Friday, November 28, 2014

பிராமணன் என்றால் யார்?


பிராமணன் என்றால் யார்?
சாம வேதம்
வச்சிர சுசிகோ உபநிடதம் 
9 சுலோகங்கலில் சொல்வதைக் கேட்க.
சுலோகம்1.
இந்த உபநிடதம் அஞ்ஞானத்தை அகற்றும் சாத்திரம்
சுலோகம் 2.
பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திர் என்று நான்கு வருணங்கள் உள்ளன.அவற்றுள் பிராமணன் என்றால் யார்? சீவனா?,தேகமா? சாதியா? ஞானமா? கருமமா? தருமமா?
சுலோகம் 3.
முதலில் சீவன் பிராமணன் என்றால் அஃது ஒவ்வாது.
சென்றதும் வரப் போவதுமான பல தேகங்களில் சீவன் ஒரே வடிவாயிருப்பதாலும், ஒருவனேயானாலும் கரும வசத்தால் பல உடல்கள் ஏற்படுவதாலும், எல்லா உடல்களிலும் சீவன் ஒரே மாதிரி இருப்பதாலும் சீவன் பிராமணன் இல்லை.
சுலோகம் 4.
உடல் பிராமணன் என்றால் அதுவும் பொருந்தாது. அனைத்து சாதியினருக்கும் உடல் ஒரே மாதிரி இருக்கிறது. உடலில் வெள்ளை, சிவப்பு, மஞ்சள், கருப்பு எனப் பல நிறங்கள் இருந்தாலும் உடல் பிராமணன் இல்லை.
சுலோகம் 5.
பிறப்பின் அடிப்படையில் வரும் சாதியினால் ஒருவன் பிராமணனா என்றால் அஃதும் இல்லை. உருசிய சிருங்கர், கௌசிகர், ஜாம்புகர், வால்மீகி, வியாசர், கௌதமர், வசிட்டர், அகத்தியர் போன்ற பல இருடிகள் பிராமண குலத்தில் பிறக்கவில்லை. ஆகையால் பிறப்பின் அடிப்படையில் ஒருவன் பிராமணன் இல்லை.
சுலோகம் 6.
அறிவால் பிராமணன் என்றால் அதுவும் பொருந்தாது, அனைத்து சாதியிலும் அறிவாளிகள் இருக்கிறார்கள். ஆகையால் அறிவைால் பிராமணன் என்பதும் இல்லை.
சுலோகம் 7.
கருமத்தால் பிராமணன் என்றால் அதுவும் இல்லை. எல்லா உயிர்களுக்கும் பிராரத்துவம், சஞ்சிதம், ஆகாமியம் என்ற கருமங்கள் பொதுவாகக் காணப்படுவதால், பூருவ கருமத்தின் விளைவால் சனங்கள் கிரியைகளைச் செய்கிறார்கள். ஆகையால் கருமத்தாலும் பிராமணர்கள் இல்லை.
சுலோகம் 8.
தானங்கள் வழங்குவதால் பிராமணர்கள் என்றால் அதுவும் இல்லை. சத்திரியர் முதலான பிற சாதியினரும் தானங்கள் செய்கிறார்கள்.
சுலோகம் 9.
அப்படியானால் யார் தான் பிராமணன்?
எவனொருவன் இரண்டற்ற சச்சிதானந்த சொரூபனாகவும், சாதி, குணம், கிரியை அற்றதும், பிறப்பு முதலான நிலைகள் இல்லாதவனாகவும், சத்தியம் ஞானம் அனந்தம் என்ற சொரூபமாகவும், தான் நிர்விகல்பமாகவும், எல்லா உயிர்களுக்குள்ளும் உள்ளே நின்று இயங்குவதாயும் சமம், தமம் உள்ளவன், விருப்பு வெறுப்பு அற்றவன், ஆசை மோகம் முதலியவை இல்லாமல் அகங்காரம் விட்டவன். இவனே பிராமணன். இவனே பிராமணன் என்பது சுருதி, சிமிருதி, புராண, இதிகாசங்களின் கருத்து. இதற்குப் புறம்பாகப் பிராமணத் தன்மை இல்லவே இல்லை.
சச்சிதானந்தமானதும் இரண்டற்றதுமான பிரமமாக ஆத்மாவை உணரவேண்டும்.

No comments:

Post a Comment