Sunday, April 26, 2015

நீராடல்

நீராடல்
புலவர். இரா.இராமமூர்த்தி
குளிர்ந்த நீரில் அமிழ்ந்து குளிப்பது, உடலுக்கும் உள்ளத்துக்கும் நன்மை தரும். ஆறறிவற்ற விலங்கும், பறவையும் கூட நீராடுகின்றன. புத்துணர்ச்சி பெறுவதற்கான சிறந்த செயல் நீராடல் ஆகும். இதனை வாழ்க்கை முறையோடு சமய, சாத்திரம் வலியுறுத்தும் ஆசார நியமங்களுள் ஒன்றாக நாம் கடைப்பிடிக்கிறோம். “கந்தையானாலும் கசக்கிக்கட்டு; கூழானாலும் குளித்துக்குடி” என்பது வாழ்வியல் நீதியாகும். சமயநியமங்களுள், மூர்த்தியைத் தரிசிக்கத் தலத்திற்குச் சென்றால் அத்தலத்தின் புனித நீரில் மூழ்கி வழிபாடு செய்வது குருவருளைப் பெறும் வழி என்பதை, “மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாகப் பணிவோர்க்கு வார்த்தை சொல சற்குருவும் வாய்க்கும் பராபரமே!” என்ற தாயுமானவர் பாடல் தெளிவுறுத்துகிறது.
கன்னிப் பெண்கள் நல்ல கணவனையும் சமய ஒழுக்கம் சான்ற வாழ்க்கையையும் பெறுவதற்கு ‘தைந்நீராடல்’ என்ற வழக்கத்தைக் கொண்டனர் என்று பரிபாடல் கூறும். மார்கழி நீராடலின் மகத்துவத்தை மாணிக்கவாசகரும், ஆண்டாளும் பாடிய திருவெம்பாவை, திருப்பாவைகளால் அறிந்து கொள்ளலாம்.
நாள்தோறும் காலையில் நீராடுவதை வழக்கமாகக் கொண்டவர்கள் நீராடத் தகுந்த நீர்நிலைகள் ஒன்பது வகைப்படும். இந்த நீர்நிலைகளில் நீராடல் ஆறு வகைப்படும். அவ்வகையில் நீராடுவதன் படிமுறைகள் பற்றி நம் சமய, ஆசார, சாஸ்திரங்கள் விளக்கமாகக் கூறுகின்றன.
நீராடத் தகுந்த நீர் நிலைகள்:- நதி, நதம், ஸ்ரோதம், சுனை, தேவகர்த்தம், தடாகம், குளம், தாரை, கிணறு என்ற ஒன்பது வகையானவை.
1.மேற்கு மலையில் தோன்றி கிழக்குக் கடலில் கலக்கின்ற ஆற்றினை ‘நதி’ என்பர்.
2.கிழக்கு மலையில் தோன்றி மேற்குக் கடலில் கலக்கும் ஆறுகள் ‘நதம்’ என்று கூறப்படும்.
3.மலை அல்லது நிலத்தடியில் ஊற்றாகி வற்றாமல் பொங்கி ஆற்றில் அல்லது நிலத்தில் கலந்து மறையும் நீரை ‘ஸ்ரோதம்’ என்பர்.
4.மலை உச்சி அல்லது மலையடிவாரத்தில் வற்றாமல் ஊறிக்கொண்டிருப்பது ‘சுனை’ எனப்படும்.
5.மனித முயற்சியின்றி இயற்கையான பள்ளத்தில் தேங்கி நிற்கும் நீர்நிரம்பிய குளம் ‘தேவகர்த்தம்’ எனப்படும்.
6.மனிதர்கள் தாமே முயற்சி செய்து அரைவட்டவடிவில் தேக்கிய நீர்நிலை ‘தடாகம்’ எனப்படும்.
7.சுற்றிலும் அல்லது நாற்புறமும், கற்களால் படிக்கட்டுகள் அமைக்கப்பட்ட நீர்நிலை ‘குளம்’ எனப்படும்.
8.மலைவெடிப்பிலிருந்து தாரையாக விழும் நீர் ‘அருவி’ அல்லது ‘தாரை’
9.ஐந்து முழ விட்டத்திற்கு ஆழமாக வெட்டிக் கட்டப்பெற்ற நீர் நிலை ‘கிணறு’ அல்லது ‘கூபம்’ எனப்படும்.
இந்த நீர் நிலைகளில் நாள் தோறும் நாம் நீராடுவதற்குரிய வகைகள் ஆறாகும். அவை நித்தியம், நைமித்திகம், காமியம்,கிரியாங்கம், மலாபகர்ஷணம், கிரியாஸ்நானம் எனப்படும்.
அதிகாலையிலும் பகலிலும் சந்தியாவந்தனத்துக்கு முன் நீராடுவது ‘நித்தியம்’ எனப்படும்.
சாவு, இடுகாடு, சுடுகாடு போன்ற துக்க நிகழ்ச்சி மற்றும் இடங்களில், ஏற்பட்ட சாவுத்தீட்டைப் போக்கிக் கொள்ள நீராடுவது, ‘நைமித்திகம்’ எனப்படும்.
திருவிழாக்களிலும், திருக்கோவில் வழிபாட்டுக்காகவும் நீர்நிலைகளில் நீராடித் தூய்மை பெறுவது ‘காமியம்’ எனப்படும்.
நீத்தார் நினைவுச் சடங்கு, தர்ப்பணம் முதலியவற்றுக்காக நீராடுவதைக் ‘கிரியாங்கம்’ என்பர்.
உடலின் உழைப்பினாலும், வெப்பத்தினாலும் தோன்றிய உடல் அழுக்கு முதலியவற்றை முற்றிலும் நீக்குவதற்காக நீராடுவது ‘மலாபகர்ஷணம்’ ஆகும். இதற்கெனக் காலம், இடம், செய்முறை ஆகிய கட்டுப்பாடுகள் தேவையில்லை.
காசி முதலான தலங்களில் உள்ள புனித நீர் நிலைகளில் செல்லும் போதெல்லாம் நீராடுவது ‘கிரியாஸ்நானம்’ ஆகும். நீராடுவதற்குத் தகுந்த இந்த அறுவகை நீராடல்களும் குறிப்பிட்ட காலம், இடம், ஆசார நியமங்களுடன் கடைப்பிடிக்கப்பெற வேண்டும்.
நீராடும் முறை:- நதிகளில் எப்பொழுதும் நீரோட்டத்திற்கு எதிராகவும், குளங்களில் பகலில் சூரியனை நோக்கியும், இரவில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கியும் நீராடவேண்டும் உடுத்திய ஆடையுடன் மேலாடையும் அணிந்து நீராடுவது ‘சசேல ஸ்நானம்’ எனப்படும். குறைந்த ஆடையுடனும், ஆடைஅணியாமலும் நீராடுவது நீர்த் தேவதையை அவமதிப்பதாகும்.
1. நீராடத் தொடங்கும்போது முதலில் ஆசமனம் என்ற முறையில் சிறிதளவு நீர் பருகி உடலின் உட்பகுதியைத் தூய்மைப் படுத்த வேண்டும். பின்னர் காலம், இடம் குறித்த சங்கல்பம் செய்து மனத்தை ஒருமுகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
2. நீரில் எப்போதும் நிலைத்திருக்கும் தேவதா சக்தியை நோக்கி உள்ளத்தையும், உடலையும் புனிதப்படுத்துமாறு வேண்டி வழிபட்டு, நீராட அனுமதிபெற வேண்டும்.
3. உலகெங்கும் பரவியுள்ள நீர் தேவதைகள் அனைவரும் நாம் நீராடும் நீரில் பிரசன்னமாக வேண்டிக் கொள்ள வேண்டும். இதற்காக வருணசூக்தம் சொல்லி நீராட வேண்டும்.
4. உடலை நன்றாகத் தேய்த்துக் குளித்த பின் இரண்டு முறை ஆசமனம் செய்ய வேண்டும். சிரசின்மேல் நீர்தெளித்துக் கொள்ள வேண்டும்.
5. நாம் நீராடும்போது அறிந்தோ அறியாமலே செய்த பாபங்கள் நீங்க வேண்டுகிற வேத மந்திரங்களாகிய அகமர்ஷண ஜபம் செய்து நீராடிய பின் இரு முறை ஆசமனம் செய்யவேண்டும்.
6. இடுப்பளவு நீரில் இறங்கி நின்று முறைப்படி பூணூலை அணிந்து தேவதீர்த்தங்களை வரவழைத்து தேவர்களுக்கு தர்ப்பணமும், பூணூலை மாலையாக அணிந்து கொண்டு ரிஷி தீர்த்தத்தை வேண்டிப் பெற்றுக் கொண்டு ரிஷிதர்ப்பணமும், பூணூலை இடம் பண்ணிக் கொண்டு பித்ரு தீர்த்தத்தை வரவழைத்து, பித்ரு தர்ப்பணமும் செய்யவேண்டும்.
7. நீராடியபின் இடக்காலைக் கரை மேலும், வலக்காலை நீரினுள்ளும் வைத்துக் கொண்டு ஆசமனம் செய்து முடிக்க வேண்டும்.
8. நீராடி முடித்துக் கரையேறும்போது இருகரங்களிலும் நீரை ஏந்தி, “என் உடல் அழுக்கால் நீரைக் கெடுத்துள்ளேன். அந்தக் குறை நீங்க யக்ஷ்மாவுக்கு நீரால் திருப்தியளிக்கிறேன்.” என்ற மந்திரத்தைச் சொல்லிக் கரையில் நீரை விடவேண்டும். தலைமுடியை முன்புறம் கொண்டுவந்து நுனியில் வடியும் நீரை நிலத்தில் விடவேண்டும். நம் உடலிலிருந்து வடியும் நீரை தேவர்களும் பித்ருக்களும், எல்லா உயிரினங்களும் ஏற்று நிறைவடையும். மார்பில் பூணூலை மாலையாக்கிக் கொண்டு மேலாடையை நான்காக மடித்துப் பிழிய வேண்டும். “என்றேனும் என் குலத்திலும் கோத்திரத்திலும் பிறந்து சந்ததி இன்றி மறைந்தவர்களுக்கு இந்த நீர் மனநிறைவு அளிக்கட்டும்.” என்ற பொருளுடைய மந்திரத்தைக் கூற வேண்டும். நீராடிய பிறகு நனைந்த துணியை நீரில் பிழியக்கூடாது.

No comments:

Post a Comment