Thursday, January 8, 2015

பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் ஒரு காட்சி .

சகாதேவன் மகாபாரதத்தில் வரும் பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரியின் புதல்வராவார். இவர் அஸ்வினி தேவர்களின் மூலமாக பிறந்தவர். இவரும் நகுலனும் இரட்டையர்கள் ஆவர்.
பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் ஒரு காட்சி .
துரியோதனனும் சகுனியும் திட்டம் தீட்டி , பாண்டவர்களை சூதிலே வெல்லும் சூழ்ச்சியை செயல்படுத்த தொடங்கும் தருணம். தாங்கள் கட்டிஇருக்கும் புதிய மாளிகையை காண வரும்படி பாண்டவர்களுக்கு ஒரு ஓலையை தயார் செய்யும்படி சகுனி துரியோதனனுக்கு சொல்கிறான். அவனும் அதன்படி தயார் செய்த ஓலையில், கையெழுத்து இடும் வேளையில் அவன் கரங்களை தடுத்த சகுனி, உன் தந்தையை கையெழுத்திட சொல் . அதைத்தான் தர்மன் மதிப்பான் என்றும் , நம் ஆட்களிலேயே அவர்கள் அதிகம் மரியாதை வைத்திருப்பது விதுரனுக்குத்தான், எனவே அவனையே அந்த ஓலையை கொண்டு செல்ல சொல் என்றும் சூழ்ச்சிக்கான முதல் விதையை விதைக்கிறான்.
அதன்படி, விதுரர் கொண்டு வந்த ஓலையை படித்த தர்மன் , தன் தம்பிகளோடு கலந்து ஆலோசித்து வருவதாக கூறி முதலில் வீமனிடம் கருத்தினைக் கேட்க , அதற்க்கு வீமன் சொல்கிறான் .,
அண்ணா , நண்பர்கள் தங்களுக்குள் சண்டை இட்டுக் கொள்ள கூடாது ; பகைவர்கள் தங்களுக்குள் சண்டை இட்டுக் கொள்ளாமல் இருக்க கூடாது...
ஆரம்பம் முதலே நமக்கும் துரியோதனனுக்கும் இடையே பகைமை தான் இருக்கின்றது , எனவே மாளிகை காண செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றான்.
அடுத்து அர்ஜுனன் சொல்வது., அண்ணா, நாம் ஒருவரை சந்தேகப்பட்டால் நம்பக் கூடாது , நம்பினால் சந்தேகப் படக் கூடாது ; ஆரம்பம் முதலே நமக்கு துரியோதனன் மீது சந்தேகம் தானே ஒழிய , ஒரு போதும் நம்பிக்கை இருந்தது இல்லை. எனவே மாளிகை காண செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றான். அடுத்து நகுலன் ., என் முன்னவர் இருவர் கூறியதே என்னுடைய கருத்து என்ற பின் சகாதேவனிடம் வருகிறான் தர்மன் .
சகாதேவன் யார் , முற்றும் உணர்ந்தவன் , ஞானி ! சகாதேவன் தர்மனை கேட்கிறான்,
சகாதேவன்: அண்ணா, ஓலையை எழுதச் சொன்னது யார் ?
தர்மன் : சகுனி
சகாதேவன்: ஓலையை எழுதி இருப்பது யார் ?
தர்மன் : துரியோதனன்
சகாதேவன்: ஓலையில் கையெழுத்து இட்டிருப்பது யார்?
தர்மன்: திருதிராஷ்டிரர்
சகாதேவன் : ஓலையை கொண்டு வந்திருப்பது யார்?
தர்மன்: விதுரர் 
சகாதேவன் : இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கும் நீர் யார்?
தர்மன்: உன் அண்ணனாகிய தர்மன் 
சகாதேவன் : நீர் யாரிடத்தில் இந்தக் கேள்வியை கேட்டு கொண்டு இருக்கிறீர் ?
தர்மன் : என் தம்பியாகிய சகாதேவனிடத்தில் 
சகாதேவன் : அண்ணா, நான் மீண்டும் கேட்கிறேன் ஓலையை எழுதச் சொன்னது யார் 
தர்மன் : சகுனி
சகாதேவன்: ஓலையை எழுதி இருப்பது யார் ?
தர்மன்: துரியோதனன்
சகாதேவன்: ஓலையில் கையெழுத்து இட்டிருப்பது யார்?
தர்மன் : திருதிராஷ்டிரர்
சகாதேவன் : ஓலையை கொண்டு வந்திருப்பது யார்?
தர்மன்: விதுரர் 
சகாதேவன் : இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கும் நீர் யார்?
தர்மன் : (கோபத்துடன்) என்ன சகாதேவா , விளையாடுகிறாயா? ஒரே கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கிறாய் , நானும் மீண்டும் மீண்டும் பதில் கூறிக் கொண்டே இருக்கிறேன் . என்ன இது ?
சகாதேவன்: இது ஏன் என்றால் , நான் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில்தான். அதோ அங்கே நம்மை அழைத்துச் செல்ல நமக்கு முன்பாகவே அந்த ரதத்தில் ஏறி அமர்ந்து தயாராய் இருக்கிறதே விதி , அதுதான் அது ! இப்போது சொல்லிப்பார் , ஓலையை எழுதச் சொன்னது யார்?விதி. ஓலையை எழுதி இருப்பது யார் ?விதி. ஓலையில் கையெழுத்து இட்டிருப்பது யார்?விதி.ஓலையை கொண்டு வந்திருப்பது யார்? விதி...

இப்படியாக நடக்கவிருக்கும் விதியினை , அதற்க்கான நேரத்தில் விளக்கம் கொடுத்த சகாதேவன் , விதி குறித்து பாரதப் போரின் இறுதியில் இப்படியாக கூறுகிறான் . உலகின் அத்துணை விஷயங்களும் விதியுடன் பிணைக்கப்பட்டவையே..
சரி , தவறு என்ற இரு வேறு கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு உருவான விதிக்கு என்று தனியே சரி தவறு கிடையாது , அதுவே அதன் விதி. விதி என்பது நம்பிக்கையின் அடிப்படையில் கடவுளை தொழுவது போன்றது . துன்பம் வரும்போது மட்டுமே கடவுளைத் தேடும் மனித மனம் , தான் செய்யும் தவறுகளுக்கு எல்லாம் பழி சுமக்க மட்டுமே விதியை தேடுகிறது. எல்லாம் அவன் செயல்!....

No comments:

Post a Comment