Monday, June 16, 2014

போதிமரம்!

தாணு என்ற இளைஞன் படித்து விட்டு வேலையில்லாமல் இருந்தான். நம்பிக்கை இல்லாத அவன் மனதில் விரக்தி குடியிருந்தது. அவனுக்கு வெற்றி என்றொரு நல்ல நண்பன் இருந்தான். அவனும் வேலை தேடிக் கொண்டிருந்தான்.
ஒருநாள் பகலில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. சாலையோரப் பூங்காவில் நிழலுக்காக நண்பர்கள் இருவரும் ஒதுங்கினர். ஒரு பட்ட மரம் காய்ந்து போன நிலையில் நின்று கொண்டிருந்தது. ஒரு இலை கூட இல்லை. அதைக் கண்டதும் தாணுவுக்கு வருத்தம்! "" மரமே! நீயும் என்னைப் போலவே இருக்கிறாயே! என்னாலும் உன்னாலும் யாருக்கும் பயனில்லை'' என்று சொல்லி தடவிக் கொடுத்தான்.
வெற்றி அவனிடம், ""ஏண்டா! இப்படி புலம்ப ஆரம்பிச்சுட்ட! கோடை மழை வந்து விட்டால், இந்த மரம் துளிர் விட ஆரம்பிச்சுடும்!'' என்றான்.
சற்று நேரம் கழித்து அவர்கள் வீடு சென்று விட்டனர்.
நண்பன் சொன்ன அந்த வார்த்தைகள் மட்டும், தாணுவின் காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.
நண்பன் சொன்னது போலவே, ஒரிரு நாளில் கோடை மழையும் பெய்தது.
பூமி குளிர்ந்ததால் ஆங்காங்கே புல் முளைத்தது. பூங்காவில் இருக்கும் பட்டமரத்தைப் பார்க்கும் ஆவல் தாணுவுக்கு வந்தது. அவன் அங்கு சென்று பார்த்த போது, நண்பன் சொன்னது போலவே, பட்டமரத்தில் அங்கங்கே இளந்தளிர்கள் முளைத்திருந்தது.
தாணுவின் மனதிற்குள்ளும் நம்பிக்கை துளிர் விட்டது.
""நீ சாதாரண மரமல்ல! எனக்கு ஞானம் அளித்த போதிமரம்'' என்று அதைக் கட்டிக் கொண்டான். நம்பிக்கையுடன் வேலை தேட ஆரம்பித்தான்.

No comments:

Post a Comment