Sunday, August 24, 2014

ஹோம வழிபாட்டில் விதிமுறைகள்.

ஹோம வழிபாட்டில் விதிமுறைகள்.
ஹோம குண்டத்திற்கான மணல் பெரும்பாலும் புனித நதிப் படுகையிலிருந்தே பெறப்படுவது சிறப்புடையது ஆகும். அல்லது இதற்குரிய நல்வாய்ப்பு கிட்டாவிடில், கிடைக்கின்ற மணலை நன்கு சுத்தப்படுத்தி கங்கை, காவிரி போன்ற புனித நீரைத் தெளித்து, "ஸ்ரீபூமாதேவ்யை நம: ஓம் பூமா தேவியே போற்றி" என்று 108 முறையேனும் துதித்து மிருத்திகா பூஜை செய்த பிறகே அதனை ஹோம குண்டத்தின் அடித்தளமாகப் பயன்படுத்துதல் வேண்டும்.
ஹோம குண்டத்தில் பிள்ளையார் சுழியோ அல்லது யந்திரங்களோ, சக்கரங்களோ வரைகையில் சூரிய விரலான வலது மோதிர விரலைக் கொண்டே அவற்றை வரைதல் வேண்டும். மணலில் நிருதி திக்கில் (தென்மேற்கு) ஒரு சூலமோ அல்லது சங்கு, சக்கரமோ வரைந்து இருப்பது சிறப்புடையது ஆகும். ஹோம குண்டத்திற்குப் பயன்படும் செங்கற்கள் உடைபடாது பின்னமில்லாது சுத்தமாக, புதிதாக ஒரு முறை ஹோமத்திற்கு பயன்படுத்தப்பட்ட செங்கற்களை மீண்டும் பயன்படுத்துதலைத் தவிர்த்தல் வேண்டும். ஒவ்வொரு ஹோம செங்கற்கலுக்கும் சந்தனம், விபூதி, குங்குமம், மஞ்சள் பூசிடுக!
ஹோம வழிபாடு என்பது அக்னி வழிபாடு ஆகையினால் ஹோமத்தை நடத்துகின்றவர் (ஹோமகர்த்தா) அக்னி திக்கான தென்கிழக்குத் திசையில் அமருவது தான் உத்தமமானது. ஹோமத்தில் பங்கு கொள்கின்ற அனைவரும் தரையில் அமராது, பலகையின் மீதோ, துணியிலோ, தர்ப்பைப் பாயின் மீதோ தான் அமர வேண்டும். இல்லையெனில் இதில் ஹோமத்தின் பலன்களாகக் கிடைக்கின்ற ஆன்மீகக் கதிர்கள் உடலில் சேராது பூமியில் இறங்கி விடும்.
ஹோமத்திற்காக சுத்தமான பசு நெய்தான் ஆஹுதி அளிக்கப்பட வேண்டும். உலோகப் பாத்திரங்களைத் தவிர்த்து மரக்கிண்ணம், மரப்பாத்திரம் அல்லது வசதியிருப்பின் வெள்ளி, தங்க கிண்னங்களையே வைத்திடுக! தென்னை, பனை ஓலையினால் ஆன தொன்னை ஓலைப் பாத்திரமும் சிறப்பானதே!
ஹோமத்தில் ஆஹுதியாக இடும் பொழுது மரக்கரண்டியை அல்லது மாவிலையை மட்டும் பயன்படுத்துதல் வேண்டும். எவர்சில்வர் ஸ்பூன் அல்லது வேறு உலோகத்தினால் ஆன ஸ்பூனிலோ பசு நெய்யை எடுத்து நேரடியாக அக்னியில் ஊற்றுவது சாபங்களையே பெற்றுத் தரும்.
ஹோம மரக்கரண்டியும் குறித்த சில மரங்களினால் செய்யப்படுவதே நன்மை பயக்கும். மா, பலா, தேக்கு, சந்தனம், வேங்கை போன்ற மரங்கள் ஏற்புடையவை. புளி, சவுக்கு போன்ற விறகு மர ஹோமக் கரண்டிகளைக் கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது.
ஹோமத்தில் இடப்படும் ஆஹுதிகள், அரசு, ஆல், வேம்பு போன்ற மூலிகை மரப் பொருட்களாக இருக்க வேண்டுமே தவிர விறகுகளையோ சிராத்தூள்களையோ ஒரு போதும் பயன்படுத்துதல் கூடாது. இதுவே தற்போதைய ஆலய ஹோமங்களிலும் பெரும்பாலான இல்லற ஹோமங்களிலும் கடைப்பிடிக்கப்படுகின்ற தவறான வழக்கம் ஆகும். தயவு செய்து இதற்கு முற்றுப் புள்ளி வைக்கவும். ஹோம குண்டம் அடுப்பு அல்ல, எல்லாவற்றையும் உள்ளே தள்ளுவதற்கு!
ஆண்கள், உடல் சுத்தியுடன் பெண்கள் இருவருமே ஆஹுதிகள் அளித்திடலாம். ஆஹுதி அளிக்கும் பொழுது தர்ப்பையிலான மோதிரத்தை (பவித்திரம்) அணிதல் விசேஷமானதாகும். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வீக அக்னிக் கதிர்களை நேரடியாக நம் சரீரத்தில் பெற முடியாதாதலின் தர்ப்பையே இதனை நமக்குப் பெற்றுத் தருகிறது.
ஆஹுதி அளிக்கப்படும் பொழுது "சுவாஹா" என்று சொல்லப்படும் பொழுது அளிக்கப்படும் ஆஹுதிகளை மட்டும் தான் "சுவாஹா" எனப்படும் தேவ மூர்த்தி பெற்று அந்தந்த தேவதா மூர்த்திகளுக்கு அளிக்கின்றாள்.
ஹோமம் நடக்கும் பொழுது தேவையில்லாமல் அக்னியைக் கிண்டுவதோ, அனாவசியமாக விசிறி, காற்றை எழுப்புவதோ கூடாது. ஏனென்றால் அக்னியை ஆசனமாகக் கொண்டு பல கோடி தேவதைகள் தேவதா மூர்த்திகள் ஹோம குண்டத்தினுள் உறைகின்றனர்.
பசு நெய் தவிர வேறு எண்ணெயை, ஒரு போதும் அக்னி எழுப்புதவதற்காகப் பயன்படுத்துதல் கூடாது.
ஹோமப்புகை, மிகுந்த தெய்வீக சக்தி உடையதாகையால் இயன்ற வரையில் ஹோமப் புகையை சுவாசிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். ஒரு முறை உங்கள் இல்லத்தில் எழுப்பப் படுகின்ற ஹோமப் புகையினால் ஒரு மாதத்தில் உங்கள் வீட்டில் சேருகின்ற தீவினைச் சுழல்களை எளிதில் கழித்து விடலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆண்டாண்டு காலமாக மனதில் நெஞ்சிலும் உள்ள தீயவினைப் படிவுகளை ஹோமப் புகை ஒன்று தான் நீர் வடிவில் அவற்றை வெளியேற்றுகின்றது.
ஒரு ஹோம வழிபாடானது பல்லாயிரக்கணக்கான அர்ச்சனை, ஆராதனைகளின் பலன்களைத் தரவல்லது ஆகும். எனவே இது மிகச் சிறந்த சமுதாயப் பணியாகப் பரிமளிக்கின்றது. வியாபார/ வருமான நோக்கு இல்லாமல் பொது மக்களின் நன்மைக்காக இலவசமாக ஹோமத்தை நடத்தித் தருவதே தெய்வீகமானது!
தனிப்பட்ட முறையில் ஹோமம் செய்வதை விடப் பலரும் சேர்ந்து சத்சங்கமாக, கூட்டு வழிபாடாக ஹோம வழிபாட்டை மேற்கொள்தலே உத்தமமானது.
ஹோமம் என்றால் அக்னி ரூபத்தில் தெய்வ மூர்த்தியை வழிபடுதல் என்று பொருள் ஆகும். ஹோமத்தில் இடப்படுகின்ற ஆஹுதிகளின் சக்தியை "சுவாஹா" தேவதைப் பெற்றுத் தந்து அந்தந்த லோகத்தில் உள்ள தெய்வ மூர்த்திகளிடம் சமர்ப்பிக்கின்றன. ஸ்ரீஅக்னி மூர்த்தியின் பத்னி தேவியே ஸ்ரீசுவாஹா தேவி ஆவாள்.
ஹோம வழிபாட்டில் ஸ்ரீஅக்னி மூர்த்தியானவர் தானே ஒரு அக்னி ஆலயத்தை ஏற்படுத்தி அதில் நம்மை வழிபடுவதற்கு வழிவகை செய்கின்றார். எனவே ஹோம வழிபாடு என்பது அக்னியால் ஆன ஆலயத்தில் நாம் வழிபாட்டைச் செய்வது ஆகும்.
நம்முடைய வாழ்க்கையில் ஒரு பெரும் பங்கு வகிப்பது அக்னியாகும். சமையல், நிலவொளி, வீட்டிற்கு, அலுவலகத்திற்கு வெளிச்சம், தொழிற்சாலை போன்ற பல இடங்களிலும் அக்னி நமக்குப் பெருமளவில் உதவி செய்கின்றது. ஆனால் இதற்காக என்றைக்கேனும் அக்னி பகவானுக்கு நன்றி செலுத்திப் பிரார்த்தனை செய்துள்ளோமா?
வீட்டில் தீபம் ஏற்றுவது கூட ஒரு வகை அக்னி வழிபாடே ஆகும். எனவே நம்முடைய வாழ்க்கைக்குப் பெரிதும் உதவி வருகின்ற ஸ்ரீஅக்னி பகவானை வழிபடுவதற்காக நாம் மாதந்தோறும் ஒரு சிறிய அளவிலான எளிய ஹோமத்தையேனும் செய்து வருதல் வேண்டும்.
தஞ்சைப் பகுதிகளில் அக்னி பூஜைக்கு செப்பாலான மிகவும் சிறிய அளவிலான ஹோம குண்டங்கள் கிடைக்கின்றன. இதனை வீட்டில் வாங்கி வைத்துக் கொள்வார்களேயானால் மிகச் சிறிய அளவிளான தினந்தோறும் உங்கள் குழந்தைகள் மூலம் ஹோமத்தை செய்து அவர்களுக்கு நல்ல இறைப் பக்தியை அடித்தளமாக ஏற்படுத்தித் தரலாம் அல்லவா! இதனைத்தான் அக்காலத்தில் சமிதா தானம், அக்னி சந்தானம், ஔபாசனம் போன்ற அக்னி வழிபாடாக நம் பெரியோர்கள் போற்றி வந்தனர்.
ஹோம வழிபாட்டை நாம் சரிவரக் கடைபிடிப்பது இல்லை. சோம்பேறித்தனம், பக்தியின்மை, நேரமின்மை என்ற சாக்கு காரணமாக ஹோம வழிபாட்டை அறவே ஒதுக்கி விட்டோம். மேலும் ஹோமத்தை நடத்தித் தருகின்றவர்களும் மிகவும் அதிகமான தொகையைக் கேட்பதால் பெரும்பாலானோர் ஹோம வழிபாட்டையே மறந்து / ஒதுக்கி விட்டார்கள்.
ஹோம வழிபாட்டிற்கு எத்தகைய கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது. ஹோமம் நடத்த கட்டணம் பெறுதல் என்றால் வேதத்தையே விற்பது போல் ஆகும். அக்னி தெய்வ மூர்த்தியை வழிபடுவதற்குப் பேரம் பேசலாமா?
ஆனால் ஹோம வழிபாட்டை இலவசமாக நடத்தித் தருகின்ற உத்தமர்களுக்குத் தாமே மனம் உவந்து சன்மானம் அளிப்பதில் தவறு கிடையாது. இந்தத் தொகையைத் தந்தால் தான் ஹோமத்தை நடத்தித் தர முடியும் என்று விதிப்பது அக்னியையே விலை பேசுவது போலாகி பெரும் சாபங்களைப் பெற்றுத் தரும்.
பிறருக்கு இலவசமாக ஹோமத்தை நடத்தித் தருவது என்பது மிகப் பெரிய தர்மம் ஆகும். இத்தகைய பாக்கியத்தைப் பெற்றோர் ஒரு சிலரே. இவ்வாறு இதனை இலவசமாக நடத்தித் தருவோருக்கும் பலவிதமான அற்புதமான பலன்கள் காத்துக் கிடக்கின்றன. எனவே பெறுதற்கரிய இந்த மானுடப் பிறவியில் ஹோம வழிபாட்டை நன்கு அறிந்தவர்கள் இயன்ற வரையில் ஏழை எளியோருக்கும் இந்த ஹோம வழிபாட்டின் பலன்கள் சென்றடையும் வண்ணம் அவர்களுக்கென இலவசமாகவே ஹோமத்தை நடத்த வேண்டுகின்றோம். இலவசமாக ஹோம பூஜையை நடத்தித் தருவது கலியுகத்தின் மிகப் பெரிய தர்மமாக அமைந்திருக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள்.
நம்முடைய கலியுக உணவு முறையில் மூலிகைப் பொருட்கள் இடம் பெறுவதே கிடையாது. பலவிதமான நாட்டு மருந்து பொருட்களும், மூலிகைப் பொருட்களும் உடலில் சேர்ந்தால்தான் நமது உடல் திடகாத்திரமாகவும், ஆயுள் விருத்தியுடனும் விளங்கும். ஹோம குண்டத்தில் பலவிதமான மூலிகைப் பொருட்களும், தெய்வீக சக்தி நிறைந்த பலவிதமான திரவியங்களும் சேர்க்கப்படுகின்ற பொழுது அவற்றின் சாரமானது வாயு வடிவத்தில் நம் உடலைச் சேருகின்றது. தலை முதல் பாதம் வரை அனைத்து தேகங்களுக்கும் 72,000 நாடி நரம்புகளுக்கும் இத்தகைய தெய்வீக மூலிகா பொருட்களின் வாயு பந்தன சக்தியானது ஹோமப் புகை மூலம் சேருவதால் இது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தருவதோடு, மனதிற்குத் தெளிவையும், உற்சாகத்தையும், புத்துணர்ச்சியையும் தருகின்றது.

No comments:

Post a Comment