத் தன் கையில் எப்போதும் ஏந்திக் கொண்டிருக்கிறார் என்றும் பெரியோர் கூறுகிறார்கள். சங்கையும், சக்கரத்தையும் ஏந்திக் கொண்டிருப்பதால் அவருக்கு ‘சங்கு சக்ரதாரி’ என்ற பெயர் உண்டு.

இவ்வாறு சங்கு உருவானதால் சங்கொலி அதர்மத்தின் அழிவையும், தர்மத்தின் வெற்றியையும் காட்டுகிறது. சங்கு பிறந்த கதைக்கேற்ப சங்கை நம் காதருகில் வைத்துக் கேட்டால் கடல் அலைகளின் ஓசையை நம்மால் கேட்க முடியும்.

வேதங்களின் பொருளான ஓம்கார மந்திரத்தைத் தருவதாலும், தர்மத்தை நிலைநாட்டும் பொருளைத் தருவதாலும் பூஜையறையில் இறைவன் முன்பு வைத்து வணங்கப்படும் அளவு சங்கிற்கு சிறப்பு உண்டு. மங்கலகரமான பூஜை நேரங்களில் அமங்கலமான வார்த்தைகளோ, பேச்சுக்களோ பக்தர்களின் காதில் விழுந்து பக்தி மனோபாவத்தைக் குறைத்து விடாதிருக்கவும் சங்கு ஊதுவது உதவுகிறது.

மேலும் சங்கு ஊதுவது ஆன்மிக ரீதியாக அல்லாமல், ஆரோக்கிய ரீதியாகவும் உதவுகிறது. சங்கு ஊதும் போது நாதமானது மூலாதாரத்தில் இருந்து எழுகிறது. அதனால் சங்கு ஊதுவதன் மூலம் மூலாதார சக்ரா நன்றாக செயலாக்கம் பெறுகிறது. 

மேலும் சங்கு ஊதுவதினால் மூச்சு ஆழப்பட்டு, நுரையீரல் செயல்படுவதும் சீராகிறது. சங்கிற்கு உடலைப் பாதிக்கும் நுண்கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளது என்று நம் முன்னோர் நம்பினார்கள். அதனால் தான் தீர்த்தம் சங்கில் தரப்படுவது விசேஷமாகக் கருதப்பட்டது. குழந்தைகளுக்கும் அக்காலத்தில் மருந்தையும், பாலையும் சங்கில் ஊற்றித் தரும் வழக்கம் நம் வீடுகளில் இருந்தது.

கோயில்களிலும், வீடுகளிலும் பூஜை செய்யும் போது மணி அடிப்பதும் கூட சங்கு ஊதுவதைப் போன்றே மங்கல ஒலியாகக் கருதப்படுகிறது. மணி அடிக்கும் போதும் ஓம்கார ஒலி ஒலிக்கிறது. பூஜை நேரங்களில் தெய்வீக சூழ்நிலைக்குப் பொருந்தாத ஓசைகளை மூழ்கடித்து இறைவனிடம் மனம் லயிக்க மணி அடிப்பதும் உதவுகிறது.

கோயில்களில் பெரிய பெரிய மணிகள் தொங்க விடப்பட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். அவற்றை அடிப்பதில் பெரியோர் முதல் சிறியோர் வரை ஆர்வம் காட்டுவதுண்டு. அந்த மணிகளை அடிப்பதன் காரணம் குறித்து சிலர் தான்தோன்றித்தனமாக ஏதேதோ சொல்வது உண்டு. இறைவனை உறக்கத்தில் இருந்து எழுப்புவதற்காக மணி அடிப்பதாகவும், தங்கள் வருகையை இறைவனுக்குத் தெரியப்படுத்துவதற்காக மணி அடிப்பதாகவும் சிலர் அறியாமையால் சொல்வதுண்டு. எழுப்பி தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இறைவனுக்கு இல்லை. மணி அடிப்பது அறியாமை உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிற நம்மை அதில் இருந்து தட்டி எழுப்பத் தான். அந்த ஓங்கார ஒலியைக் கேட்டவுடன் இறையுணர்வு எழும்பி நம் மனதினை ஒருநிலைப்படுத்த நாம் செய்யும் ஆயத்தம் தான் மணியை அடிப்பதன் உண்மைப் பொருள்.

பண்டைய காலங்களில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பிரதான கோயில் இருக்கும். இறைவனுக்குச் செய்யப்படும் பூஜைகளின் போது கோயில்களில் இருக்கும் பெரிய மணிகள் அடிக்கப்படும், சங்கு ஊதப்படும். அந்த ஒலி அந்தக் கிராமம் முழுவதும் கேட்கும். பூஜையில் கலந்து கொள்ள ஆலயத்திற்கு நேரில் செல்லும் சூழ்நிலை எல்லோருக்கும் இருக்கும் என்று சொல்ல முடியாது. வேலை உள்ளவர்கள், உடல் நலம் குன்றியவர்கள் போன்றவர்கள் பூஜையில் பங்கேற்க முடியாது.

கோயில் மணியின் பலத்த ஒலியும், சங்கொலியும் கேட்கும் போது வேலை செய்பவர்கள் தங்கள் வேலையை அப்படியே நிறுத்தி விட்டு தாங்கள் இருக்கும் இடத்திலேயே இறைவனை கண நேரம் தொழுவார்கள். அதே போல் உடல் நலம் குன்றியவர்களும் அந்த நேரத்தில் வீட்டில் இருந்தபடியே கண நேரம் இறைவனை வணங்குவார்கள். இப்படி மானசீகமாக இருக்கும் இடத்திலேயே இறைவனைத் தொழும் மங்கலமான சூழ்நிலையை மணி ஒலியும், சங்கொலியும் ஏற்படுத்தித் தந்திருக்கிறது. ஊருக்கே கேட்கும் வண்ணம் பெரிய பெரிய ஆலய மணிகளை அடிப்பதன் உள்ளார்ந்த இந்த அர்த்தம் மிக உன்னதமானது.

கிராமமானாலும் நகரமானாலும் நீங்கள் இப்படிக் கோயில் மணியோசையும், சங்கொலியும் கேட்க நேர்ந்தால் மேலே சொன்ன காரணத்தை நினைவு கொள்ளுங்கள். இறைவனை நினைக்க ஒரு நல்ல சந்தர்ப்பமாக அதை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் இடமே கோயில். அந்த மணியோசையும், சங்கொலியும் உங்களுக்காகவே ஒலிக்கின்றன. எல்லாவற்றையும் ஒரு கணம் ஒதுக்கி வைத்து விட்டு எல்லாம் வல்ல இறைவனை ஒரு கணம் மானசீகமாக வணங்குங்கள். எத்தனையோ விதங்களில் நேரத்தை நாம் வீணாக்குகிறோம். அப்படி இருக்கையில் அந்த ஒரு கணத்தில் மனதை இறைவனிடம் திருப்புவதால் நம் நேரம் பெரிதாக வீணாகி விடப் போவதில்லை. மாறாக கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கிப் பெறும் பெரும்பயனை நாம் அந்தக் கணத்தில் பெற்று விடுகிறோம் என்பதை நினைவில் வையுங்கள்

No comments:

Post a Comment