Wednesday, January 7, 2015

காசிக்குப் போனால் வினை (பாவம்) போகுமா..?!

காசிக்குப் போனால் வினை (பாவம்) போகுமா..?! அந்தக் கங்கையில் நீராடினால் நற்கதி கிடைக்குமா..?! புண்ணியதலங்களுக்குச் செல்வதால் இறையுடன் இரண்டறக் கலக்கலாமா..?!
இவை புனிதமான வழிபாட்டிற்குரிய இடங்கள்தான். இருந்தாலும் இங்கு செல்வதால் மட்டும் எந்த ஆன்ம இலாபமும் கிடைக்காது.
காசிக்கோ டில்வினை போமோ - அந்தக்
கங்கையா டில்கதி தானுமுண் டாமோ ?
பேசுமுன் கன்மங்கள் சாமோ ? - பல
பேதம் பிறப்பது போற்றினும் போமோ.
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
-கடுவெளிச் சித்தர் பாடல்
கங்கையிலே காவிரியில் நூறுமுறை மூழ்கி
கணக்கற்ற திருக்கோயில் கால்தேய சுற்றி
வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி
வேதங்கள் கூறுகின்ற யாகமெல்லாம் செய்து
பங்கமிலா வேதியர்கை பணம்அள்ளி தந்து
பசுவதைப் பூசித்து அதன்கழிவை உண்டு
தங்களுயிர் மோட்சத்தை அடைவதற்கே முயலும்
தயவில்லார் சத்தியமாய் முத்தியதை யடையார்.
-ஆசான் வள்ளலார் - 14.
நம் முன்னோர்கள் இயற்கையை வழிபட்டு இருக்கின்றனர். இயற்கையின் தன்மையை உணர்ந்து, வென்று சிவத்தை(கடவுள்தன்மை) யடைந்த மனிதர்களை(சித்தர்களை) வழிபட்டு இருக்கின்றனர். ஆனால் அவர்கள் நமக்கு விட்டுச்சென்ற கோவில்கள் அனைத்தும் நமது உடம்பேயன்றி வேறொன்றும் இல்லை என்று நாம் உணரவில்லை. ஆகவேதான் நாம் நம் நிம்மதியை தேடி கோவில்களுக்கு செல்கிறோம். தவறில்லை. ஆனால் உணர்ந்து செயல்பட்டால் மிகச் சிறப்பு.
"உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே"
- ஆசான் திருமூலர் (725)
என்று மானுட உடம்பின் மகத்துவத்தை மனித மனத்தில் பதிய வைத்த ஆசான் திருமூலர். இதோடு நின்று விடாது,
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்"
என்று பாடியவர் மேலும் கூறுகிறார்,
"உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்து நின்றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பறந்து திரிவாரே
கள்ள மனமுடைக் கல்வி இலோரே!
என்று உள்ளத்துள்ளே இறைவனைக் காணாது வேறு எங்கெங்கோ தேடி அலையும் வீனரை மூடர் என்றே ஏசுகிறார்.
உடம்பில் நன்மையும், தீமையும் சேர்த்தே இயற்கை அன்னை படைத்துள்ளாள். இந்த உடம்பில் தீமை சேர்த்து படைத்ததின் காரணம், நெல்லுக்கு உமி இல்லை என்றால் மீண்டும் முளைக்காது. ஆகவே, இந்த தேகத்தில் கேட்டையும், ஆக்கத்தையும் சேர்த்து படைத்திருக்கிறாள். கேடாகிய உமி நீங்கினால் அரிசி மீண்டும் முளைக்காது. (புற உடம்பாகிய மும்மல தேகம் நீங்கினால்) அதேபோல் கேடான மும்மலம் என்னும் உமி நீங்கினால் மலமற்ற ஒளி உடம்பாகிய ஜோதி உடம்பு உண்டாகும். ஜோதி உடம்பு உண்டானால் மீண்டும் பிறக்காது (உமி நீங்கினால் அரிசி முளைக்காதது போல).
உடம்பைப்பற்றி அறிகின்ற சிறப்பறிவு தான் வேதம். உன்னுள்ளே எப்போதும் இருக்கின்ற சோதியை உன்னால் அறிய முடியாது. ஏனென்றால் நமது சிந்தனையும் செயலும் அதை நோக்கி இல்லை. தினம் தினம் ஞானிகளை பூசை செய்து தக்க குருவின் துணையுடன் அறியலாம்.
அரிதான பிறப்பாகிய மனிதப் பிறப்பைப் பெற்றவர் மகான் / சித்தர் / சிவம் / கடவுள் ஆகவேண்டும்
‪#‎உடம்பினுள்‬ உத்தமனைக் காண் - ஆசான் ஔவையார்
பிறவிப்பிணியைத் தரும் உடம்பே நஞ்சு. ஆனால், அந்த உடம்பினுள்ளே மிகப்பெரும் ஆக்கசக்தி(மெய்) உண்டு. பிறவிப்பிணியை வெல்ல குண்டலனி சக்தியை இறைதுணையோடு தட்டி எழுப்பி சுக்கிலத்தை முதுகுத்தண்டிலுள்ள 18 முடிச்சுக்களைத்(இதுவே மெஞ்ஞான 18படிகள்) தாண்டி, கண்டத்தின் மேலெழ அமிர்தமாக மாறி, 7 சக்கரங்கள் கடந்து 7 திரைகளையும் நீக்கி, உடற்கசடுகளை நீக்கி இறைதுணையுடன் இறையுடன் இரண்டறக் கலந்து, சதாகாலமும் இறையுடனேயே நீக்கமற நிலை பெறலாம். இவ்வாறு நீக்கமற நிலைபெற்றவர்களே சித்தபெருமக்கள். இவர்கள் ஐந்தொழில்களையும் செய்யும் ஆற்றலுடையவர்கள் ஆவர்.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கங்
கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே.
- திருமந்திரம் (ஆசான் திருமூலர்)
ஞானிகள் காரண உடம்பை பெற்றவர்கள். நமது உடம்பு தூல தேகம் கண்ணால் பார்க்க கூடியது ஆனால் சூட்சுமதேகம் என்றால் அறிவுக்கு மட்டுமே புலப்படும். உடம்பைப் காப்பாற்றிக் கொண்டவனால்தான் பிறவியை ஒழிக்க முடியும். சைவ உணவை உட்கொண்டு தினம் தினம் தியானம் செய்ய வேண்டும்.
நம் உடம்புக்குள்ளே மிக அற்புதசக்தி ஒன்று இருக்கிறது. அந்த சக்தியைத் தட்டி எழுப்புவதற்கு ஆசான் சுப்ரமண்யர் அருளாசி வேண்டும்.. அவர் அந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். ஓர் ஒளிச்சுடர், சொல்லவொண்ணாப் பேரானந்தத்தை தரக்கூடிய ஒர் ஒளிச்சுடரை அவர் அடைந்திருக்கிறார். அதை நாம் அடைய வேண்டும்.
அதை அடைவதற்குக் கடைசி, குறையெல்லாம் நிவர்த்திப்பதற்கு நிறை எது ? என்று கேட்டான். அது மீண்டும் பிறவாமை. அதுதான் நிறை. குறையெல்லாம் முடிந்தது. முன் செய்த பாவம் குறை. கல்வி குறை; மன உளைச்சல்; பல்வேறு பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து கொண்டே வருகிறது. தீரும் வரை விடக்கூடாது. அதுதான் பிரச்சனை, நம் குறை தீர்ந்தது; செல்வநிலை பெருகியது, வறுமை தீர்ந்தது. எல்லாம் தீர வேண்டும். கடைசியில் பெற வேண்டிய ஒன்று. நிறைவான வாழ்வு. எப்போதும் நிறைவான வாழ்வு. அதை அடைவதற்கு ஆசானைக் கேட்க வேண்டும். அதுதான் முடிவு. பூஜையின் முடிவு அதுதான். ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டும். இப்ப ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்காகத் திருவடியைப் பற்ற வேண்டும். அதுதான் குறையது கூறி குணங்கொண்டு போற்ற என்றார்.
நம் குறையெல்லாம் சொல்லி, குணங்கொண்டு போற்றணும். போற்றுதல் என்பது ஞானிகளைப் புகழ்ந்து பேசுதல். நல்ல பண்போடு குணங்கொண்டு பேசணும்.
"குணங்கொண்டு போற்றச் சிறை உடல் நீ அறக் காட்டி"
நம் ஆன்மா சிறைப்பட்டுக் கிடக்கிறது இப்போது. எந்தச் சிறையில் கிடக்கிறது? மனமாசு. மலமாசு. உடம்பு என்று சொல்லப்பட்ட களிம்பு தேகம். மும்மலம் என்று சொல்லப்பட்ட களிம்பு தேகத்தில் அந்த ஆன்மா சிறைப்பட்டிருக்கிறது. சிறை உடல் நீ அறக் காட்டி – ஆன்மா சிறைப்பட்டிருப்பதை, நீக்கக் காட்டி, அது அற்றுப் போகும்படி செய்து,
"சிவத்தோடு அறிவுக்கு அறிவிப்போன் சன்மார்க்கி ஆமே" நாம் சிவத்தோடு சேர வேண்டும். இப்போது நாம் சவமாக இருக்கிறோம். நம் உடம்பில் தலைவன் இருந்தாலும், புலப்படவில்லை நமக்கு. அதுதான்,
உள்ளத்து ஒருவனை உள்ளுறு சோதியை
உள்ளம் விட்டு ஓரடி நீங்கா ஒருவனை
உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருவு அறியாதே
-திருமந்திரம் (ஆசான் திருமூலர்)-கவி எண் 431
நம்மோடு தலைவன் இருக்கிறான். ஆனால் அவனை அறிய முடியாது. ஆக நாம் என்ன செய்யணும், சிவத்தோடு இருக்கணும். நம் உடம்பிற்குள்ளேயே தலைவன் இருக்கிறான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதுதான்
"உள்ளத்து ஒருவனை உள்ளுறு சோதியை
உள்ளம் விட்டு ஓரடி நீங்கா ஒருவனை"
அவன் நம் மனதை விட்டு ஒரு அடி கூட, ஒரு அங்குலம் கூட நகரவில்லை. ஒரு ஜாண் கூடப் போகவில்லை. உள்ளம் விட்டு ஓரடி என்று சொன்னார்.
"உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருவு அறியாதே."
அவனும் நாமும் இருக்கிறோம். ஆனால், நாம் உடம்பாகிய சாக்கடைக்குள்ளே ஒரு வைரமணி இருக்கிறது. அந்த வைரமணி ஜொலிக்க வேண்டும். அதுவோ ஆயிரம் கோடி சூரியப்பிரகாசம் உள்ள ஒரு வைரமணி. அந்த வைரஜோதி, அதுதான் அந்த ஆணிப்பொன் அம்பலம் என்று சொல்வார். அந்த மணி வந்து உடம்பாகிய நாற்ற தேகம், அசுத்தத்தில் கிடக்கிறது. அப்ப என்ன சொல்வார், சிவத்தோடு அறிவுக்கு அறிவிப்போன் சன்மார்க்கி ஆமே என்றார். சுடரைத் தட்டி எழுப்பணும்.
உற்றுநின் றாரொடு மத்தகு சோதியைச்
சித்தர்கள் என்றுந் தெரிந்தறி வார்இல்லை
பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே.
- திருமந்திரம் (ஆசான் திருமூலர்)
அருட்பெருஞ்சோதியை சிறந்த பண்பாளர்கள்தான் காணமுடியும். அந்த ஜோதி நம்முள்ளே இருந்தாலும் ஆசான் தான் அதைச் சொல்ல வேண்டும். தினமும் பூசை செய்தால் குணக்கேடுகள் படிப்படியாக நீங்கும். உங்கள் பத்திக்கு அடிமையாகி ஆசான் உங்கள் முன் நிற்பார். பூசை செய்வதற்கு வயதெல்லை கிடையாது. நேரம் வரும்போது பார்க்கலாம் என்று விட்டால் அந்த நேரம் உங்களுக்கு கிடைக்காமலே போய்விடும் என்கிறார் தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்.
குருபோக நாதரைத்தான் கூறுடன் பூஜைசெய்து 
குருமூலர் சட்டடைநாதர் கொங்கணர் காலாங்கி பாதம் 
குருவென்று பூஜை செய்து கூறும் இச்சுவடி வைத்து 
குருவென்று பதம் பணிந்தோர் கூறுடன் வேதைகாண்பார் 
ஆமப்பா யுத்தி சொன்னேன் அழிபுத்தி சொல்லவில்லை 
ஆமப்பா வேதைகண்டால் கற்பத்தை அதன்பின்கொள்ளு 
ஆமப்பா சித்தியாகும் அன்புடன் செய்து பாரு 
ஆமப்பா குருவைக்காணு அன்புடன் சொல்லினேனே. 
-ஆசான் கருவூர் முனிவர் -11-
மகான் கருவூர் முனிவர் அருளிய கவியின் சாரம் :;
சித்தர்கள் அத்தனைபேரும் ஒரே தன்மையுடையவர்கள் ஆவார்கள். இவர்கள் ஆசான் அகத்தீசன் திருவடியை பூஜை செய்தவர்கள் ஆவார்கள். அகத்தீசனை பூஜைசெய்ய பூஜைசெய்யதான் உடம்பையும் உயிரையும் பற்றி அறிந்துகொள்ள முடியும். உயிரின் இயக்கமே மூச்சுக்காற்றின் இயக்கமாகும். மூச்சுக்காற்றின் இயக்கமே உயிரின் இயக்கமாகும். மூச்சுக்காற்று நாள் ஒன்றுக்கு 21,600 முறை வந்து போவதாகும். இந்த காற்றை ஞானிகள் என்ன செய்கின்றார்கள் என்றால், ஆசான் அகத்தீசன் ஆசியால் ரேசகம், பூரகம், கும்பகம் ஆகிய இயக்கத்தை அறிந்து ஆசான் திருவடியை உருகி தியானிக்கின்றார்கள். என்னதான் மூச்சுக்காற்றை பற்றி அறிந்திருந்தாலும், சுழிமுனையில் வாசியை செலுத்த முடியாது. அகத்தீசன்தான் அவரவர் பக்குவத்தை அறிந்து வாசியோடு வாசியாக கலந்து வாசி நடத்தி தருவார் (மூச்சுக்காற்றை இயக்கச் செய்வார்). அவர் வாசி நடத்தாமல் நாமே முயன்றால் கொடிய நோய்வாய்ப்பட்டு இறந்து விடுவோம்.
எனவே, எல்லா ஞானிகளும், ஆசான் அகத்தீசனை பூஜை செய்து பூஜை செய்து ஆசி பெற்றதால்தான் மரணமில்லா பெருவாழ்வு பெற்றுள்ளார்கள். அந்த வரிசையில் போகமகாரிஷி, திருமூலதேவர், சட்டை முனிவர், கொங்கணர், காலாங்கிநாதர் ஆக ஐவரும் ஆசான் அகத்தீசரை பூஜை செய்து ஆசி பெற்றதால்தான் அளவிலா சித்தி பெற்றுள்ளார்கள்.
இவர்கள் பெருமையை கருவூர் முனிவர் அவர்கள், நன்கு உணர்ந்து தம் நூலில் அவர்களை புகழ்ந்து பாடியுள்ளார். நாமும் கருவூர் முனிவர் நூலை படித்தும், பூஜித்தும் ஆசிபெற்றால் பலகோடி ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கி ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ளலாம்.
கருவூர் முனிவரும் ஆசான் அகத்தீசர் ஆசி பெற்றவர்தான். எந்த ஞானிகளை நாம் பூஜை செய்தாலும், எல்லா பூஜையும் ஆசான் அகத்தீசன் திருவடியையே சாரும். எனவே மேற்கண்ட ஐந்து ஞானிகளையும் மற்றும் கருவூர் முனிவரையும், அகத்தீசரையும் பூஜித்து ஆசிபெற்றுக் கொள்வோம்.
இந்த உபதேசம் கருவூர் முனிவர் சொன்னதாகும். இதை நல்மனதுடன் சொல்கின்றேன் என்றும், இதை நீங்கள் பின்பற்றினால் ஞானம் பெறலாம் என்றும் சொல்லியுள்ளார்.
எனவே, ஞானிகளை பூஜிப்போம்! நலம் பெற்று வாழ்வோம்!!
ஆகவே கோவிலுக்கு செல்வதால் மட்டுமே பலனில்லை. நாம் நம் உடலை புரிந்து கொண்டு அதை சரியாக ஓம்புவதால் மட்டுமே நம்மால் நம் உள்ளம் நன்றாக வேலை செய்யும். நம் உளம் நன்றாக வேலை செய்தால் நம்முடைய சுற்று வட்டாரங்கள் நமக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் நம் உலகம் ஒன்றுகொன்று தொடர்புடையதே. ஆகையால் வெற்றி வேண்டுமெனில் நாம் நம்மிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதை விடுத்து கோவில் கோவிலாக ஏறி இறங்கி விட்டு கடவுள் எனக்கு ஒன்றும் செய்ய வில்லையே என்று புலம்புதல் நன்றல்ல.
ஆசான் ஔவையார் அருளிய 
ஞானக்குறள் <உடம்பின் பயன்>
உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லா
முடம்பினி லுத்தமனைக் காண். 11
உணர்வாவ வெல்லா முடம்பின் பயனே
யுணர்க உணர்வு டையார். 12
ஒருபய னாவ துடம்பின் பயனே
தருபயனாஞ் சங்கரனைச் சார். 13
பிறப்பினாற் பெற்ற பயனாவ தெல்லாந்
துறப்பதாந் தூநெறிக்கட் சென்று. 14
உடம்பினா லன்றி யுணர்வுதா னில்லை
யுடம்பினா லுன்னிய தேயாம். 15
மாசற்ற கொள்கை மனத்தி லடைந்தக்கால்
ஈசனைக் காட்டு முடம்பு. 16
ஓசை யுணர்வுக ளெல்லாந் தருவிக்கும்
நேசத்தா லாய வுடம்பு. 17
உயிர்க்குறுதி யெல்லா முடம்பின் பயனே
அயிர்ப்பின்றி யாதியை நாடு. 18
உடம்பினாற் பெற்ற பயனாவ வெல்லாம்
திடம்பட வீசனைத் தேடு. 19
அன்னத்தா லாய உடம்பின் பயனெல்லா
முன்னோனைக் காட்டி விடும். 20

No comments:

Post a Comment