Monday, September 15, 2014

ஓணம் கொண்டாடக் காரணம்

அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார் தலைமையில், "விஸ்வஜித்' என்னும் யாகத்தை, மலைநாட்டு மன்னன் மகாபலி நடத்தினான். அந்த யாக குண்டத்தில் இருந்து வில், அம்பு, அம்புராத்தூணி, கவசம் என ஆயுதங்கள் வெளிப்பட்டன. அவற்றை மகாபலியிடம் வழங்கிய சுக்ராச்சாரியார், இவற்றின் மூலம் தேவர்களை வென்று, உலகையே ஆளும்படி வாழ்த்தினார். இதன்பின் தேவலோகம் மகாபலியின் வசம் வந்தது. மகாபலி நல்லவனாயினும், வெற்றி மமதையில் தனக்கு நிகர் தானே என்ற ஆணவமும் கொண்டிருந்தான்.
இதனிடையே, தேவர்களின் தாயான அதிதி, தன் பிள்ளைகள் தேவர் உலகை இழந்தது கண்டு தவித்தாள். மகாபலியின் ஆணவத்தை ஒடுக்கி, தங்கள் உலகை மீட்டுத்தர வேண்டுமென விஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தாள். அவளது வேண்டுதலை ஏற்ற மகாவிஷ்ணு, வாமன மூர்த்தியாக (குள்ள வடிவ அந்தணர்) ஆவணி மாதம் திருவோணத்தன்று அவதாரம் செய்தார். மகாபலியிடம் மூன்றடி நிலம் கேட்டு, உலகையே அளந்தார். எல்லாம் அவர் வசம் வந்தது. மகாபலியை ஆட்கொண்டு பாதாள லோகத்திற்கு அனுப்பினார். தேவர்கள் மகிழ்ந்தனர். தான், ஆட்கொள்ளப்பட்ட நாளை, விழாவாகக் கொண்டாட வேண்டுமென அவன் மகாவிஷ்ணுவிடம் கோரிக்கை வைத்தான். அவனால் பல நன்மைகளைப் பெற்ற மக்கள், இன்று வரை திருவோணத் திருநாளன்று வரவேற்று மகிழ்கின்றனர். அந்த நாளே ஓணம் பண்டிகையாக மக்களால் கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment