Monday, September 22, 2014

மஹாபாரதம் - விரிவாக பகுதி - 4

மஹாபாரதம் - விரிவாக பகுதி - 4
         


111-கடினமான துன்பங்களைக் கடக்கும் வழி
தருமர் 'கடினமான துன்பங்களைக் கடப்பது எப்படி?' என பீஷ்மரிடம் வினவ..பீஷ்மர் உரைக்கிறார்.

'யார் மன அடக்கமாய் அற நூலில் சொன்னபடி நடக்கிறாரோ..அவர்..கடினமான துன்பங்களைக் கடக்கிறார்.யார் தருமத்தை ஆடம்பரத்திற்காகச் செய்யாமல் தம் தேவையைக் குறைத்துக் கொண்டு வாழ்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கிறார்.யார் ஐம்புலன்களை அடக்கும் வல்லமை பெற்றவரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் தன்னை பிறர் நிந்தித்தாலும் மறுமொழி கூறாமல் இருக்கின்றாரோ,தமக்குத் துன்பம் செய்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாமல் இருக்கின்றாரோ,யார் பிறருக்குக் கொடுத்துக் கொண்டும் தான் யாரிடமும் யாசிக்காமலும் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் விருந்தினரை நன்கு உபசரிக்கின்றாரோ, யார் வேதம் ஓதுகின்றாரோ,யார் எதற்கும் அருவருப்பு அடையாமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் தருமத்தை உணர்ந்து தாய்,தந்தையைப் போற்றுகின்றாரோ யார் பகலில் உறங்காமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் மனத்தாலும் சொல்லாலும் செயலாலும் பாவத்தை செய்யாமல் இருக்கின்றாரோ, உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் பிறர் பொருளைக் கவராமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் தன் மனைவியிடம் மட்டும் உரிய காலத்தில் சேர்க்கைக் கொண்டு, பிறர் மனைவியைக் கனவிலும் கருதாமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் மரணத்தைக் கண்டு அஞ்சாமல் பயத்தை விலக்கி, போர்க்களத்தில் வெற்றி பெற விரும்புகிறாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் உயிரே போனாலும் பொய் சொல்லாது உண்மையையே பேசுகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் நிந்திக்கத் தகாத செயல்களை உடையவராக இருக்கின்றாரோ, யார் தம் பொருளைச் சாதுக்களுக்கு வழங்குகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் இளமையில் பிரம்மச்சரியத்தை மேற்கொண்டு சுறுசுறுப்புடன் கல்வி கற்றுப் பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றவராக இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் பிறரை அச்சுறுத்துவதில்லையோ, பிறர் அச்சுறுத்தலுக்கு பயப்படுவது இல்லையோ, யார் தம்மைப் போல பிறரையும் கருதுகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் தான் இன்புறுவது போல் பிறரும் இன்புற வேண்டும் என எண்ணுகிறாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கிறார்.யார் எல்லா தேவர்களையும் வழிபட்டு, எல்லாத் தருமங்களையும் கேட்டு அடக்கம் உடையவராக இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கிறார்.யார் தற்பெருமையை விரும்பாமல் பிறரைப் பெருமைப்படுத்திப் புகழ்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் தம் முன்னோர்களுக்காகத் தூய மனத்துடன் ஒவ்வொரு திதியிலும் சிரார்த்தம் செய்கிறாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் தம் கோபத்தை அடக்கி, பிறரையும் கோபம் அடையாமல் இருக்கச் செய்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் மது, மாமிசம் மகளிர் போகம் இவற்றை விலக்குகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் உயிர் வாழ்வதற்காக மட்டுமே உணவு உட்கொண்டும்,சந்ததிக்காகவே மனைவியுடன் கூடியும்,உண்மை பேசுவதற்காக மட்டுமே பேச்சையும் கொண்டு வாழ்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் எல்லா உயிர்களுக்கும் நாதனாயிருப்பவரிடம் பக்தி செலுத்துகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் எல்லாக் கர்மங்களையும் கண்ணனிடம் அர்ப்பணம் செய்துவிட்டு அச்சமின்றி இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் உலகங்களைப் படைத்தவரும் சாதுக்களுக்கு நாதரும் யாகங்களால் வழிபடத்தக்கவருமான பிரம்மனை பக்தியுடன் வழிபடுகிறாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் இந்திரனும்,விஷ்ணுவும்,ருத்திரரும் போற்றும் மாகாதேவரான சிவபெருமானை எப்போதும் துதி செய்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் கடினமான துன்பத்தை கடக்கத்தக்க இந்த உபதேசத்தை படிக்கின்றாரோ, யார் கேட்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

தருமா! மனிதன் இவ்வுலகிலும், மேலுலகிலும் கொடுந் துன்பங்களைக் கடத்தற்காகச் செய்யத்தக்க செயல்களில் சிலவற்றை உனக்கு உபதேசித்தேன்.நீயும் இவ்வாறு நடந்து துன்பங்களைக் களைவாயாக!" என்று கூறி முடித்தார் பிதாமகன்.

112-மூடன் தரக் குறைவான வார்த்தையைக் கூறினால்....

தருமர் பீஷ்மரைப் பார்த்து..'பிதாமகரே! சாந்தமும் அறிவும் மிக்க ஒருவன், அவையில் மூடனும், அறிவற்றவனுமான ஒருவனால் நிந்திக்கப் பட்டால் என்ன செய்ய வேண்டும்? என வினவ பீஷ்மர் உரைக்கிறார்.

'தருமரே! அறிவு மிக்கவன் எப்போதும் அற்ப புத்தியுள்ளவனின் தரம் கெட்ட சொற்களை பொறுத்துக் கொள்ள வேண்டும்.ஆத்திரத்துடன் பழிக்கப்படும் மனிதன் பழிக்கும் ஒருவனுடைய புண்ணியத்தைத் தான் அடைந்து, தனது பாவத்தை அவனுக்குக் கொடுத்துத் தன்னைத் தூய்மை செய்து கொள்கிறான்.இகழ்ச்சி செய்பவனை பொருட்படுத்தக் கூடாது.அவன் உலகத்தில் பகையைப் பெற்றுப் பயனற்ற கதியை அடைவான்,போகும் இடமெல்லாம்"இவன் என்னால் இவ்வாறு சொல்லப்பட்டான்.அதனால் வெட்கம் அடைந்து செயலற்றுக் கிடக்கிறான்" எனத் தற்பெருமை பேசும் அற்பனை அடக்கம் உள்ளவன் அலட்சியம் செய்ய வேண்டும். அற்பன் பேசும் பேச்சுக்களைச் சகித்துக் கொள்ள வேண்டும்.

பிறரைப் பழித்துப் பேசி பழக்கப்பட்ட ஒருவன் தன் தாயைப் பற்றிக் கூட அடாத பழி கூறுவான்.மறைக்க வேண்டிய அந்தரங்க உறுப்பை மறைக்காமல் வெளிக்காட்டி ஆடும் மயில் போல அவன் மகிழ்ச்சி அடைவான்.பழி தூற்றும் பேதையிடம் நல்லவர்கள் பேச்சுக் கொடுக்கக் கூடாது.எவன் நேரில் புகழ்ந்தும் மறைவில் குறை கூறியும் பேசுகிரானோஅவன் உலகில் நாய் போன்றவன் ஆவான்.ஞானமும், கல்வியும்,தருமமும் இழந்தவன் ஆவான்.அவனிடம் இருக்கும் சில நல்ல குணங்களும் பிறர் மீது பழி கூறும் இயல்பால் நாசமடைகின்றன.ஆதலால், நல்லறிவுள்ளவன் பாப புத்தியுள்ளவனும்,விலக்கத்தக்கவனுமான அவனை நாயின் மாமிசத்தைப் போல உடனே விலக்க வேண்டும்.

மக்கள் கூட்டத்தில் பிறர் குற்றத்தைச் சொலபவன் பாம்பானது உயர்ந்த படத்தை வெளியிடுவது போலத் தன் குற்றங்களைத் தானே வெளியிடுபவன் ஆவான்.அடக்கமின்றி பிறர் பழி கூறித் திரியும் அவனை மதம் கொண்டு திரியும் யானையைப் போலவும், தெருத் தெருவாகச் சுற்றி அலையும் நாயைப் போலவும் கருதி விலக்க வேண்டும்.நாவடக்கம் இன்றிப் பேசித் திரியும் பழிகாரரை வெறுத்து ஒதுக்க வேண்டும்.உறுதியான மனம் படைத்த சான்றோர், உயர்ந்தோர் தாழ்ந்தோருடன் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுகின்றனர்.பிறர் பழி கூறும் மூர்க்கர்கள் கோபம் கொண்டால் அடிப்பார்கள்.,கடிப்பார்கள்.,புழுதி வாரி இறைப்பார்கள்.,பல்லைக் காட்டி பயமுறுத்துவார்கள்.

கெட்ட புத்தியுள்ளவன் அவையில் என்னதான் பழித்துப் பேசினாலும் அவனை பொறுத்துக் கொள்பவர்கள் மலையென கலங்கா மனம் படைத்தவர்கள் என போற்றப்படுவார்கள்.ஏசுபவன் பழியேந்திச் செல்வான்.,பொறுத்துக் கொள்பவன் புகழுடன் திகழ்வான்.தருமா..நீ அற்பர் சொல்லைப் பொறுத்துக் கொண்டு புகழ் பெறுவாயாக' என்றார் பீஷ்மர்.

113-அரசர்கள் திறம்பட ஆட்சி செய்வது எப்படி?

தருமர் பீஷ்மரை நோக்கி 'வேலைக்காரர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?' எனவும், 'அரசன் தனக்குத் துணையாக யாரைக் கொள்ள வேண்டும்? ' என வினவ பீஷ்மர் கூறலானார்.

.உலகியல் அறிவும் நூலறிவும் மிக்க வேலக்காரர்களைப் பெற்றிருக்கும் அரசன் மேன்மையுற்றவன் ஆவான்.அரசனது நன்மையை விரும்பும் அமைச்சர்கள் நற்குலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.அரசனுக்கு நல்வழி காட்டுபவர்களாக இருக்க வேண்டும்.லஞ்சம் முதலானவற்றால் நெறி கெடாதவராக இருக்க வேண்டும்.எந்த அரசர் வருங்காலத்தை உணர்ந்து செயல்படக்கூடிய அமைச்சர்களைப் பெற்றிருக்கிறாரோ அந்த அரசர் சிறந்த அரசராகத் திகழ்வார்.அரசனுக்குத் துணையாக அமைபவர்கள் இன்ப துன்பங்களைச் சமமாக கருதத் தக்க மனப்பக்குவம் உடையவர்களாக இருக்க வேண்டும்.நாட்டின் பொருளைப் பெருக்குவதில் கண்ணும் கருத்துமாய் செயல் பட வேண்டும்.ஓர் அரசன் செழிப்புடன் திகழ வேண்டுமாயின் அண்டை நாடுகளும் அமைதியுடன் இருக்க வேண்டும்.நாட்டில் பொக்கிஷம் நிறைந்திருக்க வேண்டும்.நாணயம் மிக்கவர்களால் அது நன்கு காப்பாற்றப்படுமாயின் மன்னனின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கி நிற்கும்.அரசு அதிகாரிகளாக நியமிக்கப் படுபவர்கள் பொருளாசை அற்றவராக இருக்க வேண்டும்.எந்த அரசன் அரசு தருமங்களை நன்குணர்ந்து அரச காரியங்களில் வல்லவர்களை நியமித்து ஆறில் ஒரு பங்கை வரியாகப் பெற்றுக் கொள்கிறானோ அந்த அரசன் தருமத்தின் பயனை அடைந்தவன் ஆவான்' என்றார்.

114 - மன்னன் மயில் போல் இருக்க வேண்டும்

மன்னருக்கு உரிய பண்புகள் பற்றி மேலும் அறிய விரும்புவதாக தருமர் கூற பீஷ்மர் உரைக்கலானார்..

'தருமா..எல்லா உயிரினங்களையும் காக்க வேண்டியது மன்னனது கடமை ஆகும்.மன்னன் மயிலைப் போல திகழ வேண்டும்.மயில் தன் பல வண்ணத் தோகையை எவ்விதம் அமைத்துக் கொள்கிறதோ அவ்விதம் தருமம் அறிந்த மன்னன் பலவிதமான வடிவங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.வரி வசூலிக்கும் போது சத்தியத்தையும், நேர்மையையும் மேற்கொண்டு நடுவு நிலையுடன் நடந்துக் கொள்ள வேண்டும்.தண்டனை தரும் போது கடுமையாகவும், உதவி செய்யும் போது அன்புடனும் தோன்ற வேண்டும்.

மயில் சரத் காலத்தில் ஒலி எழுப்பாது இருப்பதைப் போல அரசன் மந்திராலோசனையை வெளியிடாமல் காக்க வேண்டும்.மன்னன் மயிலைப் போல இனிய குரலும்,மென்மையான தோற்றமும் தன் செயலில் ஆற்றலும் உள்ளவனாகத் திகழ வேண்டும்.
மயில் நீரருவிகளில் நாட்டம் உள்ளதாக இருப்பதைப் போல மன்னன் வரவு செலவுகளில் கவனமாக இருக்க வேண்டும்.மயில் மலையில் உள்ள மழை நீரை விரும்பியிருப்பதைப் போல மன்னன் ஆன்றோரைச் சார்ந்திருக்க வேண்டும்.மயில் தன் தலையில் உள்ள சிகையை எப்போதும் தூக்கி வைத்திருப்பதைப் போல மன்னன் தருமக் கொடி கட்டி அடையாளம் காட்ட வேண்டும்.மயில் தன்னைப் பாதுகாத்துக் கொண்டு பாம்பு முதலியவற்றைத் தாக்க எப்போதும் விழிப்புடன் இருப்பதைப் போல மன்னன் தண்ட நீதி வழங்குவதில் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
மயில் தான் இருக்கும் மரத்திலிருந்து செழுமையான மற்றொரு மரத்துக்குச் செல்வது போல, மன்னன் வரவு செலவுகளைக் கண்டு, வரவு அதிகமாகவும் . செலவு குறைவாகவும் உள்ள செயல்களில் ஈடுபட வேண்டும்.மயில் தன் தோற்றத்தினாலேயே காக்கை முதலான பறவைகளின் குறை தோன்றுமாறு இருப்பது போல, மன்னன் தன் நேர்மையினாலேயே பகை மன்னர்களின் குறைகள் வெளிப்படுமாறு இருத்தல் வேண்டும்.மயில் உயர்ந்த வளமான மலையை நாடுவது போல, மன்னன் தன்னைவிட உயர்ந்த மன்னர்களுடன் நல்லுறவு கொள்ள வேண்டும்.மயில் களைத்த போது நிழலை விரும்புவது போல, தளர்ந்த காலத்தில் சுற்றத்தாரிடம் விரும்பிச் செல்ல வேண்டும்.
மயில் வேனிற் காலத்தில் மரத்தில் மறைந்திருப்பது போல அரசன் ரகசியமான இடங்களைச் சார்ந்து இருக்க வேண்டும்.மயில் மழைக்காலத்தில் மகிழ்ந்து இருப்பது போல மன்னன் மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தனிமையில் மகிழ்ந்து இருத்தல் வேண்டும்.மயில் தான் சஞ்சரிக்கும் இடங்களில் தன்னைப் பிடிக்க அமைத்த வலைகளை விலக்கித் தப்பித்துக் கொள்வது போல, மன்னன் பகைவர் விரித்த வலைகளை ஒற்றர்கள் மூலம் அறிந்து அவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும்.மயில் நச்சுத் தன்மை வாய்ந்த பாம்புகளைக் கொல்வது போல அரசன் வஞ்சக மன்னர்களைக் கொல்ல வேண்டும்.
மயில் புழு முதலியவற்றை வெறுக்காது இருப்பது போல, மன்னன் தாழ்ந்தவரைக் கண்டு அருவருப்பு அடையக் கூடாது.மயில் உறுதியான சிறகுகளைக் கொண்டிருப்பதைப் போல, மன்னன் உறுதி மிக்க அமைச்சர்களைப் பெற்றிருக்க வேண்டும்.மயில் தன் சிறகுகளை விருப்பப்படி விரிப்பது போல, மன்னன் தன் சுற்றத்தாரிடம் விரிந்து பரந்த மனதுடன் இருக்க வேண்டும்.எல்லா இடங்களில் இருந்தும் நல்லறிவைப் பெற்று நாட்டை நன்கு ஆட்சி புரிய வேண்டும்' என்றார் பீஷ்மர்.

115-தருமங்களின் மூலக் காரணம் சீலம்

தருமர்..பீஷ்மரைப் பார்த்து 'எல்லா தருமங்களுக்கும் மூல காரணமான சீலத்தைப் பற்றி கூறவும்..சீலம் என்பது என்ன? அதனை எப்படி பெறுவது?' என வினவினார்.
பீஷ்மர் உரைக்கலானார்...

திரிதிராஷ்டிரன் சொன்ன இந்திரனுக்கும் பிரகலாதனுக்கும் நடைபெற்ற உரையாடலை எடுத்துரைத்தார்..
பீஷ்மர்- 'தருமா..நீ கண்டிப்பாக அறிந்துக் கொள்ள வேண்டியது இது.முன்பு நீ நடத்திய ராஜசூய யாகத்தில் உனது செல்வத்தைக் கண்டு பொறாமைக் கொண்ட துரியோதனன் தந்தையிடம் சென்று புலம்பினான்.அப்போது திருதிராஷ்டிரன் "மகனே! எதற்காக இப்படி சோர்ந்து காணப்படுகிராய்? உனக்கு நேர்ந்த துன்பம் என்ன?" எனவினவினான்.
அதற்கு துரியோதனன்'தந்தையே! தருமனது அரண்மனையில் கல்வியிற் சிறந்த பதினாயிரம் பேர் தங்கப் பாத்திரத்தில் உணவு உட்கொள்கின்றனர்.இந்திரப் பிரஸ்தம் இருக்கிறது.அது கண்டு மனம் புழுங்குகிறது என்றான்.அவன் மன வருத்தத்தை உணர்ந்த திருதிராட்டிரன்..'மகனே நீ சீலத்தைப் போற்றுவாயாக.அதனைப் போற்றினால்..மூவுலக ஆட்சியைக் கூட நீ பெறலாம்.சீலம் உள்ளவர்களால் உலகில் பெறமுடியாதது ஏதும் இல்லை.மாந்தாதா ஒரே இரவிலும்,ஜனமேஜயர் மூன்று நாட்களிலும் நாபகர் ஏழு நாட்களிலும் பூமியைப் பெற்றார்கள்.இவர்கள் சீலத்தைப் போற்றியதால் மாபெரும் புகழையும் அடைந்தார்கள்.
சீலம் என்பது பிற உயிர்க்கு நன்மை செய்தல்..கருணை, தானம் இம்மூன்றும் சேர்ந்த நற்குணம் ஆகும்.இதைப் பற்றி நீ நன்கு உணர்ந்து கொள்ள முன்னர் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறேன் கேள்.முன்னொரு காலத்தில் நாரதரால் சொல்லப்பட்ட சீலத்தை மேற்கொண்ட பிரகலாதன் இந்திர உலகம் முதலான மூன்று உலகங்களையும் பெற்றான்.
நாட்டை பறிகொடுத்த இந்திரன்,பிரகஸ்பதியை(வியாழ பகவான்) அடைந்து உய்யும் வழியை அருளும்படி வேண்டிக் கொண்டான்.பிரகஸ்பதி மோட்ச மார்க்கத்திற்குக் காரணமான ஞானத்தைப் பற்றிக் கூறினார்.இந்திரன் 'இதைவிட மேலானது இருக்கிறதா? இவ்வளவுதானா?' என வினவினான்.'இதைப் பற்றி மேலும் அறிய விரும்பினால் சுக்கிராச்சாரியாரிடம் (வெள்ளி பகவான்) செல்க' என்றார் பிரகஸ்பதி.இந்திரன் அவ்வாறே சுக்கிராச்சாரியாரிடம் சென்று வினவ, அவர் ஆத்ம ஞானத்தைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.அதிலும் மன நிறைவு பெறாத இந்திரன் 'இன்னமும் இதைப் பற்றி அறிய விரும்புகிறேன்' என்றான்.'அப்படியானால் மகா மேதாவியான பிரகலாதனைத்தான் நீ சென்று பார்க்க வேண்டும்' என்றார்.
இந்திரன் அந்தண வடிவத்தோடு பிரகலாதனிடம் சென்றார்.மேன்மைக்குரிய வழியைத் தனக்கு உபதேசிக்குமாறு வேண்டிக் கொண்டார்.அவனோ, தான் மூவுலகிற்கும் வேந்தனான அரச காரியங்களில் ஈடுபட்டிருப்பதால் ஞான உபதேசம் செய்ய நேரமில்லை என்றான்.அந்தணனோ ;'தங்களுக்கு நேரம் இருக்கையில் உபதேசியுங்கள்' என்று கூற , பிரகலாதனும் ஒப்புக் கொண்டான்.
பின்னர் ஒரு நாள்,அவன் பணிவிடையைக் கண்டு மகிழ்ந்த பிரகலாதன் 'நீ வேண்டும் வரம் யாது?' என்றான்.
'உம்மிடம் உள்ள சீலத்தை வரமாக தர வேண்டுகிறேன்' எனக் கூற, பிரகலாதன் திடுக்கிட்டான்.ஆயினும் கொடுத்த வரத்தை மீற முடியாதவனாக ஆகி'அப்பயியே..நீ கேட்ட வரத்தைத் தந்தேன்' என்றான்.உடன் அந்தணன் மறைந்தான்.
பிரகலாதன் தான் வஞ்சிக்கப் பட்டதை எண்ணி வருந்தினான்.

அப்போது பிரகலாதனிடமிருந்து ஒளிமயமான ஒரு உருவம் வெளிப்பட்டது..'நீ யார்?' என அவன் வினவ..'நான்தான் சீலம்.உன்னால் விடப்பட்டு செல்கிறேன்.எங்கே போகிறேன் தெரியுமா? உன்னைடம் ஏவல் புரிந்த அநதணனிடம்' என்று கூறி மறைந்து இந்திரனிடம் சென்றது.
பிரகலாதன் மேனியிலிருந்த் மீண்டும் ஒரு ஒளி..'நீ யார்' என்றான்.'நான் தருமம்..சீலம் எங்கு இருக்கிறதோ..அங்கு நான் இருப்பேன்..ஆகவே நானும் அந்த அந்தணனை நாடிச் செல்கிறேன்' என உரைத்துப் போனது.
பிரகலாதன் உடலிலிருந்து மீண்டும் ஒரு ஒளி..இம்முறை சத்தியம்.எங்கே தருமம் உள்ளதோ..அங்கே நான் இருப்பேன் என தருமத்தைத் தொடர்ந்தது.
மீண்டும் ஒரு ஒளி..அது 'பலம்" சத்தியம் இருக்குமிடத்திதான் நானும் இருப்பேன் எனக் கூறி சத்தியத்தை பலம் பின் தொடர்ந்தது.
பின் பிரகலாதன் மேனியிலிருந்து ஒரு தெய்வ மகள் தோன்றினாள்.நீ யார் என்றான் பிரகலாதன்.
அதற்கு அந்த மகள் 'நான் லட்சுமி..எங்கே பலம் இருக்கிறதோ..அங்கு நான் இருப்பேன்.இப்போது உன்னிடம் பலம் நீங்கிச் சென்றுவிட்டது.எனவே நான் அந்த் பலத்தை நாடிச் செல்கிறேன்.நான் நாடிச் செல்லும் பலம் அந்தணனிடம் உள்ளது."என்றாள்.
'யார் அந்த அந்தணன்' என்றான் பிரகலாதன்.

'அவன் தேவேந்திரன்.அந்தண வேடம் தாங்கி உனக்குப் பணி புரிந்தான்.நீ சீலம் என்னும் நல்லொழுக்கத்தால் மூவுலகை ஆண்டாய்.இதனை உணர்ந்து அவன் உன்னிடம் இருந்த சீலத்தை யாசித்துச் சென்றான்.சீலம் உன்னைவிட்டு பிரிந்து சென்றபின் அதனைத் தொடர்ந்து தருமம்,சத்தியம்,பலம் ஆகியவை உன்னை விட்டு நீங்கின.இறுதியாக நானும் செல்கிறேன்'என்று கூறிவிட்டு லட்சுமி மறைந்தாள்.

ஆகவே..துரியோதனா, சீலம் உள்ள இடத்தில் தான் எல்லா நனமைகளும் தங்கி இருக்கும் என்பதை உணர்' என திருதிராஷ்டிரன் தன் மகனை நோக்கிக் கூறினார்.
பீஷ்மர் தருமருக்கு இப்படி உரைத்தார்.

116-ஆபத்து காலத்தில் மன்னன் நடக்கும் முறை

யுக மாறுபாட்டால் தருமம் குன்றித் திருடர்கள் மலிந்து விட்டால், அத்தகைய ஆபத்துக் காலத்தில் மன்னன் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும்? என த்ருமர் வினவ பீஷ்மர் உரைக்கிறார்.

'தருமா..இது பற்றி முன்னொரு காலத்தில் சத்ருந்தபன் என்னும் மன்னனுக்கும், பாரத்வாஜருக்கும் நடந்த உரையாடலை உனக்கு உனக்குச் சொல்கிறேன்..கேள்..

சௌவீர தெச மன்னனான சத்ருருந்தபன் பாரத்வாஜரிடம் சென்று, 'பெற முடியாத ஒரு பொருளைப் பெறுவது எப்படி? பெற்ற பொருளை வளரச் செய்வது எப்படி?வளர்ந்த பொருளைப் பயன்படுத்துவது எப்படி? என வினவினான்.

அது கேட்ட பாரத்வாஜர் அறவுரை அருளினார். மன்னன் தண்டிப்பதில் உறுதியாய் இருக்க வேண்டும்.தண்டனையைக் கண்டு மனிதன் பயப்படுவான்.ஆதலால் அனைவரையும் தண்டனையினாலேயே அடக்கி வைக்க வேண்டும்.அப்போதுதான் நாட்டில் அமைதி நிலவும்.நாட்டில் அமைதி நிலவினால்தான் நல்ல பல திட்டங்களை ஒழுங்காக நிறைவேற்ற முடியும்.ஆகையால்தான் சாம தான பேத தண்டம் ஆகிய நான்கில் தண்டம் முக்கியமானது என அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.பெரிய மரத்தின் வேர் அறுபட்டால் கிளைகள் எங்கனம் இருக்கும்.அது போல பகைவரின் ஆணிவேரை முதலில் அறுக்க வேண்டும்.பின்னர் அவனுக்குத் துணையாக இருப்பவரை அழிக்க வேண்டும்.

ஆபத்துக் காலத்தில் அரசன் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.ஆற்றலுடன் போரிட வேண்டும்.ஆற்றலுடன் பின் வாங்கவும் தயாராய் இருக்க வேண்டும்.பின் வாங்கத் தயங்கக் கூடாது.பணிவான சொற்களைப் பேச வேண்டும்.விருப்பு, வெறுப்புகளுக்கு ஆட்படாமல் செயல் பட வேண்டும்.பகைவனிடம் சமாதானம் செய்துக் கொண்ட போதிலும் அவனிடம் நம்பிக்கைக் கொள்ளக் கூடாது.அப்பகைவனிடம் நட்புடன் நடந்துக் கொண்டாலும் வீட்டில் இருக்கும் பாம்பிடம் இருப்பது போல எப்போதும் பயத்துடன் இருக்க வேண்டும்.செல்வத்தை விரும்புபவன் தாழ்ந்து பணிந்து கண்ணீர் வடித்துக் காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டும்.காரியம் ஆகும்வரை பகைவரைத் தோளில் சுமக்க வேண்டும்.காரியம் முடிந்த உடன் மட்குடத்தைக் கல்லில் போட்டு உடைப்பதுபோல அவனை அழித்துத் தொலைக்க வேண்டும்.

ஒரு நொடிப்பொழுதானாலும் கருங்காலி மரத்தின் தீயைப் போல ஒளி விட்டுப் பிரகாசிக்க வேண்டும்.உமியில் உள்ள தீயைப் போல நீண்ட காலம் புகைந்து கொண்டிருக்கக் கூடாது.நன்றி கெட்டவரிடம் பொருள் தொடர்பு கொள்ளக் கூடாது.அவர்கள் காரியம் முடியும் வரை நல்லபடியே நடந்து கொள்வர்.காரியம் முடிந்தபின் அவமதிப்பர்.ஆதலால் அத்தகையவரின் காரியத்தை முழுதும் முடிக்காமல் மிச்சம் உள்ளதாகவே வைத்திருக்க வேண்டும்.

வேந்தன் விடா முயற்சியுடன் பகைவனுடைய வீட்டுக்குச் செல்ல வேண்டும்.அவன் உடல் நலக் குறைவாய் இருந்தால் உடல் நலன் குறித்து விசாரிக்க வேண்டும்.சோம்பேறிகளும்,தைரியம் இல்லாதவர்களும்,பிறரது பழிச் சொற்களுக்குப் பயப்படுவர்களும்,விடா முயற்சியின்றி விட்டு விட்டு முயல்பவர்களும் பொருளை அடையமுடியாது.ஆமை தன் உறுப்புகளை மறைத்துக் கொள்வது போல் மன்னன் தன் குறைகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.குயில்,பன்றி,மேருமலை,ஒன்றும் இல்லாத வீடு, பாம்பு ஆகியவற்றைப் போல ஒழுக வேண்டும்.

(குயில்-தான் காக்க வேண்டிய முட்டையைக் காக்கையின் கூட்டில் இட்டு அதனைக் காப்பாற்றுமாறு செய்யும்.அதுபோல மன்னன் பயிர்,வாணிபம்,வழி,காடுகள் ஆகிய தனது பொருள்களைப் பிறரைக் கொண்டு காக்குமாறு செய்ய வேண்டும்.

பன்றி-தான் உண்ணும் கோரைப் புற்களை வேருடன் களைந்து உண்ணும்.அது போல மன்னன் பகைவர்களை வேருடன் களைந்துக் கொல்ல வேண்டும்.

மேருமலை-தன்னைத் தாண்டத் தகாதவாறு அசைவற்ரு நிற்கும்.அதைப் போல வேந்தனும் தன்னைப் பகைவர் வெற்றி கொள்ள முடியாதபடி உறுதியுடன் இருக்க வேண்டும்.

ஒன்றும் இல்லாத வீடு-பல பொருள்களை விரும்புவதாக இருக்கும்.அதைப் போலவே அரசனும் எல்லாப் பொருள்களையும் விரும்புபவனாக இருக்க வேண்டும்

பாம்பு-கடும் சினத்துடன் யாரும் நெருங்க முடியாததாக இருக்கும்.அதைப்போல மன்னனும் பகைவரால் நெருங்க முடியாதவனாக இருக்க வேண்டும்)

117- ஆபத்து காலத்தில் மன்னன் நடக்கும் முறை (தொடர்ச்சி)
அரசன் கொக்கைப்போல ஒரே நினைவாக இருந்து காரியத்தை முடிக்க வேண்டும்.சிங்கத்தைப் போல பயமின்றி தன் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்.ஓநாய் போல் பதுங்கிப் பாய்ந்து பகையை அழிக்க வேண்டும்.அம்பு போல திரும்பாமல் பகைவர் மேல் செலுத்த வேண்டும்.குடி,சூது,வேட்டைபாட்டு,இசை ஆகியவற்றை அளவுடன் அனுபவிக்க வேண்டும்.குருடனாக இருக்க வேண்டிய நேரத்தில் குருடனாக இருக்க வேண்டும்.செவிடனாக இருக்க வேண்டிய நேரத்தில் செவிடனாக இருக்க வேண்டும்.காலம்,இடம் அறிந்து செயல் பட வேண்டும்.பகை வலிமையையும்,தன் வலிமையையும் இருபக்கமும் துணையாவார் வலிமையையும் சீர் தூக்கிப் பார்த்துச் செயல்பட வேண்டும்.

எந்த ரசன் பகைவனைத் தண்டத்தால் அடக்க வில்லையோ அந்த அரசன் அச்வத்ரி என்ற விலங்கு தன் கருவினால் அழிவது போல அழிவான்.(அச்வத்ரி என்னும் விலங்கின் கரு தாயின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வரும்)அரசன் நன்றாகப் பூவுள்ளதாக இருந்தும் கனியில்லாத மரம் போல திகழ வேண்டும்.கனியுள்ளதாக இருந்தும் ஏற முடியாத மரம் போல இருக்க வேண்டும்.பழுக்காமல் இருந்தும் பழுத்தது போல காட்சி தர வேண்டும். பகை வரும்வரை அஞ்சுவது போல காணப்பட வேண்டும்.பகைவர் வந்து விட்டாலோ அஞ்சாமல் போரிட வேண்டும்.வரும் துன்பத்தை முன்னதாக தெரிந்து கொண்டு அகற்ற வேண்டும்.

வந்த நன்மையை இழப்பதும்,வராததற்கு ஏங்குவதும் அரசர்க்கு இயல்பு அன்று.பகைவருடன் சமாதானம் செய்து கொண்டோம் என அரசன் நிம்மதியாக இருக்கக் கூடாதுஅப்படி நிம்மதியாக இருப்பவன், மரத்தின் நுனியில் உறங்குபவன் போல் ஆவான்.அதாவது மரத்தின் நுனியில் இருப்பவன் எந்நேரத்திலும் கீழே விழக்கூடும்.அதுபோலப் பகைவரிடம் அதிக நம்பிக்கைக் கொண்டவனுக்கும் எந்நேரத்திலும் அழிவு ஏற்படக் கூடும்.நண்பனிடத்தில் கூட அளவு கடந்த நம்பிக்கைக் கூடாது.அதிக நம்பிக்கை ஆபத்துக்கு வழி வகுக்கும் என்பதை அரசன் உணர்ந்து கொள்ள வேண்டும்.ஆராய்ந்து பார்க்காமல் யாரிடமும் நம்பிக்கை கொள்ளக் கூடாது.பிறப்பினால் யாரும் நண்பனுமில்லை, பகைவனும் இல்லை.செயல்களால்தான் பகையும் நட்பும் ஏற்படுகின்றன.

ஆணவம் மிக்கவனும் நன்மை தீமை அறியாதவனுமான ஒருவன் உறவினனாய் இருந்தாலும் அரசாங்கத்திற்கு எதிராக நடந்துக் கொள்வானாயின் அவன் தண்டிக்கத் தக்கவன் ஆவான்.பகைவன் இனிக்க இனிக்க பேசினாலும் விட்டுவிடக் கூடாது.இனிமையாக பேசியே அவனை அடிக்க வேண்டும்.அடித்த பின்னரும் அன்புடன் பேச வேண்டும்.கனிவான பேச்சால்,வெகுமதிகளால் பிறரைத் தன்பால் கவர்ந்து கொள்ள வேண்டும்.முன்பு பகையாய் இருந்தவனை எப்போதும் நம்பக் கூடாது.பழம்பகை நட்பாவதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.காரணமின்றி யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது.கைகளால் நீந்திக் கடலை கடந்துவிட முடியாது.ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் என்பதனையும் நினைவில் கொள்ள வேண்டும்.

பகையைத் தொலைக்க முற்படுகையில் பூண்டோடு அழிக்க வேண்டும்.பகையின் மிச்சமும் கடனின் மிச்சமும் தீயின் மிச்சமும் தீங்கையே தரும்.அரசன் கழுகைப் போல நீண்ட பார்வையுடையவனாக இருக்க வேண்டும்.கொக்கைப் போல அசைவற்ற தன்மையுடன் விளங்க வேண்டும்.நாயைப் போல எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.காக்கையைப் போல பிறரின் இங்கிதத்தை அறியும் தன்மையுடன் திகழ வேண்டும்.பாம்பைப் போல செல்லும் வழியைப் பகைவர் உணராதவாறு செயல் பட வேண்டும்.தீரனைப் பணிந்தும், பயந்தவனைப் பிரித்தாளும் சூழ்ச்சியைப் பயன்படுத்தியும்,உலோபியைப் பொருள் கொடுத்தும்,நிகரானவரைப் போரிட்டும் அடக்கி ஒடுக்க வேண்டும்.

மன்னன் மென்மையாக இருந்தால் பிறர் அவமதிப்பர்.கடுமையாக இருந்தால் மிகவும் அஞ்சுவர்.ஆதலாம் அதிக மென்மையும், அளவுக்கு மீறிய கடுமையும் இன்றிச் சமயத்து ஏற்றபடி நடந்து கொள்ள வேண்டும்.அறிஞருடன் விரோதம் கூடாது.ஏனெனில் புத்திசாலிகளின் கைகள் நீண்டிருக்கும்.எந்தச் செயல் செய்ய முடியாது என்று தெரிகிறதோ அந்தச் செயலில் இறங்கக் கூடாது.ஆபத்துக் காலத்தில் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அரசன் ஆட்சி புரிய வேண்டும் என பாரத்துவாஜர் சத்ருந்தபனுக்குக் கூறினார்' எனப் பீஷ்மர் தருமரிடம் உரைத்தார்.

118-லட்சுமி அசுரரை விட்டு விலகுதற்குரிய காரணம்..
லட்சுமை அசுரரை விட்டு விலகக் காரணங்களை இந்திரனுக்குக் கூறியதைப் பிஷ்மர் கூறுகிறார்

ஒருமுறை இந்திரன் லட்சுமியைச் சந்தித்தான்.முறைப்படி பூஜைகள் செய்து , பின் பணிவுடன் 'நீங்கள் எவ்விடத்தில் வாசம் செய்வீர்கள்?' என வினவினான்.

லட்சுமி கூறுகிறாள்..
'நான் வெற்றியை விரும்பும் வீரனிடத்தில் எப்போதும் வசிப்பேன்.எப்போதும் பிறர்க்குக் கொடுக்கும் இயல்புள்ள மனிதனிடம் வசிப்பேன்.முன்னர் உண்மையான தருமத்தை அசுரர்கள் மேற்கொண்டதால் அவர்களிடம் சில காலம் தங்கியிருந்தேன்.காலப்போக்கில் அவர்களது போக்கு விபரீதமாக இருந்த காரணத்தால் அவர்களை விட்டு நீங்கி உன்னிடம் வந்தடைந்தேன்

"தேவி எக் குணத்தைக் கண்டு அசுரர்களிடமிருந்து விலகினீர்"

'அறவோரிடத்தும்,துணிவு மிக்கோரிடத்தும்,மோட்ச மார்க்கத்தில் செல்லும் மேலோரிடத்தும் நான் எப்போதும் விரும்பியிருப்பேன்.ஒரு காலத்தில் அசுரர்கள் தான தருமங்களில் சிறந்திருந்தனர்.பெரியோர்களிடம் தொடர்புள்ளவர்களாகவும்,அடக்கம் மிக்கவர்களாகவும் இருந்தனர்.சத்தியம் தவறாதவர்களாகவும்,முயற்சியுடையவர்களாகவும்,சுற்றத்தைக் காப்பவராகவும் இருந்தனர்.அவர்களிடம் பொறாமை இல்லாதிருந்தது.

பிறர் பொருளைக் கவரும் எண்ணம் இல்லாதிருந்தனர்.பிறர் துன்பம் கண்டு மனம் இரங்கி உதவும் எண்ணம் உடையவர்களாக இருந்தனர்.நேர்மை,பக்தி,புலனடக்கம் இவற்றில் சிறந்திருந்தனர்.வேலைக்காரரிடம் அன்பாக இருந்தனர்.அமைச்சர்களின் ஆலோசனையைக் கேட்டுத் தக்கவாறு செயல் பட்டனர்.தகுதியறிந்து தானம் அளித்தனர்.உண்ணாவிரதமும் தியானமும் மேற்கொண்ட தவச்சீலர்களாக விளங்கினர்.இரவில் அதிக நேரம் உறங்குவதில்லை.அதிகாலை எழுந்து விடுவர்.மங்களகரமான பொருளையே முதலில் காண்பார்கள்.

பகலில் ஒரு போதும் அவர்கள் உறங்குவதில்லை.ஆதறவற்றவர்களையும் முதியோர்களையும் கவனமாகப் பார்த்துக் கொண்டனர்.பயத்தால் நடுங்கியவர்களுக்கும்,நோயால் துன்புற்றவர்களுக்கும் ஆறுதல் கூறி ஆதரவு அளித்து வந்தனர்.குரு பக்தி மிகுந்தவர்களாகத் திகழ்ந்தனர்.இது போன்ற நற்குணங்கள் அவர்களிடம் இருந்த வரை நான் அவர்களிடம் இருந்தேன்.

பிறகு படிப்படியாக அவர்களிடம் இந்த நற்குணங்கள் விலகக் கண்டேன்.தரும மார்க்கத்தனின்று அவர்கள் நழுவினர்.காம வயப்பட்டுத் திரிந்தனர்.தரும உபதேசம் செய்யும் சாதுக்களைக் கேலி செய்தனர்.பெரியோர்களை அலட்சியம் செய்தனர்.பிள்ளைகள் தாய் தந்தையரை மதிப்பதில்லை.அவர்களின் பேச்சை மீறினர்.பகைவருக்கு அடிமையாகி வெட்கமின்றி அவர்களைப் புகழ்ந்து பேசலாயினர்.பொருள் மீது ஆசை அதிகமாயிற்று.பேராசை தருமத்தை தகர்த்தெறிந்தது.கணவன் பேச்சை மனைவி கேட்பதில்லை.மனைவியைக் கணவன் பொருட்படுத்தவே இல்லை.அதுமட்டு மின்றி அவர்களை அடித்துத் துன்புறுத்தினர்.

மாதா,பிதா,குரு, சான்றோர் ஆகிய மேலோர்கள் அசுரரின் நிந்தனைக்கு ஆளாயினர்.தான தருமங்களைச் செய்யத் தவறினர்.பசித்தவர்க்கு ஒரு பிடி சோறு வழங்கவும் அவர்கள் தயாராக இல்லை.சிறுவர்களையும், முதியோரையும் காப்பாற்றும் எண்ணம் இல்லாமல் போயிற்று.பசுக்களைக் காப்பாற்றத் தவறினர்.கன்றுகளுக்குத் தேவையான பால் இல்லாமல் எல்லாவற்றையும் அவர்களே கறந்து குடித்தனர்.சோம்பல் மிக்கவராயினர்.சூரியன் உதயமான பின்னரும் அவர்கள் கண் விழிப்பதில்லை.இரவு,பகல் எப்போதும் ஒவ்வொரு வீட்டிலும் கலவரமே காணப்பட்டது.தூய்மை என்பது எங்கும் இல்லை. இந்நிலையில் அந்த அசுரர்களை விட்டு நான் விலகி உன்னிடம் வந்து சேர்ந்தேன்'

லட்சுமியின் இப்பேச்சைக் கொண்டு அந்த மாமகளின் கருணை வேண்டுவோர் எப்படி நடநுக் கொள்ள வேண்டும்..எப்படி நடந்துக் கொள்ளக் கூடாது என்பதை உணரலாம் என்றார் பீஷ்மர்.

119-அடக்கத்தின் மேன்மை

அடக்கத்தின் மேன்மைப் பற்றி பீஷ்மர் உரைக்கிறார்

ஆகமப் பயிற்சி மிக்க சான்றோர்கள் எல்லாரும் அடக்கம் ஒன்றே மனிதனை நல்ல நிலைக்கு உயர்த்தும் என கூறுகின்றனர்.அடக்கமுள்லவன் தான் செயலின் பயனை அடைய முடியும்.அடக்கம் உடையவனிடத்தில் தான் எல்லா நற்பண்புகளும் நிலையாகத் தங்கியிருக்கின்றன.மன அடக்கமின்றி எப்போதும் அலைபாயும் நெஞ்சத்தவரால் எந்தச் செயலையும் செய்ய முடியாது.எந்த ஒரு நற்பண்பையும் தொடர்ந்து காப்பாற்ற முடியாது.நல்லொழுக்கம் என்பதே அடக்கத்தின் மீது எழுப்பப்படும் மாளிகைதான்.அடக்கம் உடையவனை யாவரும் போற்றுவர்.

அடக்கத்தின் மற்றொரு பெயர் தூய்மை.அடக்கம் உள்ளவன் பழி, பாவங்ககுக்கு அஞ்சி நடப்பான்.மன அடக்கம் உடையவனால் எதையும் ஆழ்ந்து சிந்திக்க முடியும்.சிந்தனைக்குப் பிறகு அவன் செய்யும் செயல்களில் பழுது இராது.பயன் இருக்கும்.எதைனும் நினைத்துப் பார்த்துப் பார்த்துச் செய்வதால் செய்யும் செயலில் முழுமை இருக்கும்.வினை முடித்த செம்மல் உள்ளமொடு இரவில் அவனால் நிம்மதியாக உறங்க முடியும்.அவன் உற்சாகத்துடன் கண் விழிப்பான்.
ஒருவன் காக்க வேண்டிய நற்பண்புகளில் அடக்கமே தலை சிறந்தது ஆகும்.அடக்கம் சிதறினால் வேறெந்த நற்பண்புகளையும் ஈட்ட முடியாது.அது மட்டுமன்று..அடக்கம் இல்லாதவனிடத்தில் படிப்படியாக தீய பழக்க வழக்கங்கள் வந்து சேரும்.பொறாமை முதலில் மனதில் குடியேறும்.அந்தப் பொறாமை ஆசையைத் தோற்றுவிக்கும்.அந்த ஆசை நிறைவேறாவிட்டால் மனதில் கோபம் தோன்றும்.கோபம் உள்ளவன் கடும் சீற்றத்திற்கு ஆளாவான்.அவனிடமிருந்து நல்ல சொற்களை எதிர்பார்க்க முடியாது.
மன அடக்கம் இல்லையெனில் நாவடக்கமும் இல்லாமற் போகும்.நாவடக்கம் இல்லையெனில் பகை உருவாகும்.நண்பர்கள் நெருங்க மாட்டார்கள்.காண்பவர் பேய் என ஒதுங்கிச் செல்வர்.மனமும், சொல்லும் அடங்கவில்லை யென்றால் செயலைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.அடக்கமில்லாதவன் செயலில் நன்மையைக் காண முடியாது.
மன அடக்கம் உடையவனிடம் எல்லா நற்பண்புகளும் தேடி வரும்.அவன் எப்போதும் அமைதியாக இருப்பான்.எதிலும் முயற்சி உடையவனாகத் திகழ்வான்.அவனிடம் சினம் இராது.நேர்மை இருக்கும்.அடக்கம் உள்ளவன் பெரும்பாலும் மௌனமாகவே இருப்பான்.சிறிதளவே பேசுவான்.அதுவும் சத்திய வாக்காக இருக்கும்.அடக்கம் உடையவன் ஒரு போதும் பிறரைக் குறை சொல்ல மாட்டான்.பொய் உரைக்க மாட்டான்.பிறரின் புகழை மட்டுமே கூறுவான்.
அடக்கம் உடையவன் தன்னைப் பிறர் பழித்தாலும், பாராட்டி புகழ்ந்தாலும் இரண்டையும் சமமாகவே கருதுவான்.இத்தகைய மனநிலை எளிதில் கிடைப்பதன்று.கிடைத்தால் அவனை யாரும் போற்றி மகிழ்வர்.தேவரும் வந்து பணிவர்.
பெரிய லாபத்தில் மகிழ்ச்சியும்,பெரிய நஷ்டத்தில் வருத்தமும் கொள்ளாமல் இருப்பது அடக்கம் உடையவன் இயல்பாகும்.அடக்கம் உடையவனால் எளிதில் சாத்திர ஞானம் பெறமுடியும்.ஞானவானிடம் பொறுமை,சத்தியம்,கொடைத்தன்மை ஆகியவை வந்து அமையும்.மிகு காமம்,சினம்,தற்புகழ்ச்சி,பொய் ஆகியவை கெட்ட புத்தியுள்ளவரிடம் நிரந்தரமாகக் குடியிருக்கும்.அடக்கம் உடையவன் இவற்றைத் தன்னிடம் நெருங்க விடமாட்டான்.அடக்கம் உடையவன் பூமிக்கு அணிகலன் ஆவான்.அவனிடம் இருந்து எல்லா நற்குணங்களும் ஒளி வீசும்.

120-முதுமை, இறப்புகளைத் தடுப்பது எப்படி?

முதுமை,இறப்புகளைத் தடுப்பது எப்படி? என தருமர் வினவ பீஷ்மர் சொல்கிறார்

இத்தகைய வினாவை ஜனகர், பஞ்சசிகர் என்னும் முனிவரிடம் ஒரு சமயம் வினவினார்.அதற்கு அம்முனிவர் 'மூப்பையும், மரணத்தையும் யாராலும் தடுக்க இயலாது.எந்த உயிரினமும் இவற்றிலிருந்து தப்ப முடியாது.சென்ற பகல்களும்,இரவுகளும், வாரங்களும்,மாதங்களும், ஆண்டுகளும் திரும்பி வருவதில்லை.நிலையில்லாத காலம் எல்லாவற்றையும் நிலையில்லாததாகச் செய்து விடுகிறது.உயிரினங்கள் வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்படுவது போலக் காலமானது எல்லாவற்றையும் அழித்துவிடுகிறது.

கல்லும், மண்ணும்,மரமும் கூடக் காலப்போக்கில் தம் தன்மையை இழந்து விடுகின்றன.காலமாகிய வெள்ளத்தினின்று யாரும் தப்பிக் கரையேற முடியாது.அழிவைச் சந்தித்தே ஆக வேண்டும்.மனைவியோடும்,மக்களோடும்,உறவினரோடும் உண்டான தொடர்பு ஏதோ வழிப்போக்கரிடம் ஏற்படும் தொடர்பு போன்றது.இத் தொடர்பு பிறவிதோறும் இதே உறவு முறைகளோடு தொடர்வதில்லை.உயிர் எந்த நாட்டிலோ,எந்தக் காட்டிலோ,எந்த நதியிலோ ,எந்த மலையிலோ எத்தகைய பிறவி எடுக்கும் என யாராலும் கூற முடியாது.

கர்மவினைக்கேற்பக் காலம் உயிர்களை பல்வேறு இடங்களில் பல்வேறு பிறப்புகளில் தள்ளிவிடுகிறது.அவற்றின் ஆயுள் முடியும் காலத்தில் மரணம் அவற்றை அழித்துவிடுகிறது.மூப்பும்,மரணமும் செந்நாய்களைப் போல வலிமையுள்ளவற்றையும்,சிறியனவும் பெரியனவுமான எல்லாவகை உயிர்களையும் விழுங்கி விடுகின்றன.எந்த நேரத்திலும் மரணம் என்பது உறுதி.உயிரினங்களின் வாழ்க்கைத் தன்மை இவ்வாறு இருக்கும் போது பிறப்புக்காக மகிழ்ச்சியடைவதும்,இறப்புக்காக வருந்துவதும் ஏன்?

வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்தோர்..வாழ்க்கை இனிது என மகிழவும் மாட்டார்கள்.துன்பமானது என இகழவும் மாட்டார்கள்.உண்மைநிலை இப்படி இருக்க நீ ஏன் மனவருத்தம் கொள்கிறாய்? நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன்?எங்கே செல்லப் போகிறேன்? என்று ஏன் ஏக்கம் கொள்கிறாய்?சுவர்க்கத்தை கண்டவர் யார்?நரகத்தைக் கண்டவர் யார்? அப்படி அவற்றைப் பார்த்தவர்களை நாம் பார்த்ததில்லை.எனவே, வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நல்ல கதி கிடைக்க வேண்டுமாயின் தான தருமங்களை செய்வாயாக' என பஞ்சசிகர் ஜனகரிடம் கூறினார்." என்று பீஷ்மர் தருமரிடம் உரைத்தார்.

121-நட்புக்குத் துரோகம் செய்யக் கூடாது(1)
'நட்புக்குத் துரோகம் செய்யக்கூடாது'என்பதை தருமருக்கு ஒரு கதை மூலம் விளக்கினார்.

வடக்கே வேதம் அறியா அந்தணன் ஒருவன் இருந்தான்.அவன் யாசகத்திற்காக பொருள் மிக்கவர் நிறைந்திருந்த ஒரு கிராமத்தை அடைந்தான்.அங்கு ஒரு திருடன்.அவனுக்கு அந்தணரிடம் பக்தி அதிகம்.தானம் செய்வதில் விருப்பம் கொண்டவன்.அவனிடம் யாசிக்க அந்தணன் சென்றான்.உண்ண உணவும்,உடுக்க உடையும் ஓராண்டு தங்க இடமும் கொடுத்தான் திருடன்.வாழ்க்கை நடத்த ஒரு நங்கையையும் அளித்தான்.இவற்றைப் பெற்ற அந்த அந்தணன் இன்பமாகக் காலம் கழித்தான்.நன்றியுள்ள அந்த அந்தணன் அந்த நங்கையின் குடும்பத்தையும் காப்பாற்றி வந்தான்.கௌதமன் என்னும் பெயருடைய அவன், வேடர்கள் நிறைந்த அந்த ஓரில் ஓர் ஆண்டு வாழ்ந்தான்.

வேடர்களோடு சேர்ந்த அந்தணன் வேட்டைத் தொழிலில் தேர்ச்சி பெற்றான்.நாள் தோறும் காட்டுப் பறவைகளைக் கொல்வதை வழக்கமாகக் கொண்டான்.இப்படிச் சில நாட்கள் கழிந்தன.

ஒரு நாள் அந்த ஊருக்கு வேறொரு அந்தணர் வந்தார்.மரவுரி தரித்தவர்.வேதம் அறிந்தவர்.ஆசாரம் மிக்கவர்.அவர் ஒரு பிரம்மச்சாரி.கௌதமனின் ஊர்தான் அவர் ஊரும்.கௌதமரின் நண்பரும் கூட.உணவிற்காக மற்றவரிடம் செல்லாமல் ஒரு அந்தணர் வீட்டைத் தேடிக் கடைசியாக கௌதமனின் வீட்டிற்கு வந்தார்.அப்போது கௌதமன் வீடு திரும்பியிருந்தான்.அவனைக் கண்ட அந்தணர்க்கு ஆச்சரியமாய் இருந்தது.அவன் கையில் வில் இருந்தது.தோளில் கொல்லப்பட்ட அன்னப்பறவை இருந்தது.அவரை அப்படிக் கண்ட அந்தணர் வெட்கித் தலை குனிந்தார்.

கௌதமனை நோக்கி 'என்ன காரியம் செய்தாய்? வேடர் தொழிலை எவ்வாறு மேற் கொண்டாய்?உன் பெருமையை மறந்தாயா?நீ கீழான செயலைச் செய்யலாமா?நீ உடனே இங்கிருந்து போய் விடு" என்று கூறினார்.

அந்தணரின் அறிவுரையைக் கேட்ட கௌதமன், துயரத்துடன்,'நான் ஏழை.அந்த வறுமை என்ன இந்த நிலைக்குத் தள்ளிவிட்டது.இப்போது உம்மால் நான் தெளிவு பெற்றேன்.ஓரிரவு மட்டும் இங்குத் தங்கிப் பின் வேறிடம் செல்லலாம் 'என்று கூறினான்.அந்த அந்தணரும் பசியுடன் இருந்த போதும் அவனது வேண்டுகோளை ஏற்று அங்குத் தங்கினார் .

122-நட்புக்குத் துரோகம் செய்யக்கூடாது(2)
பொழுது விடிந்து..அவ்விருவரும் ஊரை விட்டுப் புறப்பட்டனர்.பின் அந்தணரிடம் விடைபெற்றிச் சென்ற கௌதமன் வழியில், கடல் யாத்திரை செய்யும் வணிகரை சந்தித்தான்.அப்போது மத யானையால் வணிகக் கூட்டம் தாக்க்கப்பட்டது.அக் கௌதமன் வட திசை நோக்கிப் பயந்தபடியே ஓடினான்.யாருடைய உதவியும் இல்லாததால் காட்டில் தனியாகச் சென்றான்.மரங்கள் நிறைந்த காடு அழகு மிக்கதாய் இருந்தது.பறவைகள் ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன.அந்த இனிய ஒலிகளைக் கேட்டுக்கொண்டே இங்கும் அங்கும் திரிந்துக் கொண்டிருந்தான்.

மணல் பொன் போல் காட்சி அளித்தது.ஓரிடத்தில் பெரிய ஆலமரம் கண்ணில் பட்டது.குடை கவிழ்த்ததுபோல் அதன் கிளைகள் தாழ்ந்து நிழல் கொடுத்தன.மகிழ்ச்சியுடன் கௌதன் அம்மர நிழலில் அமர்ந்தான்.

மிகவும் களைப்புடன் இருந்தவன்..சற்று கண்ணயர்ந்தான்.சூரியன் மறைய, அப்போது பிரம்ம லோகத்தில் இருந்து ஒரு பெரிய கொக்கு அங்கு வந்தடைந்தது.அதி பிரம்மாவிற்கு நண்பன்.காசியபருக்குப் புதல்வன்..கொக்குகளுக்கு அரசன்.அதன் பெயர் நாடீஜங்கன்.அந்த கொக்கின் இருப்பிடம் அந்த ஆலமரம்.அது தேவ கன்னியரிடம் பிறந்ததால் அழகுடன் திகழ்ந்தது.அதன் உடலிலிருந்து எங்கும் ஒளி வீசியது.அந்தக் கொக்கு ராஜ தர்மா என்னும் பெயரையும் பெற்றிருந்தது.

கௌதமன், ஒளி வீசும் அக்கொக்கைக் கண்டு வியப்புற்றான்.பசியுடன் இருந்த அவன் அதைக் கொல்ல நினைத்தான்.ஆனால் அந்தக் கொக்கோ அவனை அன்றிரவு தன் விருந்தினராக இருக்க வேண்டிக் கொண்டது.

அந்தக் கொக்கு அவனிடம் 'ஐயா..நான் காசியபரின் புதல்வன்.என் தாய் தாட்சாயணி.என்று கூரி நல்ல மீன்களைக் கொடுத்து உபசரித்தது.களைப்பைப் போக்க தன் சிறகால் விசிறிற்று.இலைகளால் ஆன படுக்கையையும் அளித்தது.பின் அவன் வருகைக்கான காரணத்தைக் கேட்டு அறிந்தது..பின்..'கவலை வேண்டாம்..திரண்ட செல்வத்துடன் நீ திரும்புவாய்..என்று சொல்லி 'பணம் சேர்க்கும் வழிகள்' எனப் பிரகஸ்பதி சில வழிகளைச் சொல்லியிருக்கிறார்.அவற்றில் நண்பன் மூலம் சேர்த்தல் சிறந்த வழியாகும்.இப்போது உன் நண்பன் நான்.உனக்குத் தேவையான வழியைக் கூறுகிறேன்' என உரைத்தது.

'அழகு மிக்கவனே..இவ்வழியே சென்றால் விருபாட்சன் என்னும் என் நண்பனைக் காண்பாய்.அவன் அசுரர்க்கு அதிபதி.மிகவும் பலம் வாய்ந்தவன்.என் சொல்லைக் கேட்டுப் பெரும் செல்வத்தை உனக்குத் தருவான்' என்றும் உரைத்தது.

கௌதமன் பின், அக் கொக்கு சொன்ன வழிச் சென்றான்.இயற்கைக் காட்சிகளைக் கண்டு களித்தபடியே மனுவ்ரஜம் என்னும் நகரை அடந்தான்.அந்நகரம் கற்களால் ஆன தோரணங்கலைக் கொண்டு கம்பீரமாகக் காட்சியளித்தது.அந்த அந்தணன் தன் நண்பனால் அனுப்பப்பட்டவன் என்பதை உணர்ந்த அசுரன் அவனை விருந்தினனாக உபசரித்தான். (தொடரும்)

123-நட்புக்குத் துரோகம் செய்யக்கூடாது(3)
அந்தணனை விருந்தினராக ஏற்றுக் கொண்ட அசுரன் அவனது குலம், கோத்திரம் பற்றி விசாரித்தான்.அந்தணன் கூறினான்.

நான் மத்திய நாட்டைச் சேர்ந்தவன்.தற்போது ஒரு வேடன் வீட்டில் தங்கியிருக்கிறேன்.ஏற்கனவே திருமணமான ஒருத்தியை மணந்து வாழ்கிறேன்.

இதைக் கேட்டு அசுரன் சிந்தனையில் மூழ்கினான்.'இவன் பிறப்பால் அந்தணனாக இருந்தும் ஒழுக்கத்தில் அப்படியில்லை.ஆயினும் என் நண்பன் ராஜதர்மா என்னும் பறவையால் அனுப்பப் பட்டவன்.ஆகவே, இவனுக்கு வேண்டியவற்றைத் தருவேன்.மற்ற அந்தணருடன் உணவை இவன் அருந்தட்டும்.இனிச் சிந்திக்க ஏதுமில்லை.மிக்க செல்வத்தை இவனுக்கு அளிப்பேன்' என்னும் முடிவுக்கு வந்தான்.

அந்த நேரத்தில் ஏராளமான அந்தணர்கள் அங்கு வந்து சேர்ந்தனர்.அவர்கள் விரும்பியபடி அசுரன் பொன்னையும், பொருளையும் வாரி வழங்கினான்.மற்றவர்களைப் போல கௌதமனும் நிறைந்த செல்வத்தைப் பெற்றுக் கொண்டு பெரும் பாரத்தைச் சுமப்பது போலச் சுமந்துக் கொண்டு ஆலமரத்தை அடைந்தான்.அவன் பசியாலும் வழி நடந்த களைப்பாலும் சோர்ந்திருந்தான்.

சிறிது நேரத்தில் ராஜதர்மா..அந்தணனை வரவேற்று, தன் சிறகுகளால் வீசி அவன் களைப்பைப் போக்கியது.அப்போது 'இந்த பெருஞ்சுமையைத் தூக்கிக் கொண்டு நெடுந்தூரம் செல்ல வேண்டுமே..வழியில் உண்பதற்கு உணவு ஏதும் இல்லையே' என சிந்தித்தான்.

நன்றி கெட்ட கௌதமன்..இந்தப் பறவை அதிகம் சதைப் பற்றுள்ளதாய் இருக்கிறது..இதனைக் கொன்று இதன் மாமிசத்தை எடுத்துச் சென்றால் தேவைக்கு அதிகமாகவே கிடைக்கும் என்னும் முடிவுக்கு வந்தான்.

சிறந்த பறவையான ராஜதர்மா அதிக ஒளியுள்ள தீயை மூட்டி,கௌதமனின் குளிரைப் போக்கிவிட்டு..அவனிடம் கொண்ட நம்பிக்கையுடன் தூங்கலாயிற்று.கௌதமன் தூங்கிக் கொண்டிருந்த பறவையை தீயில் இட்டுப் பக்குவப்படுத்தி, செல்வங்களையும், பறவையின் மாமிசத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

பறவை அன்று வராததால் அசுரன் கவலைப் பட்டான்..இரண்டு நாட்கள் பொறுத்திருந்து பின் தன் மகனை அழைத்து..'பறவையைக் காணாது மனம் அஞ்சுகிறது.எனக்கு சந்தேகம் வருகிறது.அதன் வீட்டில் தங்கியுள்ள அந்தணன் ஒழுக்கம் கெட்டவன்.இரக்கம் இல்லாதவன்.நீ விரைந்து சென்று ராஜதர்மா உயிருடன் உள்ளதா என பார்த்து வா' என்றான்.

மகனும் உடன் பறவை வசித்த ஆலமரத்தை நோக்கிச் சென்றான்.அங்கே ராஜதர்மா கொல்லப்பட்டு..அதன் எலும்புகள் மரத்தடியில் இருப்பதைக் கண்டான்.கோபம் கொண்டு கௌதமனை பிடித்துவர ஆட்களை அனுப்பினான்.அந்த ஆட்கள் கௌதமனை பிடித்து இழுத்து வர,பறவையின் எலும்புகளையும் எடுத்துக் கொண்டு அசுரனிடம் வந்தான்.அதுகண்டு அசுரன் கதறி அழுதான்.

பின் அவன் தன் மகனை அழைத்து'கௌதமனைக் கொல்ல வேண்டும்.மகாபாவியான அவன் மாமிசத்தை அரக்கர்கள் உண்ணட்டும்' என்றான்.ஆனால் நன்றிக் கெட்டவனின் மாமிசத்தை உண்ண அரக்கர்கள் விரும்பவில்லை.அவனை துண்டு துண்டாக வெட்டி கொள்ளைக் கூட்டத்தாரிடம் அளிக்குமாறு கட்டளையிட்டான்.அவர்களும் அவன் மாமிசத்தை உண்ண முன் வரவில்லை.நன்றிகெட்டவனின் மாமிசத்தை பறவைகளும் உண்ணவில்லை.திருடனுக்கும்,குடிகாரனுக்கும் கூடப் பிராயசித்தம் உண்டு, ஆனால் நன்றி கெட்டவனுக்கு பிராயசித்தம் ஏதுமில்லை (தொடரும்)

124-நட்புக்குத் துரோகம் செய்யக்கூடாது(4)
அரக்க அரசன் விருபாட்சன் தன் நண்பனான ராஜதர்மா என்ற கொக்கிற்குத் தீ மூட்டித் தகனம் செய்தான்.சிதை தயாரிக்கப் பட்டு ஆடை,அணிகலங்களால் அலங்கரிக்கப்பட்டது.சந்தனக் கட்டைகள் அடுக்கப் பட்டன.சிதைக்குத் தீ மூட்டுகையில், மேலே வந்துக் கொண்டிருந்த தாட்சாயணி சுரபியின் வாயிலிருந்து சிந்திய பாலின் நுரையானது ராஜதர்மாவின் சிதையில் விழுந்தது.அதனால் ராஜதர்மா என்னும் கொக்கு உயிர் பெற்று எழுந்தது.விருபாட்சனுடைய நகரை அடைந்தது.

அந்த நேரத்தில் தேவேந்திரன் அங்கு வந்தான்.அந்த கொக்கு இந்திரனை நோக்கி'தேவேந்திரா..என் நண்பனான கௌதமனையும் பிழைக்கச் செய்ய வேண்டும்'என்றது.இந்திரனும் கௌதமனை உயிர் பிழைக்கச் செய்தான்.

இந்திரன் விருபாட்சனை நோக்கி, ராஜதர்மா, பிரம்மாவிடம் பெற்ற ஒரு சாப வரலாற்றைக் கூறினான்.'அரக்க அரசனே..முன்பு ஒரு காலத்தில் பிரம்மதேவன் மிக்க சினம் கொண்டு ராஜதர்மாவை நோக்கி"நீ எனது சபைக்கு ஒரு முறையேனும் வராத காரணத்தால் தரும குணம் உள்ளதும்,பரம் பொருளை அறியத் தக்கதுமான கொக்காகப் பிறப்பாயாக.பாவச் செயல் புரிபவனும்,நன்றி கெட்டவனுமான ஒரு அந்தணன் உனது இடம் தேடி வருவான்.உன்னைக் கொல்வான்.அப்போது உனக்கு விடுதலைக் கிடைக்கும்.அந்தச் சாபப்படி ராஜதர்மா உத்தமமான பிரம்மாவின் சத்திய உலகத்தை அடையும்.அந்த அந்தணனும் நரகத்தை அடைவான்" என்று கூறி தேவர் உலகை அடந்தான்.

பீஷ்மர் தொடர்ந்தார்..'தருமா..இன் நிகழ்ச்சியை முன்னர் நாரதர் எனக்குக் கூறினார்.நான் உனக்கு உரைத்தேன்.நன்கு நினைவில் வைத்துக் கொள்..

நன்றி கொன்றவனுக்குப் பிராயச்சித்தமே இல்லை.அவனுக்குப் புகழும் இல்லை.இன்பமும் இல்லை.இதுபோலவே நண்பனுக்குத் துரோகம் இழைத்தால் நரகம்தான் கிடைக்கும்.எனவே ஒவ்வொருவரும் நன்றியுடனும்,நண்பரிடம் அக்கறையுடனும் நடந்துக் கொள்ள வேண்டும் 'என்றார்.

125-வர இருக்கும் ஆபத்தை நீக்கும் உபாயம்

வர இருக்கும் ஆபத்தை நீக்கும் உபாயத்தை முன்னமே அறிந்துக் கொள்ளக் கூறப்பட்ட கதை

..பீஷ்மர் தருமருக்கு 'வரவிருக்கும் ஆபத்தை அறிந்து செயல்படுபவன் இன்பமாக வாழ்வான்.மந்த புத்தியுள்ளவன் துன்பம் அடைவான்,இவ்விஷயத்தில் செய்யத் தக்கது,தகாதது ஆகியவற்றை ஆராயாத மந்த புத்தியுள்ளவன் கதையைச் சொல்கிறேன்' என்று சொல்ல ஆரம்பித்தார்.

ஆழமற்ற சிறு குட்டையில் பல மீன்கள் இருந்தன.அவற்றில் மூன்று மீன்கள் நட்புடன் வசித்து வந்தன.அவற்றில் ஒரு மீன் சமயோசித புத்தியுடையது.மற்றொன்று ஆழ்ந்த சிந்தனையையுடையது.மூன்றாவது மந்த புத்திக் கொண்டது.
ஒரு சமயம் வலைஞர்கள் குட்டை நீரைக் கால்வாய் அமைத்துப் பள்ளங்களில் வடிய வைத்தனர்.அது கண்டுபயந்தது ஆழ்ந்த சிந்தனையுள்ள மீன்.மற்ற இரண்டு மீன்களை நோக்கி'ஆபத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க விரைந்து கால்வாய் வழியே வேறிடம் சென்றிடுவோம்' என்றது.
மந்த புத்தியுள்ள மீன்..'இங்கேயே இருக்கலாம்' என்றது.
சமயோசித புத்தி மீன்'சமயம் வரும்போது ஏதாவது யுக்தியைக் கண்டுபிடுத்துத் தப்பித்துக் கொள்ளலாம்.இப்போது போக வேண்டாம்' என்றது.இதைக் கேட்ட ஆழ்ந்த சிந்தனை மீன் கால்வாய் வழியே வெளியேறி ஆழமான குளத்தைச் சேர்ந்தது.

தண்ணீர் வடிந்ததும்..குட்டையை கலக்கி வலைஞர்கள் மீன் பிடிக்கத் தொடங்கினர்.அப்போது மந்த புத்தி மீன் மற்ற மீன்களுடன் வலையில் சிக்கியது. வலை கயிறுகளால் கட்டப்பட்டுத் தூக்கப்படும் போது சமயோசித புத்தியுள்ள மீன் கயிற்றை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருந்தது.எடுத்துச் சென்று வேறு குட்டையில் கழுவும் போது அந்த மீன் விரைந்து தண்ணீருக்குள் நுழைந்து தப்பித்துக் கொண்டது.மந்தபுத்தியுள்ள மீன் வலையில் சிக்கி இறந்தது.
இதுபோல சமயோசித புத்தியில்லாதவன் மந்த புத்தியுடைய மீனைப் போல சீக்கிரம் அழிவான்.வருமுன்னர் தன்னைக் காத்துக் கொள்ளாவிடினும்.சந்தேகமான தயக்க நிலையில் சமயோசித புத்தியுள்ளவன் தன்னைக் காத்துக் கொள்வான்
இதனால், வர இருக்கும் ஆபத்தை முன்னரே அறிந்துக் கொள்பவனும்,சமயோசித புத்தியுள்ளவனும் மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறுவர் என்பதும்..மந்த புத்தியுள்ளவன் அழிவான் என்று உணர்த்தப் பட்டது.

126-பூனை..எலி கதை
தருமர் பீஷ்மரை நோக்கி..'நண்பர், பகைவரிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்?' எனக் கேட்க பீஷ்மர் உரைக்கிறார்
தருமா..ஆபத்துக் காலத்தில் எப்படி தப்பிப்பது என சொல்கிறேன் கேள்.

பகைவனாய் இருப்பவன் சில சமயம் நண்பன் ஆவான்.அதுபோல நண்பனும் சில சமயங்களில் பகைவன் ஆகலாம்.மக்களிடம் பகை,நட்பு ஆகியவை ஒரே மாதிரி இருப்பதில்லை.இடத்திற்கேற்ப, காலத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியவை,செய்ய வேண்டாதவை ஆகியவற்றைப் புரிந்துக் கொண்டு நம்பவும் வேண்டும்..நம்பாது இருக்கவும் வேண்டும்.நம் நலனில் அக்கறை கொண்டவரிடம் எப்போதும் நட்புடன் மனம் மாறாமல் இருக்க வேண்டும்.உயிரைப் பாதுகாத்துக் கொள்ளப் பகைவரிடம் சமாதானம் செய்துக் கொள்ளவும் வேண்டும்.எந்தச் சமயத்திலும் சமாதானத்தை விரும்பாதவன் அறிவாளி அல்லன்.மேலும் அவன் எந்த நன்மையும் பெற மாட்டான்.காரியத்தின் பயனைப் புரிந்துக் கொண்டு பகைவனிடம் நட்பாகலாம்.நண்பனிடம் பகை கொள்ளலாம்.இது தொடர்பாக ஒரு ஆலமரத்தில் பூனைக்கும், எலிக்கும் நடந்த உரையாடலைக் காண்போம்..

ஒரு காட்டில் ஒரு ஆலமரம் இருந்தது.அதில் பலவிதமான பறவைகள் வசித்து வந்தன. அந்த மரத்தடியில் நூறு துவாரங்கள் உள்ள வளையில் பலிதம் என்னும் புத்திசாலி எலி ஒன்று வசித்து வந்தது. அந்த ஆலமரத்தில் இருக்கும் பறவைகளைத் தின்று வாழும் ஒரு பூனையும் அங்கிருந்தது. அதன் பெயர் லோமசம்.

அந்தக் காட்டில் இருந்த வேடன் ஒருவன் நாள்தோறும் மரத்தடியில் பொறி வைத்து பறவைகளைப் பிடித்து தின்று வாழ்ந்துக் கொண்டிருந்தான்.அந்தப் பொறி நரம்புகளால் ஆன சுருக்குக் கயிறுகளைக் கொண்டது.ஒருநாள் அந்தப் பூனை அந்தப் பொறியில் மாட்டிக் கொண்டு தவித்தது.

அதைக் கண்ட எலி பயமின்றி இங்கும் அங்கும் ஆனந்தமாக ஓடத் தொடங்கியது.ஒரு மாமிசத் துண்டு பொறியின் மீது இருந்ததை எலி பார்த்தது.அதை எடுத்து தின்றுக் கொண்டிருந்த போது 'அரிண' என்னும் கீரி ஒன்று தன்னை நோக்கி ஓடி வருவதைக் கண்டது.அதே சமயம் ஆலமரத்தின் மீது 'சந்த்ரக' என்னும் கோட்டானையும் பார்த்து..பயப்படத் தொடங்கியது.
என்ன செய்யலாம் என சிந்தித்த எலிக்கு ஒரு யோசனத் தோன்றியது.'அறிவுள்ளவன் ஆபத்தைக் கண்டு அஞ்சமாட்டான்' அதிலிருந்து தப்ப வழியைப் பார்ப்பான்.எனவே பகைவனானாலும் பூனையின் உதவியை நாடித் தப்பிக்கலாம்..பூனையும் ஆபத்தில் சிக்கியுள்ளது..அதனால் அதுவும் சமாதானத்திற்கு சம்மதிக்கும்..ஆகவே அதனுடன் ஒரு உடன்படிக்கை செய்துக் கொண்டு உயிரைக் காக்கலாம் என எண்ணியது.

மேலும்..ஆபத்துக் காலத்தில் உதவி செய்பவனே நண்பன்..உதவி செய்யாதவன் பகைவன்..சில சமயம் நண்பன் நழுவி விடுவான்.பகைவன் உதவி செய்வான்.எனவே பகைவனாயிருந்தாலும்..பூனை என்னால் விடுவிக்கப் படுமானால் எனக்கு உதவி செய்யக் கூடும்.எனவே ஒரு யுக்தியுடன் பூனையிடம் சமாதானம் செய்துக் கொள்ள வேண்டும்' என முடிவெடுத்தது.பூனையுடன் சமாதான பேச்சை ஆரம்பித்தது.

'பூனியாரே..நட்பு முறையில் ஒன்று சொல்கிறேன்..நல்ல வேளை பிழைத்தீர்கள்..நீங்கள் தப்பிக்க வேண்டும் என்பது என் எண்ணம்.இதனால் எனக்கும் நன்மை உண்டாகும்.பயம் வேண்டாம்.இப் பேராபத்தை போக்கி விடுகிறேன்.என் கூரிய பற்களால் இப் பொறியைத் துண்டுதுண்டாகக் கடித்து உங்களை வெளியே செல்லச் செய்கிறேன்.நீர் இம்மரத்தின் மேல் வெகுநாட்களாக வாழ்கிறீர், நான் மரத்தடியில் பல நாட்களாக வாழ்ந்து வருகிறேன்.இதனால் நாம் நண்பர்கள் ஆவோம்.

இப்போது கீழே உள்ள கீரி என்னை இன்னும் பார்க்க வில்லை.பார்த்தால் என் கதி அல்லளவுதான்.எனக்குப் பயமாக இருக்கிறது.நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துக் கொண்டு இன்பமாய் வாழலாம் என்றது

பகையான எலியின் வார்த்தைகளில் மகிழ்ந்த பூனை எலிக்கு நன்றி கூறியது.எலியைப் போல பூனையும் வஞ்சனையுடையது.எனவே சாமர்த்தியமாகப் பேசியது.'எலியே..உன் பேச்சு அழகாய் உள்ளது.நீ கூறியபடி என்னைச் சீக்கிரம் விடுதலை செய்.என்னைப் போல நீயும் பெரிதும் துன்புறுகிறாய்.இது எனக்கு வருத்தத்தைத் தருகிறது.நம் காரியம் நிறைவேற ஒரு உடன் பாட்டிற்கு வருவோம்.நான் இதிலிருந்து விடுபட்டால் உனக்கு உதவுவேன்'என்றது.

உடன் எலி 'பூனையாரே! இனி என் பயம் தொலைந்தது. தாங்கள் வலையிலிருந்து விடுபட்டதும் என்னைக் கொன்றுவிடக் கூடாது. தவிர்த்து கோட்டான், கீரி ஆகியவற்றிடமிருந்தும் என்னைக் காக்க வேண்டும்" என்று கேட்டது.

பூனை 'என் உயிர் நண்பனே..உன்னால்தான் நான் பிழைக்கப் போகிறேன்..இன்னும் என்னால் ஏதேனும் ஆக வேண்டுமாயின் ஆணையிடு.செய்கிறேன். இனி நான் உன் நண்பன் அல்லவா?' என்றது.

பூனையின் ஆறுதலைக் கேட்ட எலி..நட்புமுறையில் பூனையுடன் பழக ஆரம்பித்தது.அதன் மார்பின் மீது தவழ்ந்து விளையாடத் தொடங்கியது.இது கண்டு கோட்டானும்,கீரியும் தம் எண்ணம் ஈடேறாததால் வேறிடம் சென்றன.

இடம், காலம் தெரிந்த எலி கயிற்றை மெதுவாகக் கடிக்கத் துவங்கியது.பூனையோ..'ஏன் வளையை தாமதமாக அறுக்கிறாய்..சீக்கிரம் அறுத்து விடு' என்றது.உடன் எலோ..'எந்த வேலையை எப்போது செய்ய வேண்டும் என நான் அறிவேன்.இப்போது உம்மை விடுவித்தால்..என்னையேக் கூட கொன்றிடுவீர்.தக்க சமயத்தில்..வலை விரித்தவன் வரும்போது வலையை அறுப்பேன்.அப்போது உடனே நீங்கள் மரத்திற்குத் தாவி போய் விடலாம்,நானும் வளைக்குள் போய் விடுவேன் .அப்படிப்பட்ட அவசரநிலையில் தான் நானும் தப்பிக்க முடியும்.இல்லையேல் உமக்கு பலியாகி விடுவேன்.'என்றது.

இதைக் கேட்டு அந்தப் பூனை வருத்தம் அடைந்தது.தாமதம் செய்த எலியைப் பார்த்து 'உயர்ந்தோர், நண்பர்களுக்கு உதவி செய்வதில் இவ்வளவு தாமதிக்க மாட்டார்கள்.நான் எவ்வளவு விரைவாக உன் துன்பத்தைப் போக்கினேன்.நீ மட்டும் ஏன் தயங்குகிறாய்? பழைய பகையை மனதில் கொண்டு நடக்கிராய்.இது நல்லதல்ல..மேலும் நீ தாமதப் படுத்தினால் என் உயிர் பிரிந்துவிடும்' என்றது.

புத்திசாலியான எலி, வஞ்சக எண்ணம் கொண்ட பூனையை நோக்கி..'நண்பரே! பூனையாரே..சுயநலம் மிக்க உமது எண்ணத்தை அறிந்து கொண்டேன்.பாம்பின் வாயிலிருந்து தப்பிப்பது போல பகைவனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்பர் பெரியோர்.உலகில் இயற்கையாகவே நண்பர்களோ, பகைவர்களோ தோன்றுவதில்லை.ஒருவன் உதவி செய்யும் போது நண்பன் ஆகிரான்.அவனே தீமை செய்யும் போது பகைவனாகக் கருதப்படுகிறான்.

சமயத்திற்கேற்ப பகையும், நட்பும் மாறும்.காரியம் முடிந்த பின் யாரும் யாரையும் கவனிப்பதில்லை.ஆதலால் எந்தச் செயல் ஆனாலும் அதில் கொஞ்சம் மிச்சம் வைத்திருக்க வேண்டும்.உமக்கு வலையை விரித்தவன் வந்ததும் பயந்து என்னைத் தின்னும் எண்ணத்தைக் கைவிட்டு ஓடி விடுவீர்.நானும் தப்பித்து பிழைத்து விடுவேன்.அதிகம் இல்லை அறுபட வேண்டியது ஒரு கயிறு தான்.சற்றுப் பொறுமையுடன் இருங்கள்.அதையும் அறுத்து விடுகிறேன்' என உரைத்தது

அந்த நேரத்தில் சில நாய்களுடன் வந்தான் பொறியை வைத்தவன்.பூனை அவனைக் கண்டு பயந்து..'இப்போது என் நிலையைப் பார்த்து..என்னை விடுவிப்பாயாக' எனக் கெஞ்ச..எலியும் தாமதமின்றி கயிற்றைத் துண்டித்தது.உடன் பூனை விரைவாய் ஓடி மரமேறியது.அவனைக் கண்டு கோட்டானும், கீரியும் கூட ஓடி மறந்தன.எலியும்,தன் பணி முடிந்து வளையில் ஒளிந்துக் கொண்டது.பொறியை வைத்தவன் ஏமாற்றத்துடன் திரும்பினான்.

பின் பூனை எலியை நோக்கி'ஆபத்தில் உதவி செய்தவரே..நானும் எனது உறவினர்களும் உன்னை கௌரவிக்க விரும்புகிறோம்.என் சொத்து உனக்கே உரியது. என்னிடம் உனக்கு பயம் வேண்டாம்.பயப்படாமல் வா' என்றது.

பூனையின் நோக்கத்தைப் புரிந்துக் கொண்ட எலி'உமது பாசமொழிகள் கேட்டு மகிழ்ச்சி.ஆனாலும் ஒன்று சொல்கிறேன்..நண்பர், பகைவர் பற்றி ஆறாய்ந்து அறிந்து கொள்ள வேண்டும் என்பர் சான்றோர்.நண்பர் பகைவர் போலவும், பகைவர் நண்பர் போலவும் தோற்றம் அளிக்கலாம்.இந்த்ப் பகையும், நட்பும் நிலையானது அல்ல.ஏதோ ஒரு நோக்கத்தைக் கொண்டுதான் நட்பும், பகையும் அமைகின்றன.செயலின் நுட்பத்தை அறியாமல் நண்பர்களிடம் அளவு கடந்த நம்பிக்கை கொள்வதும் பகைவரிடம் அளவு கடந்த அவநம்பிக்கை கொள்வதும் ஆபத்தில் முடியும்.

என்னிடம் தாங்கள் பேசும் ஆசை வார்த்தைகளுக்குக் காரணம் உண்டு.மனிதன், ஏதோ ஒரு காரணம் கொண்டே நட்புடன் திகழ்கிறான்.ஒரு காரணத்தால் பகைவன் ஆகிறான்.ஒரு தாய் வயிற்றில் பிறந்தோர் கூடச் சுயநலம் காரணமாக அன்பு செய்வர்.உலகில் காரணம் இன்றி அன்பு இருப்பதாகத் தெரியவில்லை.ஆனால் உடன் பிறந்த சகோதரரும், மனைவியும் ஏதோ ஒரு காரணத்தால் அன்பு கொண்டாலும் நாளாவட்டத்தில் அன்பு உடையவர்களாக ஆவர்.உலகில் ஏதோ காரணத்தால் தான் அன்பு ஏற்படுகிறது.

அந்தக் காரணம் மறந்ததும் அன்பும் மறைகிறது.என்னைச் சாப்பிட வேண்டும் என்னும் காரணத்தால்தான் உமக்கு என் மீது அன்பு ஏற்பட்டுள்ளது.ஆகவே உமது பேச்சில் எனக்கு நம்பிக்கை இல்லை.இச் சமயத்தில் உம்மிடம் நட்புக் கொள்வது அறிவுடைமையாகத் தோன்றவில்லை.இயற்கையாகவே தாங்கள் எங்கள் குலத்திற்கு விரோதி ஆவீர்.ஏதோ ஒரு முறை ஏற்பட்ட நட்பை மறந்து விடுக.பகையை மேற் கொள்க.பழம் பகையை மறக்கக் கூடாது.

மேலும் எலி தொடர்ந்தது..'நண்பரே! உபசார வார்த்தைகளால் பயனில்லை.நெடுந்தொலைவில் இருந்தாலும் உம்மைக் கண்டு நான் அஞ்சுகிறேன்.சுயநலமின்றி எந்தக் காரியமும் இல்லை.புத்தியுள்ளவன் எல்லாப்பொருள்களை இழந்தேனும் தன் உயிரை காப்பாற்றிக் கொள்வான்.என்னதான் பகைவன் அன்பு உள்ளத்தோடு பழகினாலும் அவனை சந்தேகக் கண் கொண்டே காண வேண்டும்.

பூனை எவ்வளவோ பேசியது.ஆனாலும் எலி ஏமாறவில்லை.பூனையை நோக்கிக் கூறியது..'நம்பத் தகாதவனை நம்பக் கூடாது.நம்பத் தகுந்தவனையும் அதிகம் நம்பக்கூடாது.அதே நேரத்தில் தன் மீது நம்பிக்கை உண்டாகும் படி செய்ய வேண்டும்.பூனையாரே! உம் போன்ற பகைவரிடமிருந்து எப்போதும் நான் என்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.நீங்களும் உங்களை பிடிக்க பொறி வைப்பவரிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்'

இவ்வாறு பலம் இல்லாததாயினும் அறிவுள்ள ஒரு எலி மிக்க பலமுள்ள பகைவர்களைச் சாமர்த்தியமாக வென்றது.

எனவே தருமா. பலமுள்ள பகைவனாயினும் அவனுடன் சில சமயம் சமாதானம் செய்துக் கொண்டு வெற்றி காண வேண்டும்.

ஒன்றொடொன்று பகையுள்ள எலியும், பூனையும் சங்கடமான நேரத்தில் நட்புக் கொண்டன.அதே நேரத்தில் அவை குரோதத்துடன் இருந்தன.அவற்றில் அறிவிற் சிறந்தது வென்றது.

அதுபோலவே அறிவு மிக்கவனும் விழிப்புடன் இல்லையெனில், அறிவு குறைந்தவனால் வெல்லப்படுவான்.பயம் அற்றவன் போல தோற்றமளிக்க வேண்டும்.ஆனால் பயம் உள்ளவனாக அஞ்சி நடக்க வேண்டும்.நம்பிக்கை உள்ளவன் போல இருக்க வேண்டும்.ஆனால் நம்பிக்கை இல்லாதவனாகவும் இருக்க வேண்டும்.அதாவது எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.இல்லையேல் ஆபத்து நேரிடும்' என்றார் பீஷ்மர்.

127-தாய்,தந்தை,குரு சிறப்பு
தருமர், பீஷ்மரிடம் 'தருமத்தில் பல இருக்கின்றனவே..எதை, எப்படி கடைபிடிப்பது? இம்மையிலும்,மறுமையிலும் எப்படிப்பட்ட தர்ம பயனை அடைவேன்?' என வினவினார்.

பீஷ்மர் சொன்னார்..'தருமா..தாய்,தந்தை.குருவை வழிபடுவது மிகவும் முக்கியமாகும்.நன்கு வணங்கப் படும் இவர்கள் இடும் கட்டளை எப்படியிருந்தாலும் நிறைவேற்ற வேண்டும்.தருமம் இல்லாத ஒன்றை அவர்கள் கட்டளையிட்டாலும் செய்ய வேண்டும்.
தந்தையை வழிபட்டால் இவ்வுலகையும், தாயை வழிபட்டால் மேல் உலகையும்,குருவை வழிபட்டால் பிரம்ம லோகத்தையும் பெறுவாய்.எனவே தருமா அவர்களை வழிபடு.மூன்று உலகிலும் புகழ் அடவாய்.எப்போதும் அம்மூவருக்கும் சேவை செய்வதே புண்ணியமாகும்.அம் மூவரைப் போற்றாதாரை உலகம் போற்றாது..

நான் எல்லா நற்காரியங்களையும் அவர்களுக்கே அர்ப்பணித்தேன்.அதனால் எனது புண்ணியம் நூறு மடங்காய் உயர்ந்தது.

நல்ல ஆசாரியர்..வேதம் பயின்ற பத்து அந்தணர்களைவிட உயர்ந்தவர்.உபாத்தியாயர் பத்து ஆசாரியரை விட உயர்ந்தவர்.தந்தையோ பத்து உபாத்தியாயரை விட உயர்ந்தவர்.தாயோ தந்தையை விட பல மடங்கு உயர்ந்தவள் ஆவாள்.ஆகவே தாய்க்கு நிகராக யாரையும் கூற முடியாது.

எனவே உபாத்தியாயரையும்,ஆசாரியரையும்,தாய் தந்தையரையும் மனத்தாலும் மாறுபட நினைக்கக் கூடாது.அவர்களைச் சொல்லால் நிந்திக்கக் கூடாது.நிந்தித்தால் பாவம் பெருகும்.துன்பம் கூடும்' என்றார் பீஷ்மர்.

128-எப்படி இருக்க வேண்டும்..

அரசரோ, பிறரோ பொருளைப் பெறுவது எப்படி? காப்பது எப்படி?பயன்படுத்துவது எப்படி? எனத் தருமர் வினவ பீஷ்மர் உரைக்கிறார்.

தருமா..சௌவீர நாட்டு மன்னன் சத்ருஞ்சனுக்குப் பரத்வாசர் சொன்னதை உனக்குப் பதிலாகச் சொல்கிறேன்

மன்னன் எப்போதும் தண்டனை தரத் தயாராய் இருக்க வேண்டும்.அப்போதுதான் மக்கள் பயத்துடன் தவறு செய்யாமல் இருப்பர்.தண்டனையே ஒரு அரசின் ஆணிவேர் எனத் தகும்.பெரிய மரம் ஆணிவேர் அறுந்தால் கீழே விழும்.அதன் கிளைகள் முறியும்.அது போலவே தண்டனையில்லை எனில் ஆட்சி எனும் மரம் ஆணிவேர் அற்ற மரம் போல சாயும்.அரசின் கிளை போன்ற மக்களும் பாதுகாப்பின்றித் துன்புறுவர். அறிவு மிக்க அரசன் பகைவனை வேருடன் களைய முற்பட வேண்டும். பின் அப்பகைவனுக்கு உதவியாக வருபவர்களையும் தொலைக்க வேண்டும் சொல்லில் பணிவும், மனதில் பகை போக்கும் எண்ணமும் நிலைத்திருக்க வேண்டும்.

பகைவனுடன் சேர்ந்து ஆற்ற வேண்டிய பணியில் அவனிடம் சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.அதே நேரம் முழுமையாக அவனை நம்பக் கூடாது.பாம்புடன் பழகுவது போல பகைவனிடம் பயந்தே பழக வேண்டும்.எண்ணம் ஈடேறும் வரை பகைவனைத் தோளில் சுமக்க வேண்டும்.வாய்ப்புக் கிடைக்கும் போது கீழே தள்ளித் தாக்கி வெற்றி காண வேண்டும்.

செல்வத்தை விரும்பும் மனிதன் பணிவுடன் இருக்க வேண்டும்.இன்சொல் கூற வேண்டும்.பிறருக்கு வணக்கம் செலுத்த வேண்டும்.வாழ்கின்ற காலம் குறைவாக இருந்தாலும் மின்னல் போல ஒளி விட வேண்டும்.உமியில் உள்ள தீயைப் போல ஒளியின்றி நெடுங்காலம் புகைந்து கொண்டிருக்கக் கூடாது.மேலும் நன்றி கெட்டவரிடம் கொடுக்கல் வாங்கல் கூடாது.நன்றி கெட்டவர்கள் காரியம் ஆகும் வரை நல்லபடியே இருப்பர்.ஆனதும் நம்மை அவமதிப்பர்.

மன்னன் , குயில், தான் பாதுகாக்க வேண்டியதை வேறொன்றைக் கொண்டு (காகத்தின் மூலம்) பாதுகாப்பது போல், உழவு,வாணிகம் முதலியவற்றில் பிறர் உதவி கோர வேண்டும்.கோரை முதலியவற்றை வேருடன் உண்ணும் பன்றியைப் போல மன்னன் பகையை வேருடன் களைய வேண்டும்.

சோம்பேறிகளும்,தைரியம் அற்றவர்களும், போலிக் கௌரவம் பார்ப்பவ்ர்களும், பிறர் என்ன சொல்வார்களோ எனப் பயப்படுபவர்களும், விட்டு விட்டு முயல்பவர்களும் பொருள்களையடைய மாட்டார்கள்.

ஆமை போல தன் அவயங்களை மறைத்துக் கொள்ள வேண்டும்.கொக்கு போல ஒரே நினைப்பாய் இருக்க வேண்டும்.சிங்கத்தைப் போல பயமின்றித் தன் வலிமையைக் காட்ட வேண்டும்.போகப் பொருள்களை மிதமாக அனுபவிக்க வேண்டும்.சமயத்திற்கேற்ப குருடன் போலவும்,செவிடன் போலவும் நடிக்க வேண்டும்.இடம், காலம் அறிந்து தன் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்.பகைவரின் வலிமை அறிந்து செயல்பட வேண்டும்.

பயம் வரும் வரை பயந்தவன் போல இருக்க வேண்டும்.பயம் வந்து விட்டாலோ பயம் இல்லாதவன் போல செயல் பட வேண்டும்.

கிடைத்த வாய்ப்பை நழுவ விடுவதும் இன்னொரு வாய்ப்பை எதிர்பார்ப்பதும் அறிவிடையார் செயல் அன்று.

பகைவருடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டு நிம்மதியாகத் தூங்குபவன் நிலை, மரத்தின் நுனியில் படுத்துத் தூங்கியவன் விழுந்த பின் விழித்துக் கொள்வதைப் போல ஆகும்.தன் நாட்டிலும் அயல் நாட்டிலும் யாரும் அறியாதவாறு ஒற்றர்களை நியமிக்க வேண்டும்.தண்ணீர்ச் சாலைகளில்,தோட்டங்களில்,விளையாடும் இடங்களில் அவர்கள் சென்று ஒற்று அறிதல் வேண்டும்.

திருடர்களுக்குச் சரியான தண்டனை அளிக்க வேண்டும்.நன்மை,தீமைகளை அறியாதவரையும், தீய வழியில் செல்பவரையும் மன்னன் தண்டிக்க வேண்டும்.இதமாக பேசினாலும் பகைவரை நம்பக் கூடாது.செல்வத்தை விரும்பும் மன்னன் மக்களைத் தன்வயப்படுத்திக் கொள்ள வேண்டும்.ஒருவனைத் தண்டிக்கும் போதும் அவனுடன் அன்புடன் பேச வேண்டும்.வாளால் பகைவனின் தலையை துண்டாக்கிய போது அவனுக்காக அழவும் வேண்டும்.செல்வத்தை விரும்பும் மன்னன் இன் மொழிகளாலும்,வெகுமதிகளாலும்,பொறுமையாலும் அனைவரையும் தன் வயப் படுத்திக் கொள்ள வேண்டும்.

கடனின் மீதி,நோயின் மீதி,பகையின் மீதி ஆகிய இவை உடனுக்குடன் வளரும் தன்மையுடையவை.வளரும் கடனும்,பகைவன் உயிருடன் இருப்பதும்,நோயின் மீதியும் பயத்தை உண்டாக்கும்.செய்ய வேண்டியவற்றைச் செம்மையாகச் செய்து முடிக்க வேண்டும்.முற்றிலும் எடுக்க படாத முள்ளும் உள்ளேயே இருந்து கொண்டு நீண்ட காலம் தொல்லை தரும்.

ஒவ்வொருவரும் கழுகைப் போல் தொலை நோக்குடனும்,கொக்கைப் போல லட்சியத்தின் மீது குறியுடனும்,நாயைப் போல குரைத்துக் கொண்டும்,சிங்கத்தைப் போல் வீரத்தை வெளிப்படுத்திக் கொண்டும் திகழ வேண்டும்.

அரசன் காலத்திற்கேற்ப மென்மையாக இருக்க வேண்டும்.கடுமையாகவும் இருக்க வேண்டும்.மென்மையால் எதையும் சாதிக்கலாம்.கடுமையாக இருப்பவனை மென்மையாக இருந்து வளைந்து கொடுத்து வெற்றி பெறலாம்.ஆகவே மென்மைத்தன்மை கடுமையைக் காட்டிலும் கூர்மையானது.அறிவாளியுடன் பகை கொண்டவன் 'நெடுந் தொலைவில் இருக்கிறேன்' என இருந்து விடக் கூடாது.

ஏனெனில் அறிஞனின் கைகள் மிகவும் நீளமானவை.அவன் ஏதாவது துன்பம் செய்து கொண்டே இருப்பான்.சக்திக்கு மீறிய செயலில் இறங்கக் கூடாது.நன்றாக வேர் ஊன்றிய மரத்தை சாய்த்தல் கடினம்.அதுபோலவே வலிமை வாய்ந்த மன்னனை வீழ்த்துவதும் கடினம்.இது முன்னரே சௌவீர நாட்டு மன்னனான சத்ருஞ்சனுக்கு பரத்வாசரால் சொல்லப்பட்டது" என பீஷ்மர் கூறினார்.

129-சரணம் அடைந்தவரைக் காப்பாற்றுவது - புறாவின் கதை

தருமர் பீஷ்மரிடம் 'காப்பவனுக்கு எது தருமம்?' என வினவ பீஷ்மர் சொல்கிறார்...

'தருமா..சரணம்-அடைக்கலம் என வந்தவரைப் பாதுகாப்பது உத்தமமான தருமம் ஆகும்..

சிபி முதலான அமைச்சர்கள் அபயம் என வந்தவரைக் காத்ததன் மூலம் உத்தம கதியை அடைந்தார்கள்.பறவைகளுக்குப் பகைவனான வேடன் ஒருவன் புறாவிடம் சரணடைந்தான்.அதனால் நன்கு உபசரிக்கப் பட்டான்.அது தனது மாமிசத்தையே அவனுக்கு அளித்து மேன்மை அடைந்தது' என்ற பீஷ்மர், முன்னர் பரசுராமரால் முகுந்த மன்னனுக்கு ஒரு கதை சொல்லப் பட்டது.பாவங்கள் அனைத்தையும் போக்க வல்ல அந்தக் கதையை இப்போது உனக்குக் கூறுகிறேன்..கேள்..எனக் கதையை கூறத் துவங்கினார்.

முன்னொரு காலத்தில் வேடன் ஒருவன் கொடிய மனதுடன் காட்டில் அலைந்து திரிந்தான்.பறவைகளைப் பிடிக்க இங்கும் அங்கும் வலைகளை விரித்தான்.வேட்டையாடுவதும், பெண் இன்பமும் தான் அவன் தொழில்.நாட்கள் பல சென்ற பிறகும் தனது அதர்மத்தை அவன் உணரவில்லை.

ஒருநாள் பெரும் சுழல் காற்றில் சிக்கிக் கொண்டான்.காட்டில் இருந்த மரங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் பேரொலியுடன் வீழ்ந்தன.எங்கும் பெரு மழை.வெள்ளக் காடு.கடுங்குளிரில் வேடன் நடுங்கினான்.வீடு செல்ல வழி தெரியவில்லை.பறவைகள் பெரு மழையால் வெளிவர இயலாது மரப் பொந்துகளில் பதுங்கிக் கிடந்தன.காட்டு விலங்குகளான சிங்கங்களும்,புலிகளும் மழையால் துன்புற்றுத் தரையில் வீழ்ந்தன.செல்லவும் முடியாமல், நிற்கவும் இயலாது தவித்துக் கொண்டிருந்த வேடனின் கண்ணில் பட்டது ஒரு பெண் புறா.பாவியான அந்த வேடன் அப்புறாவை எடுத்துத் தனது கூண்டில் போட்டுக் கொண்டு..ஒரு பெரிய மரத்தை அடைந்தான்.பறவைகளின் சரணாலயம் போல அம்மரம் தோற்றம் அளித்தது.

சிறிது நேரத்தில் மழை நின்றது.நீலவானம், நட்சத்திரங்களுடன் பளீச்சென தோற்றமளித்தது.குளிரால் நடுங்கிய வேடன் நேரத்தை யூகித்து அறிந்தான்.வீடு செல்வதற்குரிய நேரம் அல்ல அது.எனவே எஞ்சிய இரவுப் பொழுதை அம்மரத்தடியிலேயே கழிக்க எண்ணினான்.அம் மரத்திற்கு வணக்கம் செலுத்தி விட்டு , இலைகளை பாயாகப் பரப்பினான்.ஒரு கல்லையே தலையணையாகக் கொண்டு படுத்தான்.தூக்கம் வந்தது.

அம்மரத்தின் கிளையில் ஆண்புறா ஒன்று தன் இணையுடன் வாழ்ந்து வந்தது.காலையில் இரை தேடச் சென்ற அப்பெண் புறா இன்னும் திரும்பவில்லை.ஆண் புறா வருத்தத்துடன் 'பெருமழையில் என் பெண் புறாவிற்கு என்ன ஆயிற்றோ எனத் துன்புற்றது.என் மனைவி இல்லா வீடு சுடுகாடு போல தோன்றுகிறது,மகன்,மகள்,பேரன்,பேத்தி ..இப்படி வீட்டில் யார் இருந்து என்ன பயன்? மனைவியில்லையெனில் வாழ்க்கை ஏது?' எனப் புலம்பி அழுதது ஆண் புறா.

இந்த அழுகை ஒலி வேடனின் கூட்டில் அடைபட்டிருக்கும் பெண் புறாவின் காதில் விழுந்தது.'என் கணவர் என் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளார்.நான் உண்மையில் பாக்கியசாலிதான்.எந்தப் பெண் கணவனால் அன்புடன் நேசிக்கப் படுகிறாளோ, அவள் மகிழ்ச்சியின் எல்லைக்கே போய் விடுகிறாள்.பெண்களுக்கு, எவன் அக்னி சாட்சியாய் மணக்கிறானோ அவன் தான் தெய்வம்.எந்தப் பெண் கணவனால் பாராட்டப் படவில்லையோ அவள் வாழ்க்கை காட்டுத் தீயால் பற்றப்பட்ட பூங்கொத்து சாம்பல் ஆவது போல சாம்பல் ஆகும்' என்று தன் கணவனின் அன்பை எண்ணி மகிழ்ந்தது.அதே நேரத்தில் கூண்டில் அடைப்பட்டுக் கிடப்பதால் துன்புற்றது.அப்படி வேடனால் பிடிக்கப் பட்டு துன்புறும் போதும் அந்தப் பெண் புறா தன் ஆண் புறாவை நோக்கிக் கூறத் தொடங்கியது.

'உமது நலனுக்காக சிலவற்றைக் கூறுகிறேன்.அடைக்கலம் என யார் வந்தாலும் அவர்களை நன்கு உபசரிக்க வேண்டும்.வேடன் ஒருவன் உமது இடம் வந்து குளிராலும், பசியாலும் துன்புற்றுப் படுத்திருக்கிறான்.அவனுக்கு வேண்டிய உதவிகளை நீர் தர வேண்டும்.புறாக்களுக்கு உரிய தருமம் நீர் அறியாததல்ல.இல்லறத்தான் ஒருவன் தன் சக்திக்கு மீறி தர்மம் செய்வான் என்றால், மறுமையில் அளவில்லாத இன்பத்தை அவன் அடைவான்.நீர் உமது உடம்பின் மீது உள்ள பற்றை விட்டு விட்டு, அறத்தின் மீது பற்றுக் கொண்டு இந்த வேடன் மகிழ்ச்சி அடையும்படி செய்யுங்கள்.என்னை நினைத்து வருந்த வேண்டாம்' என்று கூறிய பெண்புறா தலையை உயர்த்தித் தன் கணவனின் செய்கையைக் கூர்ந்து கவனித்தது.

நுணுக்கமாக உபதேசம் செய்த பெண் புறாவின் சொற்களைக் கேட்ட ஆண் புறா மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தது.அந்த வேடனை வணங்கி..'உமது வரவு நல்வரவாகட்டும்.நீர் இப்போது என் விருந்தினர்.விருந்தினரை உபசரிப்பது கடமை.வீட்டிற்கு வந்தவன் பகைவனாய் இருந்தாலும் கூட அவனைக் காப்பதே கடமையாகும்.பெரிய மரமானது, தன்னை வெட்டி வீழ்த்துப்வனுக்கும் நிழல் தரத் தவறுவதில்லை.ஆகவே உமக்கு என்ன வேண்டும் என்று சொல்லவும்.அதை நிறைவேற்றுகிறேன்..' என்றது.வேடனும்..'என்னால் குளிரைத் தாங்க முடியவில்லை..அதனைப் போக்கவும்' என்றான்.

உடனே புறா, உலர்ந்த சுள்ளிகளையும், சரகுகளையும் கொண்டு வந்து குவித்து, தேடி அலைந்து நெருப்பையும் கொணர்ந்து தீ மூட்டியது.வேடன் குளிர் நீங்கியதும்..அவனுக்கு பசிக்க ஆரம்பித்தது.'எனக்கு பசிக்கிறது' என்றான் வேடன்.

புறா வேடனை நோக்கி, 'உன் பசியைப் போக்கத் தக்க செல்வம் என்னிடம் இல்லை.துறவிகளைப் போல நாங்களும் எதையும் சேர்த்து வைப்பதில்லை' என்று கூறி 'உன் பசியை சிறிது நேரம் பொறுத்துக் கொள் என்றுக் கூறி சுள்ளிகளைக் கொண்டு பெருந் தீீயை உண்டாக்கியது.பின் வேடனை நோக்கி..'என்னையே உணவாகக் கொண்டு உன் பசியைப் போக்கிக் கொள்' என்று கூறித் தீயில் வீழ்ந்து உயிர் துறந்தது.அது கண்டு வேடன் திடுக்கிட்டான்.'என்ன கொடுமை செய்து விட்டேன்' என்று புலம்பி அழுதான்.

வேடன் புறாவின் முடிவு கண்டு மனம் பதறினான்...'கொடியவனாகிய நான் என்ன காரியம் செய்து விட்டேன்..இனி நான் வாழ்ந்து என்ன பயன்..தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட இப் புறா மகாத்மா ஆகிவிட்டது.நான் பாவியாகி விட்டேன்.இனி உற்றார், உறவினரை விட்டு உயிர் விடத் தயாராகி விட்டேன்.இதற்கு இந்தப் புறாவே எனக்கு வழிகாட்டி.எல்லாப் போகங்களையும் இன்று முதல் துறந்து விடுகிறேன்.கோடை காலத்துக் குளம் போல என் உடல் வற்றி,துரும்பாகட்டும்.பசி,தாகம்,வெயில்,மழை,பனி இவற்றைப் பொருட்படுத்தாது உபவாசம் இருப்பேன்.மறுமை நோக்கித் தருமம் செய்வேன்.தவம் செய்வேன்' என உறுதி பூண்டான்.கையிலிருந்த வில்லையும், அம்பையும் ,பறவைகள் அடைத்து வைத்திருக்கும் கூண்டையும் தூக்கி எறிந்தான்.கூண்டில் இருந்த பெண் புறாவையும் வெளியே செலுத்தினான்.தானும் புறப்பட்டான்.

வேடன் சென்றதும் அந்தப் பெண் புறா தன் கணவனை நினைத்துத் துயரத்தில் வாடியது.'உம்மிடம் நான் கொண்ட அன்புக்கு குறைவு ஏது? பிள்ளைகள் பலரைப் பெற்ற போதும் கணவனை இழந்த மகளிர் துன்புறுவர்.கணவனை இழந்தோர்க்கு யாரைக் காட்டி ஆறுதல் அளிக்க முடியும். இதுவரை இணை பிரியாது வாழ்ந்தோம்.ஆறுகளிலும்,மலைகளிலும்,மரக் கிளைகளிலும் இன்பமாக பாடித் திரிந்தோம்.இனி அந்த நாட்கள் வருமா?கணவனுக்கு இணையான தெய்வமும் இல்லை..அன்பரே!நீர் இன்றி நான் வாழப்போவதில்லை.கற்பிற் சிறந்த எந்தப் பெண் தன் கணவனை இழந்த பின் உயிர் வாழ்வாள்?" எனக் கூறிக் கொண்டே ஆண் புறா வீழ்ந்த தீயில் தானும் வீழ்ந்து உயிர் நீத்தது.

என்ன வியப்பு!!!

அழகான ஆடை அணிகலங்களை அணிந்ததும், மேலோரால் புகழப்படுவதும் ,விமானத்திலேறிச் சுவர்க்கம் செல்வதுமான தனது கணவனை அப் பெண் புறா அடைந்து சுவர்க்க இன்பத்துடன் வாழ்ந்து வந்தது.

சுவர்க்க பூமியில் மகிழ்வுடன் செல்லும் இரு புறாக்களையும் கண்ட வேடன் மனமாற்றம் அடைந்தான்.தானும் தவத்தை மேற்கொண்டு அந்தப் பறவைகளைப் போல சுவர்க்கம் செல்ல வேண்டும் என் உறுதி கொண்டு, தன் தொழிலை விட்டான்.விரதங்களை மேற் கொண்டான்.

ஒருநாள் செல்லும் வழியில் அழகான குளத்தைக் கண்டான்.அக்குளத்தில் நீர் நிறைந்திருந்தது.பறவைகளின் ஒலி எங்கும் ஒலித்துக் காதுக்கு இனிமையாக இருந்தது.வேடனுக்கு தாகம் இருந்த போதும் குளத்தை நாடவில்லை.கொடிய விலங்குகள் வாழும் காட்டை நோக்கி நடந்தான்.அப்போது பெருங்காற்று வீசியது.மரங்கள் ஒன்றோடொன்று உராய்ந்தன.தீப்பொறி கிளம்பிக் காடே தீப்பற்றி எரிந்தது.விலங்குகள் அஞ்சி ஓடின.ஆயினும் அந்த ஆபத்தினின்றும் தப்பிச் செல்ல வேண்டும் என வேடன் கருத வில்லை.தீயில் எரிந்து பாவத்தைத் தொலைத்துச் சுவர்க்கம் அடைந்தான்.

தருமா...நற்செயலால் ஆண் புறாவும்,பெண் புறாவும் சுவர்க்கம் அடைந்தன.தவற்றினைத் திருத்திக் கொண்டு நல்லொழுக்கத்துடன் வாழ்ந்த வேடனும் சுவர்க்கம் அடைந்தான்.ஆகவே நல்லொழுக்கம் மேற்கொள்க" என்றார்

130-வியாசருக்கும் ஒரு புழுவிற்கும் நடந்த உரையாடல்
தருமர் பீஷ்மரிடம் 'போரில் இறக்க மனமில்லாதவரும், மனம் உள்ளவர்களும் கொல்லப்பட்டனரே! செல்வம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் , இன்பமிருந்தாலும், துன்பம் இருந்தாலும், எந்த நிலையிலும் எந்த ஜீவனும் உயிர் விடத் துணியவில்லையே! எல்லாம் ஆசையோடு வாழவே விரும்புகின்றனவே ஏன்? அதன் காரணத்தைக் கூறுவீராக' என்று கேட்க பீஷ்மர் கூறலானார்.

'தருமா..நல்ல கேள்வி கேட்டாய்.இது தொடர்பாக வியாசருக்கும்,ஒரு புழுவிற்கும் நடந்த உரையாடலை உனக்கு நினைவுப்படுத்துகிறேன்.ஒரு நாள் பாதையில் விரைவாக ஓடும் புழுவைப் பார்த்த வியாசர்..'புழுவே..நீ பயந்தவன் போல இருக்கிறாய்.வேகமாகப் போகிறாய்.உன் இருப்பிடம் எங்கே இருக்கிறது.யாரைக் கண்டு பயப்படுகிறாய்? சொல்' என்று வினவினார்.

அதற்குப் புழு, 'பாதைகளில் இரைச்சலுடன் செல்லும் வண்டிகளின் சப்தத்தைக் கேட்டு எனக்கு பயம் உண்டாயிற்று.அது என்னைக் கொன்றுவிடும் என பயந்து விலகிச் செல்கிறேன்.அதிகச் சுமையை இழுத்துக் கொண்டு சாட்டையால் அடிபட்டுப் பெருமூச்சு விட்டுத் துன்புறும் எருதுகளின் ஓசையையும் நான் உணர்கிறேன்.வண்டிகளை ஒட்டுவோர் ஒலியும் கேட்க முடிகிறது.என் போன்ற புழுப் பிறப்பினர் அதைத் தாங்க முடியாது.அந்தப் பயத்தால் விலகிப் போகிறேன்.யாருக்குத்தான் உயிரை விட மனம் வரும்' என பதில் அளித்தது.

அந்தப் புழு அவ்வாறு கூறியதும் வியாசர் அதைப் பார்த்து 'புழுவே..உனக்கு ஏது இன்பம்?விலங்கு பிறப்பாகிய உனது மரணமே இன்பம் பயக்கும் என நினைக்கிறேன்' என்றார்.

அது கேட்ட புழு, 'உயிரானது தான் எடுத்த தேகங்களில் பற்றுடன் இருக்கிறது.இந்தத் தேகத்திலும் எனக்கு இன்பம் இருப்பதை நான் உணர்கிறேன்.ஆகவே..நான் உயிருடன் பிழைத்திருக்கவே விரும்புகிறேன்.எந்தப் பிறவியிலும் உடலுக்கு ஏற்றபடி இன்பத்திற்குரிய பொருள் எல்லாம் உண்டாக்கப்பட்டுள்ளன..நான் மனிதப் பிறவியில் மிகவும் செல்வம் உள்ளவனாகப் பிறந்திருந்தேன்.

எனது பேதைமையினால் உயர்ந்தோரைப் பகைத்துக் கொடியவனாக மாறினேன்.விருந்தினருக்கும்,ஏழைகளுக்கும் எதுவும் தராமல் சுவையானவற்றைத் தேர்ந்தெடுத்து நானே எல்லாவற்றையும் சாப்பிட்டேன்.ஏழைகளுக்கு உணவு தரவில்லை.யாராவது கொடுத்தால் அதையும் பறித்துக் கொண்டேன்.பிறருடைய ஆக்கம் கண்டு பொறாமை கொண்டேன்.
பிறர் அனுபவிக்கும் இன்ப சுகத்தைக் கண்டு பொறாமை கொண்டேன்.பிறர் அனுபவிக்கும் இன்ப சுகத்தைக் கண்டு முகம் சுளித்தேன்.மற்றவர் பெற்ற நன்மை கண்டு வயிறு எரிந்தேன்.இப்படி முன் பிறவியில் தகாதவற்றை செய்தேன்.அவற்ரையெல்லாம் இப்போது நினைத்து மகனை இழந்தவன் போல துன்புறுகிறேன்.நல்வினை எதையும் செய்ததாகத் தெரியவில்லை.எவ்வளவு கெட்ட குணம் என்னிடம் இருந்த போதிலும் என் தாயை நான் என் கண் போல பாதுகாத்தேன்.ஒருமுறை என் வீட்டிற்கு வந்திருந்த விருந்தினருக்கு உணவு அளித்து உபசரித்தேன்.அந்த ஒரு நற்செய்கையால்தான் நான் இப்பிறவியில் இன்பத்தில் விருப்பம் கொண்டுள்ளேன்.அதனால் முந்தைய பிறவியின் நினைவு என்னை விட்டு அகலாமல் இருக்கிறது.

வியாசரே! அந்த நல்ல செயல்களின் விளைவைப் பற்றி மேலும் விளக்கமாகக் கூறுங்கள்" என்று கேட்டது.

வியாசர்..'புழுவே..நீ முன் பிறவியில் செய்த சில செயல்களால் பண்டைப் பிறவியின் நினைவில் திளைக்கிறாய்.நீ விரும்பினால் மனிதப் பிறவி எடுத்துச் சிறந்த பலன்களை அடையலாம்.ஆயின் பொருளுக்காகவே அலையும் அறிவு கெட்ட மனிதனுக்கு ஒரு நன்மையும் கிடையாது.நீ விரும்பும் குலத்தில் பிறக்கும் பேற்றினைத் தருகிறேன்' என்றார்.

புழு, தனது அடுத்த ஷத்திரியப் பிறவியில் வியாசரைச் சென்று பார்த்து வணங்கியது.'மாமுனிவரே! உம் போதனையைப் பின்பற்றியதால் நான் க்ஷத்திரியனாக..ராஜபுத்திரன் ஆனேன்.இது நான் விரும்பிய பிறவிதான்.என்னுடைய வைபவத்தை எண்ணி நானே வியப்படைகிறேன்.எத்தனை யானைகள் என்னைத் தாங்கிச் செல்கின்றன.

எனது தேரை உயர்ந்த காம்போஜ நாட்டுக் குதிரைகள் இழுத்துச் செல்கின்றன.மிகச் சிறந்த ஒட்டகங்களும், கோவேறு கழுதைகளும் எனக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் முன்னே செல்கின்றன.ஏராளமான பேர் என்னை வந்து துதித்துப் போற்றுகின்றனர்.இன்னும் எனக்குப் புழுப் பிறவியின் நினைவு வருகிறது.உமது தவ மஹிமையால்தான் நான் அரச வாழ்வு பெற்றேன்.இனி நான் என்ன செய்ய வேண்டும்..கட்டளையிடுங்கள்' என விரும்பி வேண்டியது.

அதற்கு வியாசர்..'நீ புழுவாகப் பிறந்தாலும்..என்னை வணங்கிப் போற்றியதால் அரச வம்சத்தில் பிறந்திருக்கிறாய்.நீ விரும்பினால் அடுத்த பிறவியில் அறவோராகப் பிறக்கலாம்' என்று ஆசி கூறினார்.

நல்லொழுக்கத்தினால் சிறந்த அறவோனாகப் பிறந்து பின் இறந்து தேவனாகப் பிறந்து தேவ சுகம் அனுபவித்தது புழு.

131-ஞானம்,தவம்,தானம்

தருமர் பீஷ்மரிடம்..'ஞானம்,தவம்,தானம்..இவற்றுள் சிறந்தது எது? என வினவ பீஷ்மர் கூறுகிறார்.

'முன்னொரு காலத்தில் வியாசருக்கும்,மைத்ரேயருக்கும் நடைபெற்ற ஒரு உரையாடலைக் கூறுகிறேன்.ஒரு முறை வியாசர் யாருக்கும் தெரியாமல் மைத்ரேயரை சந்தித்தார்.மாறுவேடத்துடன் வந்த வியாசருக்கு அறுசுவை உணவளித்தார் மைத்ரேயர்.உணவு உண்டு எழுந்திருக்கும் போது வியாசர் நகைத்தார்.அது கண்ட மைத்ரேயர் வியாசரை நோக்கி'தாங்கள் நகைத்தற்குரிய காரணத்தை நான் தெரிந்துக் கொள்ளலாமா? உம்மிடம் தவச்செல்வம் இருக்கிறது.என்னிடம் பொருட் செல்வம் இருக்கிறது.இவற்றின் தன்மைகளை விளக்கவேண்டும்" என்றார்.

வியாசர் சொன்னார் 'தவச் செல்வத்திற்கும் பொருட் செல்வத்திற்கும் சிறிது வேறுபாடு உண்டு.தவச் செல்வம் எல்லா நன்மைகளையும் தருவதனால் எல்லாவற்றையும் விடச் சிறந்ததாகும்.நீ மிகுதியானப் பொருளைச் செலவழித்தாலும் அதிகமாக இன்சொல் கூறியதாலும் எனக்கு நகையுண்டாயிற்று.வேதம் என்ன சொல்கிறது தெரியுமா?பிறருக்குத் தீங்கு இழைக்கக் கூடாது.கொடுக்க வேண்டும்.உண்மையே பேச வேண்டும் என்ற மூன்றையும் வேதம் வற்புறுத்திக் கூறுகிறது.தாகத்துடன் இருப்பவனுக்குத் தன்ணீர் தருவது பெரும் கொடையாகும்.தேவர்களை நீர் வழிபட்டதனால் என் தரிசனம் உமக்குக் கிடைத்தது.

உமது தூய தானத்தினாலும், தவத்தினாலும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.உம்மிடம் இருந்து நல்ல மணம் தூரத்திலும் வீசுகிறது.இது உமது கர்மப் பலன் என்றே கருதுகிறேன்.சந்தன மணம் போன்றதுதான் நல்ல செயல்களால் வீசும் மணமும்.தானம் தான் எல்லாப் புண்ணியங்களையும் விட மேலான புண்ணியம்.மற்றப் புண்ணியங்கள் இல்லாவிடினும் தானமே மிகச் சிறந்ததாகும்.இதில் ஐயம் இல்லை.தானம் செய்பவர்கள் உயிரையும் தரத் தயாராய் இருப்பர்.அவர்களிடத்தில் தான் தருமம் நிலை பெற்றிருக்கிறது.

ஆகமங்களைப் பயில்வதும், துறவு மேற்கொள்வதும், ஐம்பொறிகளை அடக்கித் தவம் செய்வதும் ஆகிய அனைத்தையும் விடத் தானம் மிக உயர்ந்ததாகும்" என்றார்.

132-பாவத்திற்குக் காரணம்..
பாவத்திற்குக் காரணம் யாது என்ற தருமரின் வினாவிற்கு பீஷ்மர் அளித்த பதில்

'தருமா! பெரிய முதலை போன்றது பேராசை.அதுவே பாவத்திற்கு இருப்பிடமாகும்.பேராசையிலிருந்து பாவமும், துன்பமும் உண்டாகின்றன.மேலும் பேராசை இம்சைக்குக் காரணமாகிறது.பேராசையால் சினம் உண்டாகிறது.மடமை, சூழ்ச்சி,மானக்கேடு,பொறாமை,பொருள் நஷ்டம்,பழி ஆகிய அனைத்திற்கும் பேராசையே காரணமாகும்.மக்கள் தம் தீய செயல்களை விடாமல் இருப்பதற்கும் காரணம் பேராசைதான்.எவ்வளவுதான் இன்ப போகங்களை ஒருவன் அனுபவித்தாலும் அவனது ஆசைக்கு அளவே கிடைசாது.பல நதிகள் வந்து விழுந்தாலும் கடல் நிரம்பாதது போல பேராசை உள்ளவனிடம் எவ்வளவு செல்வம் இருந்தாலும் மன நிறைவு ஏற்படாது.தேவர்களும், அசுரர்களும் கூடப் பேராசையின் உண்மைத் தன்மையை உணரவில்லை

அறியாமையையும்,ஐம்பொறிகளையும்,மனத்தையும் வென்ற மனிதன் பேராசையை வெற்றி கொள்ள வேண்டும்.மனதை அடக்காத பேராசைக்காரரிடம் வீண் ஆடம்பரம்,துரோகம், புறங்கூறல்,பொறாமை ஆகியவை இருக்கும்.மிகப் படித்த அறிஞர்கள் ஆகமக் கருத்துக்களை நன்கு மனதில் வைத்திருப்பர்.பல ஐயங்களை விலக்குவர்.ஆனால் பேராசை காரணமாக அவர்கள் அறிவு இழந்து எப்போதும் துன்புறுவர்.அவர்கள் உள்ளம் கொடூரமானது.ஆனால் தேனொழுகப் பேசுவர்.தருமத்தின் பெயரால் அவர்கள் உலகைக் கொள்ளையடிப்பர்.

மன்னனே! நேர்மையானவர்களைப் பற்றிக் கூறுகிறேன்.அவர்கள் மேல் உலகம் இல்லையென்றாலும் ஈதலே கடன் என்று எண்ணுபவர்.விருப்பு வெறுப்பு அற்றவர்.பெரியோர்களின் சொற்களில் சிந்தை செலுத்தும் இயல்பினர்.புலனடக்கம் உடையவர்.வாய்மையைப் போற்றுபவர்.இன்பத்தில் திளைக்க மாட்டார்கள்.துன்பத்தில் மூழ்க மாட்டார்கள்.இரண்டையும் சமமாகக் கருதுவர்.அவர்கள் செய்யும் தருமம் பிறர் பாராட்டுதலுக்கோ புகழுக்கோ அல்ல.பயம்,சினம்,ஆசை ஆகியவை இவர்களிடம் நெருங்கா.இத்தகையோரை நீ போற்றுதல் வேண்டும்.

133-அறியாமை பற்றி அறிதல்

தருமர் பீஷ்மரை நோக்கி..'பிதாமகரே! அறியாமை பற்றி அறிய விரும்புகிறேன்' என பணிவிடன் கேட்க பீஷ்மர் சொல்லத் தொடங்கினார்.

"மனிதன் அறியாமையால் பாவம் செய்கிறான்.அதனால் தனக்குத் தகுதியானதை அறிந்து கொள்ளாது சாதுக்களிடம் குறை காண்கிறான்.உலக நிந்தனைக்கு ஆளாகிறான்.தீய கதியாகிய நரகத்திற்கு அறியாமையே காரணம் ஆகிறது.அதனால் ஆபத்தில் சிக்கித் துன்பம் அடைகிறான்.

ஆசை,பகை,காமம்,சினம்,கர்வம்,விருப்பு,வெறுப்பு,பிறர் ஆக்கம் கண்டு பொறாமை கொள்ளுதல் ஆகிய இவை யாவும் அறியாமையால் தோன்றுபவையே! ஆகவே அறியாமையை அகற்றுவாயாக!" என்றார்

உடன் தருமர்..'மேலோனே! தருமம் பலவகையாகக் காணப்படுகிறதே, எது சிறந்த தருமம் எனக் கூற முடியுமா?'என வினவ

'பேரறிவு படைத்த தருமா..மகரிஷிகள் பல வகையான தருமங்களை உபதேசித்து இருக்கிறார்கள்.அவற்றில் மிகச் சிறந்தது புலனடக்கம் ஆகும்.இதுவே முக்திக்குக் காரணமாகும்.புலன் அடக்கம்...,தானம்,யாகம் ஆகியவற்றை விட மேலானது.புலனடக்கம் உடையவனின் முகம் பொலிவுடன் ஒளி வீசும்.புலன் அடக்கம் தரும சிந்தனையை வளர்க்கும்.உயிர்களிடத்து அருளுடைமையைத் தூண்டும்.

புலனடக்கத்திற்கான அடையாளங்களைத் தெரிந்து கொள்.பொறுமை,துணிச்சல்,கொல்லாமை,நன்மை..தீமைகளைச் சமமாக பாவித்தல்,வாய்மை,நேர்மை,நாணம்,சினம் இன்மை,இன்சொல்,யாவரிடத்தும் அன்புடன் பேசுதல்..இவையெல்லாம் புலனடக்கத்தால் ஏற்படும்.புலனடக்கம் உள்ளவனை யாரும் பழிக்க மாட்டார்கள்.அவன் ஆசை அற்றவன்.அற்ப சுகங்களை விரும்பாதவன்.உற்றார், உறவினர் என்ற பந்தங்களினின்றும் அவன் விடுபட்டவன்.பிறருடைய புகழ்ச்சியோ, இகழ்ச்சியோ அவனைப் பாதிப்பதில்லை.சாதுக்களால் பின்பற்றப்பட்ட வழியே அவன் செல்லும் பாதை ஆகும்.புலன் அடக்கம் உள்ளவன் தவம் புரியக் காடு செல்ல வேண்டியதில்லை.அது இல்லாதவன் காடு சென்றும் பயனில்லை.ஆதலால் அவனுக்கு எது வாழும் இடமோ அதுவே காடு..அதுவே ஆஸ்ரமம்' என்றார் பீஷ்மர்.

134-தவத்தின் மேன்மை

இந்த உலகமே தவத்தால் இயங்குகிறது.தவத்தை மேற்கொள்ளாதவனுக்கு ஒரு காரியமும் நடைபெறாது.தவத்தால்தான் பிரமதேவன் இவ்வுலகைப் படைத்தான்.மாமுனிகள் ஞானத்தைப் பெற்றதும் தவத்தால்தான்.மன அடக்கம் உள்ள சித்தர்கள் தவத்தினால் மூவுலகையும் அறிகிறார்கள்.பெறுதற்கு அரியதும் தவத்தால் கூடும்.பாவங்களிலிருந்து விடுபட உதவுவதும் தவம் தான்.

தவம் பல வகை.எனினும் உபவாசத்தை விட உயர்ந்த தவம் இல்லை.கொல்லாமை,வாய்மை,தானம்,புலனடக்கம் ஆகிய இவற்றைவிட மேலானது உண்ணாவிரதம்.

தாய்க்குச் செய்யும் பணிவிடையைக் காட்டிலும் மேலான தவம் இல்லை.முற்றும் துறந்த துறவிகூடத் தாயைப் பாதுகாக்க வேண்டும் என்பது விதி என்றார் பீஷ்மர்.

135-கோபம் எதனால் தோன்றுகிறது
கோபம் முதலானவை எதனால் தோன்றுகின்றன? எப்படி அழிகின்றன? என்ற வினாவிற்கு பீஷ்மர் தந்த பதில்

கோபம், மோகம், காமம், சோகம், பிறருக்குத் தீங்கு செய்ய எண்ணும் எண்ணம் ஆகியவை உயிர்களுக்குப் பலமான வைரியாகும்.இவை மனிதர்களைச் செந்நாய்கள் போலச் சூழ்ந்து அழிக்கும்.துன்பத்திற்கு இவைதாம் காரணம் என உணர்தல் வேண்டும்.இவை பற்றி விரிவாகக் கூறுகிறேன் கேட்பாயாக..
கோபம் பேராசையில் இருந்து தோன்றுகிறது.பொறுமையால் அது அழியும்.புலனடக்கம் இன்மையால் காமம் உண்டாகிறது.மனிதன் அறிவு பெற்று வெறுப்புக் கொள்வானாயின் அப்போது காமம் அழியும்.மோகம் அறியாமையால் உண்டாகிறது.அறிஞர்களின் அறிவுரைகளை ஏற்று நடப்பதன் மூலம் அது அழியும்.பொருள் மீது கொண்ட ஆசை விலகுமாயின் அப்பொருளை இழத்தலால் ஏற்படும் சோகம் விலகும்.பிறருக்குத் தீங்கு செய்யும் எண்ணம் கோபத்தாலும்,பேராசையாலும் உண்டாகும்.அவற்றுள் கோபத்தால் உண்டாவது உயிர்களிடத்துத் தோன்றும் அன்பால், அருளால் அழியும்.பேராசையால் தோன்றுவது அறிஞரின் தத்துவ உபதேசத்தால் அழியும்' என்றார் பீஷ்மர்.

136-பகைவரிடம் விழிப்பாய் இருக்க வேண்டும்
தருமர் பீஷ்மரிடம்.."பிதாமகரே! யாரிடமும் நம்பிக்கை வைக்கக் கூடாது எனக் கூறினீர்..அப்படி இருப்பது எப்படி சாத்தியமாகும்?' என வினவ பீஷ்மர் விளக்கினார்.


'ஒரு காலத்தில் பிரமதத்தன் என்னும் அரசன் ஆட்சி செய்து வந்தான்.அவனது அரண்மனையில் பூஜனி என்னும் குருவி நெடுங்காலமாக இருந்து வந்தது.அது பறவையாக இருந்த போதும் வேடனின் பண்புகளுடன் இருந்து வந்தது.எதேனும் பறவை, எங்கேனும் ஒலி எழுப்பினால், உடனே அது எந்தப் பறவை என்று சொல்லும் அறிவு மிக்கது அது.

அந்தக் குருவி அந்த இடத்திலேயே ஒரு அழகான குஞ்சைப் பெற்றெடுத்தது.அதே சமயம் அரசிக்கும் ஒரு ஆண் குழ்ந்தை பிறந்தது.பூஜனி என்னும் அக்குருவி இரு குழந்தைகளுக்கும் நெடுந்தூரம் சென்று வலிமை தரும் பழங்களைக் கொண்டு வந்து தரும்.அப்பழங்களை உண்டு வளர்ந்த அரசகுமரன் வலிமையுடன் திகழ்ந்தான்.

ஒருநாள் அந்தக் குழந்தை, யாரும் இல்லாத போது குருவிக் குஞ்சைக் கொன்று விட்டது.பூஜனிக் குருவி வழக்கம் போல பழங்கலைக் கொண்டு வந்தது.தன் குஞ்சு கொல்லப் பட்டுத் தரையில் கிடந்ததைக் கண்டு கதறித் துடித்தது.'தகாதவரிடத்து நட்புக் கூடாது. அவர்களிடம் அன்பு கிடையாது. நல்ல எண்ணமும் கிடையாது.காரியம் முடிந்ததும் அவர்களைக் கை விட்டு விடுவர். நன்றி கொன்ற இந்த அரசகுமாரனுக்குச் சரியான பாடம் புகட்டுவேன். பழி வாங்குவேன்' என்று சபதம் எடுத்துக் கொண்டது.
உடனே அரச குமாரனின் கண்களைக் கூரிய நகங்களால் பறித்து எடுத்துக் கொண்டு விண்ணில் பறந்தது.'இவ்வுலகில் செய்கின்ற பாவம் உடனே செய்தவனைச் சாரும்.செய்யப்பட்ட பாவத்தின் பயன் செய்தவனிடத்தில் சிறிதும் காணப்படாமல் போனாலும், அவனது சந்ததியைச் சார்ந்து துன்பத்தைத் தரும்' என்று சொல்லியது பூஜனி.

தன் மைந்தனின் கண் பார்வை குருவியால் பறிக்கப் பட்டதை உணர்ந்த அரசன்,'மைந்தனின் செயலுக்குத் தண்டனை கிடைத்து விட்டதாகக் கருதி, பூஜனியை நோக்கி..'பூஜனி என் மகன் செய்த தீங்குக்கு நீ தக்க தண்டனை வழங்கி விட்டாய்.இரண்டும் சமமாகி விட்டன.நடந்ததை மறந்து இங்கேயே தங்கி விடு' என்றான்.

அது கேட்ட குருவி 'ஒருமுறை தவறு நேர்ந்த பிறகு அங்குத் தங்கி இருப்பதை சான்றோர் ஏற்பதில்லை.எனவே நான் இந்த இடத்தை விட்டுச் செல்வதே பொருத்தமாகும்.வெளிப்படையாக விரோதம் ஏற்பட்ட இடத்தில் நன்மொழிகள் கூறிப் பயனில்லை.இனி நம்பிக்கை ஏற்படாது.பசப்பு வார்த்தைகளால் ஒரு பயனும் இல்லை.நட்பைக் கெடுப்பவரிடம் நம்பிக்கை கொள்ளாது இருப்பதே இன்பமாகும்.உறவினருள் தாயும்,தந்தையும் உயர்ந்தவர் ஆவர்.

மகன் விதையைப் போன்றவன்.நம் கையில் பணம் உள்ளவரைதான் நண்பர்கள் நம்மை நாடுவர்.ஆதலால் நமது இன்ப துன்பங்களை அனுபவிப்பது ஆத்மா ஒன்றே! ஒருவருக்கொருவர் பகை கொண்டபின், அறத்தில் நாட்டமுடைய நெஞ்சம் வைராக்கியம் அடைந்தபின் சமாதானம் என்ற எண்ணமே வரக் கூடாது.மறுபடியும் மரியாதைக் கிடைத்தாலும் அந்த இடத்திற்குப் போகக் கூடாது' என்று உரைத்தது.

'குருவியே! ஒருவன் செய்த தீவினைக்குப் பிராயச்சித்தம் செய்வானாகில் அந்தக் குற்றம் அதோடு போயிற்று! எனவே இங்கு தங்கி இரு' என்று கேட்டுக் கொண்டான் அரசன்.அது கேட்ட குருவி மன்னனைப் பார்த்து 'ஒருமுறை தீங்கு நேர்ந்து மனம் மாறிய பின் மீண்டும் ஒன்று பட வாய்ப்பில்லை.இருவர் உள்ளத்திலும் தாம் செய்த தீங்கு உறுத்திக் கொண்டே இருக்கும்' என்று கூறிற்று.

பிரமதத்தன், 'பூஜனி, பழி வாங்கிய பிறகு பகை மாறும்.சாந்தி ஏற்படும்.குற்றம் செய்தவனும் அவன் பாவத்தை அனுபவிக்க நேராது.ஆதலால் இருவருக்கும் நட்பு உண்டாகலாம்' என்றான்.

குருவி 'இப்படிச் சாந்தி ஏற்படாது.எதிரி தன்னை சமாதானப்படுத்தி விட்டான் என்று கருதி அவனை நம்பவே கூடாது.ஆகவே இனி இங்கு நான் என் முகத்தைக் காட்டக் கூட விரும்பவில்லை' என்று கூறிற்று.'ஓ பூஜனியே, நாயைக் கொன்று தின்று வாழும் கீழோன் நாயையே வளர்த்து வருகிறான்.அவனிடம் நாளடைவில் நாய் நட்பாகி விடுகிறது.அதுபோலவே வைராக்கியத்துடன் இருக்கும் இருவர் இணைந்து வாழ்வாரானால் வைராக்கியம் மாறி நாளடைவில் நட்பு நிலைத்து விடும்' என்று கூறினான் பிரமதத்தன்.

இதுகேட்ட பூஜனி "ஓ..மன்னனே..வைராக்கியம் ஐந்து காரணங்களால் ஏற்படும்.ஒன்று-பெண்டிர் காரணமாகத் தோன்றும்.இரண்டு-நிலம்,தோட்டம்,வீடு முதலான பொருள்களூக்காக ஏற்படும்.மூன்று-வாய்ப்பேச்சு காரணமாக எழும்,நான்கு-பிறவியிலேயே தோன்றுவது ஐந்து-எப்போதோ நேர்ந்த குற்றத்திற்காக உண்டாகும்.இவற்றில் எவ்விதத்தில் வைராக்கியம் ஏற்பட்டாலும்-தவறு செய்தவன் மன்னனே ஆனாலும் அவனிடம் நம்பிக்கை வைக்கக்கூடாது.வைராக்கியம் என்னும் தீயை நன்மொழிகளாலோ,சாத்திரத்தாலோ போக்க முடியாது.அத்தீயை யாராலும் அணைக்க முடியாது.ஆகவே இனி உன்னை நம்ப மாட்டேன்" என்றது

அது கேட்ட பிரமதத்தன் பூஜனியை நோக்கி 'குருவியே! எல்லாம் காலத்தின் செயல்கள் தான்.நீயோ,நானோ எதற்கும் காரணமாவதில்லை.மனிதன் காலத்தால் பிறக்கிறான்.காலம் முடிந்ததும் இறக்கிறான்.இதுபோலத் தான் எல்லாம் காலாகாலத்தில் நிகழ்கின்றன.தீயானது விறகை எரிப்பது போலக் காலம் எல்லாவற்றையும் எரிக்கிறது.தோற்றுவிக்கிறது - மறைக்கச் செய்கிறது - மறக்கச் செய்கிறது.எனவே ஒருவருக்கு ஏற்படும் நன்மை தீமைகளுக்கு வேறு யாரும் காரணமில்லை.காலம்தான் காரணம்.இதை புரிந்து கொண்டு நட்போடு இரு.நீ செய்ததை நான் பொறுத்தது போல், என் மகன் செய்ததை நீயும் பொறுத்துக் கொள்' என்றான்.

ஆனால், பூஜனி விடவில்லை.'எல்லாம் காலம்தான் என்றால், எல்லாரும் ஏன் இப்படி தவிக்கிறார்கள்? அனைத்திற்கும் காலமே காரணம் என்பது உண்மையானால் நோய் உற்றவர் ஏன் மருத்துவரை நாட வேண்டும்? காலத்தின் விளைவு என்றால் உற்றார்,உறவினர் இழப்புக்கு ஏன் அழ வேண்டும்? காலமே காரணமானால் புண்ணியம் சம்பாதிக்க யாருக்குத் தான் மனம் வரும்? என் குழந்தையைக் கொன்ற உன் மகனை நான் துன்புறுத்தினேன்.இதற்காக என்னை நீ துன்புறுத்துவாய்..கொல்வாய்..

மனிதர்கள் உணவுக்காகப் பறவைகளைக் கொல்கின்றனர். இது தவிர வேறு நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. துக்கம் பிறப்பானாலும் இறப்பானாலும் உண்டாகிறது என வேதங்கள் கூறுகின்றன.எல்லாருக்கும் உயிரின் மீது ஆசை உண்டு. அதுபோலவே மனைவி மக்கள் சுற்றத்தார் ஆகியோரிடமும் ஆசை ஏற்படுகிறது. முதுமை ஒரு துக்கம். பொருள் இழப்பு ஒரு துக்கம். வேண்டாத இடத்தில் இருப்பது ஒரு துக்கம்.

இதுபோலவே வைராக்கியத்தால் ஏற்படும் துக்கமும், பெண்களால் ஏற்படும் துக்கமும் உண்டு.இறந்த மகனால் உண்டாகும் துக்கத்தை மறக்கவே முடியாது.பிறருக்கு ஏற்படும் துக்கத்தைக் கண்டு நாமும் துக்கப் படுகிறோம்..மன்னா..நீ எனக்கு இழைத்த கொடுமையும் நான் உனக்கு செய்த துன்பமும் நெடுநாள் ஆன பிறகும் அழியா.வைராக்கியம் ஏற்பட்டபின் நெருங்கி வாழ நினைப்பது உடைந்த மட்கலம் ஒன்றாவது போல ஆகும்'

பகைவர் வார்த்தைகளில் நம்பிக்கை கொள்வோர் புற்களால் மூடப்பட்ட குழியில் வீழ்ந்து துன்புறுவது போல் துன்புறுவர்.

ஒருவனுக்கும் கெடுதி செய்யாது இருக்க வேண்டும்.கெடுதி செய்த பின் நம்பிக்கக் கொள்ளக் கூடாது.நம்பினால் அழிவி நிச்சயம்' என்றது பூஜனி.

பிரமதத்தன் 'நம்பிக்கையின்றி உலகில் ஒன்றும் சாதிக்க முடியாது.எந்த செயலையும் செய்ய இயலாது.பொருளையும் சேர்க்க முடியாது.ஒருவன் எப்போதுமொருவிதமான சந்தேகத்தோடும் பயத்தோடும் இருந்தால் அவனை உயிர் வாழ்பவனாகவே கருத முடியாது.அவனை செத்தவனாகவே உலகம் கருதும்.எனவே என்னிடம் நம்பிக்கையோடு வந்திரு' என்றான்.

ஆயினும் பூஜனியின் மனம் மாறவில்லை.'மன்னா..புண்பட்ட காலுக்கு என்னதான் பாதுகாப்பான ஏற்பாடுகளைச் செய்துக் கொண்டு ஓடினாலும் கூட அக்காலுக்கு வலி உண்டாகும்.துன்பம் உள்ள கண்ணால் காற்றை எதிர்த்துப் பார்த்தால் துன்பம் அதிகமாகும்.ஒருவன் அறிவு கெட்டு தீய வழியில் சென்றால் அழிவு நிச்சயம்.

தெய்வமும், முயற்சியும் ஆகிய இரண்டில் ஒருவனுக்கு உதவுவது முயற்சியே!இயல்பாக முயற்சி இல்லாதவன் வாழ்க்கையில் தோல்வியையே சந்திப்பான்.கல்வி,தூய்மை,திறமை,ஆளுமை,வைராக்கியம் ஆகிய ஐந்தும் ஒரு சேரக் கருதத் தக்கன.மனிதனுடைய சொத்துகள் முயற்சியால் வருபவை.முயற்சியுடையவன் இவற்றைப் பெற்று இன்பத்தை அனுபவிக்கிறான்.பிறரைக் கண்டு அவன் பயப்படமாட்டான்.அறிவுடையவன் செல்வன் நாளாவட்டத்தில் பெருகும்.

சிலர் தம் மனைவி,பிள்ளைகள்,உறவினர் ஆகியோரிடத்து மிகுந்த பாசம் கொண்டு துன்புறுவர்.அறிவாளிகள் அதிகம் பாசம் கொள்ளாத காரணத்தால் துன்பமுறுவதில்லை.மேலும் அறிஞர்கள் தீய நெறியிலிருந்தும்,அவமரியாதை உள்ள இடத்திலிருந்தும் விலகியே இருப்பர்.ஆதலால் நான் வேறு இட செல்கிறேன்.இங்கு இருக்க எனக்கு விருப்பமில்லை' என்று கூறி அப்பறவை மன்னனிடம் அனுமதி பெற்றுப் பறந்து சென்றது.

137-பலமுள்ள பகைவன் விரோதமானால்...
தருமர் பீஷ்மரிடம் 'பலமுள்ள பகைவனிடம் விரோதம் கொண்டால், எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என வினவ, பீஷ்மர், இரு இலவ மரத்திற்கும், நாரதருக்கும் நடந்த உரையாடலை எடுத்துக் காட்டாக சொல்ல ஆரம்பித்தார்..

முதலில் பீஷ்மர் இமய மலைக்கும், காற்றுக்கும் நடந்த உரையாடலை விளக்கினார்.

'இமயமலையில் மிகப் பெரிய இலவ மரம் ஒன்று இருந்தது.அது பருத்த அடி மரத்தையும், நிறைந்த கிளைகளையும், தழைத்த இலைகளையும், உறுதி மிக்க வேர்களையும் கொண்டு இருந்தது.அம்மரத்தில் பூக்களும், கனிகலும் மிகுதியாக இருந்தன.அவற்றைத் தின்ன வரும் கிளிகலீன் அழகு அனைவரையும் கவரும்.வழிப்போக்கரும்,வணிகரும் அதன் நிழலில் எப்போதும் தங்கி இருப்பர்.ஒரு நாள் நாரதர் அங்கு வந்தார்.அதன் தோற்றத்தைக் கண்டு மகிழ்ந்தார்.

அந்த இலவமரத்தை நோக்கி , 'அனைவரையும் கவரும் இலவ மரமே! உன்னைக் கண்டு நான் வியப்படைகிறேன். பறவைகளும், விலங்குகளும் உன்னை நாடி வருகின்றன. பெருங்காற்றுகூட உன்னை ஒன்றும் செய்ய முடியவில்லை.ஒரு கிளை கூட முறிந்ததில்லையே. வாயு பகவான் உன் நண்பனா? பெரிய பெரிய மலைச் சிகரங்களையும் சிதற அடிக்கும் வாயு உன்னிடம் நெருங்காததற்குக் காரணம் உண்டா/ நீ பூத்துக் குலுங்கும் காலத்தில் யானைகள் கூட்டம் கூட்டமாய் மணம் நாடி வருகின்றன. பல விலங்குகளுக்கு இருப்பிடமான மேரு மலை போல காணப்படுகிறாய். முற்றும் துறந்த முனிவர்களும் உன்னை நாடி வருகின்றனர்.உனது இடத்தைத் தேவர் உலகத்துக்கு இணையாகக் கருதுகிறேன்' என்று கூறினார்.

நாரதர் மேலும்,'உலகத்திற்கு அச்சம் தரும் வாயு பகவான் உனக்கு உறவினன் அல்லது நண்பன் என்னும் காரணத்தால் உன்னை ஒன்றும் செய்யவில்லை. வாயுவிற்கு நீ எப்போதும் கீழ் படிந்து நடக்கிறாய் என நினைக்கிறேன். அதனால் தான் வாயு உன்னை மட்டும் ஒன்றும் செய்வதில்லை. ஓ! இலவ மரமே, ஏதோ காரணத்தால் வாயு பகவானால் நீ பாதுகாக்கப் படுகிறாய் என்பதில் ஐயமில்லை. அதனால் தான் தைரியமாக ஓங்கி நிற்கிறாய்' என்றார். அதற்கு இலவ மரம் மறுப்புத் தெரிவித்தது.

நாரதரே! வாயு என் உறவினனுமில்லை. நண்பனும் இல்லை. ஆயின் என் ஆற்றல் கண்டு வாயு அஞ்சுகிறது. எனது பலத்தில் சிறு பகுதிக்குக் கூட வாயுவின் பலம் ஈடாகாது. சிறியதும், பெரியதுமான மரங்களை எல்லாம் கொடூரமாக வீழ்த்திக் கொண்டு வரும் வாயுவை நான் என் பலத்தால் அடக்கி விடுகிறேன். மாமுனிவரே. மிகவும் சினம் கொண்டால் கூட வாயுவினால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என ஆத்திரத்துடன் கூறியது.

உடனே நாரதர் இலவ மரத்தை நோக்கி 'உனது கருத்துச் சரியன்று. பயங்கரமானது. வாயுவின் பலத்துக்கு இணையாக யாருடைய பலமும் இல்லை. எமனும் இந்திரனும் கூட ஆற்றலில் வாயுவுக்கு இணையாகார். உலகில் உள்ள எல்லாப் பொருள்களுக்கும் அசைவையும், உயைரையும் கொடுக்கும் மகாப் பிரபு ஆகிறான் வாயு.வாயு எங்கும் சஞ்சரித்தால் தான் உயிரினங்கள் எங்கும் உலவ முடியும்.அதனால் வணங்கத் தக்க தெய்வம் வாயு.பணிந்து வணங்குவதற்கு மாறாக இழிவாக அல்லவா பேசுகிறாய்.நீ வலிமை அற்றவன். பொறாமையுடையவன். உனது பேச்சு எனக்கே சினத்தை உண்டாக்குகிறது. மிகச் சிறந்த மரங்களான சந்தனம், தேக்கு, தேவதாரு போன்ற மரங்கள் கூட இப்படி வாயுவை பழித்ததில்லை. இப்போதே சென்று வாயுவிடம் உன்னைப் பற்றிக் கூறுகிறேன்' என்றார்.

சொன்னபடியே வாயு பகவானிடம் 'இமய மலையில் மிகப் பிரம்மாண்டமான இலவ மரம் இருக்கிறது. அது தங்களைக் கேவலமாகப் பேசுகிறது. அது சொன்னதைச் சொல்லக் கூட நா கூசுகிறது. தங்களை விட சிறந்தவர் யாருமில்லை. நீர் சினத்தில் யமனுக்கு இணையாவர். இதனை நான் அறிந்துள்ளேன்.ஆயினும் இலவ மரம் தங்க்களை இழிவாகப் பேசுவதை நினைக்கும் போதுதான் வருத்தமாக இருக்கிறது' என்று கூறினார்.

இதனைக் கேட்ட வாயு பகவான் கோபமடைந்தார். விரைந்து இலவ மரத்திடம் சென்று..'இலவமரமே... என்னை யாரென்று நினைத்தாய்.நாரதரிடம் என்னைப் பற்றி இழித்தும் பழித்தும் பேசினாயாமே !உன்னை நான் நன்கு அறிவேன். நான்முகன் உலகைப் படைத்ததும் உன்னிடம் இளைப்பாறினார்.அதனால் உன்னை அழிக்காமல் விட்டு விட்டேன். இதோ என் வலைமையைக் காட்டுகிறேன் பார்' என்றார்.

இது கேட்டு மரம் ஏளனமாக சிரித்தது.. 'வாயுவே ..உன் சினத்தைக் காட்டில் காட்டு.என்னிடம் உன் கோபம் செல்லாது. உன்னைவிடப் பலம் வாய்ந்த நான் ஏன் உன்னைக் கண்டு அஞ்ச வேண்டும்? புத்திமான் பலவானாவான். என்பது பழமொழி. கேவலம் உடல் பலம் உள்ளவர்களை யாரும் போற்றுவதில்லை' என்றது.

வாயுபகவான், 'உடல் வலைமையை நாளைக் காண்பாய் " என்று கூறிச் சென்றார்.நேரம் ஆக ஆக இலவ மரத்திற்குப் பயம் உண்டாயிற்று.'நாரதரிடம் நான் உரைத்தவை அத்தனையும் பொய்.மற்ற மரங்களை விட நான் ஒன்றும் அதிக பலம் உள்ளவன் அல்ல.புத்தியில் மற்றவரை விடச் சிறந்து விளங்குகிறேன்.இதே புத்தியைக் கொண்டு வாயுவிடம் இருந்து தப்பித்துக் கொள்வேன்' என்று கருதிற்று.

அதன்படி தன் கிளைகளையும் ,இலைகளையும் கீழே உதிர்த்துவிட்டது. வாயு எப்போது வரும் என எதிர் நோக்கியிருந்தது.

இந்நிலையில் வாயு பகவான் பேரிரைச்சலுடன் எல்லா மரங்களையும் வீழ்த்திக் கொண்டு இலவ மரம் இருக்கும் இடத்தை அடைந்தார். இலவ மரத்தின் அவல நிலையைக் கண்டு அதனை நோக்கி, 'நான் செய்ய நினைத்ததையெல்லாம் நீயே செய்துக் கொண்டாய். என்னே உன் அறிவீனம்' என்று எள்ளி நகையாடினார்.

இது கேட்டு இலவ மரம் நாணித் தலை குனிந்து நின்றது.

தருமரே! இது போலவே பலமற்றவர்கள் பலசாலிகளை எதிர்த்தால் இலவ மரத்தின் கதிதான் ஏற்படும்' என்றார் பீஷ்மர்.


138-சுவர்க்க நரகங்களில் பிறப்பது
தருமர் பீஷ்மரை நோக்கி..'எத்தகைய உயிர் சுவர்க்கத்தை அடைகிறது? எத்தகைய உயிர் நரகத்தை அடைகிறது? உடலைக் கட்டைப் போல போட்டுவிட்டுப் போகும் உயிரைத் தொடர்வது எது? எனக்கு இவற்றைப் பற்றி விளக்க வேண்டும்' எனக் கேட்க.அந்நேரத்தில் பிரகஸ்பதி அங்கு வர, பீஷ்மர் தருமரை நோக்கி 'இந்தக் கடினமான கேள்விக்குப் பிரகஸ்பதி விடையளிப்பார்.உலகில் இவரை விடச் சிறந்த அறிவாளி யார் இருக்கிறார்." என்று சொன்னார்.உடனே தருமர் பிரகஸ்பதியை வணங்கி 'எல்லாம் தெரிந்தவரே! உயிருக்குத் துணை யார்?

தந்தையா, தாயா,தாரமா,பிள்ளையா,ஆசாரியரா,சுற்றமா? கட்டைப் போல உடலைப் போட்டுவிட்டு உயிர் பிரியும் போது அதற்குத் துணை யார்?' என்று கேட்டார்.
பிரகஸ்பதி..'மனிதன் ஒருவனாகவே இறக்கிறான். சுவர்க்கத்திற்கோ ,நரகத்திற்கோ போகிறான்.தந்தை, தாய், சுற்றத்தார் யாரும் அவனைப் பின் தொடர்வதில்லை. தருமம் ஒன்றுதான் அவனுடன் செல்லக் கூடியது. ஆகையால் எப்போதும் ஒருவன் தருமத்தில் நாட்டம் உள்ளவனாக இருக்க வேண்டும்" என்றார்.

தருமர் பிரகஸ்பதியிடம் மேலும் வினவினார்.'ஆன்மா மறைந்து கண்ணில் படாமல் போகிறதே.தருமம் அதை எப்படித் தொடர்கிறது?'
பிரகஸ்பதி..'அப்பு,தேயு,ஆகாயம்,வாயு, பிருதிவி ஆகிய இவை எப்போதும் தருமத்தைப் பார்த்துக் கொண்டுள்ளன.இரவும்,பகலும் சாட்சிகளாக விளங்கிகின்றன.அந்த உயிரை மேலே குறிப்பிட்ட அப்பு முதலானவற்றுடன் தருமமும் பின் தொடர்கிறது.மேலே சொன்னவை தோல்,எலும்பு,ரத்தம்,சுக்கிலம்,சோணிதம் ஆகியவற்றையும் உயிர் பிரிந்த் உடலையும் விட்டு நீங்குகின்றன.அந்த உயிர் தருமத்திற்கு ஏற்பப் 'பிறவி' எடுக்கிறது" என்றார்.

தருமர், 'அறிவில் நிகரற்றவரே! கொல்லாமை, தியானம், தவம் இவற்றில் சிறந்தது எது?' என வினவ பிரகஸ்பதி கூறுகிறார்.
'இவை மூன்றும் தருமத்தின் வழிகளே!.என்றாலும்கொல்லாமையே அனைத்திலும் சிறந்தாகப் போற்றப்படுகிறது. மற்ற உயிர்களையும் தன் உயிர் போல் கருதுகிற ஒருவன் மறுமை இன்பம் பெறுவான்.தனக்கு எது தீங்கு எனத் தோன்றுகிறதோ அந்தத் தீங்கைப் பிறருக்குச் செய்யக் கூடாது. ஒருவன் மற்றவரிடத்தில் எப்படி நடந்து கொள்கிறானோ அப்படித்தான் மற்றவர்களும் அவனிடத்தில் நடந்து கொள்வார்கள்' என்று கூறி, பிரகஸ்பதி மறைந்தார்.

139-கொல்லாமையைப் பற்றி பீஷ்மர்
தருமர் பீஷ்மரை நோக்கி, 'கொல்லாமை சிறந்த அறம் என்று கூறுகின்றனரே!, எவ்வாறு? என வினவ, பீஷ்மர் விரிவாக விளக்குகிறார்.
கொல்லாமை நான்குவகை எனச் சான்றோர் கூறுவர்.ஒன்று தவறினாலும் அது கொல்லாமை ஆகாது.உலகில் உள்ள அனைத்து தருமங்களும் கொல்லாமையில் அடங்கி விடுகின்றன.மனத்தாலும், சொல்லாலும், செயலாலும் ஒருவனை பாவம் பற்றுகிறது.ஆகவே துன்பங்களை விட வேண்டும்.பிற உயிர்க்குத் துன்பம் செய்யக் கூடாது. இத்தகைய துன்பங்களும் நாங்கு வகை ஆகும். நினைப்பதாலும்,சொல்வதாலும்,செயலாலும் இது குற்றமாகக் கருதப் படுகிறது.

புலால் உண்ணாதவன் இம் மூன்று குற்றங்கள் அற்றவன் ஆகிறான். மனம், சொல், ருசி காணும் நாக்கு, இம்மூன்றிலும் இந்தக் குற்றங்கள் நிற்கின்றன என்று வேதம் உணர்ந்தவர்கள் கூறுவர். அதனால் தவம் இருக்கும் ஞானிகள் புலால் உண்பதில்லை.

புலால் உணவில், தன் மகனது தசை போன்றது என்பது தெரிந்தும் புலாலைப் புசிக்கும் மனிதன் கீழானவனாகக் கருதப்படுகிறான்.தாய் தந்தையர் சேர்க்கையால் மகன் தன் வசம் இல்லாமல் பிறப்பது போல உயிர்க்குத் துன்பம் செய்பவன் தன் இச்சை இலாமலேயே பாவப் பிறவி எடுப்பது உறுதி.எப்போது நாக்கு சுவையை உணர்கிறதோ..அப்போது மனதில் ஆசை தோன்றுகிறது.

புலால் உண்ணும் இயல்புடையவர்கள் ஏழிசையை அனுபவிக்க இயலாது.பிறரது செல்வத்தைக் கெடுப்பவரும்,புலாலை விரும்புபவரும் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியாது. புலாலை விரும்பிப் பேசுவது கூட அதனை உண்பது போன்ற குற்றமாகும். இரக்க குணம் மிக்க சான்றோர் தம் உடலையே பிறர்க்குக் கொடுத்துச் சுவர்க்கம் சென்றனர். இவ்வாரு கொல்லாமையின் மேன்மை கூறப்பட்டுள்ளது.

பின்னர் தருமர்..'கொல்லாமை என்பது தர்மங்கள் அனைத்திலும் மேலானது என்றீர்.. ஆனால் சிரார்த்தங்களில் முன்னோர்க்குப் புலால் விருப்பத்தைத் த்ரும் என்று முன்னர் கூறியுள்ளீர். இது முரணாக உள்ளதே..புலாலை விடுதல் என்னும் தருமத்தில் எங்களுக்கு ஐயம் உண்டாகிறது.புலால் உண்பதால் ஏற்படும் குற்றம் யாது?புலால் உண்ணாமையால் ஏற்படும் நன்மை யாது? கொன்று உண்பவன், பிறர் கொடுத்ததை உண்பவன், விலைக்காகக் கொல்பவன், விலைக்கு வாங்கி உண்பவன் ஆகிய இவர்களுக்கு நேரும் குற்றங்கள் யாவை? இவற்றையெல்லாம் விளக்க வேண்டுகிறேன்' என்றார்.

பீஷ்மர் சொல்லலானார்..'அழகான உடல் உறுப்புகளையும், நீண்ட ஆயுளையும், துணிச்சலையும், ஆற்றலையும், நினைவாற்றலையும் அடைய விரும்புபவர்கள் புலால் உண்பதைத் தவிர்க்க வேண்டும். இது குறித்து ரிஷிகளின் முடிவைக் கேள். 'புலால் உண்ணாமலும், பிற உயிர்களைக் கொல்லாமலும், கொல்லத் தூண்டாமலும் இருக்கும் ஒருவன் பிராணிகளின் அன்பன்' என்று பதினாங்கு மனுக்களுள் ஒருவரான ஸ்வயம்பு மனு சொல்லியிருக்கிறார்.

புலால் உண்ணாதவனை சாதுக்களும் போற்றுகின்றனர்.'எவன் தன் தசையைக் கொண்டு பிறரை வாழவைக்க நினைக்கின்றானோ,அவன் நம்பத்தக்கவன்' என்று நாரதர் கூறியிருக்கிறார்."ஊனையும் கள்ளையும் விடுபவன் தானம்,தவம்,யாகங்கள் செய்வதால் பெறும் பயனைப் பெறுகிறான்' என்று பிரகஸ்பதி சொல்லியிருக்கிறார்.இட்விடாமல் நூறு ஆண்டுகள் அஸ்வமேத யாகம் செய்வதும்..புலால் உண்ணாமல் இருப்பதும் சமம் என்பது என் கருத்து.

புலால் உண்ணும் பழக்கத்தை எவன் ஒருவன் விட்டு விடுகிறானோ அவன் வேதங்களாலும் யாகங்களாலும் பெற முடியாத நன்மையை அடைவான்.ஏதோ ஒரு காரணத்தால் புலால் உண்ண நேர்ந்தாலும் பிராயச்சித்தமாகக் கடும் தவம் புரிய வேண்டும்.சுவை கண்டவன் புலாலை விடுவது கடினமானது என்பது உண்மையாயினும், எல்லா உயிர்களுக்கும் அபயம் கொடுப்பதாகிய இந்த் புலால் உண்ணாமை என்னும் விரதத்திற்கு இணை ஏதுமில்லை.எவன் எல்லா உயிர்களுக்கும் அபயம் அளிக்கின்றானோஅவன் உலகுக்கே உயிர் அளிக்கிரான் என்பதில் ஐயமில்லை.மேலோர்கள் இதனையே முதன்மையான அறம் என்று போற்றுகின்றனர்.அறிவும், தூய மனமும்உள்ளவன் தன்னைப் போலவே எல்லா உயிர்களையும் நேசிப்பான். எறியப்பட்ட தடியால் புல் அசையும் போதும் அதற்கும் பயம் இருக்கிறது என்றால், விரைவாகக் கொல்லப்படும் உயிர்கள் படும் துன்பத்தைச் சொல்லவா வேண்டும்? ஒரு தீமையும் செய்யாத ஒரு விலங்குக்கு நோய் இல்லாமலேயே புலால் உண்ணும் புல்லர்களால் மரண பயம் இருக்கிறது என்பதை எண்ணுகையில் துக்கம் உண்டாகிறது.எனவே புலால் உண்பதைத் தவிர்த்தல் தருமத்திற்குக் காரணமாகிரது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.கொல்லாமைதான் மிக உயர்ந்த தருமம்..கொல்லாமையே மிக உயர்ந்த தவம்..கொல்லாமையே மிக உயர்ந்த வாய்மை!

புல்லிலிருந்தோ,கல்லிலிருந்தோ,கட்டையிலிருந்தோ புலால் கிடைப்பதில்லை.ஒரு உயிரைக் கொன்றால் தான் கிடைக்கும்.ஆகவே அதை உண்பது பாவம் ஆகும்.புலால் உண்ணாதவனுக்கு அச்சம் இல்லை.அவன் ஏற முடியாத மலை மீது அஞ்சாமல் ஏறுவான்.இரவிலும்,பகலிலும் அவனுக்குப் பயம் இல்லை.பிறர் ஆயிதத்தால் தாக்க வந்தாலும் அவன் அஞ்ச மாட்டான்.அவனைக் கொடிய விலங்குகளும் பாம்பும் ஒன்றும் செய்யாமல் விலகிச் செல்லும்.அவன் அஞ்ச வருவது எதுவும் இல்லை.புலால் உண்ணாமல் இருப்பது செல்வத்தைத் தரும்.புகழைத் தரும்.நீண்ட ஆயுளைத் தரும்.பின் சுவர்க்கத்தைத் தரும்.

புலால் உண்பவன், கொல்பவன் போலவே பாவம் செய்கிறான்.விலைக்கு வாங்குபவன் பொருளால் கொல்கிறான்.சாப்பிடுபவன் உண்பதால் கொல்கிறான்.ஒரு விலங்கைக் கொண்டு வருபவன்,அதனை ஒப்புக் கொள்பவன்,கொல்பவன்,விற்பவன்,வாங்குபவன்,சமைப்பவன்,புசிப்பவன் இவர்கள் அனைவரும் கொலையாளிகள்தாம்.

இறுதியாகக் கொல்லாமையின் சிறப்பை உனக்கு உணர்த்துகிறேன்.கொல்லாமையே உயர்ந்த தானம்.கொல்லாமையே சிறந்த நண்பன்.கொல்லாமையே யாகங்கள் அனைத்திலும் சிறந்தது.கொல்லாமை மேற்கொள்பவன் உலக உயிர்களுக்குத் தாயாக விளங்குகிறான்.தந்தையாகப் போற்றப்படுகிறான்.ஆண்டுகள் பல நூறு ஆனாலும் கொல்லாமையின் பெருமையை முற்றிலும் உரைக்க முடியாது' என்று கூறி முடித்தார் பீஷ்மர்.

140-சாதலும், பிறத்தலும் இயற்கை
பீஷ்மர் தருமருக்கு உற்றார்,உறவினர் இறப்பின் போது ஆற்றியிருத்தல் எப்படி என்பதை விளக்க எடுத்துக் காட்டாக ஓர் அந்தணனுக்கும்,சேனஜித் என்னும் மன்னனுக்கும் நடைபெற்ற உரையாடலைக் கூறியது..


'முன்னொரு காலத்தில் சேனஜித் என்றொரு மன்னன் இருந்தான்.திடீரென அவன் மகன் இறந்ததால் தாங்க முடியாத துயரத்தில் மூழ்கி இருந்தான்.செய்வதறியாது திகைத்து யாரிடமும் ஒன்றும் பேசாது செயலற்று இருந்தான்.அப்போது அவனது நண்பனான ஒரு அந்தணன் அவனைக் காண வந்தான்.'மன்னனே, ஏன் இப்படி அறிவிழந்து இப்படி துயரப்படுகிறாய்?

உண்மையில் உனக்காகவே நீ வருத்தப் பட வேண்டும்.ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டிருக்கிறோம்.உண்மை இவ்வாறிருக்க இன்னொருத்தர் மரணத்திற்காக ஏன் துயரப் பட வேண்டும்?எல்லோரும் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே போக விரும்புகிறோம்.பிறப்பு எனில் இறப்பு யார்க்கும் உண்டே!' என்று கூறினான்.

உடன் மன்னன்..'நீர் துயரமின்றி இருக்கக் காரணம் என்ன? சாத்திர ஞானமா?தவமா?' என்று வினவினான்.
அந்தணன், 'மன்னனே..இந்த உலகத்தில் ஒழுக்கத்தில் உயர்ந்தவரோ,குறைந்தவரோ,மிகவும் தாழ்ந்தவரோ எந்த நிலையினராயினும் அவரவர் கர்மத்திற்கு ஏற்ப இன்ப துன்பங்களை அனுபவிப்பர்.இந்த உலகத்துப் பொருள்களில் எதுவும் என்னுடையதன்று.அப்படியே பிறருக்கும் உரியவை அல்ல.இந்தத் த்ளிந்த ஞானம் ஏற்பட்டதால், எனக்குத் துன்பமும் இல்லை..

இன்பமும் இல்லை.கடலில் எங்கெங்கோ இருக்கும் கட்டைகள் ஒன்று கூடி பிரிவது போன்றது பிறப்பும், இறப்பும்.தாய்,தந்தை,மனைவி,மக்கள் எல்லாரும் இப்படித்தான் ஒன்று கூடுகின்றனர்.பிரிகின்றனர்.எப்படி உன் மகன் பிரிந்தானோஅப்ப்டியே அறிய முடியாமல் இறந்து விட்டான்.துன்பத்தின் இறுதியில் இன்பமும், இன்பம் மாறித் துன்பமும் இயற்கையாக ஒவ்வொருவர் வாழ்விலும் உண்டு.தற்போது துன்பத்தில் இருக்கும் நீ பிறகு இன்பத்தை அடைவாய்.பின் துன்பம்.பின்னர் இன்பம் இப்படி வண்டிச் சக்கரம் போல இன்ப துன்பங்கள் மாறி மாறி வந்துக் கொண்டே இருக்கும்.
இன்ப, துன்பங்களுக்கு உடம்பே காரணமாகும்.ஓர் உயிர் எந்த உடலைச் சார்ந்து வினையைச் செய்ததோ அந்த வினையை அடுத்த பிறப்பில் அனுபவித்தே ஆக வேண்டும்.இந்த உயிர் ஓர் உடலைச் சார்ந்து பிறக்கிறது.சுற்றம் என்றும், நட்பு என்றும் சில காலம் சிலரோடு உறவு கொள்கிறது.பொருளாசையில் சிக்கி அந்த ஆசை நிறைவேறாமல் துன்பப்படுகிறது.உயிர் பல விதமான உறவு முறைகளில் சிக்கித் தவிக்கிறது.செக்கில் இடப்பட்ட பொருள் பிழியப் படுவது போலப் பிறவிச் சுழியில் அகப்பட்டுத் துன்புறுகிறது உயிர்.மனிதன் தன் உற்றார்,உறவினரைக் காப்பாற்றத் தகாத காரியங்களிலும் ஏடுபட்டுக் கர்மத்தைப் பெருக்கிக் கொள்கிறான்.அதற்குரிய பயனை அவன் மட்டுமே அனுபவிக்கிறான்.
அவனது துன்பத்தை எப்படிப் பிறர் ஏற்க முடிய வில்லையோ அப்படியே அவன் கர்மத்தையும் பிறரால் ஏற்க முடியாது.அதை அவன் மட்டுமே அனுபவிக்க வேண்டும்.ஞானிகள் இதைத் தெளிவாக உணர்ந்து உணர்த்தியிருக்கிறார்கள்.உணராத அஞ்ஞானிகள் சம்சாரம் என்னும் சேற்றில் சிக்கிக் கொண்டு கரையேற முடியாமல் அல்லல் படுகின்றனர்.ஒவ்வொருவரும் புதிதாக கர்மங்களைச் சேர்க்காமலும், உயிரில் கலந்த கர்மத்தை உதிர்த்தும் இன்பம் காண வேண்டும்.சிறந்த அறிஞன் உலகப் படைப்பின் ரகசியத்தை அறிகிறான்.அறிவீனர்கள் இதனை அறிய மாட்டார்கள்.

இன்பமானது அறிஞன்,அறிவிலி,வீரன்,கோழை,ஆற்றல் மிக்கவன்,ஆற்றல் அற்றவன் என்ற பாகுபாடு அறிந்து ஒருவனை அடைவதில்லை.அவரவர் கர்ம வினைக்கு ஏற்ப வினைப் பயனை அடைகின்றனர்.முக்தியை அடைய விரும்புவோர் நன்மை ஒன்றையே செய்து இன்பம் அடைகின்றனர்.முக்திப் பாதையில் நாட்டம் இல்லாதவர் வேறு கர்மங்களைச் செய்து துன்புறுகின்றனர்.பொருள் மீது கொள்ளும் ஆசை துன்பத்திற்குக் காரணம் ஆகிறது.ஆசை அற்றவர்க்குத் துன்பம் இல்லை.மனிதப் பிறப்பில் அடையும் இன்பமும், சுவர்க்கத்தில் பெறும் இன்பமும் ஆசையற்றவன் பெறும் இன்பத்திற்கு ஈடாகா.

முற்பிறப்பில் செய்யப்பட்ட கர்மமானது தீமையோ நன்மையோ எதுவாயினும் செய்தவன் அறிவுள்ளவனோ, அறிவீனனோ எவராயினும் அதன் பயனை நுகர்ந்தே ஆக வேண்டும்.ஆதலால் பொருள் மீது பற்றுப் பாசங்களைத் துறத்தல் வேண்டும். இல்லையேல் ஆசை பேராசை ஆகி, சினமாகி, பொறாமையாகிக் கடுஞ்சொல்லைத் தோற்றுவித்து, தீய செயலுக்கும் காரணமாகிறது.

ஒரு பொருள் எனது என்னும் எண்ணத்தோடு இருக்கும் போது, அது பிரிய நேர்ந்தால் துன்பம் ஏற்படுகிறது.அதுபோலவே உறவினர் பிரிந்தாலும் தாங்க இயலாத துன்பம் தோன்றுகிறது.நம் உயிர்க்கும் மற்றப் பொருள்களுக்கும் தொடர்பில்லை.நாம் செய்யும் தர்மமே நம்மை (உயிரை)த் தொடர்ந்து வரும்.அதுவே நாம் செல்லும் தேயத்திற்கு உறுதுணையாகும் என்ற தெளிவு பெற்றவர் பிறர் மரணத்திற்காக வருந்த மாட்டார்கள்.சாதலும்,பிறத்தலும் இயற்கை என்ற தெளிவு கொண்டு துயரத்தை விடுவாயாக' என்று அந்தணன் கூறினான்.

அதனைக் கேட்ட சேனஜித் மன்னன் அறிவுத் தெளிவு பெற்று உண்மை மார்க்கத்தை நாடி அமைதி அடைந்தான்" என்றார் பீஷ்மர்.

No comments:

Post a Comment