Monday, October 20, 2014

கங்கா ஸ்னானம் ஆச்சா?

தீபாவளி தினத்தன்று காலை ஒருவரை ஒருவர் பார்க்கும் போது கேட்கும் முதல் கேள்வியே, "என்ன...கங்கா ஸ்னானம் ஆச்சாப'' என்பதாகத்தான் இருக்கும். அதாவது அன்று புனித கங்கையில் நீராடி தீபாவளியை கொண்டாட வேண்டும் என்பது ஐதீகமாகும்.

ஆனால் எல்லாராலும் புனித கங்கைக்கு சென்று நீராடுவது என்பது இயலாத காரியமாகும். அதனால் தான் தீபாவளி தினத்தன்று எல்லா நீர்நிலைகளிலும் கங்கை ஐக்கியமாவதாக நம் முன்னோர்கள் வரையறுத்து வைத்துள்ளனர்.

அன்று வெந்நீரில் கங்கையை நினைத்து நீராடினாலே புனித கங்கையில் குளித்த புனிதமும் புண்ணியமும் கிடைத்துவிடும். தீபாவளி தினத்தன்று கங்கையாக பாவித்து நாம் நீராடுவதால் எல்லா தோஷங்களும் நீங்கும். நம் உடலிலும் மனதிலும் புத்துணர்ச்சித் தோன்றும்.

அதோடு செல்வத்தையும் செல்வாக்கையும் இந்த நீராடல் பெற்றுத்தரும். அதனால் தான் யுகங்கள் கடந்தும், தீபாவளி திருநாளில் மட்டும், கங்கா ஸ்னானம் ஆச்சா என்று கேட்கும் வழக்கம் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

கங்கையில் நீராடுவது என்பது எந்த அளவுக்கு புண்ணியம் தர வல்லது என்பதை சிவபெருமானே ஒரு சம்பவம் மூலம் பக்தர்களுக்கு உணர்த்தி இருக்கிறார். ஈசன் செய்த அந்த சம்பவம் வருமாறு:-

ஒரு தடவை விசாலாட்சி சிவபெருமானிடம் சுவாமி! இன்று நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நாள். இந்த நாளில் இரண்டு புண்ணிய வான்களையாவது பார்க்க வேண்டும்'' என்றார். அதற்கு விசுவநாதர் "சரிவா'' போகலாம். நான் கங்கை நீரில் மூழ்கியவன் போல் அலறுகிறேன்.

நீ கரையிலிருந்து என்னைக் காப்பாற்றச் சொல்லி கத்த வேண்டும். அதோடு புண்ணியவான்கள்தான் என்னைக்காப்பாற்ற முடியும் என்றும் சொல்லு'' என்றார். கங்கைக்கரை, பழுத்த சுமங்கலியாய் விசாலாட்சி கரையில் நிற்கிறாள்.

பஞ்சுப் பொதிபோல் நரைத்த தலை விசாலமான விழிகள், லட்சணமான முகவசீகரம், விசுவநாதர் தளர்ந்த சிவந்த மேனியுடன் கங்கையில் மூழ்கி எழுகிறார். "என் புருஷனை யாராவது காப்பாற்றுங்கள்'' என்று குரல் கொடுக்கிறாள் அன்னை. நீர் கொள்ளாத மனிதத் தலைகள்.

சிலர் விசுவநாதர் நீரில் போராடும் பக்கமாக விரைகின்றனர். சிலர் மேலிருந்து குதித்து நீந்துகின்றனர். சிலர் நீந்தத் தெரியாதே எனத்தவிக்கின்றனர். "ஐயா! கருணை மனம் கொண்டவர்களே! புண்ணியவான்கள் தான் அவரைக் காப்பாற்ற முடியும்.

பாவிகள் அவரைத்தொட்டால் சுழலில் சிக்கிமாள்வார்கள்'' என்றாள் பார்வதி பலர் பின் வாங்கி விட்டனர். இருவர் மட்டும் முன்சென்று விசுவாதரை இழுத்து வந்தார்கள். "நீங்கள் இருவரும் பாவமே செய்த தில்லையா?'' என்று கேட்டாள் அன்னை "தாயே! நான் பாவம் செய்தேனா... இல்லையா என்று தெரியாது.

என் கண்முன் ஒரு உயிர் மரண அவஸ்தையில் தவிக்கும்போது அவரைக் காப்பாற்றும் முயற்சியில் நான் இறந்தாலும் தப்பிலை என்றிருந்தாலும் போகக்கூடிய உயிர் நல்ல காரியத்துக்கு முயற்சி செய்தோம் என்ற திருப்தியோடு சாகலாம் பாருங்கள்'' என்றான் ஒருவன்.

இரண்டாமவன், அம்மா நான் பாவியாகவே இருந்தாலும் கங்கையில் குதித்தவுடன் என் பாவம் போய் விடுகிறது. அப்படி நம்பித்தானே கோடானு கோடி பேர் இங்கு நீராட வருகிறார்கள்! புண்ணியவானாக மாற்றப்பட்ட நான் அவரைக் காப்பாற்ற தகுதி படைத்தவனாகவே நினைத்தேன்'' என்றான்.

இருவரையும் ஆசீர்வதித்துவிட்டு அங்கிருந்து அம்மையும், அப்பனும் சென்றனர். "தேவி! இப்போது சொல்! கங்கை என் தலையில் இருக்கத் தகுதி பெற்றவள்தானா?'' என்றார் சதாசிவன்.

"என்னை மன்னியுங்கள்! இரு நல்லவர்களின் சந்திப்பே என்னை மெய்சிலிர்க்கச் செய்கிறது. தினம், தினம் எத்தனை தூயவர்களின் உரையாடல்களை தீயவர்களின் குறைகளைக் கேட்டு மவுனமாக இயங்கும் கங்கை மிகப்புனிதமானவள்.

தலையில் தாங்கிக் கூத்தாடும் அளவு பெருமை பெற்றவள்'' என ஒப்புக்கொண்டாள் அன்னை. அந்த கங்கையை தீபாவளி நாளில் அதிகாலை நினைத்து தொழுது நீராடி, பாவ எண்ணங்களை களைய வேண்டும்.

No comments:

Post a Comment