Tuesday, February 24, 2015

கால்களுக்கு கவனிப்பைக் கொடுத்தால், உடலின் எல்லாப் பாகங்களும் செம்மையாகும்

கால்களைக் கண்களைப் போல் பாதுகாத்தால்,....!!!
திரும்பத் திரும்ப கால்கள், கால்கள் என்று சொல்கிறாரே என்று பார்க்காதீர்கள். கால்களைச் சரிவரக் கவனித்தால், உடம்பின் ஒட்டுமொத்த பாகங்களையும் கவனித்துக்கொண்ட மாதிரி! காரணம், நம்முடைய கால்களுக்கும் உடம்பின் அனைத்துப் பாகங்களும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
பாதங்களின் ஒவ்வொரு பகுதியையும் இதமாகப் பிடித்துவிடுகிறோம்; விரல்களைச் சொடுக்கெடுத்து, மென்மையாக வருடிக் கொடுக்கிறோம். முதுகின் தண்டுவடப் பகுதிகளுக்கும் ஒத்தடம் கொடுப்பது போல், கைகளைக் கொண்டு தடவிக் கொடுக்கிறோம்.
இவையெல்லாம் என்னென்ன நன்மைகளை நமக்குத் தருகின்றன தெரியுமா?
காலின் கட்டைவிரலில் ஆணிக்கால் வருகிற இடத்தின் மையப்பகுதி, தலை, சைனஸ், கழுத்து, தைராய்டு எனப்படும் சுரப்பிகளுடன் தொடர்புகொண்ட பகுதி.
சுண்டுவிரலின் கீழ்ப்பகுதி, கைப்பகுதிகளுடனும் அதையடுத்த பகுதி தோள்பட்டைகளுடனும் தொடர்புகொண்டது.
பாதத்தின் விரல்களில் இருந்து முக்கால் பகுதிக்கு வந்துவிட்டால், பெருங்குடல் மற்றும் மலக் குடல் ஆகியவற்றுடன் சம்பந்தம் கொண்டதாகிவிடுகிறது. இவை வலது பாதத்துக்கானது!
இடது பாதத்தின் நான்கு விரல்களுக்கும் கீழுள்ள பகுதி, நுரையீரல் மற்றும் இதயத்துடன் தொடர்பு கொண்டது. பாதத்தின் நடுப்பகுதி, வயிறு மற்றும் மண்ணீரலுடன் சம்பந்தம் கொண்டிருக்கிறது. பாதத்துக்கு மேலேயுள்ள மணிக்கட்டு, கருப்பை, பிறப்புறுப்பு, கீழ் இடுப்பு, நிணநீர்ச் சுரப்பி ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது.
பாதங்களில் செய்யப்படுகிற பயிற்சிகளால், கால்கள் பலம் அடைகின்றன. வயிற்றின் எல்லாப் பகுதிகளிலும் ரத்த ஓட்டம் சீரடைகிறது. கீல் வாதம், கணுக்கால் வீக்கம், முழங்கால் வலி, குடைச்சல், நரம்பு வலி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் பெறலாம்.
முதுகெலும்பை வருடிக்கொடுப்பதன் மூலம், அதிலிருந்து புறப்படும் நரம்புகள் புத்துணர்சி பெறுகின்றன. மூத்திரக்காய் மற்றும் அடிவயிற்றுப் பகுதியின் இயக்கம் சீரடைதல் எனச் செயல்பாடுகள் செவ்வனே அமைகின்றன.
உடலின் முக்கியமான உட்பகுதிகளான இதயம், சுவாசப் பைகள், குடல், மூளை, சுரப்பிகள் போன்றவை சுறுசுறுப்புடன் செயல்படத் துவங்குகின்றன. செரிமானக் கோளாறு என்ற பேச்சுக்கே இடமில்லாத நிலை ஏற்படும்.
மலச்சிக்கல் இருந்தால் மனச்சிக்கல் இருக்கும்; மனச்சிக்கல் இருந்தால், மலச்சிக்கல் ஏற்படும் என்பார்கள். எனவே, மலச்சிக்கலில் இருந்து விடுபட்டால், உடலின் எந்தப் பகுதியிலும் சிக்கல் ஏதும் வராமல் தடுத்துவிடலாம்.
ஆக, கால்கள் குறித்து அதிகக் கவனம் செலுத்துவது நல்லது. கால்கள்தானே என்று கால்வாசி, அரைவாசி ஈடுபாட்டை மட்டும் காட்டினால், அவை முழுவதுமான பயன்களை நமக்கு வழங்காது. அரைகுறையாகச் செயல்பட்டதை 'பாதிக் கிணறுதான் தாண்ட முடிஞ்சுது’ என்று சொல்வோம், இல்லையா? அப்படி பாதிக் கிணறு தாண்டினால், முடிவு... அந்தக் கிணற்றிலேயே விழவேண்டியதுதான். எனவே, முழுமையான செயல்பாடு ரொம்ப முக்கியம்.
அன்பர்களே! கால்களைக் காதலியுங்கள்; உங்கள் குழந்தைகளைப் போல் நல்லவிதமாகப் பராமரியுங்கள்; உங்கள் வீட்டுப் பெரியவர்களிடம் காட்டுகிற கனிவையும் அன்பையும் கால்களிடமும் காட்டுங்கள்.
கால்களைக் கண்களைப் போல் பாதுகாத்தால், அது ஆபத்துக் காலங்களில் நம்மைக் கை கொடுத்துக் காப்பாற்றும் என்பதை மறந்துவிடாதீர்கள்!
அடுத்து... வஜ்ராசனம் பற்றிப் பார்ப்போம்.
இந்தப் பயிற்சியை மேற்கொள்வதற்கு முன்னதாக ஒரு விஷயம்.
எந்தவொரு ஆசனத்தையும் குருவின் உதவியோடு செய்வதே உத்தமம். ஒரு விஷயத்தைக் கட்டுரையாகச் சொல்வது எளிது. உரிய படங்களைக் கொண்டு அந்தக் கட்டுரையை விளக்கிவிடலாம். ஆனால், கட்டுரையையும் படங்களையும் வைத்துக்கொண்டு, ஆசனப் பயிற்சிகளில் ஈடுபடுவது அத்தனை சரியல்ல!
கொஞ்சம் பிசகினாலும் உடலில் சிக்கல்கள் வந்துவிடும்; நூலிழை தவறினாலும், நொந்துகொள்ள நேரிடும். ஆகவே, குருவின் உதவி மிக மிக அவசியம்.
''போன வருஷம் வரைக்கும் நல்லாத்தான் இருந்தேன். இப்ப, ஆறு மாசமா திடீர்னும் தொப்பை போட்ருச்சு. போன தீபாவளிக்கு எடுத்த பேன்ட்டைக்கூட போட்டுக்க முடியலை. வேகமாக நடக்கமுடியலை; ஒரு பத்தடி தூரம் ஓடி, பஸ்ஸைப் பிடிக்க முடியலை; ரெண்டு மாடி ஏறினாலே மேல்மூச்சு, கீழ் மூச்சு வாங்குது!'' என்று அலுத்துக்கொண்ட ஓர் அன்பர், தொப்பையால் உடல்ரீதியாக மட்டுமின்றி, மனரீதியாகவும் தனக்கு நேர்ந்துள்ள பிரச்னைகளை விவரித்தார்.
உணவின் மீது கவனம் வைத்தாலே நம்மில் பலரும் தொப்பையில் இருந்து மீண்டுவிடலாம்; உடலின் மீதும் கவனம் வைத்தால், தொப்பை எனும் தொந்தரவு வரவே வராது!
ஆனாலும், அவை குறித்து ஆழ்ந்து யோசிக்காமல், தொப்பை வளர்ந்து, பூதாகரமாக இருக்கிற வேளையில், நொந்துகொள்வதும், நொறுங்கிப்போவதும், மன உளைச்சலுக்கு ஆளாகித் தவிப்பதும் ஏன்?
சரி, கவலையை விடுங்கள்! தொப்பை போன்ற பல பிரச்னைகளில் இருந்து விடுபடுவதற்கு, வஜ்ராசனம் பேருதவி செய்கிறது. இந்தப் பயிற்சியை மேற்கொள்ளத் துவங்கிவிட்டால், உடலில் ஏற்படுகிற மாற்றத்தையும் புத்துணர்ச்சியையும் நம்மால் மிக எளிதாக உணரமுடியும்.
வஜ்ராசனப் பயிற்சியில் எவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறாரோ, அவர்களுக்குத் தைராய்டு பிரச்னை போன்ற உபாதைகள் வர வாய்ப்பே இல்லை. தொப்பை என்பது வயிற்றில் வருவது மட்டுமே! ஆனால், தைராய்டு பிரச்னை என்பது கைகள், கழுத்து, முகம் எனப் பல இடங்களில் பரவி, நம்மை மிகப் பருமனானவராகக் காட்டக்கூடியது!
ஒல்லியாக இருப்பவர்கள் குண்டாவதற்கும், குண்டாக உள்ளவர்கள் ஒல்லியாக இருப்பதற்கும் ஆசைப்படுகின்றனர். உலகின் விசித்திரங்களில் இதுவும் ஒன்று!
கால்கள் வேர்கள் ( வேதாத்திரி மகரிஷி ) part = 2
'சுவாமி, உடலில் எத்தனையோ உறுப்புகள் இருக்கும்போது, கால்களுக்கு மட்டும் ஏன் இத்தனைக் கரிசனம் காட்டச் சொல்கிறீர்கள்?'' என்று கேட்டார் அன்பர் ஒருவர்.
அவரே தொடர்ந்து... ''அலுவலகத்திலோ வீட்டிலோ ஏதேனும் வேலை செய்யும் போதெல்லாம் கைகளைத்தான் பயன்படுத்து கிறோம். மின்விசிறிக்குக் கீழே அமர்ந்து செய்கிற வேலையாக இருந்தாலும் சரி, மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு பல ஏரியாக்களில் அலைவதாக இருந்தாலும் சரி... கால்களுக்குப் பெரிய வேலை எதுவுமே இல்லியே?! கண்கள் கவனமாகப் பார்க்கின்றன; முன்னேயும் பின்னேயும் பக்கவாட்டிலும் வருகிற மற்ற வாகனங்களுக்குத் தக்கபடி வண்டியைச் செலுத்தவேண்டும் என எந்நேரமும் புத்தி விழித்துக்கொண்டு செயல்படுகிறது. மனம், புத்தி, கண்கள் ஆகியன ஒன்று சேர்ந்து ஒரே எண்ணத்துடன் பணியாற்றுகின்றன. அதேபோல், வண்டியை பேலன்ஸ் செய்து ஓட்டுவதற்குத் தோதாக, நம் முதுகு நிமிர்ந்தும் வளைந்தும் செயல்பட்டபடி இருக்கிறது. கைகள் ஹேண்டில்பாரைப் பற்றியிருக்கின்றன. அப்படியிருக்க... கால்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு கவனம் செலுத்தவேண்டும்? இத்தனைக் கரிசனம் எதற்காக?'' என்றார்.
உடனே அங்கிருந்த மற்ற அன்பர்கள், அவரைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தனர். கைகளை உயர்த்திச் சிரிப்பை நிறுத்தினேன். ''ஏன் சிரிக்கிறீர்கள்? அவரது சந்தேகம் நியாயமானது! நீங்கள் இப்படிச் சிரித்தால், உங்களில் வேறு சிலரின் இதுபோன்ற சந்தேகங்கள் கேட்கப்படாமலே போகலாம்; விடைகள், வினாக்களுக்காக ஏங்கித் தவிக்கும்'' என்று சொல்லிவிட்டு, அந்த அன்பரைப் பார்த்தேன்.
''நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா?'' என்று கேட்டேன். ''ஆமாம்'' என்றார். ''நிம்மதியாக இருக்கிறீர்களா?'' என்று கேட்டேன். அதற்கும் ''ஆமாம்'' என்றார். ''சரி, மிகப் பெரிய சந்தோஷமும் நிம்மதியும் எப்போது, எதனால் கிடைப்பதாக உணர்கிறீர்கள்?'' என்று கேட்டேன். சற்றே யோசித்தவர், ''ஆபீஸ் செல்வதற்குப் புதிதாக பைக் வாங்கினேன். இப்போது ஆபீஸ் சென்று வருவது சுலபமாக, சுகமாக இருக்கிறது, சுவாமி!'' என்றார். தொடர்ந்து, ''என் மகன் ஆசைப் பட்டபடி, அவனை இன்ஜினீயரிங் படிப்பில் சேர்த்துவிட்டிருக்கிறேன். இதைவிட வேறென்ன நிம்மதி வேண்டும்?'' என்றார். பிறகு அவரே, ''என் மனைவிக்குச் சமீபத்தில் தங்க வளையல் வாங்கித் தந்தேன். அவளது முகத்தில் அப்படியரு பிரகாசம்!'' என்று வெட்கத்துடன் தெரிவித்தார். ''அவ்வளவுதானா? இன்னும் இருக்கிறதா?'' என்று புன்சிரிப்புடன் கேட்டேன்.
''கிராமத்தில் உள்ள என் அப்பாவின் குடை, கிழிந்து, கம்பிகள் உடைந்துவிட்டன. அதேபோல், அம்மாவின் மூக்குக்கண்ணாடி வளைந்தும் நெளிந்துமாக, கீழே குனிகிறபோதெல்லாம் விழுந்துவிடுகின்றன. போன மாதம் ஊருக்குச் சென்றபோது, அப்பாவுக்கு குடையும் அம்மாவுக்கு ஒரு மூக்குக் கண்ணாடியும் வாங்கிக் கொடுத்தேன். அவர்களுக்கு ரொம்ப சந்தோஷம். என் மனதின் பூரிப்புக்கும் நிறைவுக்கும் அளவே இல்லை'' என்று சொல்லும்போது அந்த அன்பரின் கண்கள் கலங்கியிருந்தன.
மோட்டார் சைக்கிள், கல்லூரிப் படிப்பு, தங்க வளையல் எல்லாமே காஸ்ட்லிதான்! ஆனால், அப்பாவுக்கு வாங்கித் தந்த குடையிலும், அம்மாவின் மூக்குக் கண்ணாடியிலும் அத்தனை நிம்மதியும் சந்தோஷமும் பரவிக் கிடக்கின்றன. பிறந்தது முதல் இன்றைய நாள் வரையிலான நம்முடைய இந்தப் பயணத்துக்கு, அவர்கள்தானே வித்து! வேர்களுக்கு நீருற்றினால் தானே மரத்துக்குத் தெம்பு?!
அப்படித்தான்... மரமென ஓங்கி உயர்ந்து, வளர்ந்து நிற்கிற நமக்கான வேர்கள், நம் கால்கள்!
வஜ்ராசனம் தெரியுமா?
இரண்டு தொடைகளும் சேர்ந்த நிலையில், இரண்டு பாதங்களும் பின்னுக்குச் செல்ல, மண்டியிட்டு அமருங்கள். அதாவது, உங்களுக்குப் பின்பக்கத் தில், வலது கால் பெருவிரலை இடது கால் பெருவிரல்மீது வைத்துக் கொண்டு, குதிகால்களை நன்றாக விரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
அந்த உள்ளங்கால்களுக்கு இடையே பிருஷ்டத்தை, அதாவது நமது பின் பாகத்தை வசதியாக வைத்துக்கொண்டு, அமருங்கள். நேராக நிமிர்ந்து உட்காருங்கள். இரண்டு கைகளையும் பின்னால், முதுகின் மேல் பகுதிக்குக் கொண்டு வரவும். கட்டைவிரல்கள் தவிர, மீதமுள்ள எட்டு விரல்களும் முதுகை மேலிருந்து கீழாக அழுத்தியபடி, கீழ் முதுகு வரை அழுத்துங்கள்.
அதாவது, முதுகெலும்பு எனும் பகுதியை எட்டு விரல்களும் தொட்டுக் கொண்டே வரட்டும். கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் ஐந்தைந்து முறை செய்யுங்கள்.
நம்முடைய முதுகை நம்மால் பார்க்கமுடியாது. அதனால் என்ன?!
நமது முதுகை, கால்கள் தாங்கிக் கொள்ளும். 'உனக்கு நான், எனக்கு நீ' என்று பரஸ்பரம் கைகுலுக்கிக் கொள்ளும். முதுகெலும்பில் தெம்பில்லை எனில், கால்கள் ரொம்ப நேரம் நிற்காது. கால்களுக்கு வலு இல்லையெனில், முதுகெலும்பு நொந்து போகும்.
சட்டென்று முதுகு வளையும். 'என்னன்னே தெரியலீங்க... பத்து நிமிஷம் நின்னாலே, முதுகு சுருக்குனு பிடிச்சுக்குது' எனப் பலரும் புலம்புவதைக் கேட்டிருக்கலாம்!
அதுமட்டுமா? அலுவலகத்தில், நீண்ட நேரம் கால்களை அசைக் காமல் வைத்திருந்தபடி உட்கார்ந்திருந்தாலோ அல்லது பைக்கில் எந்த அசைவுமின்றி கால்களை அப்படியே வைத்திருந் தாலோ, பிறகு எங்கேனும் வண்டி நிற்கும்போதோ அல்லது அலுவலக நாற்காலியில் இருந்து எழுந்திருக்கும்போதோ என்ன செய்வீர்கள்?!
கால்களை உதறுவீர்கள்; விரல்களைச் சுருக்கி விரிப்பீர்கள்; தொடைகளில் செல்லமாக அறைந்து கொள்வீர்கள்; ஆடுதசையை மெள்ளப் பிடித்து விடுவீர்கள். முதுகின் பக்கவாட்டுப் பகுதியில் கைகளை வைத்துக் கொண்டு, அப்படியும் இப்படியுமாகத் திரும்புவீர்கள்; பிறகு, பின்னோக்கி முதுகை வளைத்து, அண்ணாந்து பார்த்துவிட்டு, அப்படியே குனிந்து பார்ப்பீர்கள். அப்போது உடலுக்குள் ஒரு பரவசம் ஓடுவதை உணர்ந்திருக்கிறீர்களா?
வேர்களில் நீரூற்றினால் செடி, மரமாகும்; கால்களுக்கு கவனிப்பைக் கொடுத்தால், உடலின் எல்லாப் பாகங்களும் செம்மையாகும்

No comments:

Post a Comment